Wednesday, October 28, 2009

ரகசியப்புத்தகங்கள்...

உன் ஞாபகங்களை

புத்தகமாய் தொகுக்கிறேன்
நல்ல கனமான காலிக்கோ
அட்டையுடன்
கவர்ச்சி இல்லாத ஒரு
பொருளாய்ச் செய்கிறேன்

யார் கவனத்தையும்
ஈர்த்து விடாதபடிக்கு
அதன் வசீகரத்தைக் குறைத்து
அதை ஒளித்து வைக்கிறேன்
அவ்வப்போது
ரகசியமாய் புரட்டுகிறேன்

இது போன்ற கவர்ச்சியற்ற
ஒரு கனமான புத்தகத்தை
அவளும் புரட்டிக் கொண்டிருக்கிறாள்
என்னை விநோதமாய் பார்த்து
புத்தகத்தை மறைக்கிறாள்!

எனக்கு பயம் பிடித்துக்கொண்டது
விரைந்து சென்று அலமாரியைக் குடைகிறேன்
என் புத்தகம் பத்திரமாய் இருக்கிறது
பிரதி எடுத்திருக்க வாய்ப்புண்டு
என்பதை நிராகரிக்கிறேன்

எல்லோரும் புத்தகம் போட
ஏதுவிருக்கும் உலகு.

17 comments:

ஈரோடு கதிர் said...

//எனக்கு பயம் பிடித்துக்கொண்டது//

உண்மைதான்

கவிதை நன்றாக இருக்கிறது ராகவன்

பா.ராஜாராம் said...

வாவ்!இயல்பான மொழி,அசாதாரமான வீச்சு!எல்லோரிடமும் இருக்கிற புத்தகத்தை,எல்லோரும் எடுத்து புரட்ட அனுமதிக்கிற லாவகமாய்-ரகசியமாகவேனும்.அருமையாய் வந்திருக்கு ராகவன்.

//எனக்கு பயம் பிடித்துக்கொண்டது
விரைந்து சென்று அலமாரியைக் குடைகிறேன்
என் புத்தகம் பத்திரமாய் இருக்கிறது
பிரதி எடுத்திருக்க வாய்ப்புண்டு
என்பதை நிராகரிக்கிறேன்//

வசீகர பகுதி!..

க.பாலாசி said...

//யார் கவனத்தையும்
ஈர்த்து விடாதபடிக்கு
அதன் வசீகரத்தைக் குறைத்து
அதை ஒளித்து வைக்கிறேன்
அவ்வப்போது
ரகசியமாய் புரட்டுகிறேன்//

நான் ரசித்த வரிகள். கவிதை அழகாய் இருக்கிறது.

கருவை பாலாஜி said...

மிக இயல்பான நடை, சிறந்த கருத்தாக்கம்..

காமராஜ் said...

எல்லோருக்கும் நினைவுகளைச் சேகரிக்கிற
பழக்கமும் இருக்கிறது
அதற்கு உரிமையும் அனுமதியும் இருக்கிறது.

கவிதை எளிமையாகத் தாக்குகிறது.

ஆரூரன் விசுவநாதன் said...

ரசனையான வரிகள்.....மிக அருமை


வாழ்த்துக்கள் ராகவன்

மாதவராஜ் said...

உங்கள் விட்டு மொட்டைமாடியில் நீங்கள் பார்க்கும் நிலாவைப் போலத்தானே அந்த ரகசியப் புத்தகம் ராகவன். அவரவர்களுக்கானதாய் இருந்தாலும், எல்லோருக்குமானதாய் இருக்கிற இடம் ஒன்று இருக்கிறது! கவிதையை இன்னும் கொஞ்சம் செதுக்கி இருந்தால், வேறொரு தளத்துக்கு கொண்டு சென்றிருக்க முடியுமோ எனத் தோன்றுகிறது. ரொம்ப ரசித்தேன் என்பதையும் சொல்லி விடுகிறேன்.

velji said...

யார் கவனத்தையும் ஈர்த்துவிடாத படி பாதுகாக்க வேண்டும் என்ற பதட்டமே இது நம் புத்தகமோ என தேட வைக்கிறது.

எல்லோரும் புத்தகம் போட ஏதுவிருக்கும் உலகு...அருமை நண்பரே.இங்கு கவிதை முடியவில்லை.நல்ல கவிதை இப்படித்தானே இருக்க வேண்டும்.

ராகவன் said...

அன்பு நண்பர்களுக்கு,

நன்றிகள் பல. உங்கள் பின்னூட்டங்கள் என்னை மேலும் சிறப்பாய் செய்ய வழிகோலுகிறது.

கதிர், ஈரோடு
பா.ரா.
க.பாலாசி
கருவை.பாலாஜி
காமராஜ்
ஆரூரன் விசுவநாதன்
மாதவராஜ்
(செதுக்கும் போது சிதைந்து விடுமோ என்று பயம் இருக்கிறது, மேலும் கவிதை அதன் போக்கை அதுவே தீர்மானிப்பது தான் நேர்கிறது பெரும்பாலான சமயங்களில், கவிதை வாய்க்கிறது, செய்வது இல்லை என்றே நினைக்கிறேன்)

வேல்ஜி

தொடர்ந்து வரும் உங்கள் அன்புக்கு நன்றி!

மேலும் அன்புடன்
ராகவன்

மாதவராஜ் said...

//பெரும்பாலான சமயங்களில், கவிதை வாய்க்கிறது, செய்வது இல்லை என்றே நினைக்கிறேன்//

உண்மைதான் ராகவன். ஒவ்வொரு கவிஞனுக்குள்ளும் ஒரு வாசகனும் இருப்பான் தானே. கவிஞனுக்கு வாய்த்ததை, வாசகன் கொஞ்சம் மெருகூட்டி பார்ப்பதில் ஒன்றும் தவறில்லையே?
:-)))))

விஜய் said...

மிக அழகாக இருக்கு ராகவன்

வாழ்த்துக்கள்

விஜய்

மண்குதிரை said...

mm nice sir

mathavaraj, kamaraj avarkalin pinnuttangkalum

S.A. நவாஸுதீன் said...

நல்ல கவிதை வாசிக்கக் கிடைத்தது. அறிமுகப்படுத்திய பா.ரா.வுக்கு நன்றி

ராகவன் said...

அன்பு கவிதை(கள்),

உங்கள் வாழ்த்துக்கும், அன்புக்கும் நன்றிகள் பல!

அன்புடன்
ராகவன்

ராகவன் said...

அன்பு மண்குதிரை,

உப்பும்,புழுதியும் உடம்பெல்லாம் மனக்கிறது மண்குதிரை, உங்கள் எழுத்துக்களில்.

குதிரையை குளத்தருகே கொண்டு வந்து குடிக்கவும் வைத்து விட்டேன். வருகைக்கு நன்றிகள் பல!

தொடர்ந்து வந்து நல்வாக்கு சொல்லுங்கள்!

அன்புடன்
ராகவன்

ராகவன் said...

அன்பு நவாஸ்,

உங்கள் அன்புக்கும், வாழ்த்துக்கும் வந்தனங்கள் பல. எப்படி இருக்கிறீர்கள்?

தொடர்ந்து வாருங்கள்!

அன்புடன்
ராகவன்

இரசிகை said...

yelimaiyaa irukku...