Thursday, July 28, 2011

முழுதும் நனைந்திருக்கிறது என் வீடு...


முழுதும் நனைந்திருக்கிறது
என் வீடு
சுவர், ஜன்னல், ஜன்னல் கம்பிகள்
கூரையும், வாசக்காலும், தின்னையும்
மழையினை உறிஞ்சு
வைத்துக் கொள்ளும் இரவு முழுவதும்
உடல் படுகிற இடங்களில் எல்லாம்
சிலிர்ப்பாய் மழையின் மிச்சத்தை
இடம்மாற்றும் நனைந்த வீடு
உங்கள் வீடுகளில் கூரைகள் நீண்டு
வறண்ட நாவுச்சுவர்கள்
மழையை சுவைக்காமலே
போயிருக்கலாம்
ஜன்னல் கம்பிகள் முற்றிலும்
மழை நீர் கோர்க்காத
வெற்றுச்சரமாய் இருக்கலாம்
வாசல் நுகராத மழை
வெளியிலேயே தேங்கி
வடிந்தும் போகலாம்
மழை பற்றிய அறிவை
கூரைகள் மட்டுமே
கதைகதையாய் கூற
வெறும் செவிகள் மட்டுமே
திறந்து வைத்திருக்கும் ஏனையவை
மழைச்சத்தம் மழையாகுமா
மழைக்கதை மழையாகுமா
நீங்கள் வீடுகளுக்குள்ளும்
தளராக்கூரைகளுக்குள்ளும் ஒடுங்க
மழை ஈரம் படாமலே
உலர்ந்து கிடக்கலாம்
சுவர்கள் போலவோ, ஜன்னல்கள் போலவோ
ஜன்னல் கம்பி, வாசக்கால்கள் போலவோ.
என் நனைந்த வீடு முளைவிட
உச்சானியில் அமர்ந்து கொண்டே
மழை ஈரத்தில் படாமல்
எதுவும் துளிர்ப்பது எப்படி?
என்று உங்களை வியந்து கொண்டிருக்கிறேன் நான்

Monday, July 25, 2011

கல்யாளி...


பரிசு பொட்டலம்
என்று தான் தோன்றுகிறது
அடர் நீல வானத்தை
மடித்துக் கட்டியது போல்
நட்சத்திரங்கள் உதிர்ந்து
கொண்டே இருந்தது

மூடியிருந்த பொட்டலத்தின்
நட்சத்திர முனைகளின்
கூர் கிழிக்கும் பயம்
பிரிப்பதை ஒத்தி வைத்தது

மயில்கண்சுடரென மினுக்கி
போர்த்திய அழகு
மர்ம முடிச்சாய் இறுகுகிறது

பொட்டலத்தின் உள்ளீடு
எதிர்பார்ப்பின் அவயங்களை
தின்று வளருது கல்யாளியென
பேசாத வார்த்தைகள்
மூடத்துவங்குகிறது என்னை
கூர் அலகால் துழாவி கொத்தி
எடுக்கிறது மந்திரச்சொல்லை
சினேகத்தின் பீலிப்பறவை 
மந்திரச்சொல்லை
தவறவிட உடைந்து
 நறுமணம் பரவுகிறது

நறுமணத்தின் தைலங்களில்
வரைந்த அரூவ சித்திரங்களுக்கு
பெயரிடுகிறேன் அது இதுவென்று

கனவுகளின் படுக்கை உதற
விழுந்த முகங்களை
அரூவங்களுடன் பொருத்த
முனைகிறேன்

பொருந்தா முனைகளை
சிதைக்கவும், முறிக்கவும்
தொடங்கியபோது
என் விரல்கள் உதிரத்தொடங்கியிருந்தது...

Friday, July 08, 2011

பழுத்த இலைக்காடு...

அம்மா இறந்தவிட்டதாய், அதிகாலை நாலு மணிக்கு அந்த முதியோர் இல்லத்தில் இருந்து தகவல் வந்ததும் பாலாவின் மனசுக்கு கொஞ்சம் நிம்மதியாய் இருந்தது.  ஒரேயடியாய் தன்னை வேதனையில் இருந்தும், பிணியில் இருந்தும் விடுவித்துக் கொண்டு விட்டாள் என்று நினைத்துக் கொண்டான்.  இந்த தகவலை தன் அப்பாவிடம் எப்படி சொல்வது என்று மட்டும் யோசனையாய் இருந்தது அவனுக்கு.  எங்கேயோ கொண்டு போய் விட்டு கொண்ணுட்டீங்களேடா என் பொண்டாட்டிய? என்று கேட்டு விட்டால் என்ன பதில் வைத்திருக்கிறோம்? என்று அவனால் யோசிக்கமுடியவில்லை. 

தீபா அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தாள்.  நேற்று இரவு அப்பாவுக்கு சாப்பிட்டது ஏதோ சேராமல், படுக்கையை ஒட்டியே வாந்தி எடுத்துவிட்டார்.  பலமான ஓங்கரிப்பு சத்தம் கேட்க எழுந்து போய் பார்த்த போது படுக்கைக்கும் தரைக்குமாய் வாயில் எடுத்தது பரவியிருந்தது.  அப்பாவுக்கென்று பிரத்யேக உணவு முறை, சர்க்கரை வியாதியில் வலது காலை இழந்தவர். சர்க்கரை கண்ட்ரோலில் இல்லை என்றால், அடுத்த காலும், கண்ணும் போய்விடும் என்று பயமுறுத்தியதில் கொஞ்சம் திருந்தி தனது உணவு பழக்கத்தை மாற்றிக் கொண்டார். இடது காலில் எப்போதோ அடிபட்டது ஆறாமல் புரையோடிப் போய் இருந்தது. அதை சுத்தம் செய்வதும், மருந்திடுவதும் எப்போதும் தீபா தான். அவனுடைய அப்பா வாந்தி எடுத்ததை தீபா சுத்தம் செய்து படுக்கையை சரி செய்யவே நேரமாகிவிட்டது. நள்ளிரவுக்கு மேல் தான் தீபா தூங்க ஆரம்பித்திருப்பாள்.

தீபாவை ஒட்டியபடி, விரலை வாயில் போட்டபடி பவித்ராவும் தூங்கிக் கொண்டிருந்தாள். அடுத்த கையில் தீபாவின் முந்தானையை கெட்டியாய் பிடித்திருந்தாள். தீபாவை எழுப்பி தகவலைச் சொல்லத் தயக்கமாக இருந்தது. தீபாவின் பொறுமையும், அன்பும் மெச்சக்கூடியது, இவனுக்கு தான் ஏதோ பெரிய புன்னியம் செய்திருக்கவேண்டும் என்று தோன்றும். தீபாவுக்கு இந்த செய்தி தாங்கமுடியாத வேதனையாய் இருக்கும்.  பாலாவின் காதல் திருமணத்திற்கு, யாரும் தடையாய் இல்லை என்றாலும்,  திருமணம் செய்த பிறகும் மருமகளை இப்படி கொண்டாடுவார்கள் இருவரும், என்று பாலாவுக்கு நம்பிக்கையே இல்லாமல் இருந்தது.  ஆனால் நேர்மாறாய், பாலாவின் அம்மா தீபாவைத் தாங்கு தாங்கு எனத் தாங்கினாள்.

அவனுடைய அம்மாவுக்கு லோவர் இண்டஸ்டைனல் கான்சர் வந்து ஏறக்குறைய நான்கு வருஷம் உயிர் வாழ்ந்திருக்கிறாள். கீமோதெரபியின் தயவிலும், மருந்துகளின் தயவிலும் ஏதேதோ நம்பிக்கைகளின் முள்முனைகளில் படுத்திருந்தாள் இத்தனை நாளும். அவளின் புற-அகத்தோற்றம் முற்றிலும் மாறிவிட்டது, அம்மா அத்தனை அழகில்லை என்றாலும், அவளுடைய சாந்தமும், கனிவும் அவளை அழகாய்க் காட்டும்.  தன்னை முன் துருத்திய பற்களுடனும், சிகிச்சைகளில் கொட்டிப் போன தலை மயிருடனும் பார்க்கிற ஒவ்வொரு தருணத்திலும், அவளின் மீது அவளுக்கு சுயவெறுப்பும், சுயபச்சாதாபமும் வளர்ந்து கொண்டே இருந்தது. அது அவளை மேலும் முடக்கியது. எல்லோர் மீதிலும் வெறுப்பும், துவேஷமும் அதிகமாகிக் கொண்டே இருந்தது. யாருக்கும் தன்னைப் பிடிக்கவில்லை என்ற அவளின் அழுத்தமான எண்ணம் அவளை மன அழுத்தத்திற்குள் தள்ளியிருக்க வேண்டும் என்று அவனுக்குத் தோன்றும்.  ஆனால் அதை எப்படி சரிசெய்வது என்று தெரியவில்லை.

அம்மாவுக்கு முதலில் சாதாரண வயிற்றுவலியாகத் தோன்றியது, மலத்தில் ரத்தம் கலக்க அல்சர் அல்லது மூலம் என்று தான் நினைத்தார்கள்.    அவனுடைய அம்மாவின் அப்பா, அம்மா என்று எல்லோருக்கும் மூலம் இருந்தது. பரம்பரை வியாதியாய் இருக்கும் என்று ஆளுக்காள் சொல்ல, குளுமையாக சாப்பிட்டால், நார்ச்சத்து உணவு அதிகம் சாப்பிட்டால், எல்லாம் சரியாகிவிடும் என்றது சரியாகவில்லை.  இரண்டு வருடங்களுக்கு மேலாக இது தொடர, சோகை பிடித்தது போல ஆனாள் அவனுடைய அம்மா. ஹோமியோபதி மருத்துவக்குளிகைகளில் குறையாமல் மேலும் முற்றி, மலத்தில் சீழும், ரத்தமும் மட்டுமே வர ஆரம்பித்தது. சிலசமயம், தார் போல மலம் வருகிறது என்று அம்மா சொன்னபோது பாலாவுக்குக் கொஞ்சம் பயம் வந்தது.

ஒருமுறை இவனுடைய அம்மாவைப் பார்க்க வீட்டுக்கு வந்த சேதுமாமா, “மூலம்னா இப்படி இருக்காதுலே! எப்போதும் போல பசிக்கும்லே! போய் நாஞ்சொல்ற டாக்டரப்பாரு!”  அக்காவ இப்படி பாக்கவே சகிக்கலை! என்று ஒரு மருத்துவரின் விலாசத்தையும் கொடுத்திருந்தார். வேலைப்பளுவின் காரணமாக தள்ளிப்போய் கொண்டே இருந்தது இரண்டு வருஷத்துக் முன்னால் தான் அவளுக்கு கான்சர் இருப்பது கண்டுபிடிக்க நேர்ந்தது. அதுவும் ரொம்பவும் முற்றிய நிலைக்குப் பிறகே.

சாப்பாடு சரியாக சாப்பிட முடியாமல், வயிற்றில் கல்லைக் கட்டியது போல உணர்ந்ததாய் சொல்லியிருக்கிறாள். உறுப்புகள் செயலிழக்க ஆரம்பித்து, முற்றிலும் படுத்த படுக்கையானாள்.  உயிரெல்லாம் கரைந்து வாயிலும் கையிலும் சேர்ந்து விட்டது போல பேசமுடியும், வலதுகையை அசைக்கவோ, ஆட்டவோ முடியும் அவ்வளவே.

அவன் வருமானம் போதவில்லை, இருக்கிற வீடு வசதியில்லை.  இருவரின் மருத்துவச் செலவும், இதர செலவுகளும் அவனுக்கு சுமக்கமுடியாத பாரமாய் அழுத்தியது. வேலைக்கு போவதினூடே அவர்களை கவனித்துக் கொள்ளவோ அன்பாய் பேசவோ, அவர்களுடன் நேரம் செலவிடவோ அவனால் முடிந்ததில்லை.  தீபா தான் பார்த்துக் கொண்டாள். அவர்களின் எல்லா விஷயங்களிலும் உடன் இருந்து, சலிப்பில்லாது கவனித்து வந்தாள்.

போனமாதம் ஒரு முறை பேச்சு வாக்கில், இவனிடம் தீபா இருவரையும் பார்த்துக் கொள்வது சிரமமாய் இருப்பதாகச் சொல்லப்போக, ஒரு வாரத்தில் முதியோர் இல்லத்தில் சேர்த்துவிடலாம் என்று இவன் நின்றபோது முற்றிலும் மறுத்தாள் தீபா.  என்றாலும், தொடர்ந்து ஒருவாரத்திற்கும் மேலாக அவளிடம் பேசி அவளை சம்மதிக்க வைத்தான். அவனுடைய அப்பாவுக்கும் அது நல்ல முடிவாகத்தான் பட்டது.  தீபா, இரண்டு பேரையும் பார்த்துக் கொள்வதிலேயே நேரம் செலவிடுவதால், குழந்தையை பார்த்துக் கொள்ளமுடியாமல் போவதை அவர் உணர்ந்து இருந்தார். தீபா படும் சிரமங்களும், அவளுடைய முகம் கோணாத சிசுருஷைகளும் அவருக்கு தெரிந்து தான் இருந்தது.

அவனுடைய நண்பர் ஒருவர் சொன்ன பிறகு தான் இப்படி ஒரு முதியோர் இல்லம் இருப்பது தெரிய வந்தது. ரோட்டரி சங்கம் எடுத்து நடத்தும் இந்த முதியோர் இல்லத்தில் வயதானவர்கள் மட்டுமல்லாது, இறுதி முடிவில் இருந்த வயதானவர்களையும் பார்த்துக் கொண்டார்கள். பெரிய நிறுவனங்களின் அன்பளிப்பிலும், செக்கோஸ்லேவியாவின் பென்ஷன் பண்ட் நிறுவனத்தின் உதவிப் பணத்திலும் இயங்குகிறது. தீபா அவனுடன் ஒருமுறை அங்கு சென்று வந்தாள். மதுரை, வளையங்குளம் தாண்டி விலக்கில் இருக்கும் அந்த வசதியான முதியோர் இல்லத்தை பார்த்த பிறகே ஒருவாறு சமாதானம் அடைந்தாள். 

அங்கு சிறப்பு மருத்துவரோ அல்லது சிறப்பான மருத்துவ சிகிச்சையோ ஏதும் கிடையாது. ஒரு மருத்துவர் அங்கேயே பணியில் இருப்பார், சில தாதிகளும் இருப்பார்கள். உணவளிப்பது, மருத்துவரின் ஆலோசனைப்படி வலி நிவாரணிகளும், தேவைப்பட்டால், தூக்க மாத்திரை  கொடுக்கப்படும்.  பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள் கொடுத்துவிட்டுப் போனால் வேளாவேளைக்கு கொடுப்பார்கள். காற்றோட்டமான இடம், அன்பான பணியாளர்கள். மருத்துவர்களால் கைவிடப்பட்டவர்கள், வலியின்றி இறக்க ஒரு வழி, ஏற்பாடு இது என்று அவர்கள் சொல்ல, அவனுக்கு அதுவே திருப்தியாய் இருந்தது.

அம்மாவை சேர்க்க டாக்ஸி அமர்த்தி, அந்த முதியோர் இல்லத்துக்கு வரும்போது, அவர்கள் கேட்டிருந்த அத்தனை மருத்துவ சான்றிதழ்களும், இவன் வருமான சம்பந்தமான சான்றிதழும் எடுத்துக் கொண்டான்.

முன் சீட்டில் பாலா உட்கார்ந்திருக்க, அம்மாவை, பின் சீட்டில் கிடத்தினான்.   தீபா நிறைய அழுதாள். பாலாவின் அப்பா வெளியே வரவே இல்லை. பாலாவின் அப்பாவால் வெளியே வந்து வழி அணுப்பி வைத்திருக்க முடியும், அவர் அதை தவிர்த்ததன் காரணம் புரியவில்லை. இத்தனை நாட்கள் உடனிருந்தவளை இப்போதே வாரிக் கொடுத்தது போல அவருக்குத் தோன்றியிருக்க வேண்டும்.  டாக்ஸியின் பின் சீட்டில் கிடத்தியவுடன், பாலாவின் அம்மா, அவனை தன் ஒளி மங்கிய கண்களால் தீர்க்கமாய்ப் பார்த்தாள். அம்மாவின் வார்த்தைகளும், மனசும் அவள் பார்வையிலும், கடையோரம் வழிகிற கண்ணீரிலும் இருந்தது போலத் தோன்றியது. காணச்சகியாது டிரைவருடன் பேச்சு கொடுத்துக் கொண்டே இறுக்கமாய் அமர்ந்து கொண்டான்.

அந்த இல்லத்தை அடைந்த போது, ஸ்ட்ரெச்சருடன் இரண்டு பேர் வந்தார்கள். டாக்ஸியின் பின் கதவைத் திறந்து அவனுடைய அம்மாவை தூக்கினார்கள் பாலாவின் அம்மா இன்னும் அவன் மீதிருந்த பார்வையை அகற்றாமல், அவனை நோக்கிய மாதிரியே இருந்தது.  டிக்கியில் இருந்த துணிமணிகளையும் அம்மாவிற்கு கொடுக்கவேண்டிய மருந்துகள், பிளாஸ்க் போன்ற சாமான்களை எடுத்துக் கொண்டான்.

உள் நுழைந்தவுடன் பெஞ்சில் அம்மா இருந்த ஸ்ட்ரச்சரை வைத்தார்கள். வரவேற்பறையில் இருந்த பெண் சிரித்தபடியே பனிவாய்ப் பேசினாள்.   அந்த அறை பேரமைதியாய் இருந்தது. சுவர்களில் வயதானவர்களின் உடல் நலம், மருத்துவக்குறிப்புகள், எளிய உடற்பயிற்சிகள், வயதானவர்களை கொண்டாட வேண்டும் எனும் போஸ்டர்கள் நிரம்பியிருந்தது. வரவேற்பறையின் கடைக்கோடியில் ஒரு அறிவிப்புப் பலகையும், சில அறிவிப்புகளும், குறுந்தகவல் அட்டைகளும் ஒட்டப்பட்டிருந்தது.  அறிவிப்பு பலகைக்கு அடுத்து ஒரு வாட்டர் கூலர் வைக்கப்பட்டு இருந்தது.  அவனுக்கு தண்ணீர் குடிக்க வேண்டும் போல இருந்தது.

கொண்டு வந்திருந்த சான்றிதழ்களையும், இதர பேப்பர்களையும் வரவேற்பறையில் இருந்த பெண் வாங்கிக் கொண்டாள். ஒரு படிவம் கொடுத்து அதை பூர்த்தி செய்யச் சொன்னாள். சகல விபரங்களும் கேட்டிருந்தார்கள், அதில் நிறைய ’ஏன்’ கள் இருந்தன. பூர்த்தி செய்ததும், அவனிடம் இருந்து வாங்கி, அதில் ரூபாய். ஐந்தாயிரம் என்று எழுதி வட்டமிட்டாள். வலது பக்கம் இருந்த கேஷ் கவுண்டரை கைகாட்டினாள்.  பாலா ஒரு இயந்திரம் போல கேஷ் கவுண்டரை நோக்கி நகர்ந்தான்.  அவனுடைய அம்மாவை இப்போது ஒரு அறைக்குக் கொண்டு சென்றார்கள். அம்மாவுக்கு ஒரு படுக்கையும் ஒரு நம்பரும் தரப்பட்டது. 

அம்மாவை அறையில் விட்டுவிட்டு வெளியே வரமுடியவில்லை. அவள் படுக்கைக்கு அருகே இருந்த சின்ன கப் போர்டில், அவளுடைய துணிமணிகளை வைத்த பிறகு, அவள் படுக்கையின் ஓரத்தில் உட்கார்ந்து கொண்டான். அவனுடைய கைகளை அம்மா பிடித்தபடி ஒன்றும் பேசாமல், கண்ணீரின் ஊடே பார்த்தாள். பாலாவுக்கு என்னவோ போல் இருந்தது.

“வாரத்திற்கு ஒரு தடவை உன்னை வந்து பாக்குறேம்மா!” என்றான். அங்கிருந்த தாதியிடம், நன்றாக கவனித்துக் கொள்ளும்படி சொன்னபோது, ‘கவலைப்படாதீங்க சார், நாங்க  நல்லாப் பாத்துக்குறோம்!” இங்க நூறு பேருக்கும் மேல இதே மாதிரி வயசானவங்க இருக்காங்க!” என்று ஒரு தகவலையும் சொன்னாள்.  

இன்றோடு ஆறு நாட்களாகிவிட்டது, அம்மாவை விட்டு வந்து. அம்மாவை அட்மிட் செய்யும்போதே, அம்மாவின் இறுதி காரியங்களுக்கும், கிரியைகளுக்கும் சேர்த்து பணம் கட்டிவிட்டிருந்தான். ரசீது எங்கே இருக்கும் என்று யோசனை வந்தது அவனுக்கு.  முன் நடையில் இருக்கும் கப்போர்டில் இருக்க வேண்டும், அங்கு வைத்த ஞாபகம் இருந்தது அவனுக்கு.

முன் நடையை ஒட்டிய அறையில் அவனுடைய அப்பா அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார். அவனுடைய அம்மாவும் அதே அறையில் தான் இருந்தாள், அம்மா வீட்டில் இருந்தவரை அந்த அறையில் ஒருவிதமான துர்நாற்றம் இருந்து கொண்டே இருந்தது. வலியும், வேதனையும், சளியும், மூத்திரமும், மலமும் சூழ்ந்த அவர்களின் படுக்கை அறையில் அமைதியின்மையும் ஒரு துர் நாற்றமாய் வீசிக்கொண்டே இருக்கும். அவனுடைய அப்பா, அம்மாவை முதியோர் இல்லத்தில் விட்டு வந்த பிறகும், படுக்கையை எடுக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டார்.

அம்மா உடனிருந்த வரை, அப்பாவுடன் எப்போதும் ஏதாவது விஷயத்தில் சண்டை போட்டுக் கொண்டே இருப்பாள்.  தீபாவை மட்டும் எழுப்பி விஷயத்தை சொன்னான்.
’நம்ம தான் கொண்ணுட்டோம்ப்பா என்றாள்! அழுதுகொண்டே!’. அவளை சமாதானப்படுத்த வழி தெரியாமல், “ நான் போய் அம்மாவைக் கொண்டு வந்துடறேன்! நீ அப்பா எழுந்த பின்னால விஷயத்தைச் சொல்லிடு, உங்க அப்பா, அம்மாவுக்கும் தகவல் சொல்லிடு” என்று கிளம்பிவிட்டான்.

இவன் போய்ச் சேர்வதற்குள், அந்த இல்லத்தில் அம்மாவை சுத்தம் செய்து, குளிக்க வைத்திருந்தார்கள். வீட்டிற்கு அணுப்புவதற்காய், ஒரு அமரர் ஊர்தியும் தயாராய் வைத்திருந்தார்கள். பாலாவுக்கு அம்மாவைப் பார்த்ததும், அடக்கமுடியாமல் கண்ணீர் வந்தது.  வீட்டிலேயே இருந்திருந்தால், இன்னும் கொஞ்ச நாள் இருந்திருப்பாளோ என்று நினைத்தான். இறப்பதற்கு முன்னால் என்னென்ன சொல்ல நினைத்தாளோ, அப்பாவை பார்க்க, தீபா, பவித்ராவைப் பார்க்க நினைத்திருப்பாளோ? அம்மாவை விட்டு வரும்போது, இவனுடனேயே வந்த பார்வை, இவனுக்கு ஏனோ ஞாபகம் வந்தது. 

அம்மாவை அமரர் ஊர்தியில் ஏற்றிய பிறகு, இல்லத்தில் இருந்த பணியாளர்களிடம் விடைபெறும் போது, காலையில் தகவல் சொன்ன தாதி வந்து தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாள்.

“உங்க அம்மா தற்கொலை செய்துகிட்டாங்க! சார்! என்றாள்.  அதனை பாலாவால் சரியாக புரிந்து கொள்ளமுடியவில்லை.

என்ன சொல்றீங்க? அம்மா எப்படி தற்கொலை செய்து கொள்வாள்? என்றான்.

“சரியா தூக்கம் வரலேன்னு இங்க இருக்கிற  நைட் டூட்டி நர்ஸ்ட்ட, ரெண்டு ரெண்டு தூக்க மாத்திரை வாங்கியிருக்காங்க தினமும்! சேர்த்து வச்சு, மொத்தமா நேத்து ராத்திரி முழுங்கியிருக்காங்க!

“நீங்க இங்க கொண்டாந்து விட்டிருக்க வேண்டாம் சார்!” என்றாள்.