Monday, June 18, 2012

இரண்டு கவிதைகள்...


தேர்முட்டி:

விலகாத இருளென 
அடர் கருப்பில் நின்றிருந்தது
அந்த மாயாவதத்தேர் 
புராதனத்தின் புகை மண்டி
அழுந்துயர் பிசுக்கென ஒட்டிக்கிடந்தது
உடைந்திருந்த அச்சு
உலோகவார்ப் பட்டைகள் கழன்ற
மரச்சக்கரங்களும் 
எப்போதோ உருண்ட வீதிகளின்
மணற்துகள்களை
உதிர்த்து கொண்டிருந்தது
மேற்கே வானத்தின் சிகப்பு
தேரின் மீது தெறித்திருந்தது
எச்சத்தில் விழுந்த
அரசவிதை ஒன்று முதல் தட்டில்
இளஞ்சிவப்பு பசுந்தளிர்களை
துளிர்ந்திருந்தது
அந்த தேர்முட்டியை கடக்கையில்
பேரரவம் கேட்டது எனக்கு!



****
பழுதான பாலம்:


பழுதான பாலம் என்று
தான் தோன்றுகிறது
அப்புறத்திற்கு கொண்டு சேர்க்குமா
என்று தெரியவில்லை
கடக்காமலே பார்த்துக் கொண்டிருந்ததில்
எதிரில் ஒருவர் கடந்து கொண்டிருந்தார்
விரைந்து கடந்தால் இருவரை
தாங்குமா என்று சந்தேகம் வந்த்து
கொஞ்சம் காத்திருந்தேன்
ஏதோ பேசிக் கொண்டே வந்த
இரண்டு பேர்கள் கடக்க
ஆரம்பித்தார்கள்
நானும் சேர்ந்து கொண்டால்
பிடித்திருக்கும் கயிறுகள் அறுபடலாம்
அல்லது பாலத்தின் பலகைகள் முறியலாம்
மறுபடி காத்திருந்தேன்
அவர்கள் என்னை வேடிக்கையாய்
பார்த்து கடந்து சென்றார்கள்
இப்போது பாலத்தில் யாருமில்லை
தனியாய் கடக்க தயக்கமாய் இருந்தது
திரும்பவும் ஊருக்குள் நகர்ந்து
வேற்று வழி இருக்கா என்று
விசாரிக்க ஆரம்பித்தேன்.