Friday, August 28, 2009

வாழ்பெருநிலம்...

கழிகிறது
பொழுதுகள்
கனவுகளும், கவிதைகளுமாய்..

தகிக்கிறது
உன் நினைவுகள்
சுடுமணலாய் விரிந்து
மூளையைத் தொடுகிறது...

சுவர் கடிகாரமுள்
நேரத்தை
கிழித்துக் கொண்டு
நகர்கிறது

உதிரும்
நிமிடங்களில்
குருதி வழிகிறது

அகண்ட இரவு
அரக்க கரங்களால்
குடல் உருவக் குனிகிறது
மலத்துடன்
குடல் சரிகிறது

நாட்கள்
பைசாசக் கால்களால்
இரக்கமில்லாமல்
விழி பிதுங்க
மிதிக்கிறது

இப்படியாக
எல்லாவற்றையும்
அள்ளி செருகிக்கொண்டு
ஓடும் காலின் கீழே
பூமி முன்னோக்கி
விரைகிறது
ஒரு
ஓட்ட பந்தயக்காரனாய்....

மூன்று கவிதைகள்

கவிதை (1)

கடவுளின்
கனவுகளில் ஒன்றை
திருடி
என் அலமாரிக்குள்
ஒளித்து வைக்கிறேன்

காணாது
தவிக்கும்
கடவுள்
மூளைக்குள்
விஷமேறி துடிக்கிறார்

ஜோதிமயமான
கடவுள்
காற்றுவெளியில்
சில்லிட்டுப்போய்
கருத்துப்போனார்

ஒளித்து வைத்த
கடவுளின்
கனவை
எடுத்துப்பார்க்கிறேன்

கடவுளின்
கடைவாயில்
பற்கள் முளைத்து
கோரக்குருதி
வழிகிறது

மீண்டும்
அலமாரிக்குள்
வைத்து
பூட்டிவிடுகிறேன்


கவிதை (2)

பத்து
வருடங்களுக்குப் பிறகு
கடிதம்
வந்தது
உன்னிடம் இருந்து

நிறைய
எழுதியிருந்தாய்...

நீயும் நானும்
விளையாடிய,
கதை பேசிய, கனவு விதைத்த
பொழுதுகளை...

நாம் தொடர்பற்று
இருந்த
நாட்களின்
சிறு குறிப்பும்
இல்லை
உன் கடிதத்தில்

மடித்து வைக்கிறேன்
உனக்கு பதிலாய்
நம் பழங்கதைகள் பேச...

கவிதை (3)

சொந்தமாய்
வீடு வாங்கி
குடிபுகுந்தேன்
ஒரு நகர அடுக்ககத்தில்..!

அப்பா
வந்திருந்தார் வீட்டுக்கு...

என் மகனிடம்
உங்க அப்பா
சின்ன குழந்தையாய்
இருந்த போது
சூரிய, சந்திர,
நட்சத்திரங்களுடன்
வானம் இருந்தது...

புழுதி அப்பிய
மண்ணும் இருந்தது...
மழை நனைக்கும்
தாழ்வாரம்
இருந்தது...

ஆனால்
சொந்த வீடு இல்லை

உன் அப்பாவிற்கு
சொந்த வீடு
இருக்கிறது....

பொய்யாய்
பழங்கதையாய்....

(எனது மேற்கண்ட 3 கவிதைகளும் நவீன விருட்சத்தின் பதிவுலகில் பிரசுரமாகியுள்ளது)

Thursday, August 27, 2009

காட்சி வியத்தல்...

கவிதையாய் உருவேத்த

கன்னி தேடி

சலித்து

காட்சி வியப்பை

அதுவாகவே

விட்டு விடுவது நல்லது…



”நாத்து நட்ட

வயலில்

நட்டிருந்த குடை”



“பன்னீர் பூக்கள்

மூடி

சாலையோரத்தில்

சரளைக்குவியல்”



“இடிந்(த்)த

பள்ளிக்கூடம்

ஒற்றையாய்

நிற்கும்

கரும்பலகைச்சுவர்”



”வற்றிய

முலைக்காம்பில்

பாலுக்காய்

துழாவும்

பேரக்குழந்தை”



”அரசமரத்தின்

அடியில்

அம்மன

செல்வ விநாயகர்”



”ஈக்கள்

மலத்தின் மீதும்

பூக்களின் மீதும்”



இங்கு முடிகிறது

இக்கவிதை…..

Wednesday, August 19, 2009

மொட்டபாற முனீஸ்வரன்....மல்லாங்கிணறு


மொட்டப்பாற முனீஸ்வரனுக்கு
நேர்ந்து விட்ட
வெள்ளாட்டங்குட்டி
காணாமப் போனதில்
பதறிப் போனா ஆத்தா…

சாமிகுத்தம் சடக்குன்னு தீர
ஈஸ்வரியம்மா சொல்ல
குறி கேட்ட உள்ளூர் கோடங்கியும்

சாவலும் சாராயமும்
படையலுக்கு வைச்சா..
கருப்பு காட்டிக் கொடுப்பான்னு…

கோடங்கி மேல
ஏறி வந்த கருப்பும்
மனசெறங்கி
ஏலாம் நாள்ல
வாசக்கால் வரும்னு….

வாரம் கடந்து போச்சு…

மய்க்கா நாளே
மிளகியும் வந்து நின்னா…
வாசலிலே
அத்த! அம்மா கறிக்குழம்பு
குடுத்தாகன்னு….

மெய்ஞ்ஞானம்

(1) நேர்ச்சைக்கு

அலகு குத்தி

இரவில் வலி தீர

சாராயம் குடிப்பார்

எங்க அப்பா...

(2) அம்மனுக்கு சார்த்த எடுத்த

பச்சை பட்டில்

அழகாய் தெரிந்தாள்

அம்மா

கடித வழி மரபு

இப்போதும்

எப்போதாவது

கடிதம் எழுதுகிறாய்

நலம் விசாரித்து....

நானும்

சிரத்தையாய்

பதில் கடிதம்

எழுதுகிறேன்...நலம் சொல்லி

நலம் விசாரிக்க...

இந்த தலைமுறை

கடித மரபை

தொலைத்து விட்டது

என்று அங்கலாய்த்து கொள்கிறோம்...

அப்பா...

ஒரு மழையற்ற

மழைக்கால நாளில்அப்பா

அப்பா இறந்து போனார்

சம்பிரதாயமாய் வந்தவர்கள்

சந்தேகமாய் வந்தவர்களுடன்

சேர்ந்து

உறுதி செய்து கொண்டனர்

சந்தோஷமாயும்

சில பேர் வந்திருக்கக்கூடும்..

உரிமைக்கென்றும்

உதவிக்கென்றும்

சிலபேர்..

உற்றார் உறவினர்

மற்றார் எல்லோரும் ...

சவுண்டியும், வெட்டியானும்

அடுத்த

எழவுக்காய்

நேசமற்ற

பொழுதுகளை

காயடித்துக் கொண்டே....

சுந்தரின் கவிதைகள்..

உன் முகம்...

(1)களைத்து வீடுதிரும்பும் கூட்டத்தின் நடுவில்
ஓட்டுனரின் எரிச்சல் தெரியும் ஹாரன் ஒலியுடன்
முன்செல்லும் நடத்துனரின் முரட்டு தள்ளலில்
நிலைதடுமாறி நிமிர்ந்த வேளையில்
வேர்வை நனைந்த அக்குள்களின் கடைசியில்
வெட்கித்தெரிந்த உன் புன்னகை முகம்

தவறாமல் நினைவுக்கு வந்துவிடுகிறது,
என் மகளை கொஞ்சும்போது
...
அழுது பிரிந்த கடைசி முகம்,
மனைவியிடம் சண்டையிட்டு சோர்ந்த வேளைகளில்!



(2) பஸ்ஸோ ரயிலோ,
விமானத்தில் கூட,
புறப்படும் கடைசி நொடியில்
ஓடி வந்து ஏறிக்கொள்ள
ஆட்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்
...
தவற விடுவதர்க்கும் கூட!

சித்திரை திருவிழா...

அஷ்டமி சப்பரம்
மீனாட்சி திருக்கல்யாணம்,
எதிர்சேவை,
பூப்பல்லாக்கு, மண்டகப்படி,
வைகை ஆறு,
கள்ளழகர், மூனுமாவடி,
பச்சைப்பட்டு, வெண்பட்டு,
தமுக்கம் மைதானம்,
சித்திரை பொருட்காட்சி,
தல்லாகுளம் பெருமாள் கோயில்,
ரங்கராட்டினம்,
ஜவ்வு மிட்டாய்,
தண்ணீர், மோர் பந்தல்,
பானகம்,
விளம்பரம் தாங்கிய
விசிறிகள்,
விசிறி தலைப்பா
நீர் பீய்ச்சி தோல்பைகள்,
சலங்கை கட்டி ஆடும்
மதுரை தெருக்கள்
தோலுரித்து
கிராமமாய் மாறும் நகரம்
எல்லாம் ரசமாக்கும்
இரட்டை ஜடையுடன்
நீலப்பாவாடையில் ஜெயந்தி,

சித்திரை திருவிழா
என் மகனுக்கு வாய்க்காமலே…

பிறழ்வு...

தவனைக்கார முருகனை
அண்ணே! என்று
தனியே இருக்கையில்
தவறுக்கு ஒதுங்குவாள்
அகல்யா அக்கா…

மர்ஃபி ரேடியோ,
மயக்கும் செண்ட்,
மஸ்லின் துணி ரவிக்கை
என்று கல்யானத்திற்கு
களவுப்பொருள்
சேர்ப்பாள்

சைக்கிள் மணிச்சத்ததில்
சங்கேத பாஷைகள்
கொலுசொலிக்கு
புரிந்து போகும்
பண்டமாற்று அரங்கேறும்
முன்மாலைப்பொழுதுகளில்
பழம்புடவை பட்டுகளாய்,
பழங்கதைகள்
நிகழ்கனவாய்,
கறைகளும் வண்ணங்களாய்..

வடித்த சோறு
வட்டியில்
உறித்த கோழி
அடுப்பினில்
ஞாயிறு விருந்துகளில்
செரிக்க வெற்றிலை தேடும்
உறவு

Tuesday, August 18, 2009

அப்பாவின் வீடு


எத்தனை வீடு
மாறினாலும்
அப்பாவிற்கு சாத்தியமாகிறது
அவருடைய
அடையாளங்களை இட்டு நிரப்ப...

மிகத்தோதாய்
வாய்க்கிறது வாகாய்
ஒரு படிக்கட்டு
சவரம் செய்து கொள்ள..

குற்றால ஈரிழைத்துண்டும்
எட்டுமுழ வேட்டியும்
உலர்த்த
எப்போதும் இருக்கிறது கொடிகள்..

ஏதாவது
ஒரு சந்தில் கிடைத்து விடுகிறது
ஒற்றைக் கிரனமாகவேனும்
சூரிய நமஸ்காரம்...

சுருள் பாக்கு, வெற்றிலையும்
பட்டணம் பொடியும்
யாராவது விற்கிறார்கள்
இவருக்கென்று...

எப்போதும்
அமைந்து விடுகிறது
பிற்பகலில்
கால் நீட்டி அயர, கதைபேச

ஒற்றைச்சுவர் நிழலும்,
சுற்றமும், நட்பும்...

அப்பா
மாற்றி வைத்த மாறி விட்ட
பொருட்களில்
இப்போதும்

சிரிக்கிறார்
எடுக்காமல் விட்ட நூலாம்படையிலும்....


..

இன்னும் சில....

நானற்று..

என்னுடைய
கவிதைகளில்
நானில்லாமல்
இருக்க
எப்போதும் மெனக்கெடுகிறேன்….

யாருடைய
வரிகளையோ
தெரிவு செய்து
அதை அடுக்கி உயர
கோபுரமாய் ஆக்குகிறேன்

பிறர்
உணர்வுகளில்
முலாம் தடவி
அவைகளை
நெட்டி பொம்மைகளாய்
நிறுவுகிறேன்

சொற்களின்
வீர்யத்தை, வீச்சைக் குறைத்து
என் வர்னங்களை
முற்றிலுமாக அழிக்கிறேன்

சரியாமல் இருக்க
உங்களின்
சுவாரசியங்களை
அனுபவங்களை
வஜ்ரமாய்க் கொண்டு
உறுதி செய்கிறேன்

கவனமாய்
செய்தாலும்
என் கைரேகைகள்
மிச்சமாகின்றன..

இந்த கவிதையிலும் கூட

கவிதைகள்

பிரிய சிநேகிதிக்கு...

இலக்கியவாதிக்கான
எந்த
அடையாளாங்களும்
இல்லை எனக்கு

விடிய விடிய
பீடி வலிப்பதிலும்
பேச்சு சுவாரசியத்திலும்
கழிவதில்லை
பொழுதுகள்

கிழக்கு, மேற்கு
வடக்கு, தெற்கு என்று
திசைகள் எங்கும் அலைந்து
மொழி பெயர்ப்பில்,
மொழி மாற்றத்து இலக்கியங்களில்
பரிச்சயம் இல்லை
எனக்கு

தமிழில் எழுதும்
சிலரைத் தவிர
வேறு எவர் பெயரும்
அறியாதிருக்கிறேன்..

அந்நிய திரைப்படங்கள்
இசை, புத்தகங்கள்
எதிலும் ஆர்வமில்லை எனக்கு
அந்நியப்பெயரில் யாரையும்
எதையும்
தெரியாது எனக்கு

கையில்
காசே இல்லாமல்
சாப்பாடு பற்றிய பிரக்ஞை இல்லாமல்
உடுத்திய உடையுடன்
ஊர் சுற்ற பழகியதில்லை

தேடிச்சென்று
பேர் பெற்ற இலக்கியவாதிகளை
சந்திக்க முயன்றதுமில்லை

நவீன இஸங்கள்
பின்முன் நவீனங்கள்
அமைப்பு சாரா சாரும்
இடம் வலம்
லத்தீன் கிரேக்க ருஷ்ய
தத்துவங்கள்
பாசிச, பூர்ஷ்வ, நாசிசம்
எதுவும்
பழகவில்லை

அகம், புறம்
குறுந்தொகை, கலித்தொகை
புலம் பெயர்ந்தவர்கள்
புரட்சி இலக்கியம்
மார்க்ஸ், எங்கல்ஸ்
பொருளாதாரம், அரசியல்,
தத்துவ சித்துகள்
எதுவும்
புரிவது இல்லை எனக்கு

பட்டறைகள்,
பாசறைகள்
கவியரங்கங்கள்
நிலாமுற்றம், பயிலரங்கு
விவாதமேடைகள்
கருத்துப்பெட்டகம், கனையாழி,
காலச்சுவடு, விருட்சம்
கவலையில்லை எனக்கு

உனக்கு
பிடித்தமாய்
உன்னைப்பற்றி
உன்னிடம் பேச
நிலா, மழை, வானவில்
பூக்கள், மலை, மேகம்
வாரமலர் கவிதைகள்,
இளையராஜா, பாலகுமாரன்
பாக்யராஜ், வைரமுத்து
குமுதம், விகடன்
என்று கதைபேச
வியப்பிலாழ்த்த!

அப்பா!
சீனுவுக்கு எவ்வளவு
தெரியுது
என்று
உன் புருவ உயர்த்தல்களும்
உதட்டுச் சுழிப்பும் போதும் எனக்கு…

இலக்கியவாதியாகும் ஆசை எப்போதும் இல்லை எனக்கு