Thursday, October 28, 2010

ஊர்ல திருவிழாப்பே...!!!

எல்லாத்துக்கும் ஒரு சீசன் வர்ற மாதிரி பாட்டு கச்செரிகளுக்கும் ஒரு சீசன் வந்து விடும் எங்க ஊரில்.  பங்குனி மாச பொங்கலென்று களை கட்டும் தெருவுக்கு தெரு குழாய் கட்டி குலவை போடும் அம்மன் கொண்டாடிகளே அதிகம் இருக்கும் ஊரு எங்க ஊரு.  ஆராய்ச்சிபட்டி, தைக்கப்பட்டி, இடையபொட்டல் என்று ஊரே ஜிங்கு ஜிங்குன்னு குதிச்சு வண்ணம் மாறும் நாட்கள் அவை.  அநேகமாய் திருவிழாக்களின் போது பரீட்சை எழுதுற பயலுக எல்லாம் பரிட்சையை  பார்க்கிறதா பாட்டு கச்சேரி கேட்குறதானு ஒரே மண்டையடில காய்வானுங்க... பாட்டு கச்சேரி எப்போதும் மூணாம் நாலு அல்லது கடைசி நாளு தான் நடக்கும், முதல் நாள்ல வள்ளி திருமணத்துல ஆரம்பிச்சு... ராமசாமி பண்டாரத்தின் கூத்துடன் முடியும்.  இடையிலேயே ஆத்துக்குள்ள  திரையக் கட்டி சினிமா போடுவானுங்க...  முதநாள் ஏதாவது பக்தி படம்னு ஆரம்பிச்சு அதுக்கு பெறகால சமூக படங்கள்னு  தொடரும்.   

நடுவுல வச்ச ப்ரொஜெக்டர், பிலிம் ரோலும் பார்க்கவே சுவாரஸ்யமா இருக்கும், பொட்டலுக்கு பின்னாடி போய் இடதை வலதாய் பார்க்க ஒரு கோஷ்டியே பின்னாடி இருக்கும்...  கொட்டி வைச்ச  மணலும் குளுகுளுன்னு காத்தும்... இன்னைக்கு வரை எங்கேயும் கிடைக்கலை அது போல... இதை எல்லாமா விட்டுப்புட்டோம்னு நினைக்க கஷ்டமா இருக்கு இன்னைக்கு.  கோயில் கமிட்டி, விழா கமிட்டின்னு ஊர்ல இருக்குற  இளந்தாரி பயலுகள எல்லாம் இழுத்து போட்டு ஏதாவது ஒரு பொறுப்ப கொடுத்துடுவாய்ங்க  இந்த கோயில் நிர்வாக கமிட்டி இருக்கிற பெருசுங்க... ஒரு கண்டிஷனோட... வள்ளி திருமணம் கட்டாயம் வேணும்டா.. விட்டுடாதீங்க... நரை மயிர் மீசையை நீவிக்கொண்டே... போனமுறை ரோஸ் கலர் மேலாக்கும் அரக்கு குட்டைப்பாவாடை கட்டி ஆடியவள மறக்காதுங்க நம்ம ஊரு பெருசுங்க... இளந்தாரி பயபுள்ளைகளுக்கு கச்சேரி, சினிமா இது போதும்,  நாலு பேரு அல்லது அதுக்கு மேல சேந்துக்கிட்டு ஒரு நோட்ட கைல எடுத்துக்கிட்டு வசூலுக்கு கிளம்பிடுவாய்ங்க ... இது போல நாலைஞ்சு குரூப் இருக்கும்  மொத்தமா... நிறைய வசூல் பண்ற குரூப் சொல்ற ஆர்கெஷ்டிரா தான் அவர்கள் சொல்லும் சினிமா தான், அவிங்க வச்சதுதான் சட்டமா இருக்கும், அதனாலேயே குருப்புகளுக்குள்ள பெரிய போட்டியே இருக்கும், சொந்த காச கொண்டு வந்து வசூல ஏத்துறது, வீட்டுல இருந்து லவட்டி கொண்டு வந்து கொடுக்குறதுன்னு...  அவிங்கவிங்க குருப் தான் பெரிசா ஆடனும்னு இல்லாத திருகல்தனம் எல்லாம் செய்வாய்ங்க!

பெரும்பாலும் மதுரைல இருந்து வர்ற ஏதாவது ஒரு ஆர்கெஷ்டிரா தான் கச்சேரி நடத்துறது... சினிமாவுக்கு நம்ம கணபதி டாக்கிஸ்  ஆப்பரேட்டர் அண்ணாச்சிய கூட்டிட்டு வந்தா அவரே பாத்துக்கிடுவாறு எல்லா சோலியவும்.  மதுரைல அப்போ பாப்புலரா இருந்தவர்கள் சுந்தர் ஜெகன், ஜீவன், அங்கிங்கு, புளு பேர்ட்ஸ் தான், இதில யார உள்ள கொண்டு வர்றதுன்னு முடிவு பண்ணவே ஒரு பெரிய போராட்டம் நடக்கும்...  கடைசியில் பெரும்பாலும் பட்ஜெட்னாலையும், எஸ். பி.பாலு மாதிரி பாடும் சுரேசிற்காகவும் ஜீவன் தான் முடிவாகும்.   காமாட்சி அம்மன் கோயில் முன்னாடி இருக்கும் ஆத்துப்பொட்டலில் வள்ளி திருமனத்திற்காக போட்ட  மேடையிலேயே பாட்டு கச்சேரியும் நடக்க ஆரம்பமாயிடும்... ஒரு புளு கலர் மெட்டடோர் வேனில் காலை பதினோரு மணிக்கே வந்து விடும் வாத்தியங்களும், மேடை அலங்காரங்களும், ஒடிசலா ஒரு ஆள் வந்து மேடைய கொஞ்சம் அழகு படுத்தி அவர்களின் ஆர்கேஷ்டிரா பேனரை கட்டுவான்...

விழாக்கமிட்டியை சேர்ந்தவர்கள், தீப்பெட்டி ஆபீஸ் பக்கத்துல இருக்கிற மண்டபத்துல, பாட்டு கோஷ்டிக்கு இடம் செய்து கொடுப்பார்கள்.  வாத்தியங்களை அங்கே அடுக்கி... வேடிக்கை பார்க்க வர்ற குஞ்சானி பசங்கள எல்லாம், வாத்தியங்களை தொடைக்கவென்றே அழைத்து வந்த பையன்  விரட்டி கொண்டு இருப்பான்.  மெயின் பாடகிகளும், நாலு ஆண் பாடகர்களும் ஆறு மணிக்கு தான் வருவாய்ங்க.   அதில் ஒரு பொண்ணு   மஞ்சள் சட்டை சிகப்பு தாவணியில் தாட்டி சூப்பரா இருக்குடா, பெரிய பாடகியாய் இருக்கும் போலருக்கு என்று அவர்களுக்குள் பேசிக்கொள்வார்கள்.   தெருல இருக்கிற வயசு பிள்ளைக எல்லாம் தீப்பெட்டி ஒட்டி முடிஞ்சா பின்னாடி அல்லது பள்ளியோடம் விட்டு வந்த பின்னாடி செட்டியார் வீட்டு மொட்ட மாடியில போய்  நின்னு பாக்க... இப்பவே செட்டியார் வீட்டம்மாவ காக்க பிடிக்க ஆரம்பிப்பாளுக...  சந்தா அன்னைக்கு சீக்கிரமே எடுத்து வச்சுட்டு, செட்டியார் அண்ணாச்சியும் மேல வந்துடுவார் கச்சேரி ஆரம்பிக்கும் சமயத்தில, வெத்து மாருல ஒரு குத்தால துண்ட மாத்திரம் போத்திக்கிடுவாறு... கடை பசங்களிடம் ஏலே கூதல் அடிக்கில்லா என்று யாரும் கேட்காமலே பதில் சொல்லி மூடிக்கிடுவாரு...  யார்லா அந்த பிள்ள, எங்கிருந்து வாரா... நான் பாத்ததில்லா... இம்புட்டு நாளா... என்று சும்மா நிமிண்டிக்கிட்டே இருப்பார் செட்டியார் அண்ணாச்சி...

பொதுஜனம், மாடியில்லாத மக்களும் மேடைக்கு முன்னால் கொட்டி வைத்த மணலில் உட்கார்ந்து வாய் தொறந்து ஒட்கார்ந்திருப்பார்கள், வாத்தியங்களை அடுக்கவும், அதை ஒழுங்கு படுத்தவும் நேரம் ஆகி கொண்டிருப்பதால், கொட்டாவி, கெட்டாவி எல்லாம் கலந்து சோம்பல் முறித்து மணலில் அசர ஆரம்பிப்பார்கள்.   ஹலோ மைக் டெஸ்டிங்... 1 2 3 ... என்றதும் கூட்டம் முழுக்க நிமிர்ந்து உட்காரும்... வசூல் சாதனை செய்து நிற்கும் இளந்தாரிக்கும்பல் அந்தாநிக்கே செட்டியார் வீட்டு மேல இருக்கிற புள்ளைகள பார்த்து பேசி, சிரித்து, சைகை காட்டி கொண்டு நூல் விட்டு கொண்டு இருப்பார்கள்... எல்லோரையும் உலுக்கும் மைக் டெஸ்டிங் ஒன் டு த்ரீ...  பாடகர் வெள்ளை சட்டை பேண்டில் வந்து தொண்டையை செருமும் போதே... சின்ன பயலுவளுக்குள்ள ஒரு சின்ன போட்டி வந்துடும்... முதப்பாட்டு எப்பவுமே விநாயகர் பாட்டு தான்... அதில என்ன பாட்டு என்று... ஒருத்தன் விநாயகனே வெவ்வினையை... பாட்டு தான் முதல்ல என்பான், இன்னொருத்தன் இல்லைட மாப்பிள என்ன பந்தயம்... இவன் பாடபோறது ஒரு மணிக்கொரு மணி அந்த பட்டு தான், இடையில மூனாவதா ஒருத்தன் இல்லபா... கணபதியே வருவாய் தான் என்றான்.   அவரும் ஆரம்பித்தார்... ஹலோ ஹலோ செக் செக்... என்று எதிரொலித்து... வேழ முகம் கொண்டு என்று ஆரம்பித்தார்... பயலுக செத்துட்டாய்ங்க.

மூணு நாலு பாட்டு முடிஞ்சதும் பாலு குரலில் பாடும் சுரேஷ் வந்தார் வந்தவுடன் பாடிய பாட்டு, தோரணையான அறிமுகத்துடன்  சங்கீத மேகம் என்று இளையராஜாவின் மேடைக்காகவே மெட்டு போட்ட பாடலை பாடினான்.  கூட்டம் மெய்மறந்து கேட்டு கொண்டிருந்தது... பாண்டிப்பய இதுக்கெடையில ஒரு துண்டு சீட்ட எழுதி ஒரு சின்ன பயல்ட்ட கொடுத்து பாட சொன்ன பாடல், இளையராஜாவின் இசையில் மற்றுமொரு உன்னதமான இரு குரலிசையில் வழியும் காதல் பாடல்... நீயா அழைத்தது என் நெஞ்சில் மின்னல் அடித்தது...  இளையராஜாவும் வைரமுத்துவும் தமிழ் சினிமா இசையையே புரட்டி போட்ட காலம் அது... சிங்கசங்கமம் அது... சேலை பூக்களில் தேனை திருடிய பொன்வண்டு... என்ற பாலுவின் மிதப்பான குரலும், ஜானகியின் குழைவும் அம்மா...  அலையோசையின் சத்தமே இல்லாமல் இசை உற்பவித்து கரையை மீட்டும் அலை விரல்கள்...

5 comments:

Sriakila said...

உங்கள் பதிவின் மூலம் எங்களையும் சேர்த்து திருவிழாவுக்கு கூட்டிக்கிட்டுப் போயிட்டீங்க..

ரிஷபன் said...

ஜிலு ஜிலுவென்ற எழுத்து நடையில் அப்படியே அந்த சூழல் மனதில்.

க ரா said...

ஊர் பக்கம் போயிட்டு வந்த மாதிரி இருக்கு ராகவன் :)

ராகவன் said...

anbu nanbarkal ellorukkum

en anbum nandriyum... nhm writer la konjam problem... thamizhla pathil ezhutha thothillai...

mannikkavum...

anbudan
ragavan

காமராஜ் said...

அன்பின் ரகவன் மீண்டும் ஊருக்குள் புலி வந்த கதை மாதிரி ஒரு செவல்தரை மணக்கும் எழுத்து கிளம்பிவந்து கொண்டிருக்கிறது.அதிகலையில் விஷேச வீடுகளில் படிக்கும் மைக் செட் பாடல்களின் காலங்கள் உருண்டோடி வந்து கேட்குது.
பக்கத்து ஊர்ல எவ்வளோ தொலைவுல படிச்சாலும் இழுக்கும் தெரியுமா ?