Wednesday, January 27, 2010

தூரக்கிழக்கு...

கொல்லனின்
துருத்தி ஊத
பொறி கங்குகளாய்
பறக்கும்
மினுக்கட்டாம் பூச்சிகளென
மின்னி ஏய்ப்பு
காட்டுகிறது 
நம்பிக்கை
தூக்கணாங்குருவியின் 
சாமர்த்தியமாய்
மினுக்கட்டாம் பூச்சிகளை
களிமண்ணில்
நிரந்தரமாய் பொதிக்க
பிரயத்தனப்படும் முயற்சிகள்
கண் சிமிட்டி
மறைகிறது
கடைசி வெளிச்சத்தை
உமிழ்ந்தபடி

கை நழுவிப்போகும்
வாய்ப்புகளின்
விலாங்கு சேட்டை,
கை விரல்களை
நொந்து
முனை கருக்குகிறது
ஈவின்றி.

சலனங்களின்
முடிச்சில்
தொங்க எத்தனிக்கிறது
ஒரு சந்தர்ப்பம்
காணாத
கொலைபொழுது
வசீகரத்துடன்

இன்னும் எழுத
இருக்கிறதென 
முடியாத கவிதை
காற்புள்ளியுடன்
காத்திருக்கிறது
சிதறுண்ட
சொற்களுடன்

Tuesday, January 26, 2010

பொம்மைக்காரர்கள்

எனக்கான பொம்மைகளை
மிகவும் தேர்ந்து கொள்கிறேன்

கொஞ்சம் தள்ளி நின்று
பார்க்கிற வரிசையில்
எல்லாமே ஏதோ சாகசக்காரர்களின்
 அல்லது ஒரு
வித்தைக்காரர்களின் மறு ஈடாய்
இருக்கிறது

ஒன்று
உடலை வில்லை போல வளைத்து
அந்தரத்தில் தொங்குகின்ற ஒன்று
வனப்புடன் வளையமாய்
தன்னை குறுக்கிய ஒன்று
ஆனால்
எல்லா பொம்மைகளின்
கண்களிலும் கைதட்டல்களுக்கான
காதுகள் முளைத்து காத்துக் கிடக்கின்றன

இயல்பாய் பாக்கு இடிக்கும்
பாட்டி, பள்ளி செல்லும் 
சிறுமியுமான பொம்மைகள்
என்னை நடந்து கடக்க
எட்டிப்பிடிக்க விரையும்
கால்கள் எட்டுக்கு எட்டு
தேய்ந்து குறுகுகிறது

வசப்படாமலே கவிதை...
வாழ்க்கை மாதிரி

Sunday, January 24, 2010

கட்டுக்கதைகளில் உறையும் கடவுள்

கடவுளின்
உதடுகளில் யாரையும்
முத்தமிட்டதற்க்கான
அடையாளங்கள் இல்லை

அவர் உள்ளங்கை ரேகைகளில்
பிற ரேகைகளின் கலவியும்
காண முடியவில்லை

உடலின் கொதி நிலையும்
ஒரே நிலையில் தான் இருக்கிறது
பிறரின் உடல் வெப்பம்
ஏற்படுத்திய வெடிப்புகள்
ஏதுமில்லை 

அவரின் மெலிந்து
தேய்ந்த அவயங்களில்
ரகசியங்கள் பொதிந்து இருக்கின்றன
இன்னும் புரட்டாத
பாறைக்கடி நிலம் போல

ஆனாலும்
முத்தமிட்ட, பிணைந்த,
புணர்ந்த
கட்டுக்கதைகள்
தக்கைகளாய் மிதக்கின்றன

தூர் வாராத கிணறுகளில்...

Monday, January 18, 2010

பலகனியின் தொட்டிவிருட்சம்

லெட்டர் வந்திருக்கு மாப்பிள்ளை வீட்டுல இருந்து... என்ற அனன்யாவின் குரலில் இருந்த உற்சாகம் அம்மாவுக்கும், பாட்டிக்கும் கூட தொற்றிக் கொண்டது கடிதத்தை படித்தவுடன்... அம்பிகாவுக்கு ஆச்சரியமாய் இருந்தது, அவனிடம் தனியாக பேசியபோது தன்னை பற்றி எல்லா விஷயங்களையும் சொல்லி பிறகும் அவர்களின் சம்மதம், இவளுக்கு நம்பும் படியாக இல்லை. தனது அறையில் இருந்து கூடத்தில் கடித்ததை கையில் வைத்து அங்குமிங்கும் ஓடிக் கொண்டு இருந்தவளிடம் இருந்து பிடுங்கிய கடிதத்தின் வாசகங்கள் அவளால் நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. அம்மாவை பார்த்த போது அவள் கடையோர சிரிப்பை பூத்து ஒன்றும் சொல்லாமல் சமயக்கட்டிற்குள் நுழைந்து கொண்டாள்...


மீண்டும் விரல்கள் நடுங்க படித்து பார்த்தாள். குண்டு குண்டான கையெழுத்தில் ஒரே சீராக இவ்வளவு அழகா தமிழ் எழுதுவானா என்று ஆச்சரியமாய் இருந்தது அவனுடைய தோற்றத்தையும் கடிதம் எழுதியிருந்த விதத்தையும் பார்த்த போது...

அநேக நமஸ்காரங்களுடன் ராம் எழுதிக்கொள்வது. அத்தை, எனக்கு அம்பிகாவை ரொம்ப பிடித்திருக்கிறது எங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கும் உங்கள் குடும்பத்தையும், அம்பிகாவையும் பார்த்தவுடன் அவர்கள் சம்மதத்தை சொல்லிவிட்டார்கள். அப்பா தான் என்னை ஒரு கடிதம் போட்டு இதை தெரிவிக்கச் சொன்னார். அம்மாவும் பாட்டியிடம் பேசி சம்மதம் வாங்கி விட்டாள். அம்பிகாவின் அப்பா பற்றி என் அப்பாவிடம் மட்டுமே கூறியிருக்கிறேன். அம்மாவுக்கும், பாட்டிக்கும் விஷயத்தை சொல்லவில்லை, அப்பா தேவைஇல்லை என்று சொல்லிவிட்டார், எனக்கும் அது சரியென்றே படுகிறது. கல்யாணத்திற்கு மட்டும் அவர் வந்தால் போதும். அதற்க்கு மட்டும் ஏற்பாடு செய்யவும்... முடிந்தால் நான் போய் அவரை பார்த்து பேசுகிறேன்... உங்களுக்கு சம்மதம் என்றால்... நான் என்னுடைய அலுவலக நம்பரை கொடுத்திருக்கிறேன்...எனக்கு தகவல் சொல்லவும்... என்று கடிதத்தில் கடைக்கோடியில் அவருடைய அன்புக்கு கீழே தொலை பேசி எண் இறைந்து கிடந்தது... படித்து முடிக்கும் போது அவளுக்கு அப்பாவை நினைத்து அழுகை வந்தது...

அன்று அவர்கள் பெண் பார்க்க வந்த போது பெரிதாக ஒன்றும் உடுத்திக்கொள்ளவில்லை அவள், சாதாரண காட்டன் சல்வாரில் எந்த அலங்காரங்களுமே இல்லாமல் இருந்தாள். அம்மாவும் பாட்டியும் செய்த தொந்தரவு தாங்காமல் வெறும் பத்து இனுக்கு பூ மட்டுமே வைத்துக் கொண்டாள். அதுவே அவளை அழகாய் காட்டியது. அப்பா சொல்வார் எப்போதும் லாசரா சொல்ற மாதிரி திகுதிகுன்னு ஒரு சுடர் போல இருப்பா, அவளுக்கென்ன என்று. அப்பா இன்று இருந்தால் நன்றாக இருக்கும். வேலையில் இருந்து வரும் போதே, அம்மா சொன்னதால் கொஞ்சம் ஸ்வீட்சும் பழங்களும் வாங்கிக்கொண்டாள்... ரெண்டு அவர் பெர்மிஷன் கேட்ட போதும் அவளோட மேலதிகாரி ஒன்றும் சொல்லவில்லை. இதுமாதிரி ரெண்டு அவர் பெர்மிஷன் போட்ட அவருக்கு காரணம், தெரியலாம் அவருக்கும் இரண்டு பெண்கள் இருக்கும் தகப்பன் மனசு. ஆபிசில் யாரிடமும் சொல்லவில்லை... சொன்னால் இது எத்தனாவது தடவன்னு கிண்டல் பண்ணுவாள் ஸ்ரீலட்சுமியும் சேர்ந்து கொண்டு பெரிய வனஜாவும் பல்லால் குத்த வருவது போல சிரிப்பாள். அவர்களுடன் இவளுக்கு பிரத்யேக ச்நேஹம் இல்லாவிட்டாலும் சாப்பாட்டுக்கு போகும்போது கூட போற நேரம் இப்படி ஒரு உறவு தேவையா இருக்கு.

செருப்பை முன்னால் உதறி விட்டு உள்ளே வந்த போது, அம்மா கூடத்தில உட்கார்ந்து வாழைக்காய் சீசுக்கிட்டு இருந்தா. அம்மா என்னம்மா இது... உனக்கு ஏதாவது சாக்கு வேணும் பஜ்ஜி போட.. வந்தவன் தின்னுட்டு ஆஹா உங்க கைமணம், அப்படின்னு புறங்கைய நக்கிட்டு போகணும்...நீ உத்தரத்துக்கு ஏறனும் அது தானே உனக்கு வேணும்.. இந்த ஸ்வீட்ஸ் கருமாந்திரம் எல்லாம் நான் தான் வாங்கிட்டு வர்றேனே, உனக்கு எதுக்கு இந்த பம்மாத்து எல்லாம்...என்ற அம்பிகாவின் வெறுப்பு கலந்த கோபம் அவளை ஒன்றும் செய்யவில்லை.. அவள் பாட்டுக்கு வேலைய பாத்துக்கிட்டே அம்பிகாவிடம் முகம் கொடுக்காமல், உன்ன மாதிரியே எல்லாரும் இருப்பாங்களா, வர்றவுங்க இதெல்லாம் கூட செய்யலேன்னா என்ன நினைப்பாங்க...புரோக்கர் வேற இது வசதியான குடும்பம், அமைஞ்சா யோகம்னு சொல்றாரு, நம்ம செய்ய வேண்டியத செஞ்சிட்டு அதிர்ஷ்டத்த குறை பட்டா சரி அதுல ஒரு அர்த்தம் இருக்கு... ஒண்ணுமே செய்யாமா, ஐயோன்னு மூலைல ஒக்காந்து அழுதுக்கிட்டு இருந்தா... உங்க அப்பனா வந்து ஒன் கல்யாணத்தை நட்டமா நிப்பாட்ட போறான்... என்று அப்பாவை இழுத்தால் வம்புக்கு.

அந்த மனுஷன் காசு கொடுக்கலேன்னா உன் புருஷங்காரன் விட்டுட்டு போன காசுல எனக்கு கல்யாணம் பண்ணிக் குடுத்துடுவ..! என் அப்பாவப்பத்தி புரியாதவன் எவனும் எனக்கு வேண்டாம்... நீயே

கட்டி அழு அவனை.. இந்தா இருக்காள்ல அவளை கொண்டு போய் தள்ளிட்டு வா... இவ தான் ஒன் இழுப்புகெல்லாம் வருவா... குடும்பத்தை நீ தான் தாங்கிறேன்னு அலுத்துக்காத.. அவர் வீட்டில இருக்கோம், மாசாமாசம் பணம் அனுப்புறாரு... முடியிற போதெல்லாம் வந்துட்டு போறாரு... அனன்யா ஒம்பிள்ளைன்னு ஒன்னும் செய்யிறது இல்லையா...அவ மேல பாசமா இருக்கிறது இல்லையா, அவ கிட்ட பிரியமா இருக்கிறது இல்லையா.... ஏண்டீ... அப்பா உன் மேல பிரியமா இருப்பாரா இல்லையா... அவள் அம்மாவையும் இவளையும் பார்த்துவிட்டு மெதுவாக தலையாட்டினாள் ஆமோதிப்பாய்... நீ போய்ட்டா கூட எங்க ரெண்டு பேரையும் பாத்துப்பாரு... எப்ப பார்த்தாலும் அந்த மனுஷனை தின்னு துப்புறதே உனக்கு வேலையாபோச்சு... அதுனால தான் அவரு உன்கூட பேசுறது கூட இல்லை... எல்லாரையும் கட்டி நேசிக்க பெரிய மனசு வேணும், வெல்லக்கட்டி மனுஷன்.

அம்மா சமையக்கட்டில் இருந்து எட்டிபார்த்து என்கிட்டே வாயாடி உங்க அப்பனை தூக்கி பல்லாக்கில ஏத்தினது போதும்... போய் தயாராகு வந்துடுவாங்க இன்னும் கொஞ்ச நேரத்தில! என்று மாவுக்கையுடன் வந்து சைகையில் அனன்யாவிடம் போயட்டாலான்னு கேட்டு தலையில் அடித்துக் கொண்டே திரும்பவும் சமையக்கட்டிர்க்குள் நுழைந்தாள். அம்மாவுக்கு அப்பா என்ன செய்தாலும் பத்தாது. அம்பிகா உள்ளிருந்த படியே அனன்யாவை கூப்பிட்டு வீட்டை பெருக்கி இருக்கிற ஸ்டீல் சேர்களை ஒழுங்காகப் போட்டு, ஜமுக்காளத்தை விரிக்க சொன்னாள்.

ஆறரை மணி ஆனவுடன் வாசலுக்கு அருகே ஏதோ கார் சத்தம் கேட்டது, அவர்களாய் இருக்கலாம். கார் இவர்கள் வீடு இருக்கும் சந்திற்குள் நுழைய முடியாமல் தெருமுக்கிலேயே நின்று விட்டது... இவர்கள் இருக்கும் வீடு சிறு சந்தில் இருப்பதால் கார் உள்ளே வருவதற்கு தோதில்லை. சந்தின் மறுமுனை கொஞ்சம் அகலமாக இருப்பதால் சுத்தி வர முடியும் போல தோனும் பார்ப்பவர்களுக்கு, ஆனா முனை சந்தின் ஆரம்பமும் இது போல குறுகியே இருக்கும்.

காரில் இருந்து இறங்கிய ஆள் சுத்தி வர முடியுமாவென, வாசலில் இருக்கும் அனன்யாவை கேட்க, முடியாது என்ற பதிலில் திருப்தி இல்லாமல், தெரு அந்தப்பக்கம் அகலமா இருக்கே வேற ஏதாவது பாதை இருக்கும் யாராவது பெரியவுங்க கிட்ட கேட்டு வந்து சொல்லுங்க... என்றான் அந்த ஆள். அம்பிகா என்று அவள் வாசலில் இருந்து கத்திய குரலுக்கு, வெளியே வந்தவள் இவனாத்தான் இருக்கும் என்று மனசுக்குள் சொல்லிக் கொண்டு, என்ன என்பது போல் பார்த்தாள், அவன் கார உள்ள கொண்டு வர முடியுமா... என்றதிற்கு முடியாது, அங்கேயே நிப்பாட்டிட்டு வாங்க என்றாள்.

சிகப்பாக, பளீரென்ற நீல சட்டை அணிந்திருந்தான், டக் இன் செய்து மெருகேற்றிய ஷூவும், அடர் நீல கால்சராயில் அழகாய்த் தான் தெரிந்தான். தலையில் எண்ணெய் தடவியது போல ஜெல் தடவி யிருக்க வேண்டும், படிய வாரி அப்படியே நின்றது போல இருந்தது. கண்களும், உதடுகளும் பெண் தண்மையுடன் இருந்தது, மூக்கும், மீசையும் அவனை ஆணென்று உறுதி செய்தது. இவளுக்கு அவனை பார்த்தவுடன் பிடித்துவிட்டது, இவன் அவனாய் இருக்க வேண்டும். இவன் அவனாகவெ இருந்தான் என்பது அவனுடன் வந்த ஐம்பதுகளில் இருக்கும் தம்பதிகள் உறுதி செய்தனர்.

அம்மா உள்ளே இருந்ததால், இவள் தான் அவர்களை அழைத்து வந்து கூடத்தில் உட்கார வைத்தாள். எதிர்பார்த்தபடியே அவன் (ராம் என்று ஞாபகம்) ஸ்டீல் சேரில் உட்கார்ந்து கொண்டான். அவனுடைய அப்பாவும், அம்மாவும் விரித்திருந்த ஜமுக்காளத்தில் உட்கார்ந்து கொண்டார். அம்மா சமையக்கட்டில் இருந்து வேக வேகமாக வந்தாள், வேறு யாரிடமும் சொல்லாததால், இரண்டு குடும்பங்களின் சந்திப்பதாக மட்டுமே அமைந்திருந்தது. அனன்யாவின் அப்பாவைப் பற்றி அவர்கள் ஏதும் கேட்கவில்லை. ராமிடம் அப்பா பற்றிய விபரங்களை சொல்லிவிட வேண்டும். சொல்லாமல் விட்டால் நல்லாயிருக்காது என்று நினைத்துக் கொண்டாள். மாத்தி மாத்தி ஏதோ பேசி, டெலி சீரியல் எல்லாம் தொட்டு, எதற்காக வந்தார்கள் என்ற சந்தேகம் வந்தது அம்பிகாவிற்கு. ஒரு வழியாக எங்களுக்கு பிடிச்சிருக்கு, ஊர்ல போய் சொந்தக்காரங்க கிட்ட எல்லாம் பேசி ஒரு முடிவு சொல்றேன், எங்க அண்ணன் தான் எங்க வீட்ல பெரிய ஆள் அவர்ட்டயும் பேசிட்டு சொல்றேன் என்று ராமின் அப்பா பேசினார், அம்மாவும் சரிங்க என்று ஒற்றையாய் தலையாட்டினாள்.

அவனாகவே அம்பிகாவிடம் தனியா பேசனும் என்றான், அவன் சொல்லலேன்னா இவளே கேட்க வேண்டும் என்று இருந்தாள். அப்பாவைப் பற்றி பேசி விட வேண்டும். அவனை அழைத்துக் கொண்டு பின்பக்கம் சென்றாள். ரொம்ப சின்ன புழக்கடை அது, கிணறு இருந்த தடம் மறைத்து அந்த இடத்தில் போர் பம்பு இருந்தது இப்போது. போர் போடும் போது அம்பிகாவின் அப்பா கூடவே இருந்து தண்ணீர் வந்தபின் தான் போனார், அம்மா கறிக்குழம்பு வைத்திருந்தாள், அவருக்கு பிடிக்கும் ஆனால் அவரு சாப்பிடாம போயிட்டார். அதற்கு பிறகு கிணற்றை மூடிவிட ஏற்பாடும் செய்து விட்டார். துவைக்கிற கல்லை ஒட்டி ஒரு துளசிச் செடியும் இருந்தது. அம்பிகாவின் அப்பாவுக்கு துளசிச் செடி ரொம்ப பிடிக்கும். அப்பா இவளை உட்கார வைத்து ”துளசி தல முல சே” தியாகராஜர் கிருதி பாடும் போது ஒரு மாதிரி புழக்கடையே நிறைந்து அமிர்ததாரையாய் வழியும் அவரின் குரல். அவனை அழைத்து துவைக்கிற கல்லில் உட்காரச் சொன்னாள், சிரித்துக் கொண்டே உட்கார்ந்து தடக்கென்று எழுந்தான் சூடா இருக்கு என்று சிரித்தான். அழகாய் இருந்தது அவன் சிரிப்பு. என்னங்க எங்களப் பிடிச்சிருக்கா, என்னை, என் அப்பா, அம்மாவை, வெளிப்படையா இருங்க, மனசுல பட்டத பேசுங்க! என்று சொல்லிக்கொண்டே சுவற்றில் ஒரு காலை தூக்கி வைத்து சாய்ந்து நின்று கொண்டான்.

எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு, எங்க அம்மாவுக்கும் ரொம்ப பிடிச்சிருக்கு என்றாள்.

எங்க அப்பா உங்களை பார்க்க வேண்டும், அவரு ஓகே சொல்லிட்டா எனக்கும் ஓகே.

அவரு எங்க இருக்கார்?

உங்க ஊர்ல தான் இருக்கார், ஆர்.எஸ்.புரத்தில் ஸ்ரீனிவாசராகவன் தெருவில் இருக்கார். உங்களை ஆபிஸில் வந்து பார்க்க சொல்றேன், அவரு வீட்டுக்கு வருவாரான்னு தெரியலை, கேட்டுப் பார்க்கிறேன் என்றாள்

அவன் ஒன்றுமே சொல்லாமல் பேசாமல் இருந்தான். என்னோட அப்பா ரொம்ப பிரியமான மனுஷன், அவருக்கு கோவையில் ஒரு குடும்பம் இருக்கு, சொல்லப்போனா அதுதான் அவரோட குடும்பம். என்னோட அம்மாவும் அப்பாவும், படிக்கிற காலத்தில் காதலித்தார்கள், கொஞ்சம் வரம்பு மீறிய சினேகத்தின் கற்பதிவு தான் நான். என் அம்மாவின் வீட்டில் அவளுக்கு திருமணம் செய்து வைத்து விட்டார்கள், எந்தவிதமான பிரயத்தனங்களும் இல்லாமல் எல்லாமே இயல்பாய் நடந்தது போல இருந்தது என்று சொல்வாள் அம்மா. அம்மாவும் அப்பாவும் அவர்கள் காதல் பற்றியோ, திருமணம் பற்றியோ யாரிடமும் பேசவில்லை என்று தான் பாட்டி சொல்லியிருக்கிறாள். என் அம்மாவிற்கு அனன்யாவின் அப்பாவுடன் திருமணம் ஆகி ஒன்பதாவது மாதம் நானும் பிறந்தேன். 6 வருஷம் கழிச்சு அனன்யா பிறந்தாள், அவள் பிறந்து ஒரு வருஷத்தில் அனன்யாவின் அப்பா இறந்து விட்டார். அதன் பிறகு நாங்கள் அம்மாபாட்டி வீட்டிலேயே இருந்து விட்டோம். அனன்யாவின் தாத்தா, பாட்டி யாரும் இப்போது வருவதில்லை, அம்மாவும் கவலைப்படுவதில்லை.

நான் பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் போது தான் அப்பாவை முதன் முதலா பார்த்தேன், என் பாட்டி தான் சொன்னாள், அவர் தான் என் அப்பா என்று, எனக்கு என்னமோ மாதிரி இருந்தது, அவர் வந்து என் கையைப் பிடித்த போது, தோளில் சாய்ந்து கொண்டேன், அவர் என்னை அனைத்துக் கொண்டார். என் உயரமும், மூக்கும், கால் விரல்களும், காதும் அப்பாவைக் கொண்டிருந்தது. இத்தனை நாளும் அதன் சாயலை நான் ஏன் தேடவில்லை என்று எனக்கு இன்று வரை புரியவில்லை.
இதமாய்ப் பேசினார், ஒரு மாதிரி கனமான கீழ்ஸ்தாயியில் கம்பீரமாய் இருந்தது. எப்படிமா இருக்க! என்ற போது பென்சில் முனை மனசு மளுக்கென்று உடைந்து கண்ணில் பெருகியது. அப்பா தொடர்ந்து வர மேலும் இறுக்கமானார்.

அம்மா ஒரு வார்த்தை பேசவில்லை. அதற்கு பிறகு எங்களை சென்னையில் ஒரு வீடு பார்த்து குடி வைத்தார், அம்மா ஒன்றுமே சொல்லாமல், என்னை தான் முன்னே தள்ளுவாள். அப்பா எங்களுக்கு நிறைய உதவிகள் செய்தார், அவர் செய்து விட்ட ஒரே தப்புக்காக. நான் பிறந்திருக்கேன் என்பதால் அது தப்பில்லை தவம் என்பார் சில சமயம். படித்தோம், வளர்ந்தோம், இப்போ அனன்யா என்ஜீனியரிங் படிக்கிறா, நானும் டிகிரி படித்து இப்போ வேலை பார்க்கிறேன். இதோ உங்களுக்கு ஓகேன்னா கல்யாணமும் ஆயிடும். எங்க பக்க சொந்தக்காரங்கன்னு யாரும் பெரிசா கல்யாணத்திற்கு வரமாட்டாங்க, அதனால் பெரிசா எங்க சைடுல இருந்து பிரச்னை வராது. உங்களுக்கு எப்படியோ, யோசிச்சு முடிவு சொல்லுங்க, அவசியம் சம்மதிக்கனும்னு இல்ல. ஆனால் சொல்லாம இருக்கக்கூடாது என்று சொல்லிவிட்டேன். என்று முழுதாக பேசிவிட்டு அவனை நிமிர்ந்து பார்த்தாள், அவன் மாறாத குறுஞ்சிரிப்புடனே இருந்தான்.

என்னோட அப்பாட்ட பேசிட்டு சொல்றேன், மனசு விட்டு பேசுனதுக்கு ரொம்ப நன்றி, அப்பாவுக்கு பிடிக்கலேன்னா நம்ம நண்பர்களாகவே இருப்போம் என்று கை நீட்டினான், இதமாக பிடித்து குலுக்கினான். இவன் வேண்டுமே, அப்பா மாதிரியே இருக்கானே என்று மனசுக்குள் வேண்டினாள். ஒரு வாரம் அதைப்பற்றிய நினைவுகள் அவ்வப்போது வந்து நகம் கடிக்க வைத்தது. அம்மாவிடம் அவள் அப்பாவைப்பற்றி ராமிடம் பேசியதை சொல்லிவிட்டாள், அவர்கள் வேண்டாம் என்று சொல்லிவிட்டால் இதற்காகத் தான் என்பது அம்மாவுக்குப் புரியும் இல்லேன்னா ஏதாவது புலம்பிகிட்டே இருப்பா. இதோ இப்போது இந்த கடிதம் வந்துள்ளது.

அப்பாவிடம் பேசினேன், அவனை ஆபிஸில் போய் பார்ப்பதாய்க் கூறினார், இவளுக்கு பிடித்திருக்கிறதா என்று திரும்ப திரும்ப கேட்டார், அவரைப் பற்றி ராமிடம் சொல்லியதையும், அவருக்கும் அப்பாவை சந்திக்க ஆவல் இருப்பதைச் சொன்னதும், ரொம்ப சந்தோஷப்பட்டார், போன் ரிசீவர் அவரின் அன்பு போல ஒரு இதமான சூட்டுடன் இருந்தது.

அப்பா நிச்சயதார்த்தத்திற்கும், கல்யாணத்திற்க்கும் ஆபீஸ் வேலை இருப்பதாகச் சொல்லிவிட்டு வந்து விடுவதாகக்கூறினார்.

ஜன்னலில் தெரிந்த மெலிதான தூறல் அப்பாவை ஒத்திருந்தது.

பின்குறிப்பு:
சிறுகதைங்கிற பேர்ல ஏதோ எழுதியிருக்கேன்...சரியா இல்லேன்னா கிழிச்சுத் தொங்கவிடவும்.

Friday, January 15, 2010

பகலில் மிச்சமிருக்கிற இரவு...

அடப்பாவி! மதுரையில அதுவும் ஜெய்ஹிந்த்புரத்தில் எப்படி இவன்!  டேய் மாப்பிளை! என்று நீலம் படர்ந்த சட்டையை அணிந்தவனின் தோளை தொட்டு, கொஞ்சம் அழுத்தமாகவே திருப்புகையில், திரும்பிய முகத்தில் மாப்பிளையின் சாயல் சற்றும் இல்லாமல் இருந்தது... முதுகில், நடையில், ஆடை தெரிவில் மட்டுமே அந்த மாப்பிளையை கொண்டிருந்தவர்... என்ன பாஸ்! என்று என்னை கேலியாய் பார்த்தார்.  ஸாரி என்னுடைய நண்பர் மாதிரி இருந்தது... ஆனால் அது நீங்கள் இல்லை, என்று அசடு வழிந்து திரும்பினேன்.  இதுபோல  தான் ஆகி விடுகிறது அநேக நேரங்களில், ஒருவரின் புன்னகை, முக அமைப்பு, முதுகும், நடையும் நிறைய நண்பர்களை, தருணங்களை கிண்டி விட்டு செல்கிறது.

இன்று காலை நேசமித்ரனிடம் இருந்து போன் வந்தது.  ராகவன் நேசமித்திரன் பேசுறேன்... எப்படி இருக்கீங்க... என்று ஆரம்பித்தார், அலுவலகம் கிளம்பும் நேரம் ஆனால் கூப்பிட்டது நேசமித்திரன் என்பதால் என்னால் எதையும் சொல்ல முடியாமல், என் காலை வேலைகளை பார்த்துக்கொண்டே பேசினேன்... பெரிதாய் சுவாரஸ்யப்பட்டிருக்காது அவருக்கு இருந்தாலும் அவர் சொல்வதை கேட்டுக் கொண்டு இருந்தேன்.  என்னுடைய கவிதைகள் பற்றி அவரின் பேச்சு எனக்கு எங்கேயோ யாரோ ஏற்கனவே சொன்னது போல இருந்தது... ஒரு முறை எஸ்.ரா என் வலைப்பக்கத்தை பார்த்து... உங்கள் கவிதைகள் சுமார் ராகம், ஆனால் உரைநடையின் நடையும் வீச்சும் அழகாய் இருக்கிறது நிறைய படியுங்கள், எழுதுங்கள் என்று மின் மடல் எழுதியிருந்தார்... அதை கொஞ்சம் மாற்று வார்த்தைகளில் நேசமித்ரனும் சொன்னார். 

கவிதை எழுதுவதன் காரணம், நேரமும் அதை படிப்பவர்களின் உடனடி எதிர் ரசனைக்காகவும் தான் என்று தோன்றுகிறது.  சித்திரமும் கை பழக்கம் என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டு, திரும்ப திரும்ப எழுதுகிறேன்.  ஒற்றை வரி, சில சமயம் ஒரு பத்திகளை படித்து விட்டு சிலாஹிக்கும் சில நண்பர்களின் உற்சாகம் தூண்டல்கள் என்னை ஒரு மயக்கத்தில் நிறுத்தி இன்னும் உளற, குழற செய்கிறது.  என்னுடைய கையடக்க கடல் பற்றி அவர் பேசும் போது, மனுஷ்ய புத்திரனின் கவிதை இதே கருத்தை (ஏறக்குறைய) கொண்டு புழக்கத்தில் இருக்கிறது என்றார்.   நானும் படித்திருக்கலாம், சிலரின் பாதிப்பில் எழுதும் போது சிலரின் படைப்புகளையே எழுதிவிடுகிறோம் போல.  கல்யாண்ஜி யின் நீ அமிழ்கிற ஆறு ஏற்கனவே ஓடிக்கொண்டிருக்கிறது... இன்னும் வரப்போகிறார்கள் உன்னைபோலவே அடித்தல் திருத்தல் இன்றி நிறைய பேர்... என்ற கவிதை எல்லாவற்றையும் சொல்லிவிடுகிறது...

மதுரையில் கோலாகல ஸ்ரீநிவாசை பார்த்து பேசும் போது சொன்ன விஷயமும் இது தான்,  தர்ம பாத, கெளட பதா எல்லாம் சொல்லியிருக்கிறார்கள், சித்தர் பாடல்களில் இல்லாத புதுக்கவிதைத்தனம் இல்லை என்ற கருத்துக்கு எனக்கு மாற்று கருத்து இல்லை.  எல்லாம் புதிது போல செய்தாலும், கெட்டித்து போன பழைய வாசனை இல்லாத கவிதைகள் இல்லை என்றே தோன்றுகிறது... எங்கோ மனசுக்குள் உட்கார்ந்த ஒரு விஷயம், என்றோ படிந்து விட்ட அனுபவ செறிவுகள் பிறரின் தாக்கத்தில் அல்லது பிறரின் சாயலில் இருப்பது தவிர்க்க முடியாததாகிறது.  அதுவாய் வந்து விழும் வார்த்தைகள் சில சமயம் ஞாபகத்தின் அலமாரிக்குள் குடையும் போது வந்து விழுகிறது கவிதைகள்  அதன் மேல் படிந்து போன தூசிகளுடன்.  உரைநடை நன்றாக வருகிறது என்ற கருத்துக்கு நேசனுக்கு நன்றிகள் பல.., தொடர்ந்து எழுதுகிறேன் பன்படுமா என்று பார்க்கலாம்...

கால் பதிந்து பதிந்து வழுக்கலான பாறைகளில் ரேகைகள் இன்னும் மிச்சமிருக்கின்றன, ஒரு புதையலாய்...

Thursday, January 14, 2010

கையடக்க கடல்

ஒவ்வொருமுறை கடற்கரையில்
இருந்து திரும்பும் போது ஏமாற்றம் அடைகிறேன்
இரண்டு காரணங்களுக்காக

ஒன்று
கடலை எப்போதும் என்னுடன் எடுத்து
வர முடிவதில்லை

இரண்டு
என் உடைகளில் ஒட்டி வரும்
மணலையும் உதிர்த்து விட்டு போக
வேண்டியதாய் இருக்கிறது

ஆனாலும்
என் கால்சராய் பட்டியில்
எப்படியோ
உருண்டு கொண்டு வந்து விடும்
சிறிது மணலில் விரிகிறது
ஒரு அளப்பறியா கடல்

Wednesday, January 13, 2010

நம்பிக்கை...

மூணு குடம்
ரெட்டப்பிள்ளையாருக்கு
தண்ணி ஊத்தி
கும்பிட்டு போனா
பரீட்சையில
பாசாகிடலாம்

செம்பருத்தி பறிச்சு
வச்சு
வெண்ணை சாத்தி
செந்தூரம் இட்டுகிட்டா
அனுமாரும்
துணைக்கு இருப்பாரு

ஆத்தாவும் அது
பங்குக்கு
மாரியாத்தாளுக்கு
பொங்கல் வைக்க
நேந்துகிச்சு
எம்மவ
பாசாகிடனும்னு

பரீச்சை நாளும்
வந்துடுச்சு
படிச்சதெல்லாம்
மறந்து போச்சு
துண்ணூறு, குங்குமம்
செந்தூரம்
நெத்தில ஒட்டிக்கிடக்க
கும்பிட்ட சாமியெல்லாம்
குத்த வச்சு
கூட இருக்க
நினைப்பூட்டி
தர யாரும் இல்ல

எழுதி முடிச்ச பரீச்ச
எப்பவும் போல
திருப்தி இல்லை
இப்பவும்

ஒட்டுப்புல் எடுத்து
பாசா பெயிலா பார்க்க
ஒட்டிக்கிச்சு புல்லு
நிம்மதியா
இருக்குது இப்போ...

Tuesday, January 12, 2010

தோல்வி எழுதும் ஒரு நாட்குறிப்பு

முன்வழியும்
மரங்களின்
மயிர்க்கற்றைகளை
இழுத்து தாங்கும்
பிளவுபட்ட
கவன்வில் வளைவு

தூக்கணாங்குருவி
கூடுகளின்
தொங்கட்டான்
ஆட்டத்தில்
மேலேறி கீழிறங்கும் பூமி
கிறங்கி சரியும்
பாதைகள்

நடுவகிடு பிளந்து
கோதிச்செல்லும்
விரல்களில்
ஒட்டி வரும்
மகரந்த துகள்கள்
மீண்டும் உற்பவிக்கும்
பெயரறியா வசந்தத்தை

கொங்கைகள்
நடுவே வழியும்
வெள்ளைத் தாவணி
முனை பற்றி
தெப்பம் கட்டும்
மிதக்கும் ஏரி
புணர்ந்த கதை
வட்டவட்டமாய்
லஜ்ஜையின்றி

வளித்து எறிந்த
புகைக்குமிழியில்
வானவில் பூட்டி
மரங்களை
ஏற்றி
மாசு கொல்லும்
மலைமுகடுகள்

மலை உச்சியில்
உயிரை கழற்ற
நின்றவனை
காற்றுப்பைக்குள்
சுவாசம் நிரப்பி
தள்ளி விட்டது
வாழ்க்கைக்குள்
ஒரு வலிய கரம்

விருப்ப பட்டியல்...

விரும்பி சேர்த்த
பட்டியலில் உன் கவிதைப் புத்தகம்
இல்லாமல் போனது பற்றிய
குறை உன்னை
என்னிடம் அண்ட விடாமல்
செய்கிறது...

நெருங்கி வருகிறேன்
நீ விலகி ஓடுகிறாய்
கையில் அகப்பட்டதை எடுத்து
எறிகிறாய்
ஒரு வித்தைக்காரனின்
சாமர்த்தியத்துடன்
டபாய்க்கிறேன்

உன் கவிதைகளை
நினைவுக்கு கொண்டு வர
முயற்சி செய்கிறேன்
செருக்கு சேர்ந்த
குளத்து நீரில் மீன்களென
மனசின் விரல்களுக்குள்
அகப்படாமல் நழுவுகிறது

அல்லது...

அசையாத இலைகள்
அதன் நடனத்தை எங்கோ
ஒளித்து வைத்தது போல்
கவிதை புலப்படாது
மறைந்திருக்கிறது
உன் கவிதைகளில்

முற்றுப்புள்ளிகளை
நிறுத்தி வைத்திருக்கிறாய்
சிப்பாய்களென
ஆயுதம் தரித்து உள்ளே
நுழையவொட்டாமல்
தடுத்து விடுகிறது 
சில சமயம்

என்ன செய்வது!!
உன் பட்டியலில்
நான் இல்லாத போது...
நீயும் இல்லாமல் போகிறாய்
அடர் வனத்தில்
சூர்யனாய்...

Saturday, January 09, 2010

பூங்காப்பொழுது...

அந்த பெண் பிள்ளை
அவள் உடன் இருந்த சிறுவனுக்கு
அக்கா போல் இருந்தாள்
இரட்டை சடையில்
ஒரு பக்கம் மட்டும்
ரிப்பன் பூசனிப்பூ மாதிரி
தொங்கிக்கொண்டிருந்தது

அந்தச் செடியில்
பூத்திருந்த
ஏதோ ஒரு பூவை காட்டி
பேசிக்கொண்டிருந்தாள்
அவன் பூவையும்
அவள் கண்களையும்
மாற்றி மாற்றி பார்த்துக்
கொண்டிருந்தான்

அந்த சிறுவன்
அந்தப்பூவை தடக்கென்று
பறித்து விட்டான்
பதறிப்போய்
அவனை ஏதோ
திட்டினாள்
கையில் இருந்த
பூவை திரும்பி செடியில்
செருக முயன்றாள்
அது நிற்காமல் கீழே விழுந்து
கொண்டே இருந்தது

கொஞ்சம் பார்த்துக்
கொண்டே இருந்தவள்
செடியில் உள்ள காம்பை
சிறிது கிள்ளி பூவின்
தண்டை அதற்குள்
செருகி விட்டாள் -
அது நின்று சிரித்தது...

இரண்டு பேரும் இப்போது
அதை பார்த்து சிரித்தனர்
அவர்களின் சிரிப்பு
அந்த மலர்சிரிப்பை விட
அழகாய் இருந்தது...

மறுநாள் வந்து
பார்க்க வேண்டும்
என்று பூங்காவில் இருந்து
அறைக்கு கிளம்பினேன்...

காலின் கீழே 
இடறிய
ஒரு பூவை கையில் எடுத்து
இழந்த செடியைத் தேடுகிறேன்
கிடைக்கவில்லை
இந்த கவிதை கிடைத்தது
செருகி அழகு பார்க்க...

Friday, January 08, 2010

தம்பிக்கு கல்யாணம்

பொண்ணோட அப்பா
ரொம்ப உதவியா இருக்கிறார்
கல்யாண வேலையில
பாதிக்கு மேல அவருதான் பாத்துக்குறாரு!

மண்டபம் பிடிக்க
நாதஸ்வரக்காரனை முடிவு செய்ய,
பந்தக்காலு, சாப்பாட்டுக்கு
ஆளு பிடிக்கிறதுன்னு
எல்லாமே தம்பிக்கு உதவியா
கூடவே இருந்தாரு
நாங்க இல்லாத குறையே 
தெரியலையாம் அவனுக்கு... 

பத்திரிகை டிசைன்
பார்த்து பார்த்து செலெக்ட் பண்ணாரு
என்ன வேணுமோ கூச்சபடாம
சொல்லுங்க என்று
தலை மேல இழுத்து
போட்டுக்கிட்டு செஞ்சாரு
என் சந்தோஷத்தை
பகிர்ந்துக்கிட்டேன் நானும் அவர்ட்ட

பொண்ணு பிடிச்சு போச்சு
குடும்பமும் நல்லாயிருக்கு
தம்பி கொடுத்து வச்சவன் தான்
என்று மாற்றி மாற்றி
சொல்லி சந்தோசமா இருந்துச்சு
வீடே!

என்ன ஆச்சோ
கொஞ்ச நாளா அவரைக்காணோம்
போன் பண்ணா
எடுக்கிறது இல்லை
வீட்டுக்கு போனாலும்
இருக்கிறது இல்லை
ஒரு குன்ஜானுங்க சத்தத்தையும்
கேட்க முடியலை
முன்ன யாரும் பேசவும் இல்ல

என்ன ஆயிடுச்சின்னு
மயிரப்பிய்க்காத குறை தான்...
திரும்ப ஆரம்பிக்கணும் போலையே
பொண்ணு பாக்குற வேலையன்னு...

தம்பிக்கு அந்த பொண்ண
ரொம்ப பிடிச்சிருச்சு போல
ஒத்த காலிலே நிக்குறான்
அவளைத்தான் கெட்டுவேன்னு...

ரொம்ப ஆடுனாய்ன்கப்பா  இவிங்க!
சொந்தக்காரைங்க எல்லாம்
பேச ஆரம்பிச்சுட்டாய்ங்க!
அம்மாவுக்கும் அழவும் மூக்க
சீந்தவுமே நேரம் சரியாய் இருந்துச்சு!

அவரு இருந்தா இப்படி ஆயிருக்குமா?
சின்ன பசங்க வெள்ளாமை வீடு வந்து சேருமான்னு?
ஒரே அரற்றல்!

வந்தார் சம்பந்தி ஒரு நாளு
தம்பியோட கைய பிடிச்சிக்கிட்டு
மாப்பிள.. கூடபெறந்தவிங்க
எமாத்திட்டாய்ந்க
சொந்தமா
கல்யாண செலவுக்குன்னு
இருந்த ரெண்டு காணி நிலத்தை
எனக்கு தெரியாம
ஏமாத்தி வித்துபுட்டாய்ங்க
நானும் எதுக்கோ
கையெழுத்தும் போட்டிருக்கேன்
மாப்பிள..
ஒத்தப்பிள்ளைய பெத்துட்டு
அவளுக்கு செய்ய
முடியாம போச்சுதேன்னு...
புலம்ப ஆரம்பிச்சுட்டார்...

முப்பத்தஞ்சு பவுனும் மூணு லெட்சமும்
முடியாது போல இருக்கு...
என்று கைய பிடிச்சு கேட்க
ஒன்னும் வேண்டா மாமா..
பாத்துக்கிடலாம்...

தம்பியின் மனசு எனக்கு
ஆச்சரியமாய் இருந்தது...
நம்ம கூட இதெல்லாம்
ஒத்துக்கிட மாட்டோம்
ரொம்ப நல்லவன்...

கல்யாணத்துக்கு முதநாளு
தம்பியவும், அவனோட
மாமனாரையும் காணோம்
சாயங்காலமா வந்தவவுஹல
கேட்டா கல்யாணம்
பதிவு பண்றது சம்பந்தமா
பதிவு ஆபிசுக்கு போனதா
சொன்னான் ஒரு கடையோர சிரிப்புடன்...

தம்பியின் மாமனார் வீடு
முகப்பில் இப்போது வேற
போர்டு தொங்குகிறது...

Saturday, January 02, 2010

மழைக்குப்பின்...

மழைக்கு
பின் வரும்
நாட்கள்
விருந்துக்கு பின்னான
கிறக்கமாய்
கால்களில்
பளுக் குண்டுகளை
இணைக்கும்

வெளியெங்கும்
கருவிழி நட்டு
காத்திருக்கும் 
தார்ச்சாலைகளில்
நழுவிக் கழிய
எத்தனிக்கும் 
குளம்புகள் தேய்ந்த
குதிரை  ஒன்று

குடிசை கட்டும்
மாமனை இடுக்கு வழி
பார்க்கும் சமைந்த
குமரியின் பூரிப்பாய்
பச்சை அடர்ந்த மரங்கள்
சிலிர்த்து தெறிக்கும்
துளிகளில் 
பூமியும் மிதக்க 
ஆரம்பிக்கும் 

மிஞ்சிய துளிகளில்
உயிர் நிரப்பும்
வெட்டுக்கிளிகள் 
புணர்ச்சிக்கு
ஒதுங்கும்
குடைக்காளானின் அடியில்
புற்களை 
போர்த்திக்கொண்டு
ரகசியம் சொல்லும் 

மழை காக்க 
தேன்சிட்டு
குஞ்சுகளுக்காய்
கூட்டுக்குள்
பிற பறவைகளின்
இறகுகளில்
செட்டைகளை
அடைக்கும்
வெதுவெதுப்பில்
கண் சொருகிக்கிடக்கும் 
சூல் மேகங்கள் 

வானிலை அறிக்கையின்
பொய்யில் புலர்ந்த
விடுமுறை
நாட்காலையில்
விளையாட்டு 
சண்டையிடும்
கூச்சல் குழந்தைகள்
இழப்பு கதையை 
திரும்ப எழுதும் 

அலுவலகம் கிளம்புகையில்
போய்த்தான் ஆகணுமா என்று
கைபிடித்து  கண்ணில்
கெஞ்சும்
மனைவியின் பார்வையில்
மழை மறுபடி 
பெய்ய ஆரம்பிக்கும்  

Friday, January 01, 2010

அப்பா என்னும் வரம் - 2

அப்பாவின் வழியாக எனக்குள் நுழைந்தது திருப்பாவையும், நாச்சியார் திருமொழியும்.  காலையில் எங்களை உசுப்பும் போதே ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி ன்னு தான் உசுப்புவார். மார்கழியாக தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை அவருக்கு.  எல்லா மாதங்களும் அவருக்கு மார்கழி தான். பெருமாள், ஆண்டாள், சடாரி, துளசி தீர்த்தம், கோயில் யானை, விஸ்வரூப தரிசனம் என்று எல்லா காலங்களிலும் பெருமாளை கொண்டாடியவர்.  பிற கடவுளர்களிடம் விரோதம் ஏதுமில்லை அவருக்கு.  புரட்டாசி மாசம் வந்துட்டா என்னையும் எல்லா சனிக்கிழமையும் தவறாமல் கூடலழகர் கோவிலுக்கு கூட்டி செல்வார்.  அதிகாலை 4 மணிக்கே எழுந்து விஸ்வரூப தரிசனம் பார்க்கலாம் என்று.  நானும் கொஞ்சம் பெயர்க்காரணம் புரிந்த பிறகு விஸ்வரூப தரிசனம் என்றால் ஏதோ மூலவர் பெரிசா ஆயிடுவார் போல என்று நினைத்து கொண்டு இருந்தேன்... ஆனால் நேரில் பார்க்கும் போது கடவுள் என்ற கற்பனை போலவே அவரின் விஸ்வரூப தரிசனமும் ஒரு கற்பனையான ஒரு விஷயம் என்று புரிந்தது. 

கூடலழகர் கோவிலில் நாலரை மணிக்கே போய் விடுவோம் அங்கு விஸ்வரூப தரிசனம் முடிந்ததும் கோவில் பிரசாதமாக அடைப்ரதமன், தோசை, புளியோதரை இப்படி தளிகை செய்பவர்களின் வசதிக்கேற்ப ஏதாவது இருக்கும்.  அப்பா அதை கொஞ்சம் கூடுதலாக காசு கொடுத்து நிறைய வாங்கி கொள்வார்.  எதுக்குப்பா என்றால் வா சொல்றேன் என்று கூட்டி கொண்டு போய், கோயில் யானை, ஆண்டாள் சந்நிதியின் பின்னால் பிருந்தாவனத்தை பார்த்துக் கொள்ளும் முதியவர், கோவில் கூடவே பிறந்து வளர்ந்தவர் மாதிரி இருப்பார், வாசலில் இருக்கும் வயோதிகர்கள் என்று எல்லோருக்கும் பிட்டு கொடுப்பார்.  கொஞ்சம் சில்லறைக் காசுகள் நான் உண்டியலில் போடுவதற்காகவும், சனீஸ்வரனுக்கு எள் விளக்கு சாற்றுவதர்க்காகவும் தனியாக கொண்டு வருவார்.  நீலாஞ்சனா சமாபாசம் என்று சில சுலோகங்களை எனக்கு ராகத்துடன் கற்றுத் தருவார்.  மூலவரை பார்த்துவிட்டு வந்த பிறகு சன்னதியில் இருந்து கீழே இறங்கும் படிக்கட்டின் இருபக்கமும் இருக்கும் கல்யானையில் உட்கார வைத்து கதைகள் சொல்வார். பெரும்பாலும் யானை சம்பந்த பட்ட கதைகளாய் தான் இருக்கும்.  சில சமயம் திருவிளையாடல்  புராணத்தில் இருந்தும் அவர் செவி வழி கேட்ட கதைகளையும் சொல்வார். அப்பாவின் கதை சொல்லும் திறன் அலாதியானது.  இயல்பான எனக்கு புரிகிற வார்த்தை பிரயோகங்களுடன், உடற்மொழி கலவையுடன் கதை கேட்க கோவிலுக்கு வந்த நிறைய சிறுவர்கள் வந்து எங்களுடன் உட்கார்ந்து விடும் வகையில் சொல்வதுண்டு.   கல்யானை பக்கத்திலேயே, நிஜ யானையையும் கட்டி வைத்திருப்பார்கள்... அது சதா ஆடிக் கொண்டே இருக்கும், போகிற வருகிற குழந்தைகளை இழுப்பது போல துதிக்கையை தூக்கி நீட்டிக் கொண்டே இருக்கும்.  அப்பா யானையிடம் அதிக ச்நேஹமாய் இருப்பார், யானை பாகனும் ரொம்ப பரிச்சயமாய் இருந்தார்.  அதனால் எனக்கு காசு ஏதும் கொடுக்காமலே யானை ஆசீர்வாதம் செய்யும்.  அப்பாவின் தோசையோ அல்லது மிச்சமிருக்கும்  அடைபிரதமனோ கொடுக்க ஆவலாய் கை நீட்டி வாங்கி கொள்ளும்.  புளியோதரை மட்டும் கொடுக்க மாட்டார்.  ஏன்னு தெரியலை!

சுற்று பிரகாரத்தில், சுவர் வழியில் நிறைய கதைகளை சொல்லி நகரும் ஓவியங்களில் உள்ள ஊர்களை பற்றி ஏதாவது பேசிக் கொண்டே வருவார்.  வாய் விட்டு பிரார்த்திப்பார் அப்பா.  என்னையும் சத்தமா சொல்லு அப்பா தான் உன்னோட குரல் அவருக்கு தனியா தெரியும் என்பார். கேள்வி ஏதும் கேட்காமலே அப்பாவை நம்புவேன் எப்போதும்... குலம் தரும் செல்வந்தந்திடும்... என்று பாசுரங்களில் வழி பெருமாள் மீது ஒரு தீவிரமான காதல் வைத்திருந்தார், பாசுரங்கள் எழுதாத ஒரு ஆழ்வாராய் தெரிவார் எங்க அப்பா.  ஸ்ரீவில்லிபுத்தூர் என்ற வைணவ தலத்தில் பிறந்ததாலோ என்னவோ அப்பாவின் கதைகள் பெரும்பாலும், பெருமாள், ஆண்டாள், ஆழ்வார்கள் என்பதை சுற்றியே இருக்கும்.  நிறைய கதை கேட்டு, கதை சொல்லி வளந்த ஊர் அவருடையது.   பெரும்பாலும் சிறு வயதில் பஜனை மேடம் அல்லது சிஎம் எஸ் கிரவுண்டில் தான் இருப்பார்.  பசியை மறக்க விளையாட்டு, பசியை போக்க பஜனை மேடம், புளியோதரையும், சர்க்கரை பொங்கலும் அவசியம் உண்டு.  அவருக்கு செவிக்கும், வயிற்றிற்கும்  ஒரு வேளை உணவு நிச்சயமாய் கிடைத்தது.  திருவண்ணாமலை என்ற பெருமாள் கோயில் மலை மேலுள்ளது... அங்கு வரும் பக்தர்களுக்கு தண்ணீர் வசதிக்காக அப்பா மாதிரி இளவட்ட பசங்க கீழிருந்து தண்ணீர் சுமப்பது வழக்கம், அதுவும் பக்த சேவையை தாண்டி சுய தேவையாத்தான் இருந்தது.

ஸ்ரீவில்லிபுத்தூர் போகும் போது அப்பா என்னை திருவண்ணமலைக்கு அழைத்து செல்வது வழக்கம்...  சீரற்ற படிக்கட்டுகளில் அறுநூரை கடந்ததும் பெருமாள் தரிசனம்.., நல்ல மொட்டை வெயிலாய் இருக்கும், இளைப்பாற இடம் இருக்காது...  பாதி தூரம் கடந்ததும் ஒரு கருப்பண்ண சாமி கோயில் இருக்கும், அங்கு சபரி மாதிரி ஒரு பாட்டி வருகிற பக்தர்களுக்கெல்லாம் திருசூர்ணம் இட்டு விடும், அவர்கள் கொடுக்கிற, சில்லறைகளில் தன் தேவைகளை ஓரளவு பார்த்துக் கொள்ளும்.  அப்பா அந்த பாட்டியிடம் தவறாமல் கூட்டிக்கொண்டு போவார்.  திருசூர்ணம் இட்டதும் கையில் வைத்திருக்கும் தேங்காய் பழங்களையும், நிறைய சில்லறைகளையும் தருவார்.  அவரின் குடும்பத்தை பற்றி விசாரிப்பதுடன் என்னைப்பற்றியும் பெருமையாய் பேசுவார்.  எனக்கு ஆச்சரிமாய் இருக்கும், எத்தனை மரியாதையாய் பவ்யமாய் பேசுகிறார் அப்பா என்று தோன்றும்.  மனிதர்களை எந்தவித முகாந்திரமும் இல்லாமல் நேசிக்க கற்றுக் கொண்டது அப்போது தான் என்று எண்ணம்.

திருவண்ணாமலையில் ஒரு விசேஷ பழக்கம் உண்டு, கோயிலின் உட்பிரகாரத்தை சுற்றும் இடத்தின் ஒரு மூலையில் பெரிய அளவிலான செருப்புகள், கிட்டத்தட்ட  இருபதாம் நம்பர் சைசுக்கு இருக்கும்.  கோயிலுக்கு வரும் பக்தர்கள் அந்த செருப்பை எடுத்து தன்னை தானே அடித்து கொள்வது ஒரு பழக்கம்... அது பெருமாளின் திருவடிகள் எனவும், அவர் பாதம் படும் போது நம்முடைய முன் ஜென்ம வினைகள் மற்றும் இதர பாவங்களும் மறைந்து போகும் என்று ஒரு நம்பிக்கை...  ஒவ்வொரு வாரமும் தொடர்ந்து வருபவர்கள் கூட அடித்துக் கொள்வதுண்டு, பாவங்களை தொடர்ந்து செய்வது போல, எனக்கு வேடிக்கையாய் இருக்கும், அப்பா அதைப்பற்றியும் கதைகள் சொல்வதுண்டு... பெரியாழ்வாரும் ஆண்டாளும், பிருந்தாவனமும் எனக்கு இன்னும்  நினைவில் இருக்கும் விஷயங்கள்.  அப்பாவின் நினைவு நாளன்று திவசம் இட வேண்டும் என்ற என் அம்மாவை, கஷ்ட படுறவங்களுக்கு எதாவது உதவலாம் என்று மாற்றியது இன்னமும் தொடர்கிறது...

பணிவை கற்றுக் கொடுக்க அப்பா சொல்லும் பழமொழிகளில் ஒன்று... வளைஞ்ச வில்லு தாண்ட தைக்குங்கிறது எனக்கு இன்னும் பொருந்துற விஷயம்... பைபிளில் இருந்து கூட அப்பா குறிப்பிடுவது " எவன் தன்னை தானே தாழ்த்தி கொள்கிறானோ, அவனே உயர்த்தபடுவான்... அப்பா எங்கள் எல்லோருடைய மனசிலும் உயர்ந்து இருப்பதற்க்கான காரணங்கள் எங்களுக்கு மெதுவாக தான் புரிய தொடங்கி இருக்கிறது....

அப்பாவின் வரம் இன்னும் தொடரும்...