Showing posts with label கவிதைகள். Show all posts
Showing posts with label கவிதைகள். Show all posts

Monday, June 18, 2012

இரண்டு கவிதைகள்...


தேர்முட்டி:

விலகாத இருளென 
அடர் கருப்பில் நின்றிருந்தது
அந்த மாயாவதத்தேர் 
புராதனத்தின் புகை மண்டி
அழுந்துயர் பிசுக்கென ஒட்டிக்கிடந்தது
உடைந்திருந்த அச்சு
உலோகவார்ப் பட்டைகள் கழன்ற
மரச்சக்கரங்களும் 
எப்போதோ உருண்ட வீதிகளின்
மணற்துகள்களை
உதிர்த்து கொண்டிருந்தது
மேற்கே வானத்தின் சிகப்பு
தேரின் மீது தெறித்திருந்தது
எச்சத்தில் விழுந்த
அரசவிதை ஒன்று முதல் தட்டில்
இளஞ்சிவப்பு பசுந்தளிர்களை
துளிர்ந்திருந்தது
அந்த தேர்முட்டியை கடக்கையில்
பேரரவம் கேட்டது எனக்கு!



****
பழுதான பாலம்:


பழுதான பாலம் என்று
தான் தோன்றுகிறது
அப்புறத்திற்கு கொண்டு சேர்க்குமா
என்று தெரியவில்லை
கடக்காமலே பார்த்துக் கொண்டிருந்ததில்
எதிரில் ஒருவர் கடந்து கொண்டிருந்தார்
விரைந்து கடந்தால் இருவரை
தாங்குமா என்று சந்தேகம் வந்த்து
கொஞ்சம் காத்திருந்தேன்
ஏதோ பேசிக் கொண்டே வந்த
இரண்டு பேர்கள் கடக்க
ஆரம்பித்தார்கள்
நானும் சேர்ந்து கொண்டால்
பிடித்திருக்கும் கயிறுகள் அறுபடலாம்
அல்லது பாலத்தின் பலகைகள் முறியலாம்
மறுபடி காத்திருந்தேன்
அவர்கள் என்னை வேடிக்கையாய்
பார்த்து கடந்து சென்றார்கள்
இப்போது பாலத்தில் யாருமில்லை
தனியாய் கடக்க தயக்கமாய் இருந்தது
திரும்பவும் ஊருக்குள் நகர்ந்து
வேற்று வழி இருக்கா என்று
விசாரிக்க ஆரம்பித்தேன்.

Wednesday, November 30, 2011

பிம்பக்கரைசல்...


இதோ இந்த பேருந்தில் தான் நீங்களும் இருக்கிறீர்கள்
உங்களை கடந்து போகும்
பழைய புத்தகங்கள் விற்கும் சிறுவனும்
நாக்கில் அலகு குத்தி அம்மனின் படத்தை 
கழுத்தில் மாட்டிக்கொண்டு உங்களிடம் சில்லரைக்காய் 
கை நீட்டும் சிறுமியும்,
இஞ்சி மரப்ப, வேர்க்கடலை விற்கும் பெரியவரின் முகமும் 
பூக்கூடையுடன், உங்களுக்கு அருகில் இருக்கும் பெண்மணிக்காய்
பூ வாங்க இறைஞ்சும் குரலும் உங்களை சலனிக்கவில்லை 
இசையையும் குரலையும் பிரிக்காது
வந்து விழும் பாடலுக்கும் நீங்க செவி சாய்க்கவில்லை 
எங்கோ வெறித்தபடி இருக்கிறீர்கள்
இந்த பயணத்துக்கான காரணம் ஏதோ இருப்பது போல இருக்கிறது
உங்களைத் தாண்டி உள்ளங்கை நீட்டும் 
பார்வையற்றவரின் குரலில்
உங்கள் அருகில் இருக்கும் பெண்மணி 
திரும்பி, உங்கள் பையை துளாவி சில்லறையை எடுத்துப் போடுகிறார்
அவரைப் பார்த்து முறைக்கிறீர்கள்
அவர் வெடுக்கென திரும்பி கொள்கிறார்
திரும்பவும் எங்கோ வெறிக்கும் உங்கள் கண்ணில் நான் விழுகிறேன் 
வெட்கமாய் போய் விடுகிறது உங்களுக்கு
உங்கள் அருகில் இருக்கும் பெண்மணியை 
ஏதோ காரணம் சொல்லி இருக்கை மாற்றச்சொல்லி 
ஜன்னலுக்குள் புதைகிறீர்கள் இப்போது.
பேருந்து கிளம்புகிறது பயணம் ஆரம்பித்துவிட்டதாய் 
உற்சாகம் வருகிறது உங்களுக்கு சேருமிடம் பற்றிய சித்திரங்களை
ஜன்னல் திரையில் வரைய முயல்கிறீர்கள் 
நான் உங்கள் முன்னால் ஜன்னல் கம்பியில் சாய்ந்து உறங்குபவரை அல்லது உங்கள் அருகில் அமர்ந்திருக்கும் பெண்மணியை பார்க்க தொடங்குகிறேன் 
எச்சில் வழிய உறங்கப்போகும் உங்களை நான் இனி கவனிக்கப்போவதில்லை என்று நிம்மதியடைகிறீர்கள்

Tuesday, August 30, 2011

மொழி சிதைவுற்ற பாடல்...


உயிரற்றது போலிருந்தது அவன் கண்கள்
அல்லது இறந்தவனின் கண்களை போல இருந்தது
பேச்சு மொழியில் பரிச்சயமற்றவன் 
சொற்ப வார்த்தைகள் சிதைவுற பேசுபவன் போலிருந்தான்
கிடைக்காத வார்த்தைகளுக்காக சிரமப்படாமல்
கையில் இருந்த கம்பால் தன்னைச் சுற்றி
தட்டிக் கொண்டிருந்தான்
பிச்சைக்காக உட்கார்ந்தவன் மாதிரியும் தெரியவில்லை
அவன் அமர்ந்திருந்த இடத்தில் அத்தனை
நடமாட்டமும் இல்லை இரப்போரும் குறைவு தான்
எந்தவித இறைஞ்சுதலும் இல்லை அவனிடம்
அரிதாய் கிடைத்தவற்றை மறுக்கவுமில்லை

இறந்திருந்த கண்களின் வழி
பினங்கள் ஊர்ந்து நகர்வதைப் பார்க்கிறான்
கையில் இருந்த கம்பால் திரும்பவும் தரையைத் தட்டுகிறான்
தட்டிய படியே தனது தேர்ந்த குரலில் உரத்து
எங்குமே கேட்டிராத ஒப்பாரியைப் பாடுகிறான்
அதிரும் காற்றில் கம்பிகள் அறுகத் தொடங்குகிறது
பினங்கள் ஊர்வது தொடர்ந்து கொண்டே இருந்தது
ஒப்பாரியை நிறுத்தியதும்
காற்றின் அதிர்வு அவனை நடுங்க வைக்கிறது
திரும்பவும் பாட ஆரம்பிக்கிறான்
இப்போது மொழி சிதைவுற்ற பாடலை கையில்
எடுத்துக் கொண்டு தரையை ஓங்கித் தட்டுகிறான்

Saturday, August 06, 2011

கூழாங்கல்...


நீரில்லா குவளையில்
நிரம்பிக்கிடக்குது தாகம்...
*** 
தூக்கில் தொங்கியதன் காரணங்களை
அவன் கடைசியாய் படித்த புத்தகத்தில்
தேடிக்கொண்டிருக்கிறது மேசைக்காத்தாடி...
*** 
தவிப்புகளின் மத்தியில்
சுழலும் புத்தியில் சிக்குகிறது
யாரோ தவற விட்ட ஒற்றைக் கொலுசு...
***

துளையிடப்பட்ட குழல்
நெய்த நெசவில் பழுதில்லை
போர்த்திக் கொண்டதில் உறங்கிப்போனேன்...
 ***
மணல் வீடு கட்டியவளின்
விரல் அடையாளங்கள் அழிக்கும்
அலையை என்ன செய்வது?
***
உதிர்ந்த இறகின்
தனிமையை அறியாதிருக்கும்
உதிர்த்த பறவை...
***
சருகுகள் அடைத்திருந்த வாய்க்காலில்
முளைத்திருக்கிறது
தளிர் இதழ்ப்பூ ஒன்று...
***
உறங்காத இரவுகளின்
மத்தியில் உருளும் பகடைகளில்
ஒற்றைப்படை விருத்தம்...
***
சலனமற்ற குளம் ஒன்று
கல்லெறிந்ததில்
கலங்குகிறது என் உள்...
***
தனித்த இரவுகளின் வாசனை
எண்ணெய் விளக்கின்
கருகிய திரியில் பிறக்கிறது...
***
மழை ஒரே சாயலில் பெய்கிறது
நனைபவர்கள் தான் வெவ்வேறு...
***
மழையில் நனைந்த
சிறுகதைத் தொகுப்பின்
பக்கங்களை பிரிக்கமுடியாமல்
கதைகள் எல்லாம் ஒரே கதையானது...
 ***
கல் பட்டு
சிதறிய இலைகளுடன்
சில பறவைகளும்...
 ***
படித்துறையின் வெம்மையில்
பிளந்து கிடக்கும் தெப்பம்
தெய்வங்களின் கருத்த உதடுகள்...
 ***
இரவுப்பூச்சிகளின்
சத்தத்தில் சலசலத்துக் கொண்டிருக்கிறது
கால் நணைக்கமுடியாத குளம் ஒன்று...
***

Tuesday, August 02, 2011

இருத்தல் சமன்பாடு...



பலுவனம்மாவும்
கோட்டைமுனியும்
செய்வது எல்லாம்
பெரிய காரியங்கள் இல்லை
காத்து கருப்பு அண்டாமல்
பார்த்துக் கொள்வதும்
காய்ச்சல் கண்டால்
பிணி தீர்ப்பதும் தவிர
வேறு ஒன்றும் தெரியாது
சந்தான சம்பத்து என்று
பாலிக்க, வரங்கள் நல்க
பெருந்தெய்வங்கள்
தேவையாயிருக்கு
ஒரு புட்டி சாராயமும்
சுருட்டும், ஒரு கோழியோ
கிடாயோ கொடுத்து தீராது
பெருந்தெய்வங்களின் பசி
பசியோடு அலையும்
பெருந்தெய்வங்கள் விழுங்க
எண்ணிக்கையில் குறையுது
சிறுதெய்வங்கள்

Thursday, July 28, 2011

முழுதும் நனைந்திருக்கிறது என் வீடு...


முழுதும் நனைந்திருக்கிறது
என் வீடு
சுவர், ஜன்னல், ஜன்னல் கம்பிகள்
கூரையும், வாசக்காலும், தின்னையும்
மழையினை உறிஞ்சு
வைத்துக் கொள்ளும் இரவு முழுவதும்
உடல் படுகிற இடங்களில் எல்லாம்
சிலிர்ப்பாய் மழையின் மிச்சத்தை
இடம்மாற்றும் நனைந்த வீடு
உங்கள் வீடுகளில் கூரைகள் நீண்டு
வறண்ட நாவுச்சுவர்கள்
மழையை சுவைக்காமலே
போயிருக்கலாம்
ஜன்னல் கம்பிகள் முற்றிலும்
மழை நீர் கோர்க்காத
வெற்றுச்சரமாய் இருக்கலாம்
வாசல் நுகராத மழை
வெளியிலேயே தேங்கி
வடிந்தும் போகலாம்
மழை பற்றிய அறிவை
கூரைகள் மட்டுமே
கதைகதையாய் கூற
வெறும் செவிகள் மட்டுமே
திறந்து வைத்திருக்கும் ஏனையவை
மழைச்சத்தம் மழையாகுமா
மழைக்கதை மழையாகுமா
நீங்கள் வீடுகளுக்குள்ளும்
தளராக்கூரைகளுக்குள்ளும் ஒடுங்க
மழை ஈரம் படாமலே
உலர்ந்து கிடக்கலாம்
சுவர்கள் போலவோ, ஜன்னல்கள் போலவோ
ஜன்னல் கம்பி, வாசக்கால்கள் போலவோ.
என் நனைந்த வீடு முளைவிட
உச்சானியில் அமர்ந்து கொண்டே
மழை ஈரத்தில் படாமல்
எதுவும் துளிர்ப்பது எப்படி?
என்று உங்களை வியந்து கொண்டிருக்கிறேன் நான்

Monday, July 25, 2011

கல்யாளி...


பரிசு பொட்டலம்
என்று தான் தோன்றுகிறது
அடர் நீல வானத்தை
மடித்துக் கட்டியது போல்
நட்சத்திரங்கள் உதிர்ந்து
கொண்டே இருந்தது

மூடியிருந்த பொட்டலத்தின்
நட்சத்திர முனைகளின்
கூர் கிழிக்கும் பயம்
பிரிப்பதை ஒத்தி வைத்தது

மயில்கண்சுடரென மினுக்கி
போர்த்திய அழகு
மர்ம முடிச்சாய் இறுகுகிறது

பொட்டலத்தின் உள்ளீடு
எதிர்பார்ப்பின் அவயங்களை
தின்று வளருது கல்யாளியென
பேசாத வார்த்தைகள்
மூடத்துவங்குகிறது என்னை
கூர் அலகால் துழாவி கொத்தி
எடுக்கிறது மந்திரச்சொல்லை
சினேகத்தின் பீலிப்பறவை 
மந்திரச்சொல்லை
தவறவிட உடைந்து
 நறுமணம் பரவுகிறது

நறுமணத்தின் தைலங்களில்
வரைந்த அரூவ சித்திரங்களுக்கு
பெயரிடுகிறேன் அது இதுவென்று

கனவுகளின் படுக்கை உதற
விழுந்த முகங்களை
அரூவங்களுடன் பொருத்த
முனைகிறேன்

பொருந்தா முனைகளை
சிதைக்கவும், முறிக்கவும்
தொடங்கியபோது
என் விரல்கள் உதிரத்தொடங்கியிருந்தது...

Wednesday, June 22, 2011

பிறந்த நாள் வாழ்த்து...


அழுந்திப் பிடித்த மோதிர வளையம்
விட்டுச்செல்லும் தடயத்துனூடாய்
பயனிக்கிறது நமக்கான காதல் பெருவாழ்வு
வருடங்கள் கீறிவிட்டுப் போன காலத்தில்
பிரதிபலிக்கிறது தெளிவான நம்முகங்கள்
கழுவிக் களையமுடியாத குணத்தைலத்தை
உடலெங்கும் பூசித்திரியும் பித்து
விரிக்கும் வர்ணங்கள் பரத்தும் களிச்சித்திரம்
நம் வெளியெங்கும் வழிந்து சிரிக்கும்
மாயக்கம்பளத்தின்  நுழைவாயிலில்
அரூவமாகும் நமது உடல்கள் கசிந்து கலக்கும்
உயிர் மட்டும் மிச்சமாகும் அடரிரவுகளில்
வார்த்தைகள் எரித்து குளிர்காய்வோம் நாம்
பார்வை தொடுமிடங்களில் குளிர்பூக்களும்
விரல்கள் தொடுமிடங்களில் அனல் பூக்களும்
பூக்கும் விசித்திரவனத்தில்
கால்கள் பாவாமல் சிலநேரம்
தரை ஊன்றி சிலநேரம் உலவுகிறோம்
வெளிச்ச ஜன்னலில் கருந்துளைக்காகம்
கரைய விடிந்த பொழுதில்
உனக்கான வாழ்த்தை எப்படி எழுதுவது
என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்

நான் என் மனைவியின் பிறந்த நாளுக்கு எழுதிய கவிதையை, என் ப்ரிய தோழி அம்பை மொழிபெயர்த்தது, நீங்கள் கீழே காண்பது...

Our love moves through the impressions
Left by the tight wedding ring
Our faces reflect the indelible marks left by time
Mad we are
Smearing ourselves with the oil of our qualities that cannot be washed off
That madness spreading colours, joyful pictures
Spilling all over our space joyfully stretching into a magic carpet
Our bodies become formless when we touch it
In those deep nights
A liquid mingling
With only our life intact
We warm ourselves in the fire of words
Where the eyes touch, cool flowers
Where fingers touch, fire flowers
A strange garden we walk in
With flying feet at times
And at times with feet firm on the ground
The day dawned with the black raven calling from the window full of light
And I wonder how to word my greetings for you on this day.



Tuesday, January 25, 2011

இறந்த பகல்..


வெளிச்சக்குடுவையில் பொத்தல் விழ
பாதரச ஒழுக்காய் வழிந்து
தீர்ந்து கொண்டிருந்தது பகல்
மிச்சமிருக்கும் ஒன்றிரண்டு வர்ணங்களை
கரைத்துக் கொண்டிருந்தது
ஒரு ஓவியனைப் போல
பார்வைகள் ஊடுருவமுடியாமல்
மெல்லிய கருந்திரைச்சீலைகளை
அடுக்கடுக்காய் தொங்கவிட்டுக்கொண்டிருந்தது
சாபங்களின் கறை நெருக்கும் இரவு
பிடுங்கப்பட்ட கண்களில் இருந்து வழியும்
குருதி கருப்பு வர்ணத்தில்
ஒரு மசியென மேலும் படர்ந்தது
தற்கொலைக்கு முயன்றவனின்
உத்தரம் வெறித்த விழிகளென
இருளை துளையிடும்
விளக்குகள் கழிவிரக்கத்தில்
கசிந்து கொண்டிருந்தன.
பகலின் குரல்வளை
இறுக்கி நெரிக்கப்பட்டு
காற்றுக்குழாயின் விதைப்பைகள்
நசுங்கிய கணத்தில்
முழுதும் இறந்து விழுந்தது பகல்