Tuesday, December 01, 2009

மூன்று கவிதைகள் - ஒரு மீள்பதிவு

 நவீன விருட்சத்தில் பிரசுரமான கவிதைகள்:

கவிதை (1)

கடவுளின்
கனவுகளில் ஒன்றை
திருடி
என் அலமாரிக்குள்
ஒளித்து வைக்கிறேன்

காணாது
தவிக்கும்
கடவுள்
மூளைக்குள்
விஷமேறி துடிக்கிறார்

ஜோதிமயமான
கடவுள்
காற்றுவெளியில்
சில்லிட்டுப்போய்
கருத்துப்போனார்

ஒளித்து வைத்த
கடவுளின்
கனவை
எடுத்துப்பார்க்கிறேன்

கடவுளின்
கடைவாயில்
பற்கள் முளைத்து
கோரக்குருதி
வழிகிறது

மீண்டும்
அலமாரிக்குள்
வைத்து
பூட்டிவிடுகிறேன்

கவிதை (2)

பத்து
வருடங்களுக்குப் பிறகு
கடிதம்
வந்தது
உன்னிடம் இருந்து
நிறைய
எழுதியிருந்தாய்...

நீயும் நானும்
விளையாடிய,
கதை பேசிய, கனவு விதைத்த
பொழுதுகளை...

 நாம் தொடர்பற்று
இருந்த
நாட்களின்
சிறு குறிப்பும்
இல்லை
உன் கடிதத்தில்

மடித்து வைக்கிறேன்
உனக்கு பதிலாய்
நம் பழங்கதைகள் பேச...


கவிதை (3)

சொந்தமாய்
வீடு வாங்கி
குடிபுகுந்தேன்
ஒரு நகர அடுக்ககத்தில்..!

அப்பா
வந்திருந்தார் வீட்டுக்கு...
என் மகனிடம்
உங்க அப்பா
சின்ன குழந்தையாய்
இருந்த போது
சூரிய, சந்திர,
நட்சத்திரங்களுடன்
வானம் இருந்தது...
புழுதி அப்பிய
மண்ணும் இருந்தது...
மழை நனைக்கும்
தாழ்வாரம்
இருந்தது...

ஆனால்
சொந்த வீடு இல்லை
உன் அப்பாவிற்கு
சொந்த வீடு
இருக்கிறது....

பொய்யாய்
பழங்கதையாய்....

5 comments:

S.A. நவாஸுதீன் said...

மீள்பதிவானாலும் மூன்று முத்துக்கள் ராகவன்.

மூன்றாவது மிகவும் நெருக்கமாய் உணர்கிறேன் மக்கா.

மண்குதிரை said...

மிக நன்று. மறு வாசிப்புக்கு தந்த்மைக்கு நன்றி

உயிரோடை said...

க‌விதைக‌ள் ந‌ல்லா இருக்கு

காமராஜ் said...

அன்பினிய ராகவன்.
மூன்றுமே முத்தான கவிதை.
கடவுளுக்கு கடைவாய்ப் பற்கள்
முளைக்கிறதும்.

கடிதத்துக்கு பழமையைப்பதில் அளிப்பதும்.
வாடகை குடித்தனத்திலும் வாழ்க்கை கிடந்ததையும்
சொல்லும் கவிதைகள் அபாரம்.

நிறைய்ய எழுத தோனுது. நேரம் வந்து தடுக்கிறது.

S.A. நவாஸுதீன் said...

ராகவன், இன்னும் கவிதை போட்டிக்கு உங்கள் கவிதையைக் காணோமே. வேலைப்பளு அதிகமோ இல்லை இன்னமும் எழுதியதை நன்கு மெருகேற்றிக் கொண்டிருக்கின்றீர்களா