Tuesday, August 30, 2011

மொழி சிதைவுற்ற பாடல்...


உயிரற்றது போலிருந்தது அவன் கண்கள்
அல்லது இறந்தவனின் கண்களை போல இருந்தது
பேச்சு மொழியில் பரிச்சயமற்றவன் 
சொற்ப வார்த்தைகள் சிதைவுற பேசுபவன் போலிருந்தான்
கிடைக்காத வார்த்தைகளுக்காக சிரமப்படாமல்
கையில் இருந்த கம்பால் தன்னைச் சுற்றி
தட்டிக் கொண்டிருந்தான்
பிச்சைக்காக உட்கார்ந்தவன் மாதிரியும் தெரியவில்லை
அவன் அமர்ந்திருந்த இடத்தில் அத்தனை
நடமாட்டமும் இல்லை இரப்போரும் குறைவு தான்
எந்தவித இறைஞ்சுதலும் இல்லை அவனிடம்
அரிதாய் கிடைத்தவற்றை மறுக்கவுமில்லை

இறந்திருந்த கண்களின் வழி
பினங்கள் ஊர்ந்து நகர்வதைப் பார்க்கிறான்
கையில் இருந்த கம்பால் திரும்பவும் தரையைத் தட்டுகிறான்
தட்டிய படியே தனது தேர்ந்த குரலில் உரத்து
எங்குமே கேட்டிராத ஒப்பாரியைப் பாடுகிறான்
அதிரும் காற்றில் கம்பிகள் அறுகத் தொடங்குகிறது
பினங்கள் ஊர்வது தொடர்ந்து கொண்டே இருந்தது
ஒப்பாரியை நிறுத்தியதும்
காற்றின் அதிர்வு அவனை நடுங்க வைக்கிறது
திரும்பவும் பாட ஆரம்பிக்கிறான்
இப்போது மொழி சிதைவுற்ற பாடலை கையில்
எடுத்துக் கொண்டு தரையை ஓங்கித் தட்டுகிறான்

9 comments:

Rathnavel Natarajan said...

நல்ல கவிதை.
சோகம் இழைகிறது.

Anonymous said...

நல்லாயிருந்தது...தொடர்கிறேன் நண்பரே...

'பரிவை' சே.குமார் said...

அண்ணா....
உங்கள் கவிதை கதை சொல்கிறது.
வாழ்த்துக்கள்.

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

சொல்ல எதுமில்லாதவனின் மொழி மிகச் சிறப்பாய் வந்திருக்கிறது ராகவன்.

சொற்ப வார்த்தைகள் சொல்லாதவற்றை நடுங்கவைக்கும் அவனின் ஒப்பாரி சொல்லிவிடுகிறது.

நல்ல கவிதைகளில் ஒன்று ராகவன்.

முனைவர் இரா.குணசீலன் said...

தனித்துவமிக்க சிந்தனைகளைக் கிளறும் கவிதை..

Ashok D said...

நல்லாயிருக்குங்க... கணமாவும் லேசாவும்

காமராஜ் said...

கவிதை நல்லா இருக்கு ராகவன்.

இரசிகை said...

nalla kavithai..

vaazhthukal ragavan sir

அம்பாளடியாள் said...

அருமையான கவிதை வாழ்த்துக்கள் சகோ .மிக்க நன்றி பகிர்வுக்கு ........