Thursday, October 21, 2010

மக(ஹா) கல்யாணம்!

அசைவற்று நிழல்
பரப்பி கொண்டிருந்த மரத்தின்
கைகளில் காக்கை பொன்னாய்
மின்னிகொண்டிருந்த இலைகளில்
வழுக்கி கொண்டிருந்த 
சூரியனின் இளங்கதிர்களில்
நீ கட்டி ஆடிய ஊஞ்சல்
பிரிபிரியாய் முறுக்கேறியது
இருவர் ஆட தோதாய்

பெயரற்று கிடந்த
வெள்ளைப்பூக்களின் வாசனையை
அணிந்திருந்த காற்று
புத்தாடை அணிந்த சிறுமியின்
வனப்புடன் உயர பிடித்து
மிதந்து கொண்டிருந்தது
நீ விளையாடி களைத்த
தெருக்களில்
அடைத்து கட்டிய பந்தல்

கண்ணாமூச்சி ஆடி
மறைந்து எழுந்து
உள்புகுந்து வெளியேறும்
தோழிகளுடன் நீ விட்டுசென்ற
சிரிப்பொலி
பதிந்திருக்கும்
நிலை  நின்ற தேரை
மறைத்து நிறுத்திய
பிளெக்ஸ் பேனரில்
நீ சிரிக்கும் திருமண வாழ்த்து

கிச்சு கிச்சு தாம்பாளம்
ஆடிய உன் விரல் ரேகைகள்
படிந்த ஆற்று மணலை
கொட்டி நிறுத்திய
முகூர்த்த கால்

உறவின் வெம்மையில் வேய்ந்த
மயிலிறகு பந்தலின்  முனையில்
அமர்ந்திருக்கிறது
ஒரு காகம்
மணமகளை வரவேற்கும்
ஒலிபெருக்கியின்
பாடலை பொருட்படுத்தாது,
தொடர்ந்து கரைந்து கொண்டே
இருக்கிறது
யாரின் வரவையோ சொல்லிக்கொண்டு

8 comments:

'பரிவை' சே.குமார் said...

Thirumanak kavithai super...

mahaavukku thirumana vazhththukkal.

எஸ்.கே said...

கல்யாணக் கவிதை அருமை! வாழ்த்துக்கள்!

ஜெயந்த் கிருஷ்ணா said...

arumaiyaana kavithai...

அம்பிகா said...

அருமையான திருமண கவிதை

\\கிச்சு கிச்சு தாம்பாளம்
ஆடிய உன் விரல் ரேகைகள்
படிந்த ஆற்று மணலை
கொட்டி நிறுத்திய
முகூர்த்த கால்\\
:-)))

மணமக்களுக்கு வாழ்த்துக்கள்.

ராகவன் said...

அன்பு நண்பர்கள் எல்லோருக்கும் நன்றியும் அன்பும்...

பா.ரா.வின் மகள் மற்றும் என்னுடைய வளர்ப்பு மகளுமான மஹாவின் திருமண வாழ்க்கை இனிதாக இருக்க உங்களுடன் சேர்ந்து வாழ்த்தி பிரார்த்திக்கிறேன்.

அன்புடன்
ராகவன்

மணிஜி said...

ராகவன்..நேற்றே படித்தேன்..பின்னூட்டமிடமுடியாமல் கணினி சதி..இப்போது மீண்டும் படிக்கிறேன்..என்ன பின்னூட்டுவது என்று தெரியவில்லை

உயிரோடை said...

நான் ஒரு கவிதையாவது எழுதி இருக்கலாம் மஹா கல்யாணத்திற்கு. :(

பத்மா said...

where is my comment?;(