Tuesday, July 27, 2010

இரவுக்காட்சி...

இறந்த பறவையின்
மூடிய
விழிகளுள்
கருகிய வெளிச்சமென
கிடக்கும்
அந்த தெரு

ஒற்றை தந்தியினை
மீட்டிக்கொண்டே
உறங்கி கொண்டிருந்த
இரவின் மீது
ஊர்ந்த நாயின்
மௌன நிழல்
மதில்களை கடந்து
வளரும்

நீல சந்திரனாய்
கடந்து போகும்
வாகனத்தின்
சத்தம்
கூரிய கத்தியாய்
நாயின் மௌன நிழலில்
சொருகும்

உராய்ந்த பாதங்களின்
சூடு குறைய
நடைபாதை
புரண்டு படுத்திருக்கும்
பிளவு காட்டி
இரவை விழுங்க
காத்திருக்கும்
அகண்ட வாய் பிசாசென

துடிப்புகள் அடங்கிய
கடிகாரங்களாய்
நிற்கும் மரங்களின்
பறவைநாவுகள்
பேச்சு மொழி
மறந்திருக்கும்

திசை அறியாத
காந்த முள்ளின்
துடிப்பில்
பொடித்து நொறுங்கும்
இலக்கை காட்டும்
வரை பலகைகள்

நிசப்த ஓலங்களின்
ரகசிய ஒலிக்குறிப்புகள்
அடங்கிய
பேழையில்
அடுத்த நாளுக்கான
நட்சத்திரங்கள்
ஏதுமின்றி
ஒரு துண்டு
வானமும் என்னுடன்
நீலம் பாரித்து
கிடக்கும்

5 comments:

'பரிவை' சே.குமார் said...

//நீல சந்திரனாய்
கடந்து போகும்
வாகனத்தின்
சத்தம்
கூரிய கத்தியாய்
நாயின் மௌன நிழலில்
சொருகும்//

nalla varikal.

nalla irukku ragavan.

க ரா said...

அருமையான கவிதை...

பனித்துளி சங்கர் said...

////துடிப்புகள் அடங்கிய
கடிகாரங்களாய்
நிற்கும் மரங்களின்
பறவைநாவுகள்
பேச்சு மொழி
மறந்திருக்கும்////////

எதார்தங்களுடன் இயற்கையை உரசிப் பார்க்கும் ரசனை அருமை . பகிர்வுக்கு நன்றி

உயிரோடை said...

//திசை அறியாத
காந்த முள்ளின்
துடிப்பில் //

ந‌ல்லா இருக்கு. காட்சியை உண‌ர்வை பிடித்து கொள்ள‌ முடிகிற‌து.

Roger said...

Interesting...