Wednesday, February 23, 2011

யட்சகாயகன்...

"இந்த பதிவு எழுதுவதற்கு முதற்காரணம் ராஜசுந்தரராஜன் அண்ணன்தான், அவர் தான் இசை பற்றி எழுத மீண்டும் தூண்டியது... இந்த பாடல் பற்றி எழுதியது அவருக்காக..., நியாயம் செஞ்சிருக்கேனான்னு தெரியலை..."

வனங்கள் சுழன்றெரியும் தீமழை பெய்யும் மேகங்களின் முலைக்காம்புகளில் இருந்து விஞ்சிய துளிகளில் செரிவு சேர்த்து குழைத்த மசியில், ரேகைகள் வரைந்து வரிகள் போர்த்திய உடல் உய்ய நட்சத்திரங்கள் எறியும் செருகளத்தின் மேற்கில் சிவந்த வானத்தின் அடிவயிற்றில் செருகியிருக்கும் பஞ்சாக்னி. அம்புகள், வேல்களின் கூர்முனைகளை மழுங்கச்செய்த பிட்ட சூரியனின் போர்ப்பரணி, உந்திச்சுழி முளைத்தவனின் ஏடுகள் தவறவிடட இசைக்குறிப்புகள். நாதவிந்துவாய் வெண்கமலத்து விரல்கள் எங்கும் ஓடி, கம்பிகளில் அதிர்ந்து, காற்றின் பையில் துளையிடக் கொட்டிய மத்தள கொட்டு இசையில் நெய்யப்பட்ட முகப்படாமில் தொங்கும் ரத்தினங்கள். பரணியும், பக்தியும் பிசைந்து வனைந்ததில் ஜனித்த  நீர்க்குழந்தை சல நாட்டை. மணிகளும் ஒலிகளும் திரண்டு பெருக்கும் சிற்பங்களின் விரைகளில் இருந்து பெருகிய உயிர்களின் நாடித்துடிப்பும்,  நீர்க்குழந்தை தவழ்ந்த 36வது சப்த மண்டலங்கள் பிளந்து ஜனித்ததில் தெறித்து விழுந்த மகரந்த துளிகளில் எழுந்து நிற்கும் பேருரு இந்த நாட்டை.

வளரவும், தேயவும் சபித்தவனின் முன்செல்லும் துளைவிழுந்த கதிர, மூங்கில் மரங்கள் வீசும் காற்று சுமந்து செல்லும் மல்லாரியில் மிதந்து பயணிக்கும் கரிமுகனின் தண்டைகளில் புகுந்து கொள்ளும் மத்தளம். அவனும் இவனும் என இருவிழி நோக்கில் சங்கமிக்கும் சங்கரநாராயணனைப் போல தோற்றமயக்கம் காட்டும், இந்த ராகம். நாட்டையா அல்லது தைவதத்தை தவறவிட்ட வடக்கத்தியர்களின் ஜோக் ராகமா என்ற குழப்பமும், மயக்கமும் தரும். ரவீந்திரனின் இசை, மலையாள மொழியின் சினேகமான வார்த்தைகளுள் பொதிந்து இருக்கும் இசையை சிரமமில்லாமல் எடுத்தாண்டவர் ரவீந்திரன் மாஸ்டர். வி.தக்‌ஷினாமூர்த்தி, எம்.பி.ஸ்ரீனிவாஸ் இவர்களுக்குப் பிறகு, கர்நாடக சங்கீதத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து இசையமைத்த பாடல்கள் அனேகம்.  அதில் குறிப்பாய், தென்னிந்திய ரசிகர்கள் எல்லோருக்கும் பரிச்சயமான பாடல், ஹிஸ் ஹைனெஸ் அப்துல்லாவில் வந்த “பிரமதவனம் வீண்டும்என்ற ஏசுதாஸின் குரல். பாடலை எழுதியவரும் இசையில் தேர்ச்சி பெற்ற நையாத்திங்கர வாசுதேவன் என்று நினைக்கிறேன். 

ஆலாபனையில் ஹிந்துஸ்தானியின் ஜோக் ராகத்தின் சாயலில் இருக்கும் இந்தப்பாடல், பல்லவியிலும் அப்படியே தொடர்கிறது.  அதன் பிறகு சரணங்களில் நம்ம ஊரு நாட்டையின் வேகமும், அடுக்கும் வருகிறது.  நாட்டை ஒரு ஜன்ய ராகம், முப்பத்தியாறாவது மேளகர்த்தா ராகமான சல நாட்டையில் இருந்து பிறந்தது.  சலநாட்டை ஒரு சம்பூர்ண ராகம், நாட்டையில் தைவதம் கிடையாது. ஆனால் வடக்கத்திய ராகமான ஜோக்கில் ரிஷபமும் கிடையாது.  இந்தப் பாடலில் சில இடங்களில் ரிஷபம் இல்லாதது போலத் தெரியும், சில இடங்களில் ரிஷபம் இருப்பது போலவும் தெரியும்.  இந்த ராகத்தில் ஸ்வரங்களுக்கு இடையேயான இடைவெளிகள் குறைவாய் இருப்பதால், இது பக்திக்கு உகந்ததாகத் தெரிகிறது, மெய்மறக்கச் செய்யும் ஸ்வரக்கட்டு.  இதே சுவரக்கட்டு கொஞ்சம் துரித காலத்தில் இருக்கும்போது, மல்லாரியாக நாதஸ்வரத்தில் வாசிக்கப்படுகிறது.  கொஞ்சம் மாறுதல்களுடன், கம்பீரநாட்டையாகவும் மாறிவிடும் ராகம் இது.


ஏசுதாஸுக்கு தேசிய விருது வாங்கித்தந்த பாடல்களில் முக்கியமானது இது. அந்த தேவகந்தர்வனின் குரலில் இருக்கும் கனமும், குழைவும், இசை விமர்சகர்களின் நீளும் விரல்களை சிகரெட் துண்டுகள் என நசுக்கி விடுகிறது.  ஆலாபனை ஆரம்பிக்கும் போது இருக்கும் அதன் அசைவுகள், உங்களை உள்ளே இழுத்துச் செல்லும்.  அதன்பின் கொண்டு செல்லும் உயரங்கள் அபாரமானவை.  ஏசுதாஸின் குரல் மாறும் உச்சம் அது.  பந்துவராளியில் கல்பனாஸ்வரம் பாடும் போது அவரின் குரல் இது போல ஆவதைக் கேட்டிருக்கேன்.  இந்த பாடலின் ஆலாபனையின் போது அது நாட்டையாய்த் தெரியாது, பல்லவியிலும் அஃதே.  சரணங்கள் மட்டுமே நாட்டையின் சாயலில்.  உருவ ஒற்றுமை இருந்தாலும், இரட்டையர்களிடம் வித்யாசம் உண்டு என்பது போல, மிக உன்னிப்பான வேறுபாடுகள்.  ரவீந்தரன் மாஸ்டர் ஒரு பெருந்தச்சன், மிகநுணுக்கமான வேலைப்பாடுகள் கொண்ட பறவைகள் அடையும் தேர்கள் செய்யும் தச்சன். மோஹன்லால், இந்த படத்தின் பாடல்கள் பற்றி பேசும் போது, நல்ல பாட்டுகள் உண்டாக வேண்டும் என் ஆக்ரஹம் கொண்டிருந்ததாய்ச் சொல்வார். அது முழுக்க முழுக்க உண்மை. சங்கீதம் அறியுந்தோறும் அகலம் கூடும்ன ஒரு மஹாசமுத்திரம் என்று ஒரு வரி வரும் அது சத்தியம்.

ரவீந்திரன் மாஸ்டரின் இசையில் ஏசுதாஸ் என்ற யட்சகன் பாடிய அனேக பாடல்கள் பிரபலமானவை மட்டுமல்லாது, நல்ல பாடல்களும் கூட... கோபாலக பாஹிமாம், மதுரம் ஜீவாம்ருத பிந்து, ஹரி முரளி ரவம், ஸ்ரீ லதிககள், கோபாங்கனே, ராமகதா கானலயம், அழகே நின் மிழிநீர்மணியில், ஏழு சுவரங்களும் தொழுதுனரும் ஒரு கானம் என்று இது பெரிய பட்டியல் அடங்காப்பட்டியல்.  இசையை அருந்தி உயிர் வாழ்கிறது சாதகபட்சிகள் என்று யாராவது சொன்னால், சத்தியமென நம்புகிறேன்.

Saturday, February 05, 2011

நனுபாலிம்ப...

அகண்ட தெருக்களில் உருளும் தேர்ச்சக்கரங்களின் மசி அப்பிய கடையாணிகளென தாங்கி நிற்கும் சப்தகதிகள் பதுமைகள் மேல் நின்று கொண்டிருக்கும் மண்டபத்தேர் தாண்டி நீண்டு கொண்டிருக்கும் ஒற்றைத் தந்தியின் ஸ்ருதி வளர்த்த வடம் பற்றி இழுக்க நகராமல் நின்ற தேர்சக்கரங்களின் மரக்கால்களில் துளிர்விட்ட இலைகளில் இருந்து உதிர்ந்த ஒற்றை சருகு அடியில் இருந்து அகற்ற நகர்ந்த கதையை பாடியவர்களின் பக்தியில் இல்லாத கடவுள், முயங்கி களைத்த நிமிடங்களின் ஆசுவாசத்திற்கு அழைக்கும் பாட்டில் மட்டும் உறைவானோ அல்லது முக்கண்ணனின் சிரம், கரம் பற்றிக் கொள்ள தன்னுள் சேர்த்துக் கொண்டவனை தன்னை ரட்சிக்க அழைத்தவனை ஆரத்தழுவி தேற்றுவானோ என்ற சந்தேகங்களின் ஈக்கள் மொய்க்கின்ற பறிக்கப்பட்ட தடாக மலர்களின் விழியில் இருந்து சொட்டுவது தண்டுகள் உறிஞ்சி வைத்து துப்பும் நீரா அல்லது தேனா என்று தெளிவதன் முன்னம் சிந்தை குளிர்ந்த கடவுள் இரங்கி அளித்த வரங்களில், சொல்ப குறைவுடன் முழுமை தந்த சுநாதங்களின் மாத்திரை அளவில் ஏறி இறங்கும் பயணங்களின் இறுதியில் அடைவது வைகுந்தனின் பாதகமலங்கள் தானோ.

கடவுளை மெய்பிக்க வந்த உண்மைகளில் பக்தியும், காதலும், காமமும் தெளிதாயின. அலங்கார கட்டுக்களில் இருந்து சற்றே விலகி, மோன நிலைச்சமன்கள் இட்டு நிரப்பிய கோப்பையில் வழியும் இசை சார்ந்த அளபெடைகளின் மேலே நகர்ந்தும் ஊர்ந்தும் செல்லும் சர்ப்பமென வளர்ந்து மின்னும் பளபளப்பில் கிறங்கி அதனுள் வழுக்கிச்செல்லும் 72 அடுக்கு மாளிகைகளுக்குள் எந்த அறையில் ஒளிந்து இருக்கும் பெயரறியா சப்தங்களும், மோனங்களும்? ஏறவும் இறங்கவும் ஆறு படிகளை கொண்ட பாதையில், தத்திச் செல்லவும், தாண்டிச் செல்லவும், ஓடிச்செல்லவும், எல்லாம் வகையிருக்கும் அதன் கைப்பிடிக்கட்டைகளின் 18 எண்ணம், தொட்டு தடவி உணர்ந்த விழியற்றவனின் தொடுபுணர்தலில் இருந்து ஜனித்த குழந்தை பேரழகியென குழிவயிறும், குவி ஸ்தனங்களும், கோபுர முலைகளுமாய் நெற்றித்தடத்தில் கீற்று நிலாவுமாய் சிறு நகை, பெருவிழி, துளை நாசியென தொன்மங்களின் படிம நிலைகள் கடந்து அதே சுகந்தத்தில் இழுவும் மயிற்பீலியின் வர்ணங்கள் இட்டு நிரப்பிய கிண்ணங்களில் நிறைந்து, வழிந்து, தெறிக்கும் சுத்த சப்தங்கள் முனகிச் செல்லும் பாட்டில் ஸ ரி க ப த ஸ வும் ஸ த ப க ரி ஸ வும் சீண்டிச் செல்லும் கம்பிகளில் விழுந்த காதல், இளையராஜாவின் கையில் பட்டு இப்படியானது. “ஒரு ராகம் பாடலோடு காதில்”

ஆனந்தராகம் படத்தில் அமைந்த இந்த இருகுரலிசையில் இருக்கும் குரல்கள், பிரபஞ்சம் பதுக்கி வைத்த பேரழகிகளின் மேல் கொண்ட காமமும், காதலும் இன்னும் மிச்சமிருக்கிற ஆத்ம மோகத்தில் இருந்து மீட்கப்பட்ட நரம்புகளினால் கட்டப்பட்ட வாத்தியங்களில் தோன்றிய மென்பரவல்கள் இந்த இசை. ஏசுதாஸின் குரலும், ஜானகியின் குரலும் ஓலைக்கொட்டானில் பொத்திவைத்த சில்லுக்கருப்பட்டியில், கொஞ்சம் தினைமாவும், கொம்புத் தேனும் கலந்தது போன்ற வழுக்கும், மயக்கும் மெட்டு. காதலும், மெல்லிய பாலாடை காமமும் மிதந்து பறக்கும் இறகென மனசுக்குள் வந்து அமரும் இடங்கள் அனேகம். மோஹனம் பக்தி, காதல் என்ற இரண்டும் சமநிலையில் நிறுத்த பிரகடனிக்கப்பட்ட முதல் தண்டோரா இந்த மோகனம். எல்லோரும் சுலபமாய் கையாண்ட ஒரு ராகம், எல்லோரையும் மயக்கிய ராகம்... கேவிஎம், எம்எஸ்வி என்று தேய்த்து தேய்த்து பார்க்க பூதங்களை அல்லாது தேவதைகளை பிரசவித்த விளக்கு இந்த மோகனம், அதனால் தானோ என்னவோ மோஹனத்தில் அமைந்த பாடல்கள் எல்லாம் காதலும், பக்தியும், காமமும் சங்கமிக்கும் திரிவேணியாய் இருக்கிறது எப்போதும்.

இளையராஜாவின் மிக இனிமையான பாடல்கள், அதன் ஸ்வரகட்டுமானங்களில் உள்ள நவீன கையாள்தலிலும், ஆர்க்கிடெக்சரிலும் தான் இருக்கிறது. பாடத் தெரிந்தவர்கள் அல்லது ஆசைப்படுபவர்கள்... ஒரு ராகம் பாடலைப் பாடி பார்க்கலாம்... அதன் சங்கிலித் தொடர் போல ஆரம்பிக்கும் பல்லவி நம்மை புதுவிதமான இசை அனுபவத்தைத் தரும். மெய்யாகவே சொல்கிறேன்... இந்த பாடலில் சிவக்குமாரின் சின்ன அசட்டுத்தனமும்... ராதாவின் அலட்சிய அழகும்... மீண்டும் மீண்டும் கேட்க, பார்க்கத் தூண்டிய பாடல்... பாலாவிற்கு மிகவும் பிடித்த இந்த பாடலை என்னை திரும்ப திரும்ப பாடச் சொல்லி மெருகேற்றுவாள் என் ரசனையை. ”நனுபாலிம்ப நடசி வொச்சிதீவோ” என்று ராமனை அழைத்த தியாகராஜரின் கதியில் இருந்து சற்றும் குறைவில்லாத ரசனையும், காதலும், மென்காமமும் நிறைந்த இந்த பாடல் மோஹனப் பந்தல் விரிக்கும் குளிர் நிழல்.

http://www.youtube.com/watch?v=GGekCjufNWY