Tuesday, September 27, 2011

உண்டார்கண் நோக்கு...


”ஏய் கூறுகெட்ட கழுத! ஆம்பளப்பிள்ளைக திரியற வீட்ல இப்படித் தூமத்துணியக் கொண்டாந்து இங்கன போட்டிருக்கறவ?” என்று குப்பை டின்னில்  இருந்த துணியப்பாத்து கத்தினாள், தாயம்மாக்கிழவி. 

பதினோரு வீடுகள் இருக்கும் காம்பவுண்டில், தாயம்மாக்கிழவியின் அரசாங்கம் தான். தாயம்மாக்கிழவியின் இரண்டு மகன்களும் அதே காம்பவுண்டில் முறையே பெரிய வீடு ரெண்டிலும் குடியிருந்தாலும், வீட்டுக்காரம்மா என்ற பெயர் பொருந்துவது தாயம்மாக்கிழவிக்கு மாத்திரமே. வீட்டுப் பத்திரம் அவள் பெயரில் இருப்பது மட்டுமே காரணமில்லை அதற்கு.  அவள் அங்கு குடியிருப்போரிடம் பேசும் தோரணை, அவளுடைய மகன்களுக்கு இல்லை என்பதே உன்மை.

வனஜா, வேறு யாருமில்லை, தாயம்மாக்கிழவியின் ஒரே மகள் வயிற்றுப் பேத்தி. வனஜாவின் உடன்பிறந்தவர்கள், பதினோரு பேர்களில், வனஜா ஏழாவது குழந்தை. பிள்ளைகளற்ற தன் சின்னத் தாய்மாமன் வீட்டில் தங்கி, அவர்களுக்கு வீட்டு வேலை செய்து கொண்டே படித்து வருகிறாள்.

கிழவி கத்திக்கொண்டே இருந்தாள். பக்கத்தில் இருக்கும் போது கத்துவது போலவும், தூரத்தில் இருந்து கேட்டால், ஏதோ புலம்புவது போலவும் இருக்கும் வனஜாவுக்கு.  அதனால் படிக்கூட்டுக்கு அருகில் போய் உட்கார்ந்து கொண்டாள். அதை வேறு எங்கு போடுவது என்று தெரியவில்லை. இத்தனை சங்கடம் இதில் இருப்பது அவளுக்கு முதலில் தெரியாது. அம்மா உடன் இருந்தால், ஏதுவாவது விபரம் சொல்லியிருப்பாள். என்ன செய்யவேண்டும், எப்படி சுத்தம் செய்ய வேண்டும் என்று.  சின்ன அத்தை ஒன்றும் சொல்லித்தருவதில்லை, வேளாவேளைக்கு வேலையும், சாப்பாடும் கொடுப்பதோடு சரி.  பெரிய அத்தை இருந்தாலாவது, ஓரளவு விபரம் சொல்லியிருப்பாள். அவளும் போய் பெரியாஸ்பத்திரியில் படுத்தவள், வருவாளோ வரமாட்டாளோ? என்று தெரியவில்லை வனஜாவுக்கு. 

பெரிய ஆஸ்பத்திரி என்று நினைத்ததும், அங்கு கொடுக்கும் கோதுமை ரொட்டி ஏனோ ஞாபகம் வந்தது.  பெரிய அத்தைக்கு அதை பார்த்தாலே குமட்டல் வரும்போல் இருப்பதால், பெரிய மாமா வீட்டுக்கு வரும்போது அதைக் கொண்டு வந்து விடுவார்.  கொஞ்சம் ஜீனி போட்டு, வெண்ணெய் தடவி தோசைக்கல்லில் வனஜாவுக்கு எப்போதாவது போட்டுத்தருவார் பெரிய மாமா. வனஜாவின் பெரிய மாமா ஆர்.எம்.எஸ்ஸில் வேலை பார்க்கிறார். ஊர் ஊராய் ட்ரெயினில் சுற்றும் வேலை. ஒரு நாள் விட்டு ஒரு நாள் வருவார் வீட்டிற்கு, சில சமயம் இரண்டு மூன்று நாட்களும் ஆகும்.

வனஜாவின் சின்ன மாமாவிற்கு பாங்கில் வேலை என்பதால் கை நிறைய சம்பாத்தியம். ராஜாபார்லியில் வாங்கும் ரொட்டிகள் தான் எப்போதும் சாப்பிடுவார், வனஜாவிற்கும் அவ்வப்போது கொடுப்பார். பெரியாஸ்பத்திரியில் கொடுக்கும் கோதுமை ரொட்டி என்று சொன்னாலே அவருக்கு சுத்தமாக பிடிக்காது. அவர் சாப்பிடும் பொருட்களே வினோதமாய் இருக்கும்.  காலையில் காபி குடிப்பதில்லை, போர்ன்விட்டா தான் குடித்துக் கொண்டிருந்தார், சர்க்கரை வியாதி வந்த பிறகு இப்போதெல்லாம் ப்ரோட்டினக்ஸ் தான்.  சின்ன அத்தை அதை கலக்கும் போதே ஒரு மாதிரி சாக்லேட் வாசனை வரும். 


வனஜாவுக்கு அதை ஒரு நாள் குடித்துப் பார்க்க வேண்டும் என்று ஆசையாய் இருக்கும். ஆனால் சின்ன அத்தையே அதை குடிக்காது. சின்ன அத்தைக்கு வனஜா மேல் அத்தனை பிரியம் கிடையாது, வேலை சொல்லும் போது சோறு வைக்கும் போது மட்டுமே வனஜாவை  அழைப்பது வழக்கம்.  வனஜாவுக்கு உடல் நிலை சரியில்லை என்றாலோ, மனசுக்கு கஷ்டமாக இருந்தாலோ, தாயம்மா கிழவி வீட்டிற்கோ அல்லது எதிர் வீட்டில் குடியிருக்கும் குமாரி அத்தை வீட்டிற்கோ போய் விடுவாள், சின்ன அத்தை கண்டு கொள்வதே இல்லை.  

அன்றைக்கும் பள்ளிக்கூடத்தில் இருக்கும் போது வயிற்று வலி வந்துவிட, பள்ளிக்கூடத்தில் தண்ணீர் பிடித்து வைக்கும் குட்டை ஆயா வந்து சின்னத்தை வீட்டில் விட்டு விபரம் சொல்லிப் போனாள்.  சின்ன அத்தை தன்னுடைய பழைய காட்டன் சீலையைக் கொடுத்து அதை வைத்துக் கொள்ளச் சொன்னாள். ஆனால் எப்படி வைத்துக் கொள்வது? என்ன செய்வது என்று யாரும் சொல்லவில்லை.   குமாரி அத்தை வந்து பாத்ரூமிற்குக் கூட்டிப்போய் எப்படி வைப்பது என்ற விளக்கிச் சொன்னாள்.  “நிதமும் மாத்திடுடி, திரும்ப புதுசா துணி வைக்கிறத்துக்கு முன்னாடி, நல்லா கழுவிடு!” என்று மட்டும் சொல்லியிருந்தாள். கட்டி கட்டியாய் ரத்தமாய் பார்த்த முதல் நாளே அவளுக்கு மயக்கம் வருவது போல இருந்தது. அம்மா உடன் இல்லாததை நினைத்த போது அழுகையும் சேர்ந்து வந்தது.

கிழவி வைது கொண்டே இருக்க, குப்பை டின்னில் இருந்த துணியை எடுத்து, குப்பை டின்னிலேயே இருந்த பொட்டுக்கடலை வாங்கி வந்த பேப்பரையும் சனலையும் எடுத்து, சுருட்டிய மாதிரி கட்டினாள். கட்டிய பொட்டலத்தை கிழவியின் முன்னால், நீட்டிப் பிடித்தபடி “அவ்வா! இத எங்க போட? வெளிவாய்க்கால்ல போட்டுடவா?” என்றாள்.


”கிறுக்குப் பயபுள்ள! மூஞ்சிக்கு முன்னாடி கொண்டாந்து நீட்டுறவ! போய்த் தூர எறி! நாய் ஏதும் வாய் வச்சிடாமா?” என்று தெக்கம்பாக்கை இடித்துக் கொண்டே இரண்டு வெற்றிலைகளை எடுத்துக் காம்பைக்கிள்ளி, நடு நரம்பை ஒடித்தபடி இழுத்தாள். வெற்றிலையின் ஈரம் போக, நீட்டிய தொடையில் துடைத்தபடி, சுண்ணாம்பை ஒரு விரலால் எடுத்த வரைவது போல இழுவினாள். 

வனஜா அதற்குள் வெளிவாய்க்காலில் பொட்டலத்தை எறிந்தாள். அது மிதந்து மிதந்து தெருமுக்கு திரும்பும் வரை பார்த்துக் கொண்டிருந்தவள், நாய் எதுவும் வாய் வைக்க வாய்ப்பில்லை என்று திருப்தியுடன் திரும்பி வந்தாள். கிழவி அவள் பக்கமாய் ஒடித்த காம்புகளை நகர்த்தினாள்.  எடுத்து வாயில் போட்டுக்கொண்டாள். 

மெதுவாய் கிழவியின் அருகே போய் ’அவ்வா! அவ்வா’ என்று தொடையை அசக்கியபடியே ’இன்னைக்காவது கொஞ்சம் வெத்திலை குடுவ்வா!’

“போடீ! பொசகெட்ட சிறுக்கி! வெத்தில வேணுமாம்ல வெத்திலை! சமஞ்சு ரெண்டு நாளாவல, அதுக்குள்ள வெத்திலை போடணுமா உனக்கு!” சின்னவென் வருவான் சொல்லுறேன்!” என்று வெத்திலை உரலை இடிக்கத் தொடங்கினாள். கிழவி இப்படி ஏதாவது வாயில் மென்று கொண்டே இருப்பாள், வார்த்தைகளோ, வெத்திலையோ இரண்டும் ஒன்று தான் அவளுக்கு.  அதென்னமோ, எல்லா பல்லும் திடமா இருந்தாலும், வெத்திலை உரலில் இடித்துப் போடுவது தான் அவளுக்கு பிடிக்கும்.

வனஜாவிற்கு அந்த உரலுக்கென்றே ஒரு வாசனை இருப்பதாய்ப்படும். அந்த வாசனை தான் அவளை இடித்த வெத்திலைக்கு ஏங்க வைக்கிறது என்று நினைத்துக் கொள்வாள்.

ஏதோ பிசுக்கு மாதிரி விரல்கள் ஒட்டிக் கொண்டிருக்க, துணிப் பொட்டலத்தை வைத்திருந்த கையை மோந்து பார்த்தாள். சோறு வடிக்க பாத்திரத்துக்கு இடையில் சொருகும் துணியின் மக்கிய வாடை மாதிரி அவள் கையில் வாசனை இருந்தது. அங்கணக்குழிக்கருகே இருந்த பிளாஸ்டிக் வாளியில் இருந்த தண்ணீரில், அப்படியே சளப்பென்று கையை விட்டுக் கழுவினாள்.

கையைக் கழுவி விட்டு வந்தவள், ’அவ்வா கொஞ்சோண்டு வெத்திலை குடுவ்வா!’ என்று கெஞ்சுவது போல திரும்பவும் கேட்டாள்.

”வாயில போட்டுட்டேன் ஒண்னுமில்லை”. என்று உரலை ஆட்டியபடியே, வாயின் இடது பக்கம், சிவப்பு மணியாய் எச்சில் வழிய பேசினாள். போன தீபாவளிக்கு, சின்ன மாமா, அவளுக்கு இது போல சிவப்பு மணி வைத்து தைத்திருந்த சந்தனக்கலர் பாவாடை வாங்கிக் கொடுத்தது ஏனோ ஞாபகம் வந்தது அவளுக்கு.

சின்ன மாமா என்றால், வனஜாவுக்கு கொஞ்சம் பயம் தான், ஆனாலும் ரொம்ப ப்ரியமும் கூட. அதுவும் இப்போதெல்லாம், அவருக்கும் தன்னை அதிகம் பிடித்திருக்கிறது என்று வனஜாவுக்குத் தோன்றியது.  அடிக்கடி அவருடைய அறைக்கு கூப்பிட்டு பேசிக் கொண்டு இருப்பது அவளுக்கு புதுசாய் இருந்தாலும் பிடித்திருந்தது. அதுவும் சின்ன அத்தை இல்லாத போது கூடுதல் ப்ரியம் காட்டுவார்.  சின்ன அத்தை இல்லாத போது  இவளுக்குத் தேவையானதை எல்லாம் வாங்கிக் கொடுப்பார். சின்ன மாமாவின் மேலிருந்து வரும் செண்ட் வாசம் அவளுக்கு ரொம்பவும் பிடிக்கும்.

ஒருமுறை அவருடைய அண்ணன் வனஜாவை சிகரெட் வாங்க கடைக்கு அணுப்புவதை பார்த்ததும், சின்ன மாமாவுக்கு, கோபம் வந்துவிட்டது.

“சமஞ்ச பிள்ளைய சிகரெட் வாங்க கடைக்கு அணுப்புறயே? உனக்கு ஆளா கிடைக்கலை?” என்று வனஜாவின் முன்னாடியே தன் அண்ணனையே திட்டிவிட்டார். அது அவளுக்கு ரொம்ப பிடித்திருந்தது.  அவளுக்கு சிகரெட் வாங்க கடைக்குப் போகும்போது, தங்கராஜ் அண்ணாச்சியின் மகன் இளிப்பதை பார்க்கையில் ஏகக் கடுப்பாய் இருக்கும், இது சின்ன மாமாவுக்கு தெரிஞ்சிருக்கும் போல என்று நினைத்துக் கொள்வாள்.  

சின்ன மாமாவுக்கு, அத்தையை அவ்வளவாப் பிடிக்காது காம்பவுண்டில் உள்ளவர்களுக்கே அது தெரியும். சின்ன மாமாவுக்கு, அத்தை சரியான ஜோடி இல்லை என்று வனஜா நினைத்துக் கொள்வாள் பல சமயங்களில். அதிலும் அவர் வேலைக்கு கிளம்பும்போது, பேண்ட் சர்ட் எல்லாம் மாட்டிக் கொண்டு ஒரு கூலிங் கிளாஸும் போட்டுக் கொண்டு, ஸ்கூட்டரில் எடுக்கையில், சின்ன மாமா ஜம்மென்று இருப்பது போலத் தோன்றும் வனஜாவுக்கு. எத்துப்பல்லுடன் இருக்கும் அத்தையைப் பார்க்கையில், பொருத்தமே இல்லாத ஜோடி என்று நினைத்துக் கொள்வாள்.

அத்தை சின்ன மாமா இருக்கும் போது ரொம்பவும் பயப்படுவது போல இருந்தாலும், சின்ன மாமா வெளியே போனதும், ரஞ்சிதக்காவிடம் அவரைத் திட்டுவதையும், குறை சொல்வதையும் வனஜா பார்த்திருக்கிறாள். ஏதாவது கோபம் வரும்போது அத்தையை சின்ன மாமா போட்டு அடிப்பதையும், பார்த்திருக்கிறாள். அத்தை இப்படியெல்லாம் செய்யும் என்று தெரிந்து கொண்டு தான் அடிக்கிறார் போல என்று நினைத்துக் கொள்வாள். அப்போதெல்லாம், அத்தையைப் பார்த்தால் வனஜாவிற்கு பாவமாய் இருந்ததில்லை. சின்ன மாமா தான் பெரிய ஹீரோ போலத்தோன்றும் அவளுக்கு.

காம்பவுண்டிலே அவருக்கு கத்திமாமா என்று கூட ஒரு பெயருண்டு.  சின்ன மாமா ரெண்டு கத்தி வச்சிருக்கார் என்று  நல்லு தான் சொல்வான். ஒன்று பட்டனை அமுக்கினால் வெளிவருவது மாதிரியும், ஒன்று தோல்வாரில் சொருகியது மாதிரியும். ரெண்டும் பாண்டி கோயில் போகும்வழியில் இருக்கும் அய்யனார் சாமியின் அருவா மாதிரி பளபளன்னு இருக்கும் என்று நல்லு கதைகதையாய் சொல்வான்.

வனஜா அந்த கத்திகளை பார்த்ததில்லை, ஆனாலும், கத்தி மாமா என்று அழைப்படுபவரிடம், கத்தி இல்லாமல் இருக்குமா? என்று தனக்குத்தானே சமாதானம் சொல்லிக் கொள்வாள், இந்த கதைகளை கேட்கும் போதெல்லாம். சின்ன மாமா குதிரையில் ஏறி கத்திச்சண்டை போடுவதைப் போலவும் , தன்னை பின்னால் ஏற்றிக் கொண்டு எங்கோ மலையை நோக்கி பறப்பதைப் போலவும் தான் கனவு கண்டதை நினைத்தபோது அவளுக்கு சிரிப்பு வந்தது.

”இப்போ என்னத்தக் கண்டுபுட்டன்னு சிரிக்குறவ?” என்றாள், வழியும் வெற்றிலை எச்சிலை துடைத்தபடியே. 

‘இல்லவ்வா! சின்ன மாமாவ நினைச்சு சிரிச்சேன்!’ என்று எங்கோ பார்த்தபடி திரும்பவும் சிரித்தாள். தாயம்மாக் கிழவி கேள்வியாய் பார்த்தாள்.

‘என்னவ்வா பாக்குற, சின்ன மாமாவுக்கு என் மேல எம்புட்டு ப்ரியம் தெரியுமா? எனக்கு என்ன வேணுன்னாலும் இப்பெல்லாம் வாங்கி தாராரு! என்று சிரிப்பு வந்தது அவளுக்கு.

‘அவ்வா! இதெல்லாம் சின்ன அத்தைக்கு தெரியாதுவ்வா!, நீ பாட்டுக்கு சொல்லிப்புடாத!” என்றாள் தன் வனஜா.

அவளின் புது வளையல்களும், செருப்பும் இப்போது ஞாபகத்திற்கு வந்தது தாயம்மாக் கிழவிக்கு.  சின்னவனின் செண்ட் வாசம் அறையெங்கும் பரவுவது போல நடுக்கம் வந்தது தாயம்மாக்கிழவிக்கு.

மகளை வரச்சொல்லி, முதல் காரியமாய் வனஜாவை இங்கிருந்து அழைத்துக் கொண்டு தல்லாகுளத்திலேயே படிக்கப் போட சொல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள்.




Thursday, September 08, 2011

தேன்கூட்டு மெழுகு...


கங்கம்மா வீட்டிற்கு செல்லும்போது செல்வத்தையும் பார்த்து  வர வேண்டும் என்று தோன்றியது பிச்சம் நாயுடுவுக்கு.  இந்நேரம் வீட்டுக்கு வந்திருக்க வேண்டும். ரொம்ப நாட்களாகி விட்டது என்றாலும், போய் பார்த்து வர காரணமும் வேண்டியிருக்கிறது. மேலுக்கு ஒரு காரணம் சொல்லலாம், அவனுக்கு ரெண்டொரு நாளாய் உடல் நிலை சரியில்லை என்று. பிரத்யேக காரணம் ஏதும் இல்லாமல் இல்லை, ஆனால் அது ஒரு மறைவான காரணம், வெளிக்கு கொண்டு வரமுடியாது உள்ளுக்குள்ளேயே வைத்துக் கொண்டிருக்கிறார் பிச்சம் நாயுடு.  சுகந்தி இன்னும் சிறிது நேரத்தில் வந்து விடுவாள், அவள் வந்ததும் சொல்லிக் கொண்டு கிளம்ப வேண்டும்.

பிச்சம் நாயுடு வெள்ளைக்காரன் ஆரம்பித்த தந்தி ஆபீஸில் பணிக்கு சேர்ந்தவர்.  பரம்பரையிலேயே அதிகம் படித்தவரும், அரசாங்க உத்யோகத்தில் இருந்தவரும் அவர் தான். தந்தி ஆபீஸ் நைனா என்றால் எல்லாருக்கும் தெரியும், அவரின் சிவந்த தோலும், நெத்தியை பிளந்தது போன்ற நாமமும் ஒரு கூடுதல் அடையாளம் அவருக்கு. இன்னும் முழுதும் கருக்காத மீசையின் ஊடே அங்கங்கே இருக்கும் வெள்ளிக்கம்பிகளென மின்னும் நரைமயிர்கள் அவரின் கவர்ச்சி அம்சம். கழுத்துக்கு கீழே சிறிது தளர்ந்த சதையும், தோலும் அவரின் வயசை அனுமானிக்க உதவினாலும், அவரின் சரியான வயதை பெரும்பாலானவர்களுக்கு யூகிக்கமுடிவதில்லை.


செல்வத்துக்கு உடல் நிலை சரியில்லை என்று கங்கம்மா வந்து சொன்னபோது, அதையே ஒரு சாக்காய் வைத்துக்கொண்டு, போய் பார்த்துவிட்டு வரத்தோன்றியது. கங்கம்மாவின் வீட்டுக்கு அடுத்த வீடுதான் செல்வத்தின் வீடு.

செல்வம், ஸ்ரீவில்லிபுத்தூருக்கு மாற்றலாகி வந்து ஒரு இரண்டு வருஷம் இருக்கும்.  வந்ததில் இருந்து, மாதாங்கோவில் தெருவில் தான் இருந்து வருகிறான்.  மருமகளுடன் ஒரே ஆபீஸில் வேலை செய்வது தெரிந்தவுடன், அவருக்கு மேலும் ஒட்டுதல் வந்து விட்டது செல்வத்தின் மீது.  நாகர்கோயில் தான் சொந்த ஊர் என்பது மட்டுமே தெரிந்திருந்தார். அவனுக்கு இரண்டு தங்கைகளும், ஒரு தம்பியும் இருப்பதாகவும், இவன் தான் மூத்தபிள்ளை, அப்பா இல்லை என்பதும் கங்கம்மா சொல்லித்தான் தெரியும். கங்கம்மா வீட்டில் இருக்கும் போது, இரண்டுமுறை வந்தவனுடன் பேசிய போது தான், மருமகள் வேலை பார்க்கும் ஆபீஸில் அக்கவுண்ட்ஸ் செக்‌ஷனில் வேலை பார்க்கிறான் என்று மேற்படி விபரங்களும் தெரியவந்தது.

பிச்சம் நாயுடுவின் ஒரே மகன், சுப்புராஜு மின்வாரியத்தில் வயர்மேனாக பணியில் இருந்தான். செல்வம் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு மாற்றலாகி வருவதற்கு ஒன்றிரண்டு மாதங்களுக்கு முன்பாக, வாழைக்குலத்தெருவில் டிரான்ஸ்பார்மர் பழுதை நீக்க ஏறியவன், மின் விபத்து ஏற்பட்டு இறந்துவிட்டான்.  கம்பாஷனேட்டரி கிரவுண்ட்டில் வாரிசுக்கு வேலை வாய்ப்பிருந்ததால், மருமகள் சுகந்திக்கு அங்கேயே வேலை கிடைத்தது.  பிச்சம் நாயுடுவின் பென்ஷன் பணம், டிஏ ரிவிஷனில் அதிகமாகிக் கொண்டே வந்ததில், அவர் ஓய்வு பெறும் நேரத்தைய சம்பளத்தை விட அதிகமாகிவிட்டது.  பென்ஷன் பணம் போதுமென்றாலும், சுகந்தி வீட்டில் சும்மா இருப்பதை விட வேலைக்குப் போவது அவளுக்கு ஆறுதலாய் இருக்கும் என்று தோன்றியதால், சுகந்தி வேலைக்கு போவதற்கு அவர் தடையேதும் சொல்லவில்லை.

பியூசி வரை படித்திருந்தவளுக்கு, பே பில் செக்‌ஷனில் எழுத்தராய் உத்யோகம். நாசுக்கான வேலை தான். அதிக வேலைப் பளு கிடையாது. இந்த பிரிவில்  நிரந்தரப்பணியில் இருப்பவர்கள், இருபத்தைந்து பேர். அது போக தினக்கூலியாக இருக்கும், என்.எம்.ஆர்கள் தான் அதிகம்.   மாதக்கடைசியில் என்.எம்.ஆர்களின் சம்பளக்கணக்கு பார்க்கும் போது மட்டும் கொஞ்சம் அதிக நேரம் ஆபீஸில் இருக்க வேண்டி வரும்.  மற்ற நாட்களில் ஐந்து மணிக்கே வீட்டுக்கு வந்து விடுவாள். தாமதமாய் வரும் காலங்களில் செல்வம் தன் ஏரியாவிலேயே இருப்பதால், அவனுடன் வருவது வழக்கமாய் இருந்தது, அதன் பின் அவன் மொபட் வாங்கியதும், தொடர்ந்து அவனுடன் வருவது வாடிக்கையாகிவிட்டது.  மதுரை ரோட்டில் இருந்து இவர்கள் குடியிருக்கும் தெருவின் முனை திரும்பி, வீட்டு வாசல் வரை வந்து, அவன் வீடு இருக்கும் தெருவுக்குள் நுழைவது என்று ஆகிவிட்டது, ஆறேழு மாதங்களாய். செல்வம் வீட்டிற்கு போவதற்கு அது கொஞ்சம் சுற்று வழியாய் இருந்தாலும். கங்கம்மாவின் வீட்டிற்கு அருகில் இருப்பவன் என்பதால், சுகந்திக்கும் அவனின் மேல் ஒரு ப்ரியம் வளர்ந்திருப்பது போலத் தோன்றியது பிச்சம் நாயுடுவுக்கு.

தனது அறையில் இருந்த மர அலமாரியில் மடித்து வைத்திருந்த சந்தனக்கலர் சட்டையை எடுத்துப் போட்டுக் கொண்டார்.  அலமாரியைத் திறக்கும் போதே அந்துருண்டையின் மணம் அவருக்கு தூக்கலாய் அடித்தது.  சுகந்தி, இவரின் துணிகளை எல்லாம் இது போல வெளுத்து, மடித்து வைத்திருப்பாள். துணி விஷயத்தில் என்றில்லை. எந்த விஷயத்திலும் ஒரு பாந்தமும், அக்கறையும் இருக்கும் அவளிடம்.  ஒரு சனிக்கிழமை சாப்பிட்டு முடித்த மதியம் ஒரு பொழுது போதும் அவளுக்கு, வீட்டை ஒழுங்கு படுத்த.  தன் பையனுக்கு கல்யாணம் ஆவதற்கு முன்னால், இது போன்ற ஒரு ஒழுங்கு கிடையாது. கங்கம்மா சமைப்பது, மேல் வேலை பார்ப்பதோடு சரி. துணிமணிகள் அடுக்கி வைப்பதிலும், வீட்டுப் பொருட்களை அடுக்கி வைப்பதிலும், அத்தனை  நாசுக்கு இருக்காது கங்கம்மாவிடம்.

சுகந்தி திருமணமாகி வந்த பிறகு எல்லாம் மாறிப்போனது. மகனின் திருமணத்திற்கு பிறகு, கங்கம்மாவும் பிச்சம் நாயுடுவின் வீட்டுக்கு வருவதை நிறுத்திக் கொண்டாள். புது மருமகளுக்குப் பிடிக்காமல் போய்விடும் என்று நினைத்ததாலோ என்னவோ? நிஜக்காரணம் அவருக்கு இன்று வரை தெரியாது, கங்கம்மாவும் சொல்லவில்லை. அவர் கங்கம்மா வீட்டுக்குப் போய் வருவது  அவருடைய மகனுக்கும், மருமகளுக்கும் தெரிந்து தான் இருந்தது. ஆனால் அவரை யாரும் தடுத்ததோ அல்லது அதைப் பற்றி கேட்டதோ இன்று வரை இல்லை. வார்த்தைகளிலும், பேச்சினிலும் இல்லாத பந்தம், சில காரியங்களிலும், மௌனத்திலும் அதிகமாய்த் தெரிகிறது போலத் தோன்றும் பிச்சம் நாயுடுவுக்கு. கங்கம்மாவுடனான உறவை அவரால் வகைப்படுத்தமுடிந்ததில்லை.  கங்கம்மா எந்த வெற்றிடத்தை நிரப்பினாள், எவ்வாறு நிரப்பினாள் என்பது அவருக்கு இன்னும் பிடிபடாதவிஷயம். இத்தனைக்கும் உடல் ரீதியான பரிமாற்றங்கள் இல்லை இருவருக்கும் எப்போதும்.  மணிக்கணக்காய் அருகில் உட்கார்ந்து கொண்டிருப்பதும், கைகளை பிடித்துக் கொள்வதும், தோளில் சாய்ந்து கொள்வதும், ஒரு சில வார்த்தைகளையும் தவிர வேறு ஏதும் அவர்களிடையே இருந்ததில்லை.

பிச்சம் நாயுடுவின் மகன் இறந்தபிறகு துக்கத்தில் பங்கு கொள்ளவும், கூடமாட ஒத்தாசைக்கும் வந்த கங்கம்மா, அதன் பிறகு பிச்சம் நாயுடுவின் வீட்டுக்கு தொடர்ந்து வர ஆரம்பித்தாள். சுகந்தியும் கங்கம்மாவின் மேல் ஒரு என்னவென்று புரியாத ஒரு பிரியத்துடன் இருந்தாள்.  இது அவர்கள் இருவரும் பேசிக்கொள்ளும் போது பார்க்கிற யாருக்கும் தெரிந்து விடும். அத்தனை வாஞ்சையாய் கைகளை வாங்கி உள்ளங்கைக்குள் பொத்தி வைத்துக் கொண்டே பேசிக் கொண்டிருப்பார்கள். பரஸ்பர வாஞ்சையில் இருவரின் அழகும் கூடிவிட்டது போலத் தோன்றும் பிச்சம் நாயுடுவுக்கு.

ஏதேதோ யோசித்துக் கொண்டே பிச்சம் நாயுடு மேல் சட்டைக்குள் கைகளை நுழைத்தவர், பொத்தான்களை போடும் போது, கதவை யாரோ தட்டுவது கேட்டது.  அனேகமாய் சுகந்தியாய் இருக்கும், வேலையில் இருந்து வரும் நேரம் தான்.  இன்றைக்கு செல்வம் வேலைக்கு வந்திருப்பானோ என்று தோன்றியது. செல்வம் உடன் வரும் நேரம் தான் கொஞ்சம் சீக்கிரமாகவே வீடு வந்துவிடுவாள் சுகந்தி.  அறையை விட்டு வெளியே வந்து கதவினை திறந்தார்.  சுகந்தி தான் வந்திருந்தாள், மொபட் சத்தம் ஏதும் கேட்கவில்லை. செல்வம் அவளை இறக்கிவிட்டு உடனே போய்விடுவான்.  எல்லா நாட்களிலும் வீட்டிற்குள் வருவதில்லை.  வாசலுக்கு வெளியே வந்து பார்த்தார், அவன் வந்ததற்கான அடையாளங்கள் ஏதுமில்லை. 

”செல்வம் வரலையா தாயீ?” என்றார்

’இன்னைக்கு வரலை மாமா! இன்னும் மேலுக்கு சரியாவலை போல!’ என்றபடியே செருப்பை ஓரமாய் விட்டு உள்ளே வந்தாள்.

’வெளியே கிளம்பிட்டீங்களா? கங்கம்மா அத்தை வீட்டுப் பக்கம் போனால், அவுஹ வீட்டு தூக்கு ஒண்ணு இருக்கு, கொடுத்திடுறீகளா?’ என்றாள்.

சரியென்றவர், பட்டாசாலில் ஈசிசேரை விரித்தவர், அதில் படுக்க எத்தனித்தார்.  ”ஏதாவது வாங்கணுமா தாயீ!”

’ஏதும் வேணாம் மாமா! எல்லாம் இருக்கு, நீங்க சட்டையை கழட்டிக்கிடுங்க! அதோட படுத்தீஹன்னா, கசங்கி போயிடும்!’  சுகந்திக்கு தன்னுடைய மாமனாரின் சட்டை கசங்குவதில் பிடித்தம் இல்லை.  அப்படியே துவைச்சு மடிச்ச சட்டைக்குள் அவர் தன்னை புகுத்திக் கொள்வார் என்று தோன்றும் அவளுக்கு. அந்த நேர்த்திக்காகவே ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்யத் தோன்றும் சுகந்திக்கு.

’மாமா! நிமிஷத்துல பால் கொழக்கட்டை செஞ்சு தாரேன், அத்தை அவுஹளுக்கும் எடுத்துட்டு போங்க! வெறுந்தூக்கா எப்படி கொடுக்குறது? அவுஹ சொன்ன பக்குவப்பிரகாரம் செஞ்சிருக்கேன், எப்படி இருக்குண்ணும் கேட்டு சொல்லுங்க!’ என்றாள்.

”நீயும் வாயேந்தாயீ! போய் ஒரு நடை பார்த்துட்டு வரலாம்! செல்வத்துக்கும் மூணு நாளா மேலுக்கு முடியலைன்னு சொல்லுத? போய் என்னான்னு விசாரிச்சுட்டு வரலாமே!” என்றார்.
சுகந்தியிடம் இருந்து பதில் வரவில்லை, சமையலறைக்குள் சத்தம் வர, கவனிக்கவில்லை போல என்று நினைத்துக் கொண்டார்.

சட்டையை கழட்டி, உள்ளறைக்கதவில் மாட்டினார்.  எரவாணத்தில் சொருகியிருந்த பனைவிசிறியை எடுத்துக் கொண்டு, ஈசி சேரில் சாய்ந்து கொண்டார்.  பட்டாசால் உத்தரத்தில், நூலாம்படை ஏதும் படியாமல் சுத்தமாய் இருந்தது.  தூக்கம் வருவது போலவும் இருந்தது, அப்படியே விசிறிக் கொண்டே இருந்தவருக்கு என்னென்னவோ ஞாபகம் வந்தது.

சுகந்தி சமீபகாலமாகத்தான் கங்கம்மாவை ’அத்தை’ என்று அழைக்க ஆரம்பித்திருக்கிறாள் என்று தோன்றியது. இதில் யாருக்கும் மறுப்பில்லை. கங்கம்மாவும், சுகந்தியை தன்னுடைய பெரிய மகளாகவே வரித்துக் கொண்டாள் என்று தோன்றும்.

கங்கம்மாவுக்கு இரண்டு குழந்தைகள், இரண்டும் வயதுக்கு வந்த பெண்கள். கங்கம்மாவின் புருஷன் இறந்த பிறகு, பிச்சம் நாயுடுவின் மனைவிக்கு  தூரத்து சொந்தமான கங்கம்மா, பிச்சம் நாயுடுவிடம் வீட்டு வேலை செய்ய கேட்க வந்தாள்.  அப்பாவும், பிள்ளையும் மட்டுமே இருந்த வீட்டில் வேலைக்கு வந்த போது சம்பளம் ஏதும் பேசவில்லை.  கொடுக்குறதக் கொடுங்க! என்று வேலை செய்ய ஆரம்பித்துவிட்டாள்.  மேல் வேலையும், சமையல் வேலையும் செய்ய ஆரம்பித்தாள். பிச்சம் நாயுடு தான் அவளை அங்கேயே சாப்பிடச் சொல்லி விட்டார்.  முதல் மாதம் முடிந்தபிறகு பணமாய் கையில் கொடுத்த போது வேண்டாம் என்று மறுத்துவிட்டாள்.  வீட்டுக்கு கொஞ்சமா பலசரக்கு வாங்கிப் போட்டா போதுமென்றும், சொந்தவீடு இருப்பதால், பெரிதாக செலவு இல்லை என்றும் சொல்லிவிட்டாள். வேறு ஏதாவது தேவைப்பட்டாலும், பொருளாய் தரச் சொல்வாள். சிலசமயம், பிச்சம் நாயுடுவே தேவையறிந்து வாங்கித்தருவதும் உண்டு.

கங்கம்மாவின் இரண்டு பெண்களும் வேலை பார்க்கிறார்கள் இப்போது. ஒருத்தி ஸ்டார் தீப்பெட்டி ஆபீஸிலும், இன்னொருத்தி ராஜபாளையத்தில், ஆடிட்டர் சுரேஷிடமும் வேலை பார்க்கிறார்கள். இவர் தான் சுரேஷிடம் பேசி வேலைக்கு சேர்த்து விட்டார்.  குடும்பம் நடத்துவதற்கு போதுமான வருமானம் வந்தபிறகும், ஏனோ கங்கம்மா வேலைக்கு வருவதை நிறுத்தாமல் வந்து கொண்டிருந்தாள், மகனுக்கு திருமணம் ஆகும்வரை. கங்கம்மா பற்றி யோசித்துக் கொண்டிருக்கும் போதே அவருக்கு தன்னுடைய மருமகளின் நினைப்பு வந்தது. 

சுகந்திக்கு முப்பத்து ஆறு வயசிருக்கும், அதிகமாப் போனா! இவள் தனியாய் நிற்பது, பிச்சம் நாயுடுவின் மனசுக்குள் வேதனையாய் இருக்கும்.  தன் மகனுடன் அத்தனை ப்ரியமாய், பாந்தமாய் குடும்பம் நடத்தினவள்.  அவன் இருக்கும் வரை வீட்டை விட்டு எங்கும் போனதில்லை.  கடைக்கு போய் ஏதாவது வாங்க வேண்டும் என்றாலும், பிச்சம் நாயுடு தான் போவது வழக்கம். அக்கம் பக்கம் வீடுகளில் உள்ளவர்களிடமும் எந்த நெருக்கமும் இல்லை அவளுக்கு. மகன் இறந்த ஆறேழு மாதங்களில் எல்லாம் மாறிப் போனது. அவளுடைய வீட்டார் வந்து அழைத்த போதும், வரவில்லை என்று சொல்லிவிட்டாள்.  வீட்டை, நிர்வாகத்தை, தன்னை எல்லோரையும் அவள் கையில் எடுத்துக் கொண்டதாய்த் தோன்றும்.  இதுமாதிரியான வளர்ச்சி, ஒரு ஆணுக்கு வருமா என்று யோசித்து போது, அவருக்கு பதில் கிடைக்கவில்லை. 

சமையலறையில் இருந்து எட்டிப் பார்த்தவள். கையில் இருந்த பொட்டலத்தைக் கொடுத்து, ‘மாமா! இந்த மண்டை வெல்லத்தை கொஞ்சம் பொடிச்சு தர்றீங்களா?' என்றாள்.

ஈசிசேரில் இருந்து எழுந்தவர், சுகந்தியிடம் மண்டவெல்லத்தையும், சின்ன சுத்தியலையும் வாங்கிக் கொண்டார். பழைய பேப்பரை விரித்து, அதன் மேல் மண்ட வெல்லத்தை போட்டு உடைக்க ஆரம்பித்தார். வெல்லம் கொஞ்சம் கடினமாய் இருந்தது உடைப்பதற்கு. உடைந்த துண்டு பேப்பரை விட்டு வெளியே விழ, சமையலறை பக்கம் பார்த்தவர், எடுத்து லபக் கென்று வாயில் போட்டுக் கொண்டார். 

பச்சரிசி மாவின் மணம் மண்டைவெல்லத்தின் வெல்லத்தை தாண்டி அவருக்கு அடித்தது. மண்டைவெல்லத்தைப் பொடித்ததும் எடுத்துக் கொண்டு சமையலறைக்குச் சென்றார்.  அம்மியில், கொஞ்சம் சுக்கையும், ஏலக்காயையும் பொடித்துக் கொண்டிருந்தவள், மாவு இருக்கிற சொளகுக்கு பக்கத்தில், வைக்கச் சொன்னாள்.

“உப்பு போட்டியா தாயீ!” என்றார். 

’போட்டிருக்கேன் மாமா! உப்பு சரியா இருக்கான்னு பாருங்க!’ என்றாள் மாவைக்காட்டியபடியே. மாமாவின் சிறுவயது ஆசைகள் இன்னும் தொடர்கிறது என்று நினைத்துக் கொள்வாள்.  கொழக்கட்டை செய்யும் போது, பூரணத்தை எடுத்து வாயில் போட்டுக்கொள்வது, பிசைந்த சப்பாத்தி மாவு, உலை அரிசி என்று சமயம் கிடைக்கும்போது ஒரு வாய் போட்டுக் கொள்வார்.  அதற்காகவே மாவில் உப்பு பார்ப்பது, அதிரச மாவில் இனிப்பு பார்ப்பது என்று எல்லாவற்றிற்கும், சுகந்தியும் அவரையே அழைப்பதுண்டு. ருசி பார்த்து விட்டு, வார்த்தையாய் சொல்லாமல், பலமாய் தலையை ஆட்டுவார், அதிலேயே தெரிந்து விடும்.

அங்கேயே இடுப்பில் கையை வைத்துக் கொண்டு நின்றுவிட்டார்.  நுனுக்கிய சுக்கையும், ஏலக்காயையும் வழித்து வெஞ்சனத் தட்டில் வைத்தவள், மண்டைவெல்லத்தை எடுத்து தண்ணீரில் கரைத்து, நாக்கில் விட்டுப் பார்த்துக் கொண்டாள். விரல்களின் வழியே வழியும் வெல்லக்கரைசலை, வேண்டுமா என்பது போல தூக்கிக் காட்ட, வேண்டாமென்று மறுத்தவர்,   

“நீ செய் தாயீ! நான் பாக்கேன்!” என்றார்.  இந்த சந்தர்ப்பத்தில் கேட்கலாமா, இவளிடம் என்று தோன்றியது.  ஆனது ஆகட்டும் கேட்டுவிடலாம் என்று முடிவு செய்தவர், எந்த சந்தர்ப்பத்தில் சொல்வது என்பது போல காத்திருந்தார். 

வெல்லைக்கரைசலை ஈயச்சட்டியில் ஏற்றி, ஸ்டவ்வை கொளுத்தினாள்.  மிச்சமிருந்த மாவையும், உருட்டிக் கொண்டு, ஆபீஸில் நடந்த விஷயங்களைப் பற்றியும், ஆபிஸில் தண்ணீர் வைக்கும் சோனையம்மாவின் மகளுக்கு கல்யாணம் எனவும் பேசிக்கொண்டிருந்தாள். இவர் காதில் எதுவும் ஏறியது மாதிரி தெரியவில்லை.  மண்டைக்குள் இருந்த விஷயமா அல்லது பால் கொழக்கட்டையோ அல்லது இரண்டுமோ எதுவோ அவரை சூழ்ந்திருந்தது.

வெல்லைக்கரைசல் பொங்கிவர, பனந்துடுப்பை எடுத்து கிண்டியவள், ஸ்டவ்வின் தீவிரத்தைக் குறைத்தாள். உருட்டி வைத்திருந்த மாவு உருண்டைகளை போட்டாள். உப்பு ஜாடியில் வைத்திருந்த, அரைமுடி தேங்காயை எடுத்து, அவர் கையில் கொடுத்து, கொஞ்சமாய் துருவச் சொன்னாள்.

அங்கேயே உட்கார்ந்து துருவ ஆரம்பித்தார். துருவிக் கொண்டே யோசித்தவர், எப்படி ஆரம்பிப்பது என்று தெரியாமல், கங்கம்மாவிடம் சொல்லி கேக்க சொல்லலாமா? என்றும் யோசித்தார். 

‘போதும் மாமா!’ என்று நிறுத்தி துருவிய தேங்காய்பூக்களை எடுத்துக் கொண்டாள். வெந்த கொழக்கட்டையில் ஒன்றை எடுத்து பதம் பார்த்தாள், திருப்தியாய் இருந்தது. வெல்லக்கரைசலில் வெந்த பச்சரிசிக் கொழக்கட்டையின் மணத்தைப் பார்த்தவள், திரும்பி பிச்சம் நாயுடுவைப் பார்த்து, நல்லாருக்கு என்று சைகை செய்தாள்.

"சுகந்தி!" என்றார் தயங்கியபடியே. ‘என்ன மாமா’! என்றாள்

”நான் ஒண்ணு கேக்குறேன், மனசுல தோண்றத சொல்லு!” என்றார்.

கங்கம்மாவையும் குழந்தைகளையும் இங்கேயே கொண்டுவருவதாய் இருக்குமோ? என்று திடீரென்று அவளுக்கு தோன்றியது. ‘சொல்லுங்க மாமா!’ என்றாள். 

”நீ செல்வத்தை ஏன் கல்யாணம் செய்துக்கக் கூடாது?” என்று சடாரென்று சொல்லி முடித்தார்.
கேட்டவள், அவரைத் திரும்பி அழுத்தமாய் பார்த்து சிரித்தாள். ‘வேணா மாமா, அப்படி எதுவும் இதுவரை யோசிக்கலை, தோணவும் இல்ல!’

வெந்து முடித்திருந்த கொழக்கட்டையில், நுனுக்கிய ஏலக்காய், சுக்கைப் போட்டவள் காய்ச்சிய பாலை ஊற்றி  கிளற ஆரம்பித்தாள்.

தன்னையே பார்த்துக் கொண்டிருந்தவரிடம் ‘கங்கம்மா அத்தை வீட்டுக்கு நானும் வரேன் மாமா, உங்களோடவே!’ என்றாள்.