Friday, July 30, 2010

விதூஷகம்...

நான்கு விதூஷகர்கள்
என்னை சுற்றி நின்று
கொண்டிருந்தார்கள்
கூத்துக்கான பிரயத்தனங்கள்
செய்து கொண்டு இருந்தார்கள்
என்னைப்பார்த்து
கைகொட்டி சிரிக்கவில்லை
பழிப்புகள் காட்டவில்லை
வெறுமனே நின்று கொண்டிருந்தார்கள்
என் முகத்தின் லட்சனங்கள்
பற்றி அவர்களுக்கு கவலையில்லை
இல்லாத எந்த உறுப்புகள்
பற்றியும் ஏதும் அவர்கள்
கண்டுகொண்டதாக தெரியவில்லை
கிழிந்த என் உடைகளுக்கும்
அவர்களின் உடைகளுக்கும்
பெரிதாய் வித்யாசங்கள் இல்லை
வர்னங்கள் தவிர
குறுகிய என் பாதங்களை
அவர்கள் ஆர்வமாய் பார்த்தார்கள்
அவர்களின் கால் விரல்களுக்கிடையே
தூரங்கள் இருப்பது போல
எனக்கு இல்லாதது
ஆச்சரியமாய் இருந்திருக்க வேண்டும்

இப்போது
மேடையைச் சுற்றி ஓடினார்கள்
ஆடினார்கள் பாடினார்கள்
கையில் வைத்திருந்த
வாத்தியங்களையும் இசைத்தார்கள்
வெறும் சத்தங்களாய் இருந்தது
எனக்கு அது
இசையின் குறிப்புகள்
எதுவும் இருந்ததாகத் தெரியவில்லை
அவர்களின் ஊடாய்
தெரிந்த பார்வையாளர்கள்
நிறையவும் ரசித்தார்கள்
வாத்தியங்களின் ஒலிகள்
அழும் பறவையைப்போலவும்
வேட்டையாடப்படும் மிருகத்தின்
ஓலம் போலவும்
இருந்தது போல்பட்டது எனக்கு
ஆனால் மேடையில்
விழுந்த பூக்களும், பணமும்
அவர்களின் கூத்தில்
ஏதோ பிரமாண்டம்
இருப்பதாய் காட்டியது
கூத்து முடிந்து விட்டதாய்ச்
சென்றவர்கள்
பேசி கலைந்தார்கள்
நான் ஆடிக்கொண்டிருக்கிறேன்
லேசான சன்னமான காற்றின் மூலம்
வாத்தியங்களில்
விடிவது போல இசைக்கிறேன்
பார்வையாளர்கள் மத்தியில்
யாரும் இல்லை இப்போது
அவர்களின் தேய்ந்த பேச்சரவம் தவிர

3 comments:

Unknown said...

அருமை.

'பரிவை' சே.குமார் said...

நல்ல இருக்குங்க...

Kumar.S

http://www.vayalaan.blogspot.com

உயிரோடை said...

கவிதையை கொஞ்சம் சுருங்க சொல்லி இருக்கலாமோ?