Showing posts with label அனுபவக்கதை. Show all posts
Showing posts with label அனுபவக்கதை. Show all posts

Friday, July 08, 2011

பழுத்த இலைக்காடு...

அம்மா இறந்தவிட்டதாய், அதிகாலை நாலு மணிக்கு அந்த முதியோர் இல்லத்தில் இருந்து தகவல் வந்ததும் பாலாவின் மனசுக்கு கொஞ்சம் நிம்மதியாய் இருந்தது.  ஒரேயடியாய் தன்னை வேதனையில் இருந்தும், பிணியில் இருந்தும் விடுவித்துக் கொண்டு விட்டாள் என்று நினைத்துக் கொண்டான்.  இந்த தகவலை தன் அப்பாவிடம் எப்படி சொல்வது என்று மட்டும் யோசனையாய் இருந்தது அவனுக்கு.  எங்கேயோ கொண்டு போய் விட்டு கொண்ணுட்டீங்களேடா என் பொண்டாட்டிய? என்று கேட்டு விட்டால் என்ன பதில் வைத்திருக்கிறோம்? என்று அவனால் யோசிக்கமுடியவில்லை. 

தீபா அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தாள்.  நேற்று இரவு அப்பாவுக்கு சாப்பிட்டது ஏதோ சேராமல், படுக்கையை ஒட்டியே வாந்தி எடுத்துவிட்டார்.  பலமான ஓங்கரிப்பு சத்தம் கேட்க எழுந்து போய் பார்த்த போது படுக்கைக்கும் தரைக்குமாய் வாயில் எடுத்தது பரவியிருந்தது.  அப்பாவுக்கென்று பிரத்யேக உணவு முறை, சர்க்கரை வியாதியில் வலது காலை இழந்தவர். சர்க்கரை கண்ட்ரோலில் இல்லை என்றால், அடுத்த காலும், கண்ணும் போய்விடும் என்று பயமுறுத்தியதில் கொஞ்சம் திருந்தி தனது உணவு பழக்கத்தை மாற்றிக் கொண்டார். இடது காலில் எப்போதோ அடிபட்டது ஆறாமல் புரையோடிப் போய் இருந்தது. அதை சுத்தம் செய்வதும், மருந்திடுவதும் எப்போதும் தீபா தான். அவனுடைய அப்பா வாந்தி எடுத்ததை தீபா சுத்தம் செய்து படுக்கையை சரி செய்யவே நேரமாகிவிட்டது. நள்ளிரவுக்கு மேல் தான் தீபா தூங்க ஆரம்பித்திருப்பாள்.

தீபாவை ஒட்டியபடி, விரலை வாயில் போட்டபடி பவித்ராவும் தூங்கிக் கொண்டிருந்தாள். அடுத்த கையில் தீபாவின் முந்தானையை கெட்டியாய் பிடித்திருந்தாள். தீபாவை எழுப்பி தகவலைச் சொல்லத் தயக்கமாக இருந்தது. தீபாவின் பொறுமையும், அன்பும் மெச்சக்கூடியது, இவனுக்கு தான் ஏதோ பெரிய புன்னியம் செய்திருக்கவேண்டும் என்று தோன்றும். தீபாவுக்கு இந்த செய்தி தாங்கமுடியாத வேதனையாய் இருக்கும்.  பாலாவின் காதல் திருமணத்திற்கு, யாரும் தடையாய் இல்லை என்றாலும்,  திருமணம் செய்த பிறகும் மருமகளை இப்படி கொண்டாடுவார்கள் இருவரும், என்று பாலாவுக்கு நம்பிக்கையே இல்லாமல் இருந்தது.  ஆனால் நேர்மாறாய், பாலாவின் அம்மா தீபாவைத் தாங்கு தாங்கு எனத் தாங்கினாள்.

அவனுடைய அம்மாவுக்கு லோவர் இண்டஸ்டைனல் கான்சர் வந்து ஏறக்குறைய நான்கு வருஷம் உயிர் வாழ்ந்திருக்கிறாள். கீமோதெரபியின் தயவிலும், மருந்துகளின் தயவிலும் ஏதேதோ நம்பிக்கைகளின் முள்முனைகளில் படுத்திருந்தாள் இத்தனை நாளும். அவளின் புற-அகத்தோற்றம் முற்றிலும் மாறிவிட்டது, அம்மா அத்தனை அழகில்லை என்றாலும், அவளுடைய சாந்தமும், கனிவும் அவளை அழகாய்க் காட்டும்.  தன்னை முன் துருத்திய பற்களுடனும், சிகிச்சைகளில் கொட்டிப் போன தலை மயிருடனும் பார்க்கிற ஒவ்வொரு தருணத்திலும், அவளின் மீது அவளுக்கு சுயவெறுப்பும், சுயபச்சாதாபமும் வளர்ந்து கொண்டே இருந்தது. அது அவளை மேலும் முடக்கியது. எல்லோர் மீதிலும் வெறுப்பும், துவேஷமும் அதிகமாகிக் கொண்டே இருந்தது. யாருக்கும் தன்னைப் பிடிக்கவில்லை என்ற அவளின் அழுத்தமான எண்ணம் அவளை மன அழுத்தத்திற்குள் தள்ளியிருக்க வேண்டும் என்று அவனுக்குத் தோன்றும்.  ஆனால் அதை எப்படி சரிசெய்வது என்று தெரியவில்லை.

அம்மாவுக்கு முதலில் சாதாரண வயிற்றுவலியாகத் தோன்றியது, மலத்தில் ரத்தம் கலக்க அல்சர் அல்லது மூலம் என்று தான் நினைத்தார்கள்.    அவனுடைய அம்மாவின் அப்பா, அம்மா என்று எல்லோருக்கும் மூலம் இருந்தது. பரம்பரை வியாதியாய் இருக்கும் என்று ஆளுக்காள் சொல்ல, குளுமையாக சாப்பிட்டால், நார்ச்சத்து உணவு அதிகம் சாப்பிட்டால், எல்லாம் சரியாகிவிடும் என்றது சரியாகவில்லை.  இரண்டு வருடங்களுக்கு மேலாக இது தொடர, சோகை பிடித்தது போல ஆனாள் அவனுடைய அம்மா. ஹோமியோபதி மருத்துவக்குளிகைகளில் குறையாமல் மேலும் முற்றி, மலத்தில் சீழும், ரத்தமும் மட்டுமே வர ஆரம்பித்தது. சிலசமயம், தார் போல மலம் வருகிறது என்று அம்மா சொன்னபோது பாலாவுக்குக் கொஞ்சம் பயம் வந்தது.

ஒருமுறை இவனுடைய அம்மாவைப் பார்க்க வீட்டுக்கு வந்த சேதுமாமா, “மூலம்னா இப்படி இருக்காதுலே! எப்போதும் போல பசிக்கும்லே! போய் நாஞ்சொல்ற டாக்டரப்பாரு!”  அக்காவ இப்படி பாக்கவே சகிக்கலை! என்று ஒரு மருத்துவரின் விலாசத்தையும் கொடுத்திருந்தார். வேலைப்பளுவின் காரணமாக தள்ளிப்போய் கொண்டே இருந்தது இரண்டு வருஷத்துக் முன்னால் தான் அவளுக்கு கான்சர் இருப்பது கண்டுபிடிக்க நேர்ந்தது. அதுவும் ரொம்பவும் முற்றிய நிலைக்குப் பிறகே.

சாப்பாடு சரியாக சாப்பிட முடியாமல், வயிற்றில் கல்லைக் கட்டியது போல உணர்ந்ததாய் சொல்லியிருக்கிறாள். உறுப்புகள் செயலிழக்க ஆரம்பித்து, முற்றிலும் படுத்த படுக்கையானாள்.  உயிரெல்லாம் கரைந்து வாயிலும் கையிலும் சேர்ந்து விட்டது போல பேசமுடியும், வலதுகையை அசைக்கவோ, ஆட்டவோ முடியும் அவ்வளவே.

அவன் வருமானம் போதவில்லை, இருக்கிற வீடு வசதியில்லை.  இருவரின் மருத்துவச் செலவும், இதர செலவுகளும் அவனுக்கு சுமக்கமுடியாத பாரமாய் அழுத்தியது. வேலைக்கு போவதினூடே அவர்களை கவனித்துக் கொள்ளவோ அன்பாய் பேசவோ, அவர்களுடன் நேரம் செலவிடவோ அவனால் முடிந்ததில்லை.  தீபா தான் பார்த்துக் கொண்டாள். அவர்களின் எல்லா விஷயங்களிலும் உடன் இருந்து, சலிப்பில்லாது கவனித்து வந்தாள்.

போனமாதம் ஒரு முறை பேச்சு வாக்கில், இவனிடம் தீபா இருவரையும் பார்த்துக் கொள்வது சிரமமாய் இருப்பதாகச் சொல்லப்போக, ஒரு வாரத்தில் முதியோர் இல்லத்தில் சேர்த்துவிடலாம் என்று இவன் நின்றபோது முற்றிலும் மறுத்தாள் தீபா.  என்றாலும், தொடர்ந்து ஒருவாரத்திற்கும் மேலாக அவளிடம் பேசி அவளை சம்மதிக்க வைத்தான். அவனுடைய அப்பாவுக்கும் அது நல்ல முடிவாகத்தான் பட்டது.  தீபா, இரண்டு பேரையும் பார்த்துக் கொள்வதிலேயே நேரம் செலவிடுவதால், குழந்தையை பார்த்துக் கொள்ளமுடியாமல் போவதை அவர் உணர்ந்து இருந்தார். தீபா படும் சிரமங்களும், அவளுடைய முகம் கோணாத சிசுருஷைகளும் அவருக்கு தெரிந்து தான் இருந்தது.

அவனுடைய நண்பர் ஒருவர் சொன்ன பிறகு தான் இப்படி ஒரு முதியோர் இல்லம் இருப்பது தெரிய வந்தது. ரோட்டரி சங்கம் எடுத்து நடத்தும் இந்த முதியோர் இல்லத்தில் வயதானவர்கள் மட்டுமல்லாது, இறுதி முடிவில் இருந்த வயதானவர்களையும் பார்த்துக் கொண்டார்கள். பெரிய நிறுவனங்களின் அன்பளிப்பிலும், செக்கோஸ்லேவியாவின் பென்ஷன் பண்ட் நிறுவனத்தின் உதவிப் பணத்திலும் இயங்குகிறது. தீபா அவனுடன் ஒருமுறை அங்கு சென்று வந்தாள். மதுரை, வளையங்குளம் தாண்டி விலக்கில் இருக்கும் அந்த வசதியான முதியோர் இல்லத்தை பார்த்த பிறகே ஒருவாறு சமாதானம் அடைந்தாள். 

அங்கு சிறப்பு மருத்துவரோ அல்லது சிறப்பான மருத்துவ சிகிச்சையோ ஏதும் கிடையாது. ஒரு மருத்துவர் அங்கேயே பணியில் இருப்பார், சில தாதிகளும் இருப்பார்கள். உணவளிப்பது, மருத்துவரின் ஆலோசனைப்படி வலி நிவாரணிகளும், தேவைப்பட்டால், தூக்க மாத்திரை  கொடுக்கப்படும்.  பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள் கொடுத்துவிட்டுப் போனால் வேளாவேளைக்கு கொடுப்பார்கள். காற்றோட்டமான இடம், அன்பான பணியாளர்கள். மருத்துவர்களால் கைவிடப்பட்டவர்கள், வலியின்றி இறக்க ஒரு வழி, ஏற்பாடு இது என்று அவர்கள் சொல்ல, அவனுக்கு அதுவே திருப்தியாய் இருந்தது.

அம்மாவை சேர்க்க டாக்ஸி அமர்த்தி, அந்த முதியோர் இல்லத்துக்கு வரும்போது, அவர்கள் கேட்டிருந்த அத்தனை மருத்துவ சான்றிதழ்களும், இவன் வருமான சம்பந்தமான சான்றிதழும் எடுத்துக் கொண்டான்.

முன் சீட்டில் பாலா உட்கார்ந்திருக்க, அம்மாவை, பின் சீட்டில் கிடத்தினான்.   தீபா நிறைய அழுதாள். பாலாவின் அப்பா வெளியே வரவே இல்லை. பாலாவின் அப்பாவால் வெளியே வந்து வழி அணுப்பி வைத்திருக்க முடியும், அவர் அதை தவிர்த்ததன் காரணம் புரியவில்லை. இத்தனை நாட்கள் உடனிருந்தவளை இப்போதே வாரிக் கொடுத்தது போல அவருக்குத் தோன்றியிருக்க வேண்டும்.  டாக்ஸியின் பின் சீட்டில் கிடத்தியவுடன், பாலாவின் அம்மா, அவனை தன் ஒளி மங்கிய கண்களால் தீர்க்கமாய்ப் பார்த்தாள். அம்மாவின் வார்த்தைகளும், மனசும் அவள் பார்வையிலும், கடையோரம் வழிகிற கண்ணீரிலும் இருந்தது போலத் தோன்றியது. காணச்சகியாது டிரைவருடன் பேச்சு கொடுத்துக் கொண்டே இறுக்கமாய் அமர்ந்து கொண்டான்.

அந்த இல்லத்தை அடைந்த போது, ஸ்ட்ரெச்சருடன் இரண்டு பேர் வந்தார்கள். டாக்ஸியின் பின் கதவைத் திறந்து அவனுடைய அம்மாவை தூக்கினார்கள் பாலாவின் அம்மா இன்னும் அவன் மீதிருந்த பார்வையை அகற்றாமல், அவனை நோக்கிய மாதிரியே இருந்தது.  டிக்கியில் இருந்த துணிமணிகளையும் அம்மாவிற்கு கொடுக்கவேண்டிய மருந்துகள், பிளாஸ்க் போன்ற சாமான்களை எடுத்துக் கொண்டான்.

உள் நுழைந்தவுடன் பெஞ்சில் அம்மா இருந்த ஸ்ட்ரச்சரை வைத்தார்கள். வரவேற்பறையில் இருந்த பெண் சிரித்தபடியே பனிவாய்ப் பேசினாள்.   அந்த அறை பேரமைதியாய் இருந்தது. சுவர்களில் வயதானவர்களின் உடல் நலம், மருத்துவக்குறிப்புகள், எளிய உடற்பயிற்சிகள், வயதானவர்களை கொண்டாட வேண்டும் எனும் போஸ்டர்கள் நிரம்பியிருந்தது. வரவேற்பறையின் கடைக்கோடியில் ஒரு அறிவிப்புப் பலகையும், சில அறிவிப்புகளும், குறுந்தகவல் அட்டைகளும் ஒட்டப்பட்டிருந்தது.  அறிவிப்பு பலகைக்கு அடுத்து ஒரு வாட்டர் கூலர் வைக்கப்பட்டு இருந்தது.  அவனுக்கு தண்ணீர் குடிக்க வேண்டும் போல இருந்தது.

கொண்டு வந்திருந்த சான்றிதழ்களையும், இதர பேப்பர்களையும் வரவேற்பறையில் இருந்த பெண் வாங்கிக் கொண்டாள். ஒரு படிவம் கொடுத்து அதை பூர்த்தி செய்யச் சொன்னாள். சகல விபரங்களும் கேட்டிருந்தார்கள், அதில் நிறைய ’ஏன்’ கள் இருந்தன. பூர்த்தி செய்ததும், அவனிடம் இருந்து வாங்கி, அதில் ரூபாய். ஐந்தாயிரம் என்று எழுதி வட்டமிட்டாள். வலது பக்கம் இருந்த கேஷ் கவுண்டரை கைகாட்டினாள்.  பாலா ஒரு இயந்திரம் போல கேஷ் கவுண்டரை நோக்கி நகர்ந்தான்.  அவனுடைய அம்மாவை இப்போது ஒரு அறைக்குக் கொண்டு சென்றார்கள். அம்மாவுக்கு ஒரு படுக்கையும் ஒரு நம்பரும் தரப்பட்டது. 

அம்மாவை அறையில் விட்டுவிட்டு வெளியே வரமுடியவில்லை. அவள் படுக்கைக்கு அருகே இருந்த சின்ன கப் போர்டில், அவளுடைய துணிமணிகளை வைத்த பிறகு, அவள் படுக்கையின் ஓரத்தில் உட்கார்ந்து கொண்டான். அவனுடைய கைகளை அம்மா பிடித்தபடி ஒன்றும் பேசாமல், கண்ணீரின் ஊடே பார்த்தாள். பாலாவுக்கு என்னவோ போல் இருந்தது.

“வாரத்திற்கு ஒரு தடவை உன்னை வந்து பாக்குறேம்மா!” என்றான். அங்கிருந்த தாதியிடம், நன்றாக கவனித்துக் கொள்ளும்படி சொன்னபோது, ‘கவலைப்படாதீங்க சார், நாங்க  நல்லாப் பாத்துக்குறோம்!” இங்க நூறு பேருக்கும் மேல இதே மாதிரி வயசானவங்க இருக்காங்க!” என்று ஒரு தகவலையும் சொன்னாள்.  

இன்றோடு ஆறு நாட்களாகிவிட்டது, அம்மாவை விட்டு வந்து. அம்மாவை அட்மிட் செய்யும்போதே, அம்மாவின் இறுதி காரியங்களுக்கும், கிரியைகளுக்கும் சேர்த்து பணம் கட்டிவிட்டிருந்தான். ரசீது எங்கே இருக்கும் என்று யோசனை வந்தது அவனுக்கு.  முன் நடையில் இருக்கும் கப்போர்டில் இருக்க வேண்டும், அங்கு வைத்த ஞாபகம் இருந்தது அவனுக்கு.

முன் நடையை ஒட்டிய அறையில் அவனுடைய அப்பா அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார். அவனுடைய அம்மாவும் அதே அறையில் தான் இருந்தாள், அம்மா வீட்டில் இருந்தவரை அந்த அறையில் ஒருவிதமான துர்நாற்றம் இருந்து கொண்டே இருந்தது. வலியும், வேதனையும், சளியும், மூத்திரமும், மலமும் சூழ்ந்த அவர்களின் படுக்கை அறையில் அமைதியின்மையும் ஒரு துர் நாற்றமாய் வீசிக்கொண்டே இருக்கும். அவனுடைய அப்பா, அம்மாவை முதியோர் இல்லத்தில் விட்டு வந்த பிறகும், படுக்கையை எடுக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டார்.

அம்மா உடனிருந்த வரை, அப்பாவுடன் எப்போதும் ஏதாவது விஷயத்தில் சண்டை போட்டுக் கொண்டே இருப்பாள்.  தீபாவை மட்டும் எழுப்பி விஷயத்தை சொன்னான்.
’நம்ம தான் கொண்ணுட்டோம்ப்பா என்றாள்! அழுதுகொண்டே!’. அவளை சமாதானப்படுத்த வழி தெரியாமல், “ நான் போய் அம்மாவைக் கொண்டு வந்துடறேன்! நீ அப்பா எழுந்த பின்னால விஷயத்தைச் சொல்லிடு, உங்க அப்பா, அம்மாவுக்கும் தகவல் சொல்லிடு” என்று கிளம்பிவிட்டான்.

இவன் போய்ச் சேர்வதற்குள், அந்த இல்லத்தில் அம்மாவை சுத்தம் செய்து, குளிக்க வைத்திருந்தார்கள். வீட்டிற்கு அணுப்புவதற்காய், ஒரு அமரர் ஊர்தியும் தயாராய் வைத்திருந்தார்கள். பாலாவுக்கு அம்மாவைப் பார்த்ததும், அடக்கமுடியாமல் கண்ணீர் வந்தது.  வீட்டிலேயே இருந்திருந்தால், இன்னும் கொஞ்ச நாள் இருந்திருப்பாளோ என்று நினைத்தான். இறப்பதற்கு முன்னால் என்னென்ன சொல்ல நினைத்தாளோ, அப்பாவை பார்க்க, தீபா, பவித்ராவைப் பார்க்க நினைத்திருப்பாளோ? அம்மாவை விட்டு வரும்போது, இவனுடனேயே வந்த பார்வை, இவனுக்கு ஏனோ ஞாபகம் வந்தது. 

அம்மாவை அமரர் ஊர்தியில் ஏற்றிய பிறகு, இல்லத்தில் இருந்த பணியாளர்களிடம் விடைபெறும் போது, காலையில் தகவல் சொன்ன தாதி வந்து தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாள்.

“உங்க அம்மா தற்கொலை செய்துகிட்டாங்க! சார்! என்றாள்.  அதனை பாலாவால் சரியாக புரிந்து கொள்ளமுடியவில்லை.

என்ன சொல்றீங்க? அம்மா எப்படி தற்கொலை செய்து கொள்வாள்? என்றான்.

“சரியா தூக்கம் வரலேன்னு இங்க இருக்கிற  நைட் டூட்டி நர்ஸ்ட்ட, ரெண்டு ரெண்டு தூக்க மாத்திரை வாங்கியிருக்காங்க தினமும்! சேர்த்து வச்சு, மொத்தமா நேத்து ராத்திரி முழுங்கியிருக்காங்க!

“நீங்க இங்க கொண்டாந்து விட்டிருக்க வேண்டாம் சார்!” என்றாள்.

Friday, April 08, 2011

மருதாணி சித்திரங்கள் - 1


அம்மா கொடுத்த காப்பியை முடித்துவிட்டு, காலை பேப்பரில் புகுந்து கொண்டேன்.  பேப்பரில் ஒன்றும் பெரிதாக இருப்பதாகப்படவில்லை. பேப்பரை மடித்துவிட்டு, கண் மீண்டும் ஒருமுறை நிலைக்கு மேலே மாட்டியிருக்கும் கடிகாரத்திற்கும், வாசலுக்கும் சென்று மீண்டது. என்ன இவனை இன்னும் காணலையே? என்று நினைத்துபடியே, மடித்த பேப்பரில் கண்களை வெறுமனே ஓட்டிக் கொண்டு இருந்தேன். சலனத்தின் மழைத்துளி மாதிரி சைக்கிள் மணிச்சத்தம் விழுந்தது. அவனாகத்தான் இருக்கும் என்று வெளியே வந்து எட்டிப் பார்த்தேன். அவன் தான்.  வாசலில் போட்டிருந்த கோலத்தை தவிர்த்து, சைக்கிளை சர்ரென்று கொண்டு வந்து பிரேக் போட்டு நிறுத்தி, ஒரு கால் ஊன்றி சிரித்தான்.

ரகுவுக்கு அவனுடைய இந்த புன்னகை, வசீகரமான முகம் ரெண்டும் பெரிய வரம் அல்லது வேறு ஒரு பார்வையில் ஆயுதம் என்று நினைத்துக் கொண்டேன்.  என் சனிக்கிழமை காலை இவனுக்கென்று ஒதுக்குவதற்கு இவன் புன்னகை ஒரு காரணமாக இருக்கத்தான் வேண்டும் என்று தோன்றியது. நான் பெங்களூர் போவதற்கு முன்னால் நினைத்த பொழுதெல்லாம் ஒரு தொலைபேசி அழைப்பில் வந்து  நிற்பான். வேலை கிடைத்து  நான் பெங்களூர் சென்றவுடன் வாரம் தவறாமல் சனிக்கிழமை கூடலழகர் பெருமாள் கோயிலுக்கு போய்விட்டு நேராய் இங்கு வருவது வழக்கமாகி விட்டது. 

கையில் வழக்கம் போல இரண்டு புத்தகங்கள். வரும்போதெ,     ‘நான் போட்ட லட்டர் கிடைச்சுதா உனக்கு? என்று கேட்டவாறே உள்ளே நுழைந்தான். வாரம் ஒருமுறை தவறாமல் சந்தித்த போதிலும், கடிதம் எழுதுவதில் குறைவில்லை எங்களுக்குள். பேசிக்கொள்ள அத்தனை இருந்தது, விஜய் தான் கிண்டல் செய்வான் அப்படி என்னதான் பேசிக்குவீங்க? என்று. புத்தகங்கள், சினிமா என்று பேசிக் கொண்டிருந்தாலும், அதையும் தாண்டி ஒரு உறவு முறை சார்ந்த சம்பாஷனைகளும் எங்களுக்கிடையே இருந்தது

எந்த லட்டரைப்பற்றி குறிப்பிடுகிறான் என்று தெரியாதது போல, எந்த லட்டர்? என்றேன், பேசத் தயாராக உட்கார்ந்து கொண்டே. முன்னறை மாடிப்படியில் இயல்பாக உட்கார்ந்து கொண்டான். அவனுடைய வழக்கமான இடம் அது. இந்த மாடிப்படி எங்க போகுது என்று ஒருமுறை கேட்டிருக்கான்? அதற்கு சிரித்திருக்கேன். மேலே அறைகள் ஏதும் இல்லாத மொட்டை மாடி.  மாடிப்படியின் முடிவில் கவிந்திருக்கும் மரத்தின் கிளைகள், அங்கு ஏதோ பூட்டிய அறை இருப்பது போலத் தோற்றம் தரும். என்னை கேள்வியாய் பார்த்தவன், திரும்பவும் தொடர்ந்தான். “நெறைய எழுதியிருந்தேன் வித்யா! சே! நீ படிச்சிருப்பேன்னு நினைச்சேன் என்றான் லேசான வருத்தத்துடன். அதை படித்ததை சொல்லியிருந்தால் அவனுடைய கண்களில் ஒரு மினுக்கென்ற வெளிச்சம் தெரிந்திருக்கும்.

அவன் வருத்தத்தை ரசித்தவாறே, படிச்சேன், படிச்சேன்! மீனா மாமி பத்தி வரிஞ்சு கட்டி எழுதியிருந்தயே?என்றேன் கண் சிமிட்டலுடன்.  அவன் அதில் தொங்கிக் கொண்டிருந்த கிண்டலை கவனிக்கவில்லை அல்லது கவனிக்காத மாதிரி நடிக்கிறான் என்று தோன்றியது.

கிடைச்சுடுச்சா? என்றான் ஒரு திருப்தியுடனும், பளீர் புன்னகையுடனும். “பக்கத்து வீட்ல இருக்காங்க வித்யா! தெளிவான நிஷ்களங்கமில்லா முகம், பெரிய கண்கள், லேசா இந்த பூசினா மாதிரின்னு சொல்வாங்களே அந்த மாதிரி இருப்பாங்கஎன்று ஆரம்பித்தான். யாரையாவது பற்றி சொல்லும்போது, அவனுடைய எழுத்தார்வம், எழுத்து என்பதை விட, அவனுடைய கவித்துவமான உணர்வு வெளிப்பாடு, ஒரு ஸ்ப்ரவுட் மாதிரி வெளியே வரும் தளுக்கலாய். அவனுடைய வர்ணனைகள் கண் முன்னே அவன் சொல்ல வருகிற பெண்ணைக் கொண்டு வந்து நிறுத்திவிடும்.  எனக்கு மீனா மாமியை நன்றாகவே தெரியும் என்பது போல் இருந்தது.

ஒரு நடுத்தரவயது திருமணமான பெண், குழந்தைகளை ஸ்கூலிற்கு அணுப்பிவிட்டு, கணவனை வேலைக்கு அணுப்பிவிட்டு அலுப்புடன், வேலையின் மிச்சங்களை முந்தானையில் துடைத்தபடியே பின்காலை வேளையில் வீட்டு வாசலில் வந்து நிற்பது போன்ற ஒரு பெண் உருவம் என் கண் முன்னே நின்றது.  

அவங்களுக்கு கர்னாடிக் மியூசிக்னா ரொம்ப பிடிக்குமாம் வித்யா! நல்ல கேள்வி ஞானம், நல்லாவே பாடறாங்க. ஸ்ரீமந்நாராயணா, பௌளில பாடுனப்போ அப்படியே அசந்து போயி உட்கார்ந்துட்டேன் தெரியுமா? கமலப்ரியா கமலேசனா” ன்னு பாடும் போது நெக்குருகிப் போச்சு. அவங்களோட புருஷனப் பாத்திருக்கேன் நான், ரொம்ப சுமாரா இருப்பான்.  சுமார் அப்படிங்கிறத விட, அவங்களோட மென்னுணர்வுகள மதிக்கிற மாதிரியே இருக்காது அவன் பார்வையும், அவங்கட்ட பேசுற விதமும், என்றான் அவன் முகத்தை ஒரு மாதிரி வைத்துக் கொண்டு. 

இப்போ இத எங்க கொண்டு போற? என்றேன் அவனுடைய கண்களில் மாறும் பாவங்களை ரசித்துக் கொண்டே.  இதே போல, நடுத்தர வயதுள்ள... இல்லை, பெண்களுடனான இவனுடைய சினேகம் எத்தனை.  கர்னாடிக் ம்யூசிக், பாலகுமாரன், பாலசந்தர் என்று இவன் அடிக்கும் ஜல்லி பற்றி நினைத்துக் கொண்ட போது எனக்கு சிரிப்பாய் வந்தது.

எங்க கொண்டு போறது? ரொம்ப ஆத்தாமையா இருக்கு.  இது போல ஒரு பெண்ணோட உள்ளுணர்வுகள புரிஞ்சுக்கிறத்துக்கு என்னை மாதிரி ஆட்களும் இருக்காங்கங்கறது அவங்களுக்கு தெரிய வேண்டாமாதேவைப்படும் போது ஒரு சினேகிதனா இருப்பேன்னு அவங்க புரிஞ்சுக்க வேண்டாமா? பெண்களை மனசாவும், சகமனுஷியாகவும் நேசிக்கிறவங்களும் இருக்காங்கங்கறது அவங்களுக்கு தெரிய வேண்டாமா? அவர்கள் பேசுவதையும் காது கொடுத்து கேட்க வேண்டாமா? என்று அவன் அடுக்கிய கேள்விகளில் இருந்த தீவிரம், எனக்கு இதற்கு ஸ்ரீவில்லிபுத்தூர் சிண்ட்ரோம் என்று பெயரிடத்தோன்றியது. 

என்ன நினைத்தானோ, திரும்பவும் தொடர்ந்தான்.  நான் நேத்து சாயங்காலம் காபி ராகத்துல ஆலாபனை பன்றத, கேட்டதும் எவ்வளவு ரசிச்சாங்க தெரியுமா? என்றான்.  கண்ணமூடி கேக்கும் போது ஏசுதாஸ் மாதிரி இருந்ததா சொன்னாங்க! எனக்கு அப்படியே மூளையில் இனித்தது அப்படின்னு தி.ஜா.வின் பாயசம் குடிச்சா மாதிரி சொல்வான்.

சிரிப்பை என்னால் தவிர்க்க முடியவில்லை.  அதிலிருந்து அப்போதைக்கு பேச்சு பாலகுமாரனின் புத்தகங்களுக்கும், சமீபத்தில் வந்திருந்த ஆசை படத்திற்கும் தாவி விட்டாலும், நடுநடுவே மீனா மாமி தென்பட்டாள்.

நான் அவங்களுக்கு பிடிச்ச எம்எல்வி கேசட்ட டவுன்ஹால் ரோடு போய் கீஷ்டு கானத்துல வாங்கிட்டு வந்தேன் வித்யா! அவங்களுக்கு தாங்கமுடியாத சந்தோஷம் தெரியுமா? இந்த சந்தோஷத்துக்காக என்னமும் செய்யலாம் வித்யா என்றான். அவன் கண்களை பார்த்தேன் அதில் ஒரு குழந்தையின் சந்தோஷம் தெரிந்தது.  இந்த கண்கள், இவன் பேசுகிற வார்த்தைகளுக்கு எத்தனை ஒத்துழைக்கிறது என்று தோன்றியது. 

நேத்து புது சாரி கட்டிட்டு வந்து என்கிட்ட எப்படி இருக்குண்ணு கேட்டாங்க சும்மா சொல்லக்கூடாது வித்யா, அவங்க நிறத்துக்கு அரக்கு பார்டர் வச்ச மாம்பழக் கலர் புடவை அவ்வளவு எடுப்பா, அழகா இருந்தது என்றான்.

அவங்க புருஷனுக்கு அவங்க என் கூட பேசறது பிடிக்கல, ஒரு மாதிரி நீ என்ன பண்ற, வேலைக்கு போலையான்னு கேட்டான்? என்றான். எனக்கு பொசுபொசுன்னு வந்துச்சு... அப்படியே அறையலாம்போல என்றான். ஏதோ முன்யோசனையாய் இருந்தவன்,  வழக்கத்தை விட சீக்கிரமாகவே கிளம்பி போய்விட்டான், கடிதம் எழுதுகிறேன் என்று. எனக்கு கொஞ்சம் கவலையா இருந்தது.

மறுநாள் டிரெயின் பிடித்து பெங்களூர் வந்த என்னை, பின் தொடர்ந்த புதன்கிழமை கடிதத்தில் கூட மீனா மாமி இடம் பிடித்திருந்தாள்.  கோவிலில் பாடும்போது ...கான நீலா.. ஏல நீ தயராது பாடினப்போ அவங்க, நிச்சயமா சொல்றேன், வித்யா! என்ன ஒரு கணம் பாத்தாங்க, அந்த கூட்டத்தில கூட. ரொம்பவே சந்தோஷமா இருந்தது. சிரிப்பு வந்தது...அவனுக்கு. அவளோ பாதிச்சிருக்கேனா? என்றான். 

அடுத்த ஒன்றிரண்டு சனிக்கிழமை, பெரிதாக அந்த உறவில் முன்னேற்றம் இல்லாவிட்டாலும், தவறாமல் மீனா மாமி அவனிடம் நடந்து கொள்வதை பற்றி ஏதாவது இருக்கத்தான் இருந்தது.

ஒரு முறை, அவங்க என்னை பார்க்குறதுல இருக்கிற சந்தோஷம் ஜாஸ்தியாவே இருக்குல்ல எனக்கு?  நான் கொஞ்சம் அவங்களை எக்ஸ்பிளாய்ட் பண்றனோ? என்றான்.

ரகுவை எனக்கு இதனால் தான் பிடித்தது. இப்படி ஆச்சரியமான, யோக்கியமான பேச்சு சுலபமாக வரும்.

இந்த கேள்விய வேற யார்கிட்டயாவது கேப்பியா? என்றேன் ஒரு க்யுரியாசிட்டியில்.

தெரியல வித்யா! என்றான்

எல்லா கதைக்கும் முடிவு போல, இரண்டு மாதத்தில் மீனா மாமி வீட்டுக்காரருக்கு டிரான்ஸ்பர் ஆகி, அவர்கள் வீடு காலி பண்ணுவதால், ஒரு சனிக்கிழமை என்னை பார்க்க வரவில்லை.

என் கையில் முகம் புதைத்து அழுதாள், என்னை புரிஞ்ச ஒரு நண்பனையும் இழக்கிறேன்என்று வெள்ளிக்கிழமை நாளை பார்க்க வரமுடியாது என்று எழுதியிருந்த கடிதத்தில் முடித்திருந்தான். அவளுக்கு பிடித்த சில கேசட்டும், சில புத்தகங்களும் வாங்குவதற்கும், அவளுக்கு உதவி பண்ணுவதற்கும், நாளை பொழுது போய்விடும். என்ற வரிகளை படிக்கையில் எனக்கு அவன் சொன்ன வார்த்தை  நினைவிற்கு வந்தது. யார், யாரை... என்பதில் தான் எனக்கு குழப்பம் மிஞ்சியது.

Thursday, March 17, 2011

புனல்பெருவழி...


செல்வியைப் பார்க்கச் சென்றபோது அவளில்லை. அவளுடைய மகளும், அவளுடைய கணவரும் தான் இருந்தார்கள்.  செல்வியின் கணவர் என்னை பார்த்திருக்கிறார், மாப்ள, மாப்ள என்று வாய் நிறைய அழைத்திருக்கிறார் நிறைய சமயங்களில். ஆனால் அவரிருக்கும் நிலையில் என்னை அவருக்கு அடையாளம் தெரியவில்லை.  செல்வியின் மகளுக்கு என்னைத் தெரியாது, உறவுமுறை சொன்னால், ஓ! என்று கேட்டுக்கொள்ளலாம். என்ன செய்வது என்று தெரியாமல், வரும்போது முக்கில் பார்த்த டீக்கடை ஞாபகம் வந்தது, ஒரு டீயும், சிகரெட்டும், சில நிமடங்களை சாம்பலாய் உதிர்க்கும் என்று தோன்றியதால், அவளிடம் சொல்லிவிட்டு நகர முற்பட்டேன்.

செல்வியின் மகள், அம்மா வந்தா என்ன சொல்லணும் அண்ணா? என்றாள். அண்ணனா? என்று சிரித்துக் கொண்டேன்.  நானே வந்து சொல்லிக்கிறேன் என்று சொல்லிவிட்டு கிளம்பினேன் அங்கிருந்து.  டீயைச் சொல்லிவிட்டு காத்திருந்தேன். அது என்னவோ எந்த டீக்கடைக்கு போனாலும், காபி சாப்பிட மனம் வருவதில்லை. டீதான் எப்போதும், டீ மற்ற நேரங்களில் குடிக்கவில்லை என்றாலும்.  டீயும் சிகரெட்டும் பிரிக்க முடியாத விஷயமாகி விடுகிறது. 

கிங்க்ஸ் இல்லேண்ணா, பில்டர் தரவா என்றான் கடைக்காரன். அவனுக்கும் அண்ணா நான். நான் ஒன்றும் சொல்லாமல் அவனைப் பார்த்தேன், சிகரெட்டை நீட்டினான். அனிச்சையாய் கை நீண்டு சிகரெட்டை வாங்கிக் கொண்டது. பற்றவைக்க தொங்கிய கொச்சைக்கயிற்றின் முனையில் கனன்று கொண்டிருந்த நெருப்பை இழுத்து, சிகரெட்டின் முனைகளை பொசுக்கினேன்.  பற்றி இழுத்துக் கொண்டிருக்கும் போதே டீயும் வந்தது.

செல்வி என்னுடைய சித்தியின் பெண், என்னைவிட இரண்டு வயது பெரியவள்.  மூன்றும் பெண்களாய்ப் போன வீட்டில், ஆண்பிள்ளை நான் செல்லப்பிள்ளை ஆனேன். செல்வியின் மீது ப்ரியம் வேர்பிடிக்க மற்றுமொரு காரணம் செல்வியின் தோழிகள்.  சாய்ராபானுவும், மீனாவும் என்னைக் கொண்டாடுவது எனக்கு ரொம்பவும் பிடித்திருந்தது. பத்தாவது படித்து முடித்ததும், செல்வியை பள்ளிக்கூடம் போகவிடாமல் நிறுத்தி விட்டார்கள். செல்வியின் அப்பா, வயித்து வலிக்காரர், தங்க நகை வேலை பார்ப்பவர், வளையல் மட்டுமே செய்வார், அதுவும் கல்வைச்ச வளையல். யாரு இப்போது அதைப் போடுகிறார்கள்? வேலை ரொம்ப சுமார் என்பதால், அட்டையில் லாட்டரி சீட்டு வைத்துக் கொண்டு மீனாட்சி அம்மன் கோயில் சுற்றுப் பிராகாரங்களில் விற்றுக் கொண்டு இருப்பார்.

செல்விக்கு அடுத்து, கமலாவும், ராணியும் அவர்கள் இன்னும் படித்துக் கொண்டிருந்தார்கள், கமலா பத்தாவது வர குறைந்தது இரண்டு வருடம் இருந்தது அப்போது. கமலா நல்லாவே படிப்பாள், எல்லோருமே நீச்சத்தொட்டி ஸ்கூலில் தான் படித்தார்கள் அப்போது. செல்வி படிப்பை நிறுத்தியதும் தான், நான் சித்தி வீட்டுக்கு அதிகம் போக ஆரம்பித்தேன். செல்வி அழகாய் இருப்பாள், அப்போது.  ராணி, ராணிமுத்து, மாலைமதி என்று அவளின் பொழுதுகளில் காதலும், துரோகமும், களவும் மலிந்திருந்தன.  எல்லோரையும் போல அவளுக்கும் ராஜகுமார கனவுகள் இருந்தன என்பதில் சந்தேகம் இல்லாமல் இருந்தது. அவளின் செருகிய கண்களும், சுழித்த சிரிப்பும் அதற்கு கட்டியம்.

புதிய வார்ப்புகள் பாக்யராஜ், நிறம் மாறாத பூக்கள் சுதாகர் என்று பேசிப் பேசி காதலில் கொப்பளித்தாள் செல்வி. செல்வி மீராவின் கனவுகள் கற்பனைகள் காகிதங்கள், படித்து என்னிடம் விளக்கங்கள் சொல்வாள்.  மு.மேத்தா தான் உலகின் சிறந்த கவிஞன் என்று நம்பினாள். அவளுக்கு சுஜாதாவை அறவே பிடிக்காது. இந்துமதியும், சிவசங்கரியும், லக்‌ஷ்மியும் அவளுக்கு பிடித்த எழுத்தாளர்கள்.

செல்விக்கு இன்னொரு பிடித்தமான விஷயம் என்னுடைய தூரத்து மாமன் பாஸ்கரன். செல்வியைப் பார்க்கவே அடிக்கடி வருவான். அவனிடம் அப்போது சுவேகா என்றொரு மொபட் இருந்தது. சுவேகா கொஞ்சம் பருத்த சைக்கிள் மாதிரி இருக்கும்.  வீட்டுக்கார கிழவி மாதிரி சத்தம் போடும், புகையும் விடும். பாஸ்கர் எப்போதும் செல்வி மாவாட்ட உட்கார்ந்திருக்கும் நேரம் தான் வருவான். சாய்ந்தும் சாயாத வெயிலில், வந்தவன் சித்தியிடம் அக்கா, அக்கா என்று பிரியம் வழிய பேசுவான். சொந்த தம்பியே சீந்துறதில்லே, இந்த பய பாரு எவ்வளவு பிரியமா இருக்கான் என்று மெச்சிக் கொள்வாள் சித்தி. இடையிடையே அவனிடம் செலவுக்கு கொஞ்சம் பணமும் வாங்கிக் கொள்வாள். 

செல்வி மாவாட்டும் போது, எதிரில் இருக்கும் மாடிப்படியில் உட்கார்ந்து கொள்வான் பாஸ்கரன். வெயில் ஒரு பிரமிடு போல நிழல் பரத்தியிருக்கும். அதில் உட்கார்ந்து கொண்டு, சுவரில்லாத சித்த்ரங்கள் படத்தைப் பற்றி பேசினான். மீனாட்சி டாக்கீஸீல் போன வாரம் பார்த்துவிட்ட வந்ததன் பிறகு அதைப்பற்றி அதிகம் பேசினான். சக்தி தியேட்டரில், கன்னி பருவத்திலே அவனிடம் கதை கேட்கும் போது, அவளுக்கு வெட்கம் வரும்.  வெட்கத்தில் குருனையாய் அள்ளுவாள் மாவை. உளுந்து அரைத்து பொங்கிய பின், மாவை அள்ளிப் போடும் போது ஒரு சத்தம் வருமே, “தொளப்என்று அதை திரும்ப திரும்ப செய்யச் சொல்லி சிரிப்பான்.  செல்விக்கு இவனின் வினோத ஆசைகள், ரசனைக்குரியதாய் இருக்கும்.

செல்வியின் பேச்சில் கொஞ்சம் கொஞ்சமாய் உள்ளே வர ஆரம்பித்தான் பாஸ்கரன்.  செல்வி அவனைப் பற்றி பேசும்போதெல்லாம், எனக்கு ஆத்திரம் ஆத்திரமாய் வரும்.  அவன் மொபட்டில் காத்தப் புடுங்கிவிடவேண்டும் என்று தோன்றும், ஆனால் ஒருபோதும் செய்யத் துணிந்ததில்லை. ஒரு கட்டத்துக்குமேல்  செல்வியிடம் பேச ஆரம்பித்தாலே, பாஸ்கரன் பற்றி மட்டுமே பேச ஆரம்பித்தாள்.  எனக்கு மிளகாய் அரைச்ச அம்மில வெறுமனே உட்கார்ந்த மாதிரி காந்தும்.

ஒருமுறை வயித்துவலிக்கார சித்தப்பாவிற்கு வலி அதிகமாகி, ஆஸ்பத்திரில சேக்குறமாதிரி ஆகிவிட்டது.  தர்மாஸ்பத்திரி தான் என்றாலும், போக்குவரத்துக்கும், சத்துள்ள ஆகாரத்திற்கும் கொஞ்சம் காசு தேவையாயிருந்தது.  தர்மாஸ்பத்திரில கொடுக்குற கோதுமை ரொட்டி ஒரு மாதிரி நாறுது என்று தொடவில்லையாம் அவர். பர்மாக்காரன் கடையில இடியாப்பம் வாங்கிக் கொடுங்க! வயித்துக்கு இதமா இருக்கும்என்று பக்கத்து பெட்ல படுத்துக்கிடந்த பாட்டி சொல்ல, கீழவாசல் வரை போகணும், காசு வேற வேணுமே என்று சித்திக்கு தோன்றியிருக்க வேண்டும்.  முதலில் அம்மாவிடம் காசு வாங்கிவா என்று நான் பார்க்க போயிருந்த போது சொன்னவள், பிள்ளைக எல்லாம் அங்க தான் சாப்பிடுதுங்க என்று தோன்ற, காசு வாங்க வேண்டாம் என்று சொல்லிவிட்டாள்.

அப்போது தான் அவளுக்கு பாஸ்கரன்கிட்ட கேட்டுப்பாக்கலாமே என்று யோசனை வந்தது. அவன் சாயங்காலம் வரும்போது வாங்கிக் கொள்ளலாம் என்று நினைத்தாள் போல.  மதியம் சாப்பாடு வாங்கிவர எங்க வீட்டுக்கு வந்தாள்.  அம்மா அவளுக்கு சாப்பாடு போட்டுவிட்டு, எப்படிறீ இருக்காரு உங்க வீட்டுக்காரரு? என்று கேட்டாள்.  நீ  தர்மாஸ்பத்திரிக்கு வந்து பாப்பியா, உனக்கு கீரிடம் எறங்கிடாது? என்று முணுமுணுத்தபடியே சாப்பிட்டாள். 

கைப்பிள்ளைய வச்சுக்கிட்டு நான் எப்படிறீ வருவேன்? புத்தியில்லாம பேசுற! உன் வீட்டுக்காரன் கொழுப்பெடுத்துப்போய் விஜயா மெஸ்ல அயிர மீன் கொழம்பு சாப்பிட்டா, வவுத்து வலி வராம என்ன செய்யும்? அதுவும் ஜேபி கூட சேர்ந்து! அதான் வயித்துக்கு எதுவுமே ஒத்துக்காம, பயத்தப்பயிறா சாப்பிடுற? இந்த லட்சணத்துல எதுக்கு அயிர மீன் குழம்பு வளைச்சு, வளைச்சு திங்கணும்? அப்படி என்ன நாக்கு கேக்குது, இழுத்து வச்சு அறுக்க மாட்டாம? என்று சொல்லிவிட்டு சித்தியின் மூஞ்சியைப் பார்த்தாள் அம்மா. சித்தியின் முகம் போன போக்கே ஒருமாதிரி இருந்தது. ஏதோ நடக்கப்போவது உறுதியாய் தெரிந்தது.

சித்திக்கு அம்மா, அவள் புருஷன் பற்றி சொன்னது பிடிக்கவில்லை போல. அந்தமாட்டுல நிப்பாட்டு, நீ எங்களுக்கு கஞ்சி ஊத்தறதும் போதும், நாங்க வாரிக்கட்டிக்கிட்டதும் போதும் என்று சாப்பிட்டவரை வைத்துவிட்டு, பிள்ளைகளயும் வரச்சொல்லிவிட்டு கிளம்பினாள். செல்வி மட்டும் ஏம்மா உனக்கு புத்தி கித்தி கெட்டுப் போச்சா? பெரியம்மா நமக்கு எவ்வளவு செய்யுது? என்றாள். நீ பொத்து எனக்குத்தெரியும்! என்று மூன்று பேரையும் அழைத்துக் கொண்டு வெளியேறினாள்.  நான் எவ்வளவு சமாதானம் சொல்லியும் சித்திக்கு கோபம் குறையலை.

சித்தி எங்கள் வீட்டுக்கு வருவதற்கான மிகப்பெரிய காரணம் அப்பா தான். அப்பா முதலில் கட்ட ஆசைப்பட்டது சித்தியைத்தான்.  ஆனால், அம்மாவின் அம்மா உடல் நிலை சரியில்லாமல் இறந்துவிட்டதால், அவசர அவசரமாக அம்மாவுக்கும் அப்பாவுக்கும் கல்யாணம் நடந்தது. இது எல்லோருக்கும் தெரியும், அம்மாவுக்கும். ஆனால் அம்மா அதை சாதாரணமாக எடுத்துக் கொண்டாள், அப்பாவுக்கும் அம்மா மேல் அலாதியான பிரியம் வளர்ந்து விட்டது போகப்போக.  இந்த சண்டையைக் காரணமாய் வைத்து சித்தி அம்மாவிடமும், எங்களிடம் கூட பேசாமல் இருந்தாள்.  ஏதாவது விசேஷத்தில், செல்வியைப் பார்த்தால், பெரிம்மா! என்று ஆவலாய் அம்மாவிடம் ஓடி வருவாள்.

செல்வியின் கல்யாணத்திற்கு கூட சித்தி கூப்பிடலை.  ஆனா, சித்தி சம்பந்தம் பண்ணவர்கள் என்னோட அப்பாவழி சொந்தங்கிறதால, கல்யாணத்திற்குப் பிறகு திரும்பவும் ஒரு தொடர்பு வந்துவிட்டது. பாஸ்கரன் என்ன ஆனான் என்ற தகவல் தெரிந்து கொள்ள ஏனோ ஆர்வமாய் இருந்தது. கொஞ்ச நாள் செல்வி வீட்டோட போக்குவரத்து இருந்தது. செல்வி புருஷனும், தங்கவேலை தான் பார்த்தான், அவனோட தம்பியோட சேர்ந்து. நிறைய சம்பந்தா சம்பந்தமில்லாமல் பேசுவான், அப்போதே.  

பார்க்க நல்லாயிருந்தாலும், ஒரு விஷயத்தை ரெண்டு தடவைக் கேட்பான், ஒண்ணும் புரியலையே என்று கடைசியாய்த் தலையைச் சொறிவான். அவன் வீட்டில் யாரும் அவனை மதிக்கிற மாதிரி தெரியவில்லை. அவங்க வீட்ல செல்விக்கு எவ்வளவு மரியாதை இருக்கும் என்று நினைக்கும் போதே எனக்கு கவலையாய் இருந்தது. செல்வி மாமியார் வீட்ல தான் இருந்தாள், தம்பி, அவன் குடும்பம் என்று எல்லாம் ஒன்றாகத் தானிருந்தார்கள். செல்வியின் புருஷனுடைய தம்பிக்கு முன்னாடியே திருமணமாகி ஒரு குழந்தை வேறு இருந்தது. அப்பவாவது யோசித்திருக்க வேண்டும், ஏந்தம்பிக்கு முதல்ல கல்யாணம் செஞ்சாங்கண்ணு!

செல்வியின் புருஷனுக்கு கல்யாணம் ஆகும்போது, முப்பத்தி நாலு என்று யாரோ சொன்னார்கள்.  செல்விக்கு பதினெட்டோ, பத்தொம்பதோ தான். சித்திக்கு வேறு வழி தெரிந்திருக்காது, சித்தப்பா இன்னும் வயித்தப் பிடிச்சுக்கிட்டு தான் இருக்காரு என்று செல்வி சொன்னாள் ஒரு முறை. சித்தியை நினைத்தால் எனக்கு பரிதாபமாய் இருந்தது.

அதன் பிறகு நாங்க எல்லோரும் என் அப்பாவின் பணிமாற்றம் காரணமாக ஸ்ரீரங்கம் போய்விட்டோம்.  அதன்பிறகு முற்றாய் தொடர்பு விட்டுப்போனது. படித்து முடித்து வேலைக்குச் சேர்ந்தே இப்போது  பத்து வருஷம் ஆகிவிட்டது. கல்யாணமாகி பெங்களூரில் செட்டிலாயாச்சு. என்னுடைய அலுவல் காரணமா கோயம்புத்தூர் வந்த எனக்கு, இன்னொரு சித்தி மகன் தான் சொன்னான், செல்வி இங்க தான் கோயம்புத்தூர் கருப்பக்கவுண்டர் வீதில இருக்கான்னு.  கருப்பக்கவுண்டர் வீதி, காந்தி பார்க் போனா பக்கம் என்று ஞாபகம் இருந்தது.

செல்வம் சொன்னபடியே சரியாக கண்டு பிடிக்கமுடிந்தது. அவன் வழி சொன்னதும் வீட்டைப் பற்றிய விவரிப்பும் எதிரில் இருக்கும், கரிக்கடையும் போதுமானதாய் இருந்தது எனக்கு வீட்டை கண்டுபிடிக்க.  வந்து பார்த்தால், இவளைக் காணோம், ஏதோ ஒரு சூடக்கம்பெனில தான் வேலை பார்க்குறதா சொல்லியிருந்தான் செல்வம். செல்வியோட மககிட்ட கேட்டாத்தெரியும், சரி அவளை கம்பெனில போயி பார்க்கலாம் என்று முடிவு செய்தேன்.

செல்வியின் மகளைக் காணோம் முன்பக்கம்.  அப்போது அந்த வீட்டை கவனித்தேன். முன் வராந்தாவிலேயே ஒரு கட்டில் கிடந்தது. சுருங்கிக் கிடந்த ஒரு விரிப்பும், வகையின்றி கிடந்த தலைகாணி, ஒரு துண்டு அப்புறம் செல்வியின் புருஷன். எங்கோ பார்த்தபடி இருந்தான், நான் மாமா என்று கூப்பிட, யாரு என்று வந்தவன்.  என்னை தெரிந்துகொண்டது போல ஒரு பத்து ரூபா கொடேன் என்றான். என் பையில் பத்து ரூபாயே இல்லை, அம்பதைக் கொடுத்தேன். வாங்கிக் கொண்டவன், கீர்த்தனா என்று உள்ளே பார்த்து கத்திவிட்டு, வேகமாக வெளியே ஓடினான்.  எனக்கு அது வித்யாசமாய் இருந்தது.

கீர்த்தனா, செல்வியின் மகள் வந்தாள் வெளியே.  என்னண்ணா? என்றாள்.  உங்க அம்மா வேலை பாக்குற கம்பெனி எங்க இருக்கு என்றேன்.  அது தெலுங்கு வீதில இருக்குண்ணா, ஆனா அம்மா இப்போ சாப்பாட்டுக்கு வந்திடுவாங்க! நீங்க யாருண்ணா என்றாள்.  ரொம்பவும் ஒல்லியாய் இருந்தாள், மூங்கிலின் தப்பைக்குச்சி போல தட்டையான கைகள், ரெண்டு ரப்பர் வளையல்கள், கம்மலில்லாமல் குச்சி சொருகிய காது மடல்கள், கலைந்த தலைமுடி, பழைய சல்வாரில் பாவமாய் இருந்தாள்.  அழுகை வருவது மாதிரி இருந்தது. அவளிடம் நான் தான் உன் அம்மாவோட பெரியம்மவோட பையன் என்று முடிப்பதற்குள், சீனு மாமா என்று கட்டிக் கொண்டாள். எனக்கு இப்போது அழுகை உத்திரவாதமாய் வந்தது. 

உட்காருங்க மாமா, அப்பா எங்க போயிட்டாரு தெரியலையே! டீ போடவா மாமா? என்று அவள் அம்மாவைப் போலவே பரபரத்தாள். கட்டிலில் உட்கார்ந்தேன். என் பக்கத்தில் வந்து உட்கார்ந்து கொண்டு, கையைப் பிடித்துக் கொண்டாள்.  என்னென்ன சொன்னாளோ செல்வி என்று நினைத்துக் கொண்டேன்.  பத்தாவது படிக்கிறாள், ராஜவீதில பெண்கள் மாநகராட்சிப் பள்ளியில். நல்லாப் படிக்கிறாளாம். கல்லூரி போகும் கனவுகளைப் பற்றி பேசினாள். பாலில்லாத டீ ஒன்று கொடுத்தாள், சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே, அவளுடைய அம்மா! செல்வி வந்து சேர்ந்தாள். என்னைப் பார்த்ததும் ஓவென்று அழுதாள். எனக்கும் அழுகை வந்தது, பேசாமல் நின்றேன். கையில் வைத்திருக்கிறதை வாங்கிக் கொண்டு, ஏண்டீ கருப்பு டீ கொடுத்தே என்று சொல்லிவிட்டு கடைக்கு ஓடிப்போய் ஏதோ ஒரு குளிர்பானம் கொண்டு வந்தாள்.

உங்க அப்பா எங்கடீ? என்று கேட்டாள். அவளுக்கு தெரியாததால், எனக்குத் தெரியலைம்மா, மாமா முதல்ல வந்துட்டு போனபிறகு நான் உள்ள போயிட்டேன். ரெண்டாவது தடவை மாமா வரும்போது வெளியே வந்தேன் அப்பாவை காணோம் என்றாள்.  நான் செல்வியிடம், காசு கேட்டாரு கொஞ்சம் கொடுத்தேன், வாங்கிட்டு எங்கேயோ அவசரமா ஓடிப்போயிட்டார் என்றேன். போயிட்டானா? என்று கொஞ்சம் கெட்ட வார்த்தையில் திட்டினாள் எனக்கு ஆச்சரியமாய் இருந்தது அவள் அப்படி பேசியது.

இந்த மனுஷனுக்கு புத்தி பேதலிச்சு போச்சுடா, என்னென்னமோ பேசுறாருடா அது பத்தாதுன்னு தெருவில போறவன வர்றவண்ட்ட எல்லாம் போய் காசு கேக்குறாரு? போனமாசம் திடீர்னு ஆளைக்காணோம் ஒரு வாரமிருக்கும், போலீஸ்ல எல்லாம் தகவல் கொடுத்தாச்சு. ஒரு பிரயோஜனம் இல்லை, யாரோ வந்து சொல்றாங்க, மருதமலைல உட்கார்ந்து பிச்சை எடுத்திக்கிட்டு இருக்காரு. எனக்கு ஈரக்குலையே அறுந்து போச்சு! 

“வேலைக்குண்ணு போயி பத்துவருஷம் இருக்கும்.  இவ இத்துனூண்டு பிள்ளை அப்போ, இடைவாருப் பையில வச்சிருந்த உருப்படிய எல்லாம எவனோ உருவிட்டு விட்டுட்டானுங்க, அதுல இருந்து அவந்தம்பி பட்டறையில உட்காரக்கூடாதுன்னு சொல்லிட்டான். அன்னைல இருந்து தான் சூடக்கம்பெனில வேலை பார்க்குறேன்.  ரெண்டு வேளைக்கும் குறையாம கஞ்சி ஊத்துறேன், வாடகை கொடுக்குறேன். இவளைப் படிக்க வைக்கிறேன், அதும் பத்தாவதோடு நிறுத்திடப்போறேன். ஏதோ என் மாமியாரு அப்பப்போ வந்து உதவி பண்றாங்க, ஆனா இந்த மாதிரி தெருவெல்லாம் போய் கை நீட்டறவற என்ன பண்றது சொல்லு! என்று என்னைப் பார்த்தாள். எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.

பேசிக் கொண்டிருக்கும் போதே வந்தான் செல்வியின் புருஷன். என்னைப் பார்த்து தம்பி யாரு? என்று கண்ணை சுருக்கிக் கேட்டான். அம்மா அப்பா வர்றாரு என்று கீர்த்தனா, சமையக்கட்டில் இருந்த செல்வியிடம் சொன்னாள். வேகமாக வெளியே வந்து உக்கிரமாக முறைத்துக் கொண்டு நின்றாள், செல்வி.  யாரும் கவனிப்பதற்கு முன்பாக கையில் வைத்திருந்த விறகுக்குச்சியால், அவள் புருஷனை சாத்து சாத்தென்று சாத்திவிட்டு, தலையைப் பிடித்தபடி சுவற்றின் மூலையில் உட்கார்ந்து அழ ஆரம்பித்தாள்.

Friday, January 15, 2010

பகலில் மிச்சமிருக்கிற இரவு...

அடப்பாவி! மதுரையில அதுவும் ஜெய்ஹிந்த்புரத்தில் எப்படி இவன்!  டேய் மாப்பிளை! என்று நீலம் படர்ந்த சட்டையை அணிந்தவனின் தோளை தொட்டு, கொஞ்சம் அழுத்தமாகவே திருப்புகையில், திரும்பிய முகத்தில் மாப்பிளையின் சாயல் சற்றும் இல்லாமல் இருந்தது... முதுகில், நடையில், ஆடை தெரிவில் மட்டுமே அந்த மாப்பிளையை கொண்டிருந்தவர்... என்ன பாஸ்! என்று என்னை கேலியாய் பார்த்தார்.  ஸாரி என்னுடைய நண்பர் மாதிரி இருந்தது... ஆனால் அது நீங்கள் இல்லை, என்று அசடு வழிந்து திரும்பினேன்.  இதுபோல  தான் ஆகி விடுகிறது அநேக நேரங்களில், ஒருவரின் புன்னகை, முக அமைப்பு, முதுகும், நடையும் நிறைய நண்பர்களை, தருணங்களை கிண்டி விட்டு செல்கிறது.

இன்று காலை நேசமித்ரனிடம் இருந்து போன் வந்தது.  ராகவன் நேசமித்திரன் பேசுறேன்... எப்படி இருக்கீங்க... என்று ஆரம்பித்தார், அலுவலகம் கிளம்பும் நேரம் ஆனால் கூப்பிட்டது நேசமித்திரன் என்பதால் என்னால் எதையும் சொல்ல முடியாமல், என் காலை வேலைகளை பார்த்துக்கொண்டே பேசினேன்... பெரிதாய் சுவாரஸ்யப்பட்டிருக்காது அவருக்கு இருந்தாலும் அவர் சொல்வதை கேட்டுக் கொண்டு இருந்தேன்.  என்னுடைய கவிதைகள் பற்றி அவரின் பேச்சு எனக்கு எங்கேயோ யாரோ ஏற்கனவே சொன்னது போல இருந்தது... ஒரு முறை எஸ்.ரா என் வலைப்பக்கத்தை பார்த்து... உங்கள் கவிதைகள் சுமார் ராகம், ஆனால் உரைநடையின் நடையும் வீச்சும் அழகாய் இருக்கிறது நிறைய படியுங்கள், எழுதுங்கள் என்று மின் மடல் எழுதியிருந்தார்... அதை கொஞ்சம் மாற்று வார்த்தைகளில் நேசமித்ரனும் சொன்னார். 

கவிதை எழுதுவதன் காரணம், நேரமும் அதை படிப்பவர்களின் உடனடி எதிர் ரசனைக்காகவும் தான் என்று தோன்றுகிறது.  சித்திரமும் கை பழக்கம் என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டு, திரும்ப திரும்ப எழுதுகிறேன்.  ஒற்றை வரி, சில சமயம் ஒரு பத்திகளை படித்து விட்டு சிலாஹிக்கும் சில நண்பர்களின் உற்சாகம் தூண்டல்கள் என்னை ஒரு மயக்கத்தில் நிறுத்தி இன்னும் உளற, குழற செய்கிறது.  என்னுடைய கையடக்க கடல் பற்றி அவர் பேசும் போது, மனுஷ்ய புத்திரனின் கவிதை இதே கருத்தை (ஏறக்குறைய) கொண்டு புழக்கத்தில் இருக்கிறது என்றார்.   நானும் படித்திருக்கலாம், சிலரின் பாதிப்பில் எழுதும் போது சிலரின் படைப்புகளையே எழுதிவிடுகிறோம் போல.  கல்யாண்ஜி யின் நீ அமிழ்கிற ஆறு ஏற்கனவே ஓடிக்கொண்டிருக்கிறது... இன்னும் வரப்போகிறார்கள் உன்னைபோலவே அடித்தல் திருத்தல் இன்றி நிறைய பேர்... என்ற கவிதை எல்லாவற்றையும் சொல்லிவிடுகிறது...

மதுரையில் கோலாகல ஸ்ரீநிவாசை பார்த்து பேசும் போது சொன்ன விஷயமும் இது தான்,  தர்ம பாத, கெளட பதா எல்லாம் சொல்லியிருக்கிறார்கள், சித்தர் பாடல்களில் இல்லாத புதுக்கவிதைத்தனம் இல்லை என்ற கருத்துக்கு எனக்கு மாற்று கருத்து இல்லை.  எல்லாம் புதிது போல செய்தாலும், கெட்டித்து போன பழைய வாசனை இல்லாத கவிதைகள் இல்லை என்றே தோன்றுகிறது... எங்கோ மனசுக்குள் உட்கார்ந்த ஒரு விஷயம், என்றோ படிந்து விட்ட அனுபவ செறிவுகள் பிறரின் தாக்கத்தில் அல்லது பிறரின் சாயலில் இருப்பது தவிர்க்க முடியாததாகிறது.  அதுவாய் வந்து விழும் வார்த்தைகள் சில சமயம் ஞாபகத்தின் அலமாரிக்குள் குடையும் போது வந்து விழுகிறது கவிதைகள்  அதன் மேல் படிந்து போன தூசிகளுடன்.  உரைநடை நன்றாக வருகிறது என்ற கருத்துக்கு நேசனுக்கு நன்றிகள் பல.., தொடர்ந்து எழுதுகிறேன் பன்படுமா என்று பார்க்கலாம்...

கால் பதிந்து பதிந்து வழுக்கலான பாறைகளில் ரேகைகள் இன்னும் மிச்சமிருக்கின்றன, ஒரு புதையலாய்...