Tuesday, January 25, 2011

இறந்த பகல்..


வெளிச்சக்குடுவையில் பொத்தல் விழ
பாதரச ஒழுக்காய் வழிந்து
தீர்ந்து கொண்டிருந்தது பகல்
மிச்சமிருக்கும் ஒன்றிரண்டு வர்ணங்களை
கரைத்துக் கொண்டிருந்தது
ஒரு ஓவியனைப் போல
பார்வைகள் ஊடுருவமுடியாமல்
மெல்லிய கருந்திரைச்சீலைகளை
அடுக்கடுக்காய் தொங்கவிட்டுக்கொண்டிருந்தது
சாபங்களின் கறை நெருக்கும் இரவு
பிடுங்கப்பட்ட கண்களில் இருந்து வழியும்
குருதி கருப்பு வர்ணத்தில்
ஒரு மசியென மேலும் படர்ந்தது
தற்கொலைக்கு முயன்றவனின்
உத்தரம் வெறித்த விழிகளென
இருளை துளையிடும்
விளக்குகள் கழிவிரக்கத்தில்
கசிந்து கொண்டிருந்தன.
பகலின் குரல்வளை
இறுக்கி நெரிக்கப்பட்டு
காற்றுக்குழாயின் விதைப்பைகள்
நசுங்கிய கணத்தில்
முழுதும் இறந்து விழுந்தது பகல்

Thursday, January 20, 2011

ஒரு கவிதை...


இவர்களைக் கண்டதும்
எனக்கு ஆவேசமாய் வருகிறது
நாங்கள் உபயோகிக்கும் அல்லது
எங்களுக்குத் தேவையான
எல்லாவற்றையும் இவர்கள் தான்
கடைவிரிக்கிறார்கள்
இவர்கள் சொன்னது தான் விலை
என்கிறார்கள்
நாங்கள் குடியிருந்த இடமும்
நாங்கள் பயிரிட்ட வெளிகளிலும்
இப்போது இவர்கள் துணி உலர்த்துகிறார்கள்
இவர்கள் கைவைத்த இடங்களில்
எங்களவர்களின் இடமுலைகளும் இருந்தது
யோனிகளில் மண்கொட்டி
அற்ப பயிர் வளர்த்தார்கள்
இதில் மேலுயர்ந்த குரலுக்கு
விலங்குகள் என்று வில்லை ஒட்டினார்கள்
சந்தர்ப்பம் கிடைத்தபோது நாங்கள்
நசுக்கிய குரல்வளைகளில் இருந்து
கொட்டிய ரத்தத்தில் எங்கள் கால்கள்
நணைந்திருந்தது