Monday, December 06, 2010

திராவகத்தில் கரையும் பொன்...

மளுக்கென்று ஒரு கொப்பு மட்டும் உடைந்து தொங்கியது, முன்னால் கட்டியிருந்த ஒரு வாழைமரத்தில்.. குலையின் கனம் தாங்காமலா அல்லது கட்டிய தோது சரியில்லையா என்று தெரியவில்லை... மறுபக்கம் நின்று கொண்டிருந்த மரமும் இழுத்துக் கொண்டிருந்தது இணைத்துக் கட்டிய கயிற்றால்.  சாவஞ்செத்த பயலுக... என்ன கூறுல வேல செய்வானுகளோ... ஒரு வாழமரம் கட்ட துப்பில்லே என்ற படியே, ஏலேய் ஆருலே அது வாழ மரத்த முன்னுக்க வாசல்ல கட்டினது, சோலைமலை ஆசாரியின் குரலுக்கு பதில் வரக்காணோம்... பட்டாசால் தாண்டி பின்கட்டு அடுப்பங்கரையில் இருக்கும் சுப்புத்தாயிக்கோ அல்லது பாண்டிக்கோ கேட்டமாதிரி தெரியவில்லை, முத்தத்தில் இருந்து அவர் குரல் அங்கே கேட்டிருக்குமா என்பதும் சந்தேகமே... திரும்பவும் முன் திண்ணையில் இருந்து இறங்கி, ஏலே பாண்டி! என்ற அவரின் குரல் கேட்டவுடன் என்ன! என்று அதட்டும் குரலில் வந்தான் பாண்டி.

பாண்டி இரண்டாவது மகன் சோலைமலை ஆசாரிக்கு... வக்கீலுக்கு படித்துக்  கொண்டிருக்கிறான்... சோலைமலை ஆசாரிக்கு மொத்தம் ஏழு குழந்தைகள், தங்கச்சிகளும், பிற தம்பிகளும் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கிறார்கள்.  மூத்தவன் சேகருக்குத் தான், தைக்காப்பட்டித் தெரு பரதன் ஆசாரியின் மகளை பேசி முடிவாயிருக்கு, அவர்களுக்கு சேகர் பட்டணத்தில வேல பாக்கான்... கவர்மெண்ட் உத்யோகம் என்ற வகையில் பிடித்துப் போனது... சின்ன முத்துராஜூ... சோலமலை ஆசாரியிடம் இதுபற்றிப் பேசியவுடன்... சரிடாப்பே... போய் பேசிக் கேட்டுப்பாரு, அவுக வசதியா இருக்காஹ... நம்ம தரத்துக்கு இறங்கி வருவாகலான்னு தெரியாது... கேட்டுப்பாரு அவுகளுக்கு சரின்னு பட்டா மேக்கொண்டு பேசலாம் என்று சோலமலை ஆசாரி சொன்னார்... ஆனா அவுக தான் இதப்பத்தி... நம்ம தாயில்பட்டி கோயில் விசேஷத்துக்குப் போனப்ப பேசினாக பாவா என்று சின்ன முத்துராஜூ சொல்ல ... சரிதான் நேரம் கூடி வருது போல  நமக்கு... முடிச்சுப்புடலாம் என்றுசொல்லி விட்டார்.  இந்தத் தகவலை உடனே மதுரைல இருக்கிற பாண்டிப்பயலுக்கும், மூத்த மச்சினனுக்கு தகவல் சொல்லிவிட்டார்கள். அடுத்த நாள்... நல்ல முகூர்த்த நாள்... ஞாயித்துக்கிழமையா வேற இருக்கு... அன்னைக்கே சாயங்காலமே தட்டு மாத்திக்கலாம்னு முடிவானது...

ஆமத்தூர்ல இருக்கிறவுகளும், தாயில்பட்டி, மதுரயிலே இருக்கிற நெருங்கின சொந்தக்காரவுக எல்லாம் இன்னைக்கு மத்யானத்துக்ககே கிளம்பி வாரதா சொல்லியிருக்காக... காரக்குடிக்காரிக்கு டிரங்கால் போட்டு சொல்லியாச்சு... அவ நாளைக்குத் தான் வர முடியும் சொல்லிப்போட்டா... எல்லா சின்னப்பயலுகளா இருக்கிறாங்க... பாண்டிப் பயதான் கொஞ்சம் தெளிவு, அவெங்கூட இருந்தா வேலை சுளுவா முடியும்னு, அதனால அவன முத நாளே வரச்சொல்லிட்டார்... என்ன? என்று வந்தவனிடம், ஆருலே இது கட்டுனா... பாரு ஒரு பக்கம் குலை ஒடிஞ்சு தொங்குது... தூக்கி கட்டுலே... போய் பாத்துட்டு வந்த பாண்டி... மரம் கட்டுனது ஒன்னும் குறையில்லை,  சரியாத்தேன் கட்டியிருந்துச்சு... இந்த சீனிச்சாமி வீட்டு ஆட்டுக்கெடா தான் வாழை இலை  முனிய பிடிச்சு இழுத்திட்டிருக்கு அதான் ஒடிஞ்சிருச்சு, நான் அவன்கிட்ட சொல்லி, ஆட்டக் கட்ட சொல்லுதேன்... என்று குலையை  இழுத்து இரண்டு வாழமரங்களும் ஒன்னா இருக்கிறா மாதிரி கட்டி ஒரு வழியா நிப்பாட்டினான்... போதும்லே... உங்க அண்ணனுக்கு இந்நேரம் கார்டு போயிருக்குமா என்றார்.

கடுதாசி எல்லாம் போய்ச் சேர நாளாகும், நம்ம டெலிபோன் ராமகிருஷ்ணகிட்ட சொல்லி ஒரு டிரங்கால் போட்டு சொல்ல சொல்லாம்ல... இல்லாத நொறநாட்டியமெல்லாம் சொல்லுவ உனக்கு இதுக்கெல்லாம் கூறு கிடையாது.... அவனுக்கு இந்த பொண்ணு பிடிக்கலேன்னா என்ன பண்ணுவே... என்று பாண்டி சொல்லிவிட்டு எங்கோ வெளியே சென்று விட்டான். அவருக்குக் கொஞ்சம் கலக்கமாய் இருந்தது...அவன் அப்படி சொல்ல மாட்டான், ஆனாலும் தகவல் முன்னாடியே சொல்லியிருக்கலாமோன்னு தோனியது. சேகர், இப்போதான் சர்வீஸ் கமிஷன் தேர்வு எழுதி பாஸாகி செக்ரடேரியட் வேலைக்கு சேர்ந்து ரெண்டு வருஷம் தான் ஆகுது... வயசு என்னவோ 24 தான்... இந்த மார்கழி வந்தா இருபத்தஞ்சு... சோலைமலை ஆசாரியும், சுப்புத்தாயும் சொல்ற வார்த்தையை  ஒரு நா மீறிப்பேசினது கிடையாது... மத்த பிள்ளைகளப்போல கிடையாது அவன்... படிப்புண்டு, லைப்ரரி உண்டுன்னு இருக்கிறவன்... டிரங்கால் போட்டு அவன் ஆபீஸிற்கு பேசி இருக்கலாம், ஏதோ ஒரு நம்பிக்கையில் அதை சொல்லாமல் விட்டுவிட்டார்... சோலைமலை ஆசாரி...

சேகரின் மேலுள்ள அவரின் நம்பிக்கை அசைக்க முடியாதது. வீட்டில் குடும்பக்கஷ்டம் தெரிஞ்ச ஒரே பய... கஷ்டபட்டு இருக்கான், சின்ன வயசுல. ராமகிருஷ்ணன் மிஷன் மூலமா தான் பி.காம்., படிச்சான்...வக்கீல் குமாஸ்தா வேலைல மாசம் கொண்டு வர 150 ரூபாயில் என்ன செய்துற முடியும், 10 பேர் இருக்கிற வீட்டில், ரெண்டு வேளை கஞ்சி குடிக்கிறதே பெரும்பாடு, இப்போ இவன் சம்பளத்தில இருந்து வர... நூத்தம்பது ரூபாயும் தான் பெரிய உதவி இவருக்கு. வாங்குற 240 ரூபாய் சம்பளத்தில், தங்குறது, சாப்பாடு எல்லாம் 90 ரூபாயில பாத்துக்குறான், பட்டணத்தில் அதுவே முழி பிதுங்கும் தான். ஒன்னத்தையும் மறச்சதில்ல இதுவரை... ஒளிவு மறைவு இல்லாத பய... பாண்டி அப்படி கிடையாது... வினயமான பய... படிச்சிட்டு இருக்கும்போதே பாங்க் பரீச்சை எல்லாம் எழுதியிருக்கான்... இப்போ வக்கீலுக்கு படிக்கவைக்கச் சொல்லி, வக்கீல் சந்திரன் சொன்னதால... மதுரை லா காலேஜில் படிச்சிட்டு இருக்கான்... ரொம்ப விவரமான பய... மூத்தது மோள இளையது காளன்னு சொலவடை மாதிரியே... பாண்டி விவரந்தேன் என்று நினைத்து கொண்டார்.

என்ன நினைச்சாரோ, சரி போய் ஒரு தந்தியாவது அனுப்பிட்டு வரலாம்... டிரங்கால் போட மனசு வரலை அவருக்கு.. டெலிபோன் ராமகிருஷ்ணனிடம் போய் எத்தனை வாட்டி தான் கேக்குறது... அவரும் பாவா... சரியா பதினொரு மணிக்கு வாங்க பாவா.. இல்லேன்னா எவனாவது எஞ்ஜீனியர்ட்ட போய் சொல்லிடுவானுங்க... அப்புறம் அந்த ஆளு வேற வேலைக்கு மாத்திடுவாரு... உள்ளதும் போச்சுடா நொள்ளக்கண்ணான்னு ஆயிடும் என்பான்... அவன் சொல்றதும் சரிதேன்... யாரு இத்தனை செய்வா... என்று தந்தி ஆபீஸ் போயி ஒரு தந்தி கொடுத்துட்டு வரலாம்... இப்போ போய்க்கொடுத்தா... ரவைக்குள்ள போயிடும், உடனே கிளம்பினா... அடுத்த நாள் மத்தியானம் சாப்பாடுக்கு வந்துடுவான்... என்று சட்டைய மாட்டிக்கிட்டு, ஒரு மடிச்ச துண்ட தோள்ல போட்டுகிட்டு, ஒரு குடையும் எடுத்துக்கிட்டு... லப்பர் செருப்பப் போட்டுகிட்டு கிளம்பினார்... செருப்ப கால்ல கோர்க்கும் போது குதிகால் பக்கம் தேஞ்சு போயி, கீழ் பாகம் துணி மாதிரி இருந்தது, சேகர் வரும்போது சொன்னா பெரிய கடை பஜாரில் வாங்கிகொடுத்துடுவான்... அங்க அவன் கூட படிச்ச நாய்க்கமாரு பய கடை வச்சிருக்கான்... கொஞ்சம் வில மலிவா வாங்கிடலாம்.

வெளியே வந்தவர் வெயிலுக்கு, குடைய விரித்துக் கொண்டார், சுப்புத்தாயியிடம் ஏட்டி, நான் பஸ் ஸ்டாண்ட் வர போயிட்டு வந்திருதேன்... என்று இங்கிருந்தே குரல் கொடுத்தார்... சுப்புத்தாயிக்கு கேட்டுச்சோ கேக்கலியோ அதபற்றி கவலைப்பட்டதாக தெரியலை... ஆனாலும் அவருக்கு மனைவியிடம் சொல்லிவிட்டு கிளம்பிய திருப்தி வந்தது.  பாண்டி எங்க போயி தொலைஞ்சானோ... ஆளைக்காணலே... ரஞ்சிதம் வீட்டுக்கு போயிருப்பான்... அங்க தீப்பெட்டி ஒட்டுற பிள்ளைக கூட போயி கதையடிச்சுட்டு இருப்பான்... இவ பொட்டச் சிறுக்கிகள்ட்ட வச்சிருக்க சாவகாசமே இவருக்கு பயமாய் இருக்கும்... சேகரு அந்த மாதிரி எல்லாம் கிடையாது.... அவன் உண்டு சோலி உண்டுன்னு இருப்பான். விலாசம் எடுத்துக்குட்டமா... என்று சட்டைப்பையில் துழாவினார், சீட்டு இருப்பதைக் கண்டு திருப்தியாய் மேலும் நகர்ந்தார்.

தாசில்தார் வீட்டத்தாண்டும்போது ராமலட்சுமி வொதுனை, ஏமி தம்பு... தட்டு மார்ஸேதி நேண்டா.....என்றாள். லேது ஒதுன...  ரேப்பு பொத்துமாலன்னு... சொல்லிட்டு வேகமாக நடையைக் கட்டினார், இன்னும் ஒவ்வொரு கதவும் திறந்து விசாரிக்க ஆரம்பித்து விடும்... அதற்குள் தெருவை தாண்டி விட வேண்டும்.  இங்கு இருக்கும் இரண்டு பெரிய தெருக்கள் முழுதும் தெலுங்குக்காரர்களே நிறைந்திருப்பார்கள்... ஒன்னு தெலுங்கு பேசும் ஆசாரிமாரு,  இன்னொன்னு நாய்க்கமார்கள்.  அதனால தெருவுக்குள்ள நுழைஞ்சாலே தெலுங்கு விசாரிப்புகளும், சம்பாஷனைகளும் தான் எப்போதும். எல்லா விசேஷத் துக்கங்களிலும் தப்பாமல் கலந்து கொள்வார்கள், அழைத்தால் தான் போக வேண்டும் என்று நினைப்பதில்லை... தகவல் தெரிந்தாலே ஆஜராகி விடுவார்கள்... இது இங்கு இருக்கிற ஒரு பழக்கம்... அதே போல வேலையிருந்தாலும் இழுத்துப் போட்டு மாற்றி மாற்றி செய்வார்கள்.  புதிதாய் திருமணமாகி இந்த தெருக்களுக்குள் குடுவருபவர்கள் கூட சில தினங்களில் இந்த பழக்கத்தில் ஒன்றிவிடுவார்கள்.

ஆத்துக்குள்ள இருக்கும் காமாட்சியம்மன் கோயிலில் நின்று... ஆத்தா.. காமாச்சி தாயி... எல்லாம் நல்லபடியா முடியனுமான்னு வேண்டிக்கொண்டு... திருனாமலை இருக்கிற தெசையில இரு கும்பிடப்போட்டுட்டு, செருப்பை மீண்டும் போட்டுக் கொண்டார்... எதிரில், தைக்காபட்டித் தெருவில் இருந்து தண்ணீர் எடுத்து வந்த ராஜம்மாவையும், கௌசல்யாவையும் பார்த்த போது அவருக்கு திருப்தியாய் இருந்தது... நல்ல சகுனந்தேன்... வீட்ல இருந்து கிளம்பும்போது சகுனம் பார்த்தமா... யாரோ வந்தாங்க யாரு ஞாபகம் இல்லையே... சகுனம் பாக்காம வந்துட்டமே... ஏதோ யோசனையிலேயோ வந்துட்டமேன்னு வருத்தமா இருந்தது அவருக்கு... ஆனாலும் நிறைகுடத்த இங்க பார்க்கையிலே...அது அவருக்கு ஒரு குறையா இல்லாமப் போச்சு... பஸ் ஸ்டாண்டை தாண்டி சின்னக்கடை வீதி வழியாப் போயிடலாம்னு தோனுச்சு அவருக்கு, கொஞ்சம் சுத்துவழின்னாலும், அது தான் நல்லது... செருப்பு இருக்கிற லட்சனத்தில, மாதாக்கோயில் வழியாப் போனா... கல்லு கல்லாக்கெடக்கும், குத்தி வழியெல்லாம் அவஸ்தைப்படனும், அதுலயும் காலாணியில பட்டா போச்சு உசுரு போயிடும், தலைப் பிய்ச்சு எறிஞ்சுடறா மாதிரி ஒரு வலி... இதுக்கு ஒரு வைத்தியம் பண்ணமுடியலயே...என்று காலாணி இருக்கும் குதிகாலை சற்று தூக்கிய மாதிரியே நடக்க ஆரம்பித்தார்.

தந்தி ஆபீஸ் போயி என்னான்னு தந்தி கொடுக்கிறது... என்று யோசித்துக் கொண்டே இருந்தவர், சட்டைப்பையில் வைத்திருந்த காசுக்குத் தக்கன கொடுக்கலாம், நிச்சயதார்த்தத்திற்கு என்னன்னு சொல்றது... கௌண்டரில் இருந்தவர்ட்ட கேட்டுக்கலாம் என்று முடிவுக்கு வந்தார். கௌண்டரில் இருப்பவரிடம் கேட்டபோது... ஸ்டார்ட் இம்மீடியட்லின்னு மாத்திரம் கொடுங்காணும்... என்ற போது சரியென... விலாசத்தை அவரிடம் கொடுக்கும் முன்னே ஒரு முறை சரிபார்த்துக் கொண்டார்... டோர் நம்பர் 26, செல்லப்பிள்ளையார் கோயில் தெரு, ஜாம் பஜார், திருவல்லிக்கேணி, சென்னை... ஒரு ரூவா முப்பது பைசா! என்று வாங்கிக் கொண்டார்...  இவர் திருவல்லிக்கேணி வீட்டுக்குப் போனதில்லை... இந்த விலாசத்து இவன் மாறி ஒரு வருஷம் இருக்கும், சென்னை போன புதுசுல... கொசப்பேட்டைல கந்தசாமி கோயில் தெருவில் இருக்கும் சக்கரசாமி வீட்ல தான் இருந்தான்... அப்புறம், கெல்லீஸ்ல கூட்டாளிகளோட இருந்தான்... இந்த ஒரு வருஷமா இங்க திருவல்லிக்கேணில தனியா இருக்கான்... ரொம்ப நாளா போகணும்னு நினைத்து கொண்டு இருந்தார் ஆனால் போகமுடியலை.. ஒருமுறை போய் பார்த்தசாரதி கோயிலையும்  பாத்துட்டு வரணும், என்று நினைக்கும் போதே... ஏடுகொண்டலவாட ஸ்ரீனிவாசா என்று அவரை அறியாமல் வாய் விட்டு கும்பிட்டார். இவன் நிச்சயதார்த்தம் முடியட்டும், அவென் கூடவே சுப்புத்தாயையும் கூட்டிட்டு போயிட்டு வரலாம் என்று நினைத்துக் கொண்டார்.

வீடு வந்த சேர்ந்த போது பெரிய மச்சினனும் அவன் குடும்பமும் வந்திருந்தார்கள். பெரிய மச்சினன, சுப்புத்தாயின் தம்பி மதுரை கார்ப்பரேஷன்ல வேலை பாக்கான்... ஸ்ரீவில்லிபுத்தூர்ல தான் படிச்சு வளந்தது எல்லாம்... மதுரைல வேலை கெடைக்கவும், அங்க போயிட்டான்... அவனுக்கு கல்யாணம் ஆகி ரெண்டு ஆம்பிள பிள்ளைங்க... அவனோட மனைவி ரொம்ப நல்ல மாதிரி... சோலைமலை ஆசாரியின் பிள்ளங்களுக்கெல்லாம், குமாரின்னா உசுரு... அக்கா அக்கான்னு உயிர விடுவானுங்க... குமாரிக்கும் அவ கூட பொறந்தவங்களா விட இவிங்க தான் தம்பி மாதிரி... சோலைமலை ஆசாரிக்கும் குமாரி தான் பெரிய பொண்ணு மாதிரி... அவ என்ன சொன்னாலும் கேப்பார் சோலைமலை ஆசாரி.

ரெண்ட நைனா... எண்டல எந்து போத்திரி...  பெத்தவாடுகு... உடே ரா..ன்னி தந்தி மொத்திடு வொச்சேனு... மீரு நிச்சயம் உந்தினி செப்பலேதா... வாடு வெர போய்யேடு என்ற குமாரியின் வார்த்தையில் நியாயம் இருப்பதாய்ப் பட்டது... சரி டிரங்கால் போட்டு பேசினா சொல்லிக்கிடலாம்ல இல்லாட்டி வர மாட்டான் வேலை இருக்குன்னு ஒக்காந்துடுவான்னு அவரையே சமாதானம் சொல்லிக் கொண்டார் சோலைமலை ஆசாரி. பெரிய மச்சினன் வந்த அலுப்பில தூங்கிட்டா போல அவனக்காணோம்... அவம் பிள்ளைக ரெண்டும் கொல்லைல விளையாடிட்டு இருக்கிறது இங்கிருந்தே அவருக்கு தெரிந்தது...  ஏமி பெட்டிடுத வண்ட்டம்... நேண்டு...  பப்பு பெட்டி, வங்காயப்புலுசும் சேசிடுத ஒதுன.... அப்பளம் சேயனா... என்ற குமாரி, மதுரையில் இருந்து கொண்டு வந்த அப்பளப்பூவை எடுத்துக் கொண்டு வந்து காண்பித்தாள்.... கத்திரிக்கா புளிக்குழம்புக்கும், அப்பளப்பூவுக்கும் அவ்வளவு ருசியா இருக்கும், நினைக்கும்போதே சோலைமலை ஆசாரிக்கு எச்சி ஊறியது... வயசாக வயசாக நாக்கு எளசாகிட்டே போற மாதிரி இருக்கு, இவருக்கு, தானே சிரித்துக் கொண்டார்.

சந்தோசமா இருந்தார், அவருக்கு பட்டணம் பொடி போடவேண்டும் என்று தோன்றியது.  பெரிய மச்சினனுக்கு பொடி போடும் பழக்கம் உண்டு, அவன் வரும்போது மட்டும் கொஞ்சம் மட்டையில் இருந்து போடுவது இவருக்கு ஏனோ பிடிக்கும்.  குமாரியிடம் சொல்லி, அவனிடமிருந்து பொடி மட்டையை வாங்கி வரச் சொன்னார். வந்தவுடன் ஆவலாய் நார் பிரித்து, இரண்டு பக்கமும் அமுக்க மணி பர்ஸ் போல வாயைத் திறக்கும், ஒரு சிட்டிகை அள்ளி, கிர்ரென்று மூக்கில் வைத்து இழுக்கையில் மண்டைக்குள் ஏறி ஜிவ்வென்று இருந்தது... தெனந்தெனம் போட்டா இந்த சுகம் வராது... என்னைக்கோ ஒரு நா இழுக்கையில தான் இது போல ஒரு அலாதியான சுகம் கெடைக்கும். மட்டையை திருப்பி கொடுத்துவிட்டு, திண்ணையில் கொஞ்சம் மல்லாந்தார்... அப்படியே உறங்கிப் போனார்... சாப்பிடும்போது எழுந்து, வந்தவர்களுடன் விபரங்களைச் சொல்லி, பல கதைகளைப் பேசி அன்றைய பொழுது ஓடியது சோலைமலை ஆசாரிக்கும், மற்றவர்களுக்கும்.

மறுநாள் காலை டெலிபோன் ராமகிருஷ்ணன் வீட்டிற்கு வந்திருந்தான், சேகர் பேசியதாகவும், உடனே புறப்பட்டு வருவதாகவும்... தந்திக்கான காரணம் தெரியாததால் ரொம்பவும் பயந்து விட்டதாகவும் சொல்லியிருக்கான், அதனால் நேரில வந்து பார்த்து விட்டுப்போகலாம் என்று வந்திருந்தான் ராமகிருஷ்ணன், ராமகிருஷ்ணன் இடமாவது சொல்லியிருக்கலாம் என்று தோன்றியது, சே என்ன இது புத்தியே வேலை பாக்க மாட்டேங்கு என்று தன்னை தானே நொந்து கொண்டார்... இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடுவான்... பெரியவன் என்றும் இன்னும் 3 மணி நேரம் தான் இருக்கு.... அவங்க வீட்டுக்கு போறத்துக்கு... குமாரியிடம் தட்டு, மற்றும் இதர பொறுப்புகளையும் கொடுத்துவிட்டார்.  குமாரி எல்லாவற்றையும் சீராய் ஒழுங்கு பண்ணி தேவையான ஆட்களை தேவையான இடத்தில் நிறுத்தி பண்ண வேண்டிய காரியங்களை சரியாய் முடித்துவிடுவாள் அந்த கவலை விட்டது அவருக்கு.  சாப்பாடுக்கு என்ன வேணும்னு  பரதன் வீட்ல சொல்லிட்டு வந்துட்டாரு காலையிலேயே.  குடும்ப உறுப்பினர்கள் எல்லோரிடமும் ஆலோசித்தார்... 3 பவுன் நகையும், ஆயிரம் ரூபா ரொக்கமும் கேட்பதாக முடிவானது... நிச்சயதார்த்த பத்திரிக்கை எழுத வெண்டர் அய்யரிடம் தகவல் சொல்லி, அவரும் லிகிதம் எழுதிக் கொடுத்துவிட்டார்... வேற ஏதாவது பாக்கி இருக்கா என்று யோசித்து விட்டு, சொல்றவுங்களுக்கெல்லாம் சொல்லியாச்சா என்று தான் முன்னமே எழுதி வச்சிருந்த சிட்டையை எடுத்துப் பார்த்துக் கொண்டார்.  குண்டலப்பட்டி பொன்னம்மாவிடம் மட்டும் சொல்ல விட்டுப்போச்சு... சுப்புத்தாயை அழைத்து, குமாரியுடன் போய் தகவல் சொல்லி வர அனுப்பினார்...

சேகர் வந்துவிட்டான்... வந்தவனுக்கு முகத்துல ஒரு தெளிவே இல்லை... பஸ்ல வந்ததா இருக்கலாம் என்று தோன்றியது சோலைமலை ஆசாரிக்கு... போயி குளிச்சுட்டு, சாப்பிட்டுட்டு வா, களைப்பெல்லாம் போயிடும் என்றார். வந்தவன், நேரா குட்டி மச்சுல பைய வச்சுட்டு, அவன் அம்மாவிடமும், குமாரியிடமும் கல்யாணம் இப்போ வேண்டாம்... நிச்சயதார்த்தம் வேண்ணா முடிச்சுக்கலாம்... நான் கொஞ்சம் ஸ்திரமானவுடனே பண்ணிக்கிறேனே என்று சொல்ல... சோலைமலை ஆசாரிக்கு மூக்குக்கு மேல கோபம் வந்தது, நானே வம்பாடு பட்டு இந்த சம்பந்தத்தை விட்டுடக்கூடாதுன்னு எல்லா சாமியவும் கும்பிட்டுட்டு கிடக்கேன், இந்த சம்பந்தம் முடிஞ்சா நமக்கு கவுரதியா இருக்கும், ரெண்டு பொட்டக்கழுதகளையும் கரையேத்தலாம் மனப்பால குடிச்சிக்கிட்டு இருக்கேன்... இவனுக்கு.... என்று இழுத்து.... சம்பாதிக்கிற திமிரு!  என்று முடித்தார்... மற்றவர்களும் எடுத்துச்சொல்லி கட்டாயப்படுத்த... கல்யாணத்தை ஆறுமாதம் கழிச்சு வைகாசி மாதம் வைத்துக் கொள்ளலாம் என்று முடிவானது... பொண்ணு வீட்டுக்கும் இவர் வீட்டுக்கும் ஒரு பர்லாங் தூரம் தான் இருக்கும்... தட்டுக்களை எடுத்துக் கொண்டு புடை சூழ முன்னால் தெருவே பாக்க கிளம்பினார்... சேகரும் ஏற்றி சீவிய எண்ணெய் வைத்தத் தலையும், வெள்ளைச் சட்டை, பேண்ட்டில் அழகாய் இருப்பதாய்ப் பட்டது... பட்டணவாசம் அவனை அப்படியே மாத்திடுச்சு என்று பாக்காத மாதிரி பாத்துக்கொண்டு சிரித்துக் கொண்டார் சோலைமலை ஆசாரி.

எல்லாம் நல்ல படியா முடிஞ்சது, பொண்ணு கருப்பா இருந்தாலும், லட்சணமாக இருந்தாள். வாய் சற்று கோணலாக இருந்தாலும், அதுவே ஒரு அழகாய் இருந்தது சிரிக்கும்போது... நிச்சயதார்த்தம் முடிந்து கிளம்பி விட்டான் சேகர், பெரிய மச்சினன் குடும்பத்துடன் மதுரை போயி அங்கிருந்து பஸ் பிடிப்பதாக சொல்லி விட்டான்.  சோலைமலை ஆசாரிக்கு கல்யாணமே முடிஞ்சிட்டா மாத்ரி ஒரு பெரிய கவலை தீர்ந்ததாகப் பட்டது, இனிமே ரெண்டு பொண்ணுங்கள கரையேத்தறதப்பத்தி நினைக்கலாம் டெலிபோன் ராமகிருஷ்ணன் அடுத்த நாள் காலையிலே வீட்டிற்கு வந்திருந்தான்.... வா ராமகிருஷ்ணா! என்ன சமாச்சாரம்... நிச்சயத்துக்கு வராம போயிட்டியே நீ... நல்ல்ல... சாப்பாடு என்று அவர் பேசுவற்கு முன் சோலைமலை ஆசாரியே பேசிக்கொண்டிருந்தார்... லேது பாவா... நான் சொல்ல வந்தது...இன்னொரு விஷயம், சேகரு ஊருக்கு போய்ச் சேர்ந்துட்டானாம், அவங்க ஆபீஸில வேலைபாக்குற செல்வின்ற பொண்ணு சொல்லுச்சு... அவங்க ரெண்டு பேருக்கும் வடபழனில கல்யாணம் ஆகி நாலு மாசமாச்சாம் என்றார்.

(நிறைய எழுத்துப்பிழைகள் இருப்பதை நண்பர்கள் சுட்டுகிறார்கள்... இதிலும் இருக்கும்... தயவு செய்து பொறுக்கவும்... முயல்கிறேன்... சரி செய்து விடுவேன்.. வெயிலானுக்கும், மணிஜீக்கும் என் அன்பும் நன்றியும்)

13 comments:

sakthi said...

இது போன்ற எத்தனையோ கதை நிஜத்திலும் நடக்கின்றது தானே ராகவன் அண்ணா.....

sakthi said...

நடை வழமை போல் வெகு இயல்பு....

sakthi said...

மளுக்கென்று ஒரு கொப்பு மட்டும் உடைந்து தொங்கியது, முன்னால் கட்டியிருந்த ஒரு வாழைமரத்தில்.. குலையின் கனம் தாங்காமலா அல்லது கட்டிய தோது சரியில்லையா என்று தெரியவில்லை...

வட்டார வழக்கில் விவரிப்பு
வெகு சிறப்பு

sakthi said...

சோலைமலை ஆசாரிக்கு மொத்தம் ஏழு குழந்தைகள், தங்கச்சிகளும், பிற தம்பிகளும் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அப்போதைய காலகட்டத்தில் இது சகஜம் தான்...

Sundar said...

ரொம்ப இயல்பான நடை. ஆனாலும் முடிவ யூகிக்காம இருக்க முடியவில...

காமராஜ் said...

நடை மெருகு போட்டு கூடிக்கொண்டே போகிறது.அழகு ராகவன்.

'பரிவை' சே.குமார் said...

நடை வழமை போல் வெகு இயல்பு....

ராகவன் said...

அன்பு சக்தி,

எப்படி இருக்க... உன் அன்புக்கு நன்றிகளும்... பதிலாய் அன்பும்..

ராகவன்

ராகவன் said...

டேய் சுந்தா,

என்னடா ஊகிக்கிற மாதிரி முடிவு இருந்தா என்ன எல்லா நேரத்திலும்... எல்லா இடத்திலும் ஷாக் வேல்யூ தேடுறத விடுடா... அதிர்ச்சி பைத்தியம்...


சீனு...

ராகவன் said...

அன்பு காமராஜ்...

எப்படி இருக்கீங்க!... தேர்ந்த எழுத்து வர மாட்டேங்குது என்ன பண்ண... நானும் கதைய எழுதிப்புடணும்னு முடிவா தான் இருக்கேன்... ஒன்னும் அம்புடுற வழியக்காணோம்...

அன்பு
ராகவன்

ராகவன் said...

அன்பு குமார்,

உங்கள் தொடர் வாசிப்புக்கும் அன்புக்கும் ஆயிரம் நன்றிகள்...

அன்புடன்
ராகவன்

Sundar said...

சீனு,

சரிதான்... எழுத்துங்கிறது கதை இல்லயே. நான் எதுக்கு முடிவு தேடனும்? எழுதுவது உனக்கும், வாசிப்பது எனக்கும், தானே முக்கியம்... நல்லா எழுதி இருக்கே... மேலும் தொடரவும்...

உம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா...

சுந்தர்

Unknown said...

nice story.