Monday, April 19, 2010

அவளும் மற்ற பிறவும்...

காற்றின் சப்தவெளியில்
படர்ந்து கிளைத்த
ஒற்றை கொடியில்
பச்சை வெளுத்திருந்தது
முழுக்க உறிஞ்சிய சூல் இழந்த
மேகத்தை போல

இரவுகளை முனுமுனுக்கும்
நாற்கர சாலையின் கோடியில்
யாருமற்று இருந்த மைல்கல் ஒன்று
தன் மேல் சுமந்த தூரத்தை சபித்த படி
நிலம் இழந்த சம்சாரியாய்
நகரவொட்டாமல் கிடக்கிறது

விரையும் வாகனங்களின் வெளிச்சம்
தழுவி விலகும் சோகத்தில்
பசலை பூத்துக்கிடந்த
மரங்களின் இலைகள்
திருவிழா கரகாட்டக்காரியின்
மினுக்கும்  புட்டாக்களை ஒத்திருந்தது
இரவுகளில் மட்டும்

சாபத்தில் உடலெங்கும் கண்கள் பூத்த
இந்திரனாய் வானம்
உற்று நோக்கி கொண்டிருக்கிறது
தொடைகள் விரித்து கிடக்கும்
புணர்பூமியின் வேசைத்தனத்தை
ஒப்பிட்டு கொள்கிறது

சாலையோர செடிகளில், புற்களில்
பச்சை பரத்தி ஊரும்
பாம்புகளின் வாசனை
மூளையின் மடிப்புகளுக்குள்ளிருந்து
கசிந்து வழியும்

இன்னும் பெயரிடப்படாத
சாலையின் பயணங்களில்
கடந்து போக முடியா தூரத்தை
அதக்கி கொண்டு
விழுங்க முடியாமல் சுரக்கிறது
சுடுநீர் வாய்க்கால் ஒன்று

10 comments:

காமராஜ் said...

//இரவுகளை முனுமுனுக்கும்
நாற்கர சாலையின் கோடியில்
யாருமற்று இருந்த மைல்கல் ஒன்று
தன் மேல் சுமந்த தூரத்தை சபித்த படி
நிலம் இழந்த சம்சாரியாய்
நகரவொட்டாமல் கிடக்கிறது//

இது மாதிரி எழுத்து வாரிச்சுருட்டிக்கொண்டு போய்.
இருட்டுக்குள் விட்டுவிடுகிறது.கண்ணிந்தகவமையும் நேரம் வரைக்காத்திருந்தால் சன்னம் சன்னமாய் பொருள் துலங்குகிறது.
அழகு ராகவன்.

நேசமித்ரன் said...

ராகவன்

பரிசுப் பொருள் சுற்றிய காகிதம் எரியும் போது மாறியபடி இருக்கும் வண்ணங்கள்... பெருந்தோகைப் பறவையின் முட்டைதேடும் புதர்களில் மரித்த பறவையின் சிறகுமட்டும் சிதறிக்கிடக்கும் நீல உடல்
பெரும் பாறைகள் இடை வழியும் அருவி கொஞ்சம் நரைத்தும் நரைக்காமலும் இரா நிலவில்

நிலமிலந்த சம்சாரி -கைமாறினாலும்
தோட்டம் விட்டேகாத தோட்டக்காரன்

இந்தக் கவிதையும்

மணிஜி said...

fantastic

AkashSankar said...

"தன் மேல் சுமந்த தூரத்தை...." முடியலங்க... நல்ல கற்பனை....

ஹேமா said...

கவிதையின் முழுப்பாரத்தையும் கடைசிப்பந்தி சுமக்கிறது.

க ரா said...

அற்புதம் ராகவன்.

மதுரை சரவணன் said...

அசத்துறீங்க...வரிகள் வளமை...வாழ்த்துக்கள்

'பரிவை' சே.குமார் said...

நல்ல கற்பனை...!
கவிதையின் பாரங்களை எல்லாம் சாலையோரத்து சுமைதாங்கி கல்லாக கவிஞரின் கவிதையில் கடைசிப் பாரா சுமக்கிறது.

அருமை ராகவன்... சாரி கவிஞர் ராகவன்.

ராகவன் said...

அன்பு நண்பர்கள் எல்லோருக்கும்,

என்னை வாசித்து ஊக்கபடுத்தி வருவது எனக்கு மேலும் எழுத தோன்றுகிறது... தனித்தனியாக வழக்கபோல் பின்னூட்டம் இட முடியவில்லை... அலுவல் அதிகம் இருப்பதால்... மன்னிக்கவும்...
நான் எழுதுவதை உரசி பார்க்கும் ஒரு உரைகல்லாய் இருக்கும் உங்களின் பின்னூட்டங்கள் எனக்கு மிக முக்கியமானவை. உங்கள் அன்புக்கும் தொடர்வாசிப்புக்கும்

அன்பும் நன்றியும் என்றும்...
ராகவன்

அன்புடன் அருணா said...

அவளை விட மற்ற பிற கவர்ந்தது.