Friday, November 15, 2013


Saturday, July 27, 2013

குருதிப்படுகை...

இது ஒரு மீள்பதிவு...

(
இது தென்கிழக்கு கென்யாவில் டானா  ஆற்றை ஒட்டி வாழும் இரு இனங்களுக்கு (போகொமோ மற்றும் ஓர்மா, இதில் ஓரமா எத்தியோப்பியாவில் இருந்து 20ம் நூற்றாண்டில் குடியேறியவர்கள்இடையே நிகழ்ந்து கொண்டிருக்கும் நீர்பகிர்வினால் ஆரம்பித்த தகராறு இனச்சண்டையாய் இன்னமும் தொடர்கிறது.   இருபக்கமும் இழப்புகள் அதிகம், மாற்று தொழில் பற்றிய சிந்தனை இல்லாததே இது தொடர காரணம் என்று சிலர் சொல்கிறார்கள்.  அழிந்த காடுகள் அதற்கேற்ற வர்த்தக பலனை அடையவில்லை, அரசாங்கமும் முயன்று கொண்டு இருக்கிறது, வெளிநாட்டு முதலீட்டை கொண்டு வந்து பிரச்சனைகளை முடிவுக்கு கொண்டு வர.  ஆனாலும் நீர் பகிர்வு பற்றிய போதுமான இணக்கம் ஏற்படும் வரை இது தொடரும்.  அதன் பின்னணியில் ஒரு புனைவாய் எழுதியது இந்த கதை).
 


முதலையின் அடிவயிற்றை கீற  கூரான ஆயுதம் வைத்திருக்கிறான் சலீம். அது கொலைகாரனின் குரூர விழிகளைப் போல மின்னிக் கொண்டிருந்ததுமுதலைகள் பிணங்கள் என மிதக்கும் அவை அசையாது ஆள் விழுங்கும்  பாறைகள். இழந்த குழந்தைகளில் அவனுடையதும் உண்டு பச்சைப் பாசி குமிழ்கள் உடைக்கும் நாசித்துளைகள் சிவந்த களிமண் குழைவில். இவை கொலைமிருகங்கள், அடிவயிற்றைக் கிழிக்கையில், இவ்வூரைக் காண நேரிடலாம். மூச்சைப் பிடித்துக் கொண்டு இறங்குகிறான், அடிவயிறு புடைத்து பருத்திருக்கிறது. மூச்சுக்காற்றில் முட்டை முட்டையாய் களிமண் குமிழ் உடைகிறதுநெருங்கி விட்டான், முதலை அசையவில்லை, தாவி அதன் மேல் அமர்கிறான்வாலை எடுத்து சுழற்றுகிறது முதலைஅதனை அப்படியே புரட்டிப் போட்டு அடிவயிற்றை குத்தி கிழிக்கிறான். வயிற்றைப் பிளந்து ரத்தத்தின் நடுவே கிடக்கிற குழந்தை வீறிட்டு அழ கையால் ஏந்துகிறான் ...."சொத்"தென்று மாமரத்தில் இருந்து பஃபூன் தட்டிவிட விழுகிறது பழுத்தும் பழுக்காத மாம்பழம், அவன் காலில். தொடர்ந்து வரும் குரங்குகளுக்கு இடையேயான சண்டையும், கூச்சலும், கீசு கீசென்று. விழிப்பு வர உதறி எழுந்து சுற்றுமுற்றும் பார்க்க உடன் வந்தவர்கள் உறங்கிக் கொண்டிருந்தார்கள். பக்கத்தில், அவர்கள் கொண்டு வந்திருந்த வீச்சுக் கத்திகளும், வில்லும், அம்புகளும், ஈட்டிகளும் இருந்தன. இது போதும் இன்றைக்கு. இருபந்தைந்து பேர்களுக்கு மேல் உடன் இருப்பது கொஞ்சம் ஆசுவாசமாய் இருந்தது. அவனுக்கு அடிக்கடி இது போல கனவுகள் வருகிறது, அவனின் கிராமத்தாருக்கும் இது போல கனவுகள் வருமா என்று கேட்கவில்லைபோகோமோக்களுடனான பகை, பயம் ஓர்மாக்களின் கனவுகளில் வராமல் போகுமா என்று தெரியவில்லை 

 

பகைக்கான காரணம் நீர் தவிர வேறில்லை என்று தோன்றியது  சலீமுக்குநீராதாரத்தை முன்னிட்டே இத்தனை கலவரங்களும், ரத்தமும். நீரால் சூழ்ந்த உலகில் நீருக்காய் தான் போர்களும், போராட்டங்களும்.

 

காய்ந்த ஓடுகளாய் விளை நிலங்கள் அல்லது கருகித் தீய்ந்த  மேய்ச்சல் நிலங்கள், ஒற்றை  நீர்த்துளி கிடைத்தால் போதும் சிலிர்த்து முளைக்கும் புற்கள்விவசாய விளைநிலங்களும், மேய்ச்சல்  நிலங்களுக்கும் நீராதார  பகிர்விற்கான  நாவுகளை  எப்போதும் தாகத்துடன் வைத்திருக்கின்றனமழை பெய்யும் காலங்களில் அதிக மழையும், மற்ற நேரங்களில் வறண்ட வானிலையும் இருந்தாலும், பசும் மரங்களும், செடிகளும், புதர்களும் மண்டிக் கிடப்பது அண்டை நகரமும், சிறுகடல் தாண்டிய அண்டை நாடும் தின்றது போக மீதியே. பஜுனி சுல்தான்கள் வருகையின் பிறகு அந்த பிரதேசம் மாறத்தொடங்கியது. காடுகள் கலங்களாயின, மீன்பிடித்தொழிலும் நவீனமானதுஆனாலும், டானா ஆற்றை ஒட்டிய பாழ்வெளிக்காடுகளின் கிராமங்களில் மாற்றங்கள் அத்தனை இல்லை. வளரும் வெப்பமும் தாகமும் தங்களை மேலும் மூர்க்கமாக்கி கொண்டே இருக்கிறது என்று தோன்றியது. இரு இனத்தவருக்கும் இருவரின் ரத்தமும் தேவையாய் இருக்கிறது, வறண்ட தொண்டைக்குழியை நனைக்க என்று அவன் யோசித்துக் கொண்டே, நிமிர்ந்து ஆற்றைப் பார்த்தான். கண்ணுக்கெட்டிய தூரம் வரை கருப்பாய் தெரிந்தது.

 

எழுந்து ஆற்றை நோக்கி நடந்தான். ஆற்றில் அத்தனை தண்ணீர் இல்லை, குழம்பலாய் சேற்றுடன் கிடந்ததுஇரவுகளுக்கு ஓராயிரம் குரல்கள் இருப்பதாய், அவர்கள் கிராமத்தின் முன்யோவின் பெரிய தகப்பன் சொல்வதைக் கேட்டிருக்கிறான். இரவு அதன் பல்வேறு தொண்டை மூலம் பேசிக் கொண்டிருந்ததுஆற்றில் நீர்வரத்து மழைக்காலங்களில் மட்டுமேகென்ய மலையின் பனி உருகி வந்து சேர்வதற்குள் உலர்ந்து விடவோ, இடையில் மடக்கி விவசாயத்திற்கென திசை திருப்பிவிடவோ படலாம்அறுநூறு மைல்களுக்கு மேல் ஓடிவரும் இந்த ஆற்றை நம்பிய பாசானத்திற்கு போகோமோக்கள் தடுத்திருக்கவும் முடியும்அதனால் தொடர்ந்த மழை மாத்திரமே ஆற்றை ஒட்டிய இடத்தை செழுமையாக்கும். மழை என்று நினைத்த போது அவனுக்கு சில வருடங்களுக்கு முன்னால் வந்த பேய்மழை (எல் நினோ) ஞாபகம் வந்தது. கால் நடைகளுடன், குழந்தைகளும் மனிதர்களும் மிதந்தது இந்த ஆற்றில் தான். எத்தனை உயிர்களை இது கடலுக்குள் சொருகியிருக்கிறது. மழைக்காலங்களில் கால்நடைகளை மேய்ப்பதற்கு பசும் வெளிகள் மேடான இடங்களில் தேடி அலைய வேண்டும், மலைகள், காடுகள் என்று சுற்றித்திரிய வேண்டும்அவர்களின் கிராமம் ஆற்றுப்படுகையை ஒட்டியே இருக்கிறது. பெரும்பாலான கிராமங்கள் ஆற்றுக்கு மிக அருகிலும் மற்றவை அதை தொட்டடுத்தாற் போலவும் இருக்கும்ஓர்மாக்களின் கிராமங்கள் ஒன்றையொன்று ஒட்டியே இருக்கும், இருந்தாலும் சிலசமயம் போகோமோக்களுடனான மோதலில், கால் நடைகளையும் நிலங்களையும் வீடுகளையும் இழந்தவர்கள் உண்டுஅதன் மூலம் இடையிடையே ஓர்மாக்களின் கிராமங்கள் நடுவே போகோமோக்கள் உண்டு, அவர்களின் கிராமங்கள் உண்டு.

 

ஆற்றுப் படுகை எங்கும்  நீர்யானைகளும் அதன் குட்டிகளும், யானைகளும் விட்டுப் போன  கால்தடங்கள்வெளிச்சம் இன்னும் வராத இரவில், கருத்து கிடந்த இரவின் மேல் இரவு ஒன்றொன்றாக அடுக்கி வைக்கப்பட்டு தடித்துக் கிடந்தது இரவு, ஒரு கருப்பு காண்டாமிருகத்தின் தோலைப் போல. ஓர்மாக்கள் மசாய் அல்ல, அவர்களுக்கு கருப்பு காண்டாமிருகத்தை பற்றி அறிந்திருக்க வாய்ப்பில்லைஆனால் போனமுறை வெள்ளாடுகள் விற்பதற்காய் ஹோலோ சந்தைக்கு சென்றிருந்த போது, ஒரு அராபியன் கொண்டு வந்திருந்தான் பல மிருகங்களின் தோல்களை, இது மசாய்களிடமிருந்து தான் அவன் வாங்கியிருக்க வேண்டும்மசாய்கள் மிருகங்களை குறிபார்த்து கொல்வதிலும், அதன் தோலை உரிப்பதிலும், அதன் பற்களையோ, நகங்களையோ பிரிப்பதிலும் தேர்ந்தவர்கள் என்றாலும், அவர்கள் அதை வியாபாரம் செய்வதில் சமர்த்தர்கள் அல்லர். வியாபாரம் என்றால் அது இந்தியர்களும், அராபியர்களும் தான்இந்தியர்கள், ஹோலாவிற்கோ, கலாசாவிற்கோ வருவதில்லை வியாபாரம் செய்யஅவர்கள் மொம்பாசா, லாமு, மலிண்டியோடு நின்று விடுவார்கள்ஒர்மாக்களும் இங்கு ஒரு காலத்தில் அடர்ந்திருந்த காடுகளில் யானைகளையும், சிறுத்தை, நீர்யானை, கொம்பில்லா மிளாக்கள், டிக் டிக், குடு என்று மிருகங்கள் எங்கும் மலிந்திருந்ததைக் கண்டுள்ளார்கள்கிரியாமாவில் இருந்து கொண்டு வரப்பட்ட அல்லது புலம் பெயர்ந்தவர்கள் வேட்டையாடி, மரங்களை வெட்டி காட்டின் பெரும்பகுதி அழிந்தது. பணத்திற்காய் மிருகங்களையும் கொன்றார்கள். அரசாங்கத்தில் இதை தடுப்பதற்காய் சட்டங்கள் இருந்தாலும், எல்லாவற்றையும் அராபியர்கள் பணத்தால், பணத்திற்காய் வாங்கினார்கள், விற்றார்கள். 


சயீத் விழித்து விட்டான். இவன்  உறங்காமல் விழித்துக் கொண்டிருப்பதை பார்த்தான்புரண்டு படுத்தபடி மற்றவர்களையும் பார்த்தான். எல்லோரும் உறங்கிக் கொண்டிருந்தார்கள்.




 “ஏன் உறங்கவில்லை? மனைவியையும், குழந்தைகளையும் நினைத்துக் கொண்டாயா?” என்று கேட்டான்

 
இல்லைஅவர்கள் சம்பந்தமாய்  நினைத்துக் கொண்டிருந்தேன் !” என்றான் சலீமிற்கு  இதைச் சொல்லும் போது, கண்களில் இருந்து கண்ணீர் சூடாய் இறங்கி, வழிந்தது. ஏதோ பூச்சிகள்  திடீரென்று இரையத் தொடங்கின. சலீமிற்கு ஏனோ கைகள் நடுங்கியது. சயீத்துக்கு இருட்டில் இவனுடைய நடுக்கம் தெரிய வாய்ப்பில்லை என்றாலும் அவனைப் பார்த்தான்அவன் ஒரு சிகரெட்டை எடுத்து பற்ற வைத்துக் கொண்டான்சயீத்தும் ஒன்றை தனது சட்டைப்பையில் இருந்து எடுத்து புகைக்க ஆரம்பித்தான்புகை மட்டும் அங்கே கண்ணுக்குத் தெரிந்தது. சிறுத்தையின் ஒளிரும் கண்கள் போலும் இருவரின் சிகரெட் நெருப்பும்  உயிர்த்து உயிர்த்து எரிந்தனஇவனுடைய பட்டியில் இருந்த ஆட்டை சிறுத்தை வந்து அடித்துத் தின்ற போது, இவன் தீப்பந்தம் எடுக்க ஒற்றை வெள்ளாட்டை இழுத்துக் கொண்டு ஓடிவிட்ட போது அதன் ஒளிரும் கண்களை பார்த்திருக்கிறான்.

 

இன்னும் சிறிது தூங்கலாம்! இன்னும் இரவாகட்டும், அந்த சைத்தான்கள் உறங்குவதற்கு நேரம் ஆகும்!” என்று திரும்பவும் சயீத் படுத்துக் கொண்டான்.

 

சலீமிற்கு உறக்கம் வரவில்லைஎதையெதையோ யோசித்துக் கொண்டிருந்தான்அவனுடைய நிலத்தையும், கால்நடைகளையும் ஆக்கிரமித்தது ஞாபகம் வந்த்துஅவனுக்கு தாடைகள் இறுகின, கை தானாக, வீச்சுக்கத்தியை  பிடித்ததுரெகெட்டாவில் கால்நடைகளும், நிலமுமாய் இருந்தவனிடம் இருந்து நிலத்தையும், கால்நடைகளையும் பறித்துக் கொண்டவர்களை கொன்று பழி தீர்க்க வேண்டும் என்று தோன்றியதில் தவறேதும் இருப்பதாய் அவனுக்குத் தோன்றவில்லைஅதிர்ஷடவசமாய் தப்பிய மனைவிக்கும் குழந்தைகளுக்கும் இன்னும் துர்சொப்பனங்கள் உண்டு.

 

அந்த கலவரத்தின் போது அரசாங்கப்படைகள் குவிக்கப்பட்டிருந்தாலும், கலவரம் தொடர்ந்து ஒவ்வொரு ஊராய் பரவியது. காவல்துறையினரும் கொல்லப்பட்டனர். இவன் கிராமத்தில், குழந்தைகளையும், பெண்களையும் தான் அதிகம் கொன்றார்கள்மேய்ப்பர்களான ஓர்மாக்கள் வெளியே மேய்ச்சலுக்கு கால்நடைகளை ஓட்டிக் கொண்டு செல்கையில் இது போன்ற அத்துமீறல்களும், கொடுமைகளும் நடந்து கொண்டே இருக்கிறது.   போகோமோக்களின் முக்கிய இலக்கு, ஓர்மா என்ற இனமே இல்லாமல் செய்வது தான் என்று சலீமுக்குத் தோன்றும்கொல்வது எல்லாம் குழந்தைகளையும், பெண்களையும். வீச்சுக்கத்திகளால், இந்த கூட்டத்தில் இவனுடன் உறங்கிக் கொண்டிருக்கும் ஹசனின் ஐந்து குழந்தைகளும், மனைவியும் கழுத்தை அறுத்துக் கொல்லப்பட்டதை, சலீமின் மனைவி சொல்லும் போது தாங்க முடியாத துக்கம் வரும்எத்தியோப்பியாவில் இருந்து புலம் பெயர்ந்து வந்ததாய் சொல்லப்படுவது உன்மை தான் என்றாலும், ஓர்மா ஒரு இனமாய் அடையாளம் காணப்படுகிறது அரசாங்கத்தினால். அது போகோமோக்களுக்கு ஏன் புரியவில்லை.   உரக்க அவர்களை வைதபடி, அடிவயிற்றில் இருந்து எச்சில் இழுத்துத் துப்பினான். பற்களை நறநறவென்று கடித்தான், தன் இனத்தில் மிருகங்களைக் கொன்று அதன் பச்சை ரத்தத்தை குடிப்பதை போல குடித்து, கழுத்தோடு வைத்து பூசுவது போல பாவனை செய்தான். கையில் பிடித்திருந்த வீச்சுக்கத்தியை எடுத்து தரையில் கொத்தினான்.

 

சிகரெட் பிடித்தது, வயிற்றை பிசைந்தது மாதிரி இருந்ததுகையில் கத்தியையும் எடுத்துக் கொண்டு கொஞ்சம் பின்னாய் நடந்தான்சிறு சலசலப்புக்கும் பயந்தபடி இருந்தான்காற்றே இல்லாத எல்லா மரங்களும் செடிகளும் இவனையே உறுத்துப் பார்ப்பது போலத் தோன்றியதுதோதாய் ஒரு இடத்தைப் பார்த்து சருகுகளை குவித்து குத்த வைத்து உட்கார்ந்தான். உட்கார்ந்திருக்கும் போது கத்தியால் கொத்திக் கொண்டே இருந்தான். முடித்துவிட்டு, இலைகளால் துடைத்துக் கொண்டு திரும்பவும் வந்து கூட்டத்தோடு சேர்ந்து கொண்டான், கொஞ்சம் நிம்மதியாய் இருந்ததுகால்நடைகளைநிலத்தை எடுத்தவன் யாரென்று தெரியாது குறிப்பாய். ஆனால் எந்த கிராமத்தைச் சேர்ந்தவன் என்று மட்டும் தெரியும்அவர்களின் நிலத்தை இவர்களின் கால் நடைகள் மேய்ந்ததாய் சொன்ன இடம் இவர்கள் எப்போதும் கால் நடைகளை மேய்ச்சலுக்கு விடும் இடம்மழை அல்லாத காலங்களில் பசுமை தேடி ஆற்றின் கரையோரம் வருவது ஓர்மாக்களின் இயல்புஆனால் இந்த நிலங்கள் குறிப்பாய்  சொந்த நிலங்களை அவர்களிடம் இழந்ததோடு, பல உயிர்களையும் இழந்தது தான், இத்தனை பேரை இங்கு ஒன்று சேர்த்திருக்கிறது

 

போகோமோக்கள் வீடுகளிலும்  தங்கள் நிலங்களிலும் தான் இருப்பார்கள்இங்கிருந்து  நான்கு மைல்கள்சரசரவென்று காட்டுக்குள் புகுந்து கிசாபாவிற்குள் நுழைந்து விட முடியும்கிசாபாவில் மக்கள்தொகை அத்தனை அதிகம் இல்லை. 60 குடும்பங்கள் இருக்கலாம், ஆனால் கிராமத்தின் மையத்திற்கு நுழைவதற்கு முன்பே ஒரு பத்து, பதினைந்து வீடுகள் இருக்கும் அவற்றிற்கு தீவைத்து விட்டு, அதன் பின் ஏற்படும் கலவரத்தை சாதகமாய் பயன்படுத்திக் கொண்டு உள் நுழைந்து கண்ணுக்குத் தெரிகிற வரை எல்லாம் வெட்டுவதோ அல்லது அம்படிப்பதோ தான் திட்டம்இரண்டு பக்கமும் இழப்பு ஏற்படலாம். இதே கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தான் சலீமின் கிராமத்திற்குள் நுழைந்தார்கள்.   வீச்சுக் கத்திகள், ஈட்டி, வில், அம்பு, கைத்துப்பாக்கிகள் எல்லாம் இருந்தன. வீடுகளை எரித்தார்கள், கண்டவரை எல்லாம் வெட்டினார்கள், பெண்கள், குழந்தைகளின் குரல்வளைகள் அறுக்கப்பட்டதுபிணங்களை பார்ப்பதை விட வெட்டுப்பட்டு கிடப்பவர்களின் நிலை கொடூரமானதுஇருக்கிற ஒரு மருத்துவமனைக்கு செல்வதற்குள் இறந்துவிடுவார்கள் அல்லது அங்கு போன பிறகு மருத்துவமனையின் வசதியின்மை கொன்றுவிடும்.

 

அன்வர் கைத்துப்பாக்கிகள்  ஏற்பாடு செய்வதாய் சொல்லியிருந்தான். கைத்துப்பாக்கிகள் இருப்பது நலம். வில் அம்புகளை கையாள்வதை  விட இலகு. ஆனால் அன்வரால் சொன்னபடி கொண்டுவரமுடியவில்லை. கைத்துப்பாக்கிகள் சலீமிற்கும் அவன் கூட்டத்திற்கும் கிடைக்காமல் போய்விட்டது. அன்வருக்கு, சோமாலியனை சந்திக்க முடியாமல் போனது தான் காரணம்கைத்துப்பாக்கிகளும் வாங்கியிருக்கலாம், கையெறி குண்டுகளும் கூட கிடைத்திருக்கும்தவறவிட்டாயிற்று. ஆனால் 60 குடும்பத்திற்கு ஒரு ஆண் என்று கணக்கு வைத்தாலும், 25 பேர் கிசாபாவுக்கு சென்றால், தப்பிக்க முடியாது போகலாம்அன்வரின் கணக்குப்படி இன்னும் 10 பேராவது அதிகம் இருந்தால் சமாளித்துவிடலாம்.     பெண்களும், குழந்தைகளும் பெரிதாய் எதிர்ப்பு காட்டுவதில்லை. வெட்டியதும் விழுந்து விடுவார்கள், அல்லது தூரத்தில் இருந்து அம்பை அடித்துவிடலாம். கிராமத்தலைவரின் வீட்டைச் சுற்றி இரண்டு மூன்று பேர் காவலுக்கு இருக்கலாம்விளை நிலங்கள் அருகேயும், கால் நடைகள் வைத்திருக்கும் இடங்களிலும் ஆட்கள் விழித்துக் கொண்டு இருக்கலாம். அவர்களைக் கொல்ல வில் அம்பு தான் வசதி, அடித்ததில்உலோகமுனை அப்படியே தைத்து கிழித்து விடும். 

 

திரும்பவும் ஒருமுறை என்ன செய்ய வேண்டும் என்று முடிவு செய்து விட்டால், நல்லது என்று  தோன்றியது சலீமிற்கு. தனக்கு அருகே இருந்த சயீத்தை எழுப்பினான். எழுந்தவனிடம் எல்லோரையும் எழுப்பச் சொன்னான்நீண்ட நேரம் திட்டமிட்டு விட்டு, உறங்கப்போனவர்கள் எழுந்திருப்பதில் சோம்பல் காட்டினார்கள் 

 

ஒவ்வொருவராய்  எழுந்ததும்தாங்கள் ஏற்கனவே பேசி வைத்திருந்த  திட்டங்களை மறு ஆய்வு செய்தார்கள்அன்வர் விளக்க, ஒவ்வொருவரும் கவனமாய் கேட்டுக் கொண்டார்கள்காலித்திற்கு மாற்று கருத்துக்கள் இருந்தாலும், அன்வர் முடிவாய் சொல்ல அடங்கினான்கீழே வைத்திருந்த ஆயுதங்களை  எடுத்துக் கொண்டார்கள்கட்டைகளில் துணியைச் சுற்றினர், ஜத்ரொப்பா கட்டைகளையும் கையில் எடுத்துக் கொண்டனர்நெருப்பு பெட்டிகள், மண்ணெண்ணெய்யையும், விளக்கு எண்ணையும் போதுமான அளவு இருப்பதை உறுதி செய்து கொண்டனர்ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர் மறுபடி. திசை பார்த்து ஒரு சிறிய பிரார்த்தனை. ஒரு கட்டையில் சுற்றியிருந்த துணியில், விளக்கு எண்ணையை ஊற்றி, சயீத் கையில் இருந்த தீப்பெட்டியால் பற்ற வைத்தான். விட்டு விட்டு பிடித்தது. வெளிச்சத்தின் துணையுடன் மெதுவாய் நடக்க ஆரம்பித்தனர். ஆத்தோரமாய் நடக்கத் தொடங்கினர். நீர்யானைக் கூட்டங்கள் அங்கங்கே இருப்பதை நெருப்பு கொண்டு விரட்டினர்ஆனாலும், அவற்றை தவிர்க்க இன்னும் சற்று தள்ளி காடுகள் ஆரம்பிக்கும் இடங்களுக்கு நகர்ந்தனர் சேற்றில்  நடப்பது சிரமமாய் இருந்தாலும், காட்டை வெளிச்சத்துடன் ஊடுறுவுவது அத்தனை உசிதமில்லை. இலகுவாய் எதிரிகள் கண்ணில் பட்டு விடலாம்இரண்டு மணி நேரத்தில் கிசாபாவின் முனைக்கு வந்துவிட்டார்கள், குறுக்காய் வெட்டி உள் நுழைந்தால், பத்தே நிமிடத்தில் சேர்ந்து விடலாம்.

 

25
பேரும் சிறு சிறு குழுக்களாகப்  பிரிந்தனர்கையில் இருந்து  தீப்பந்தம் அணைக்கப்பட்டது. அணைக்கப்பட்ட பந்தத்தின் புகை ஒரு மாதிரி  நாற்றமெடுத்தது. நரிகளின் ஊளை கேட்டதுநரிகள் பக்கத்தில் வருவதில்லை. சிறுத்தைகள் அதிகம் கிராமங்களுக்கு அருகே கிடையாது. கண்கள் பழக நேரமானது ஒருவர் முன் செல்ல தொட்டுத் தொட்டு பின் சென்றனர்கிராமத்தின் முகப்பு வந்துவிட்டது.   வீடுகளுக்கு ஒரு சிறு வெளியை கடந்து அடைய வேண்டும்காசாவின் வீடு எப்போதும் மற்ற வீடுகளுக்கு நடுவே இருக்கும்நான்கைந்து பேர்களாய் பிரிந்து கிராமத்தினை சுற்ற ஆரம்பித்தனர்வெளியே உறங்கும் பழக்கம் போகோமோக்களிடம் இல்லை, இத்தனை வெயிலிலும் வியர்வையிலும் உள்ளே படுப்பது தான் அவர்களின் வழக்கம். காவலுக்கு இருப்பவர்கள் தவிர. 

 

பந்தங்கள் கொளுத்தப்பட்டன. பந்தங்களின் வெளிச்சம்  முகத்தில் படர்ந்து அவர்களின்  சிகப்பு ஆடைகளை பிரதிபலித்தது. தபதபவென்று ஆளுக்கொரு திசையாய் ஓடினர்குடிசைகள் மீது பந்தங்களை எறிந்தனர்பற்றி எரியத்தொடங்கியது குடிசைகள். எங்கும் ஓலங்கள், ஒன்றிரண்டாய் ஆரம்பித்து, குழப்பமாய் எல்லாத்திசையிலும் கேட்க ஆரம்பித்ததுகாவலுக்கு இருந்தவர்கள், உள்ளே உறங்கிக் கொண்டு இருந்தவர்கள் பதிலுக்கு ஆயுதங்கள் எடுத்து விரட்ட ஆரம்பித்தனர்இலக்குகள் பெண்களும் குழந்தைகளுமாய் இருக்க, முடிந்த வரை போராட ஆரம்பித்தனர்தொடர்ந்து நான்கு திசையிலும் எரிகிற தீ சூழ்ந்து எல்லா குடிசையிலும் பற்றி கொள்ள வெளியே ஆற்றுப்பக்கமாய் ஓடினர்வீடுகள் தீப்பற்றியதில் குழப்பம் அதிகரித்தது, யார் எவர் என்று தெரியாது பதில் தாக்குதல் தீவிரமடைய விடவில்லை.

 

சலீம் வில் அம்பை எடுத்துக்  கொண்டு ஓடுகிறவர்களை அடித்தான். அம்புகள், கால்கள் மற்றும்  உடம்பின் எங்கு பட்டாலும்  விழுந்தார்கள்அவனுக்கு மிக அருகே ஒரு வீட்டின் உள்ளே இருந்து பெண்ணின் ஓலம் கேட்க வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்தான்போகோமோ பெண்களின் மேலணியான போர்த்து(லேசொ) திரையென மறைத்திருந்ததுதிரையின் பின்னால் மல்லாந்து கிடந்த பெண்ணின் கால்கள் விரித்து கதறிக் கொண்டிருந்தாள்திரையை விலக்கியவனின் கண்ணில் முழுதாய் கர்ப்பமானவள் கால்களை விரித்து அவனிடம் இறைஞ்சினாள்வில்லை அம்பையும் கீழே வைத்தவன், அவள் கால்களை விரித்த போது ஒரு தலையைப் பார்த்தான்.