Saturday, November 13, 2010

திருப்பதி ஆசாரியின் குடை...

குடையை விரிக்கவே இல்லை திருப்பதி ஆசாரி... கொளுத்தும் வெய்யிலில் குடையை கையில் பிடித்துக் கொண்டே நடந்து வந்தார். வெய்யிலோ மழையோ குடையை விரிக்கவே மாட்டார், வெயில் இருக்கும் போது பெரும்பாலும் சுனக்கமில்லாமல் நடந்து விடுவார் எவ்வளவு தூரமா இருந்தாலும், மழை வந்தால் மட்டும் ஏதாவது ஒரு தார்சாலா பாத்தோ இல்ல ஓட்டு சாப்பு இருக்கிற இடத்திலோ ஒதுங்கி கொள்வார். பிறகு எதற்கு குடையை வைத்திருக்கிறார் என்பது பரம ரகசியம் இன்று வரை... அவருடைய மனைவி பையம்மாவுக்கே தெரியாத ரகசியம் என்றால் அதில் எந்தவித ஜோடனைகளும் இல்லை.


இன்னைக்கென்னாச்சு நாலு மணி ஆவப்போவுது இன்னும் வெயில் இந்த போடு போடுதே என்றவருக்கு கொஞ்சம் தலை கிறுகிறுன்னு வர மாதிரி இருந்தவுடன், எங்கேயாவது கொஞ்ச நேரம் ஒதுங்கலாம்னு தோனிடுச்சு அவருக்கு. காலைல இருந்து பல்லுல ஒன்னும் படாதது தான் வெயில உக்கிரமா காட்டுதோ என்னவோ என்று நினைத்துக் கொண்டார். யோசித்துகொண்டே ராகவேந்திர விலாஸ் ஹோட்டல் தார்சாலில் ஒதுங்கினார்... இந்த ஹோட்டல்கார அய்யர் நம்ம ஊருக்காரரு...ஹிந்து ஸ்கூல்ல தான் படிச்சாரு, இவரு சி.எம்.எஸ் ஸ்கூல்ல படிக்கையில... சி.எம்.எஸ். மைதானத்துல ஹாக்கியெல்லாம் சேர்ந்து விளயாடி இருக்காரு... பழக்கம் தான்... ஆனா கையில அரை ரூவாத் துட்டு இருந்தா ஒதுங்கலாம்... அய்யரும் நல்லா உள்ளங்கை அகலத்துக்கு வெங்காய் பஜ்ஜி வச்சு கட்டி சட்னி வப்பாரு... நமக்குன்னா நல்லா கவனிக்க சொல்லி, அதிகப்படியா ஒன்னும் கொடுப்பாரு...

தொடைச்சு எடுத்தா தாமரை போட்ட 20 பைசாவும், ஒரு செல்லாத்துட்டு ஓட்ட காலனாவும் தான் இருக்கு... இதுக்கு ஒரு காப்பி குடிக்கலாம்... காப்பிக்காக போயி உட்காந்தா பஜ்ஜி கிடைக்காது... இங்க வந்து ஒதுங்கினதே அய்யர் நம்மள பாத்து கூப்பிட மாட்டாரான்னு பாக்கத் தானோ என்று நினைத்தவரு சேச்சே வெயில்லுன்னு தானே ஒதுங்குனோம் என்று தனக்கு தானே சமாதானம் சொல்லிக்கொண்டார்... பார்த்தா கஷ்டத்தையும் சொல்லி ஒத்த ரூபா கேக்கலாமான்னு மனசுக்குள் தோன, பிறகு அவரே வேண்டாமென்று பலமாய் தலையை ஆட்டிக்கொண்டார். என்ன பன்றதுன்னு ஒரே கலக்கமா இருந்துச்சு அவருக்கு. வீட்டுக்கு போனா வீட்டுக்காரி வேற கேப்பா என்னாச்சுங்க, ஏதாச்சும் கிராக்கி கிடச்சுதா... இல்லடி என்று அவளிடம் சடவா சொல்லத்தான் வரும் எப்பப்பார்த்தாலும். பொண்டாட்டிட்ட பிரியமா பேசியே ரொம்ப நாளாச்சு... அவளுக்கும் அதப்பத்தி பெரிய கவலை இல்லை... வீட்ல ஒல பொங்குனா சரி, ஒரு வேளையோ ரெண்டு வேளையோ சாப்பிட்டா சரி, அதான் பிரியம் என்று நினைத்துக் கொள்வார்

திருப்பதி ஆசாரி சின்ன வயசுல இருந்தே இந்த தொழில் தான் பன்றாரு... அவ்ங்க அப்பாவும் இதே தான்... இவருக்கு தெரிஞ்சே இது மூனாவது தலைமுறை... அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல அவருக்கு புள்ளகுட்டி எதுவும் இல்லை... அதும் ஒரு பெரிய கவலை திருப்பதி ஆசாரிக்கு. எட்டாவது வயசுல தன்னோட அப்பாகூட உமியப்போட்டு உமியோடு ஏத்தவும்... சன்னத்தெல்லாம் போட்டு உறுக்கவும் ஆரம்பிச்சு, அப்படியே படிப்படியா... இலைத்தோடு, மூக்குத்தி செய்ய கத்துக்கிட்டாச்சு... அதுக்கு மேல வளையலோ அல்லது சங்கிலி செய்யவோ கத்துட்டிருக்கலாம்...வரும்படி கொஞ்சம் தேவலாமா இருக்கும்... நல்லா சேதாரம் எடுக்கலாம், கடைக்கு போடுறதாலே கூலி கிடைக்காது, ஆனாலும் கடிச்ச இல்லாம போகும். அதுக்கு நமக்கு கொடுத்து வைக்காம போச்சு. ஏதோ கிரகம் சரியில்லாம அதெல்லாம் கத்துக்காமயே விட்டாச்சு என்று அவரையே தேற்றிக் கொள்வார்...

பையம்மாவ போய் முதத் தடவயா மல்லிப்புதூர்ல போய் பொண்ணு பாக்கும்போதே பிடிச்சுப்போச்சு... ஒரு மாதிரி சுங்கடி சேலையும், வெள்ளைல ரவுக்க துணியும் கட்டியிருந்தா, அவ போட்டிருந்த ஒத்தக்கல் மூக்குத்திய பார்த்தவுடனே... ரொம்ப பிடிச்சுப்போயி எந்த ஊரு ஆசாரி செஞ்சிருப்பான் என்று அவராகவே யோசித்துக் கொண்டிருக்கும்போது பிடித்து விட்டதென சொல்லிவிட்டார். கருப்பு தான் ஆனா ஒரு மினுக்கு இருக்கும் தோள்ல... ராஜம்மாக்கு தான் கொஞ்சம் வருத்தமா இருக்கும், நல்ல தண்ணி கினத்துமேட்டுல நின்னு பார்த்தது, சிரித்தது எல்லாம் ஒரு நெருஞ்சிமுள்ளாட்டம் அப்பும், ஆனா பையம்மாவின் மினுக்கு அவரை நெருஞ்சி முள்ள தூக்கிபோட்டுட்டு, அவள கட்டிக்கிடுதேன்னு சொல்லி ஒன்னும் ஏமாத்திப்புடலையே என்று தனக்கு தானே சமாதானமும் சொல்லிக் கொண்டார்

அவளோட சித்தப்பா வீட்ல தான் போயி பார்த்தது... வாசக்காலு உயரம் கம்மி தான், உயரமா, சிகப்பா இருக்காரு மாப்பிள்ள, உசத்தி கட்டுமய்யா வாசக்காலன்னு ஏதோ பெருசு கூட கிண்டலடித்துக் கொண்டிருந்தது... உள்ள நுழைச்சதுமே ஒரே இருட்டா இருந்துச்சு... ஒரு சாக்கு நடுல தொங்கிக்கிட்டிருந்தது, அதத் தாண்டி சின்னதா ஒரு சன்னல், இந்த சாக்கு படுதா பின்னால தான் சில கால்களும் கொஞ்சம் குரல்களும் இருந்துச்சு... பாயவிரிச்சு உட்காந்தவுடனே திருப்பதி ஒக்காந்து விட, திருப்பதியோட அம்மா பொம்பிளக இருக்கிற இடத்துக்கு போயி ஒக்காந்துக்கிச்சு, அப்பா ராமசாமி ஆச்சாரி, பொன்னையா ஆச்சாரி, பெரிய முத்துராஜூ என்று பெருந்தலைகளும் அவர்களுடன் பெண்டு பிள்ளகளும் இருக்க... கொடுக்காப்புளி அய்யர் ஜாதகம் பாத்து , முகூர்த்த நேரத்தயும் குறிச்சுப்புட்டார்... திருப்பதியா இருந்தவரு திருப்பதி ஆசாரி ஆயிட்டார், கல்யாணத்திற்கு பெறவு. அதுக்கு பின்னால, ராஜம்மாவுக்கு சாத்தூர்ல பேனா நிப்பு கம்பெனில வேல பாக்குற பயல கல்யாணம் பண்ணி கொடுத்துட்டாக...

ஏன் திடீர்னு இதெல்லாம ஞாபகம் வந்ததுன்னு அவரால யோசிக்கமுடியல... சரி கிளம்பிடலாம்னு அங்கே இருந்து ரெண்டு அடி எடுத்து வைக்கிறதுக்குள்ளாற என்ன ஓய்! உள்ள வராமயே போறீரு! என்ற மணி அய்யரின் குரல் அவரை நிறுத்தியது... இல்லங்கானும்... இப்படியே வந்தேன் சந்தை வரைக்கும் போயிட்டு வந்தது, ஒரே கிறக்கமா இருந்தது, அதான் கொஞ்சம் ஒதுங்கிட்டு திரும்ப நடக்கலாமேன்னு என்றார். உள்ள வர வேண்டியது தானே... வாருமய்யா... ஏதாவது சாப்பிடுதீரா... எலே... அய்யாவுக்கு குளுந்த தண்ணி கொண்டு வாலே... மண் பானத் தண்ணி குடிமையா... சாந்தியா இருக்கும் என்றார். திருப்பதி ஆசாரி அவரு ஏதாவது சாப்பிட சொல்ல மாட்டாரா என்று ஏக்கமாய் இருந்தது. அதை எப்படி கேட்பது என்று சங்கடமாவும் இருந்தது. குடைய எதுக்குய்யா மடக்கியே வச்சிருக்கீரு... விரிக்கலாமுல்ல... விரிச்சா குடையோட பவுசி தெரிஞ்சுபோயிடும்னு அவருக்கு சொல்லவா முடியும்... இத பத்து வருஷத்துக்கு மேல இப்படியே வச்சிருக்காரு, அவருக்கே திறக்க பயம்...

வீட்டுக்குப் போனதும் குதிரவல்லி அரிசி வாங்கிட்டு வந்தீங்களா என்பாள், அரை ஆழாக்கு வாங்கிட்டு போனா பொங்கிப்போட்டு ரசமும் வச்சு பருப்பு தொகையல எப்படியாவது வச்சுடுவா... இரண்டு வேளைக்கு இழுத்துக்கலாம்... கடைல போய் திரும்ப கடன் சொல்லமுடியாது, தங்கையா நாடார் இனிமே கடன் கொடுக்க மாட்டேன்னு சொல்லிட்டாரு.. இன்னைக்கு அறுந்த தோட்ட ஊத வந்த பய... சல்லிக்காசு கொடுக்காம, வாரண்ணேனு போயிட்டான்... செக்குல வேலை பாக்குற பய... ஒரு ருவாய்க்கு எண்ணெ வாங்குனா... கொஞ்சம் கூட கொடுப்பான், நம்ம போனா... அதனால அந்த பயக்கிட்டயும் கேட்க முடியல... ஊதி முடிச்சது வாங்கிட்டு அந்தானிக்க போயிட்டான்.

என்னத்த பன்றதுன்னு ஒன்னும் புரியலை அவருக்கு... சாயங்காலம் கருக்குவேல் அவம் பொஞ்ஜாதியும் வந்தா... ஏதோ தோடு செய்யக் கொடுக்குறதா சொன்னாங்க... கொஞ்சம் முன்பணமா வாங்கிகிட்டா இந்த வாரத்த சமாளிக்கலாம்... ஆனா அதுவும் நிச்சயம் கிடையாது... இவ சமைக்க அது இதுன்னு எட்டனாவாவது வேண்டியதிருக்கும்... இருவது பைசாத்துட்டு எவந்தருவான், குதிரவல்லியரிசி... கிட்னாசாரி சொன்னபடி பாத்தா போன மாசத்தோடு ஏழரை சனி போயிடுச்சு... பொங்கு சனி அது இதுன்னு சொன்னா... ஒன்னத்தையும் காணோம்... கிட்னாசாரி பொழக்க தெரிஞ்ச பய... நம்ம வேலைக்கு வராம... ஜோசியம் பார்த்துக்கிட்டு... கிரகத்த எல்லாம் மத்தவுங்களுக்கு தள்ளி விட்டுட்டு... சொகுசா இருக்கான்...ம் என்று அவரே அறியாமல் ஒரு பெருமூச்சு வேறு வந்தது... தாவாக்கட்டைய தூக்கிப் பிடிச்சு யோசிச்சுட்டு இருந்தவரு முன்னாடி மணி அய்யரு சொல்ல, ரெண்டு இட்லியும் சட்னி சாம்பாருடன், வடையும் வந்து வச்சிட்டு போனா ஒரு பய...
பாக்க சீனிச்சாமி மகென் மாதிரி இருந்தான்... என்ன ஓய் தண்ணிய தரோம்னுட்டு... இட்லிய வைக்கீரு... சாப்பிடுமையா... உம்ம தெரியாத எனக்கு... சாப்பிடும்... காசு வரும்போது குடுங்கானும் என்றார்...

திரும்பவும் குதிரவல்லி அரிசி வந்து ஒக்காந்து விட்டது அவரு மண்டைக்குள்ள... இப்போ அவ என்னத்த திம்பா... என்ற யோசனை வந்தது... ஒரு வடைய மட்டும் தின்னுட்டு... மணி அய்யர் கல்லாவ பாத்துட்டு இருக்கிற போது யாரு பாக்காய்ங்களானு பாத்துட்டு... குடய லேசா அகட்டிட்டு உள்ள இட்லிய பொட்டலமா கட்டி குடைக்குள்ள போட்டுக்கிட்டார்... வடைய மட்டும் தின்னுட்டு கொடுத்த காப்பிய குடிச்சுட்டு... பெரிய ஏப்பமா விட்டுட்டு... சந்தோஷம்யா... காசு வந்தவொடனே குடுத்துப்புடுறேன் என்றார். மெதுவா குடுமையா...ஒன்ன யாரு இப்போ துட்டக் கொடுன்னு புடுங்கா... என்றவரிடம் சொல்லிக்கொண்டு, கொஞ்சம் கூடுதல் சொரத்துடன் வீட்டுக்கு வேகமா நடந்தார்.

44 comments:

Ganesan said...

வாரே... வாவ்.

உண்மைகளின் நிதர்சனம் கதை..

நம்மில் எத்தனை திருப்பதி ஆசாரிகள் இருக்கிறார்கள்..

எழுத்து நடை, அருமை..

வாழ்த்துக்கள் நண்பரே.

அம்பிகா said...

அருமையான எழுத்து நடை.
\\ இப்போ அவ என்னத்த திம்பா... என்ற யோசனை வந்தது... \\
திருப்பதிஆசாரிக்கு வயிறு நிறைந்ததோ இல்லையோ, படிப்பவர்களுக்கு மனம் நிறைந்து விட்டது.
தொடருங்கள்.

ஜெயசீலன் said...

நல்ல கதைங்க ராகவன்...

Unknown said...

"தாமரை போட்ட 20 பைசாவும்"
-சின்ன வயசிலப் பார்த்தது. இத 108 வச்சு எங்க அம்மா பூஜை பண்ணுவாங்க.

அருமையான் எழுத்து நடைன்னு சொல்லவந்தேன். அதுக்குள்ள முன்னாடியே சொல்லிட்டாங்க அதை. நிதர்சனமான உண்மை வரிகள். அப்பிடியே பார்த்த ஞாபகம். நன்றிங்க.

அம்பிகா said...

\\ Sethu said...
"தாமரை போட்ட 20 பைசாவும்"
-சின்ன வயசிலப் பார்த்தது. இத 108 வச்சு எங்க அம்மா பூஜை பண்ணுவாங்க.\\

எங்க அம்மாவும் 108 சேர்த்து வைத்திருந்தார்கள். அம்மாவின் நினைவாக அதில் கொஞ்சம் இன்னும் நான் வைத்திருக்கிறேன்.
நினைவூட்டியதற்கு நன்றி

Mahi_Granny said...

வாழ்த்துக்கள் தம்பி. நிறைவாக இருக்கு

காமராஜ் said...

ராகவன்......
கைகுடுங்க ராகவன்.

படிக்க விட்டுபோனதுக்கு நாங்க தான் வருத்தப்படனும்.ஒரு அச்சு அசலான வாழ்க்கையை பிச்சுப்பிச்சு வச்சுருக்கீங்க.அதும் கென்யாவிலிருந்து.
என்னான்னே தெர்ல.கென்யா போனப்பிறகு உலுக்கி எடுக்கும் சம்பவங்களும் மனிதர்களும் நிறைய்யவே தெறித்து விழுகிறார்கள்.எங்கு போனால் என்ன அது கென்யாவின் குளிரூட்டப்பட்ட அலுவலகமோ இல்லை மணி அய்யர் ஓட்டல் தாவாரமோ நினைவுகளைக் கட்டிப் போடமுடியாது.

வறுமையில் ஒட்டுகிற சிநேகம் ரொம்பக்கெட்டியாக இருக்கும்.குடைக்குள் எடுத்துப்போட்ட இட்லியாட்டம்.குடை ஏன் விரியனும்?.

க்ளாஸ் ராகவன்.

தெருவில், டீக்கடை வாசலில்.பேருந்து நிலையத்தில்,எதிர்ப்படுகிற தெரிந்த மனிதர்களின் கண்களில் தேங்கிக்கிடக்கும் ஏக்கம் கதை முழுதும் விரவிக்கிடக்கிறது.

தலையைக்கோதிவிட்டுக்கொள்ளுங்கள் எங்கள் அன்பின் சார்பில்.

இதுக்கு எதுக்கு ஓட்டு,இதுக்கு எதுக்கு ஹிட்டு. இது அழியாக்காவியம் ராகவன்.தொகுப்பு போடுங்க.

வாழ்த்துக்கள்.

v.pitchumani said...

நல்லாயிருக்கா. பொற்கொல்லர்களின் அவலநிலையை உரித்து தந்து உள்ளீர்கள் நன்றி

'பரிவை' சே.குமார் said...

அந்தக் காலத்துக்கே இழுத்துச் செல்லும் எழுத்து நடை... அருமையான கதை...
குடை இதுக்குத்தான் வச்சிருக்காருன்னு கதையில அழகா சொல்லி முடிச்சிட்டிங்க...
தாமரை போட்ட 20பைசா பள்ளிக்கூடம் படிக்கும் போது வீட்டில் கிடைப்பது... ம்... படிக்கப் படிக்க எத்தனையோ திருப்பதி ஆசாரியப் பாத்ததுமாதிரி இருக்கு.

கே. பி. ஜனா... said...

ஒரு சிறந்த சிறு கதை. அருமையான தொடக்கம். என்ன ஒரு நடை! மனத்தைக் கவ்வும் பொருத்தமான முடிவு!

வெங்கட் நாகராஜ் said...

நல்ல கதை படித்த திருப்தி நண்பரே. கதை மாந்தர்களின் வாயிலாக அந்த கால பேச்சு வழக்கும் படிக்கக் கிடைத்தது. நன்றி.

Rekha raghavan said...

ஒரு சிறந்த சிறுகதைக்கான அத்தனை அம்சங்களுடன் வந்துள்ளது. பாராட்டுகள்.

ரேகா ராகவன்.

அன்புடன் அருணா said...

எங்க தாத்தா வீட்டுக்கு வந்தவுடன் குடையை வாங்க ஒரு பெரும் சண்டையே நடக்கும் ...ஏன்னா அதுக்குள்ளேதானே தின்பண்டங்கள் இருக்கும்! மலரும் நினைவுகள்!......

ராகவன் said...

அன்பு நண்பர்கள் எல்லோருக்கும்,

இப்படி தொடங்கும் இந்த மறுமொழி... எல்லோருக்கும் பொதுவானது... தனித்தனியா எழுத எனக்கு போதிய அவகாசம் இல்லாததால்... எல்லோருக்கும் இதை எழுதுகிறேன். இந்த பதிவை படித்து, உங்கள் கருத்துக்களை பின்னூட்டியதற்கு நன்றிகளும், அன்பும். நான் முதன்முறையாக தன்மையில் எழுதாத கதை இது... இதுவரை எழுதியதெல்லாம்... என்னுடைய அனுபவம் போல தான் இருக்கும்... ராமசாமி எப்படி யோசிச்சார்னு எனக்கெப்படித் தெரியும்... நான் ராமசாமியாய் இல்லாத பட்சத்தில் என்ற கருத்தில் எல்லாவற்றையும் என் கதைகளைப் போலவே எழுதிவந்தேன்... எஸ்.ரா. ஒருமுறை இதுபோல நேரடியான ஒரு விஷயமாய் இல்லாமல், ஒரு புனைவாய் எழுதுங்கள் என்றார்... அதுபோல முயற்சித்ததற்கு அங்கீகாரம் கிடைத்திருப்பது சந்தோசமாய் இருக்கிறது...

மறுபடியும் எல்லோருக்கும் அன்பும் நன்றியும்.

அன்புடன்
ராகவன்

மணிஜி said...

//இதுக்கு எதுக்கு ஓட்டு,இதுக்கு எதுக்கு ஹிட்டு. இது அழியாக்காவியம் ராகவன்.தொகுப்பு போடுங்க.

வாழ்த்துக்கள். //

என் வாழ்த்துக்களும்..நிதர்சனம் நிறைவாய்

ராகவன் said...

அன்பு மணிஜீ,

உங்கள் அன்புக்கு அன்பும் நன்றிகளும்... இதை எழுதி முடித்த பிறகு, போடலாமா, வேண்டாமா என்ற தயக்கம் இருந்தது... இப்போது... உங்கள் எல்லோரின் பின்னூட்டங்களும் என்னை உற்சாகப்படுத்துகிறது... அதுவும் நிறைய படிக்கும் எழுதும்...உங்களைப் போன்றவர்கள் சொல்லும் போது கூடுதல் சந்தோஷம் தான்..

ராகவன்

வை.கோபாலகிருஷ்ணன் said...

திருப்பதி ஆசாரியின் குடை கடைசியில் சற்றே விரிந்த போது, என் மனமும் சற்றே மகிழ்ந்தது. குடைக்கும் ஒரு பயனுள்ள வேலை கொடுத்து அவர் மனைவியையும் முழுப் பட்டினி போடாமல் ஏதோவொரு நல்லதொரு முடிவுடன் கதையை முடித்தது திருப்தியாக உள்ளது. பாராட்டுக்கள்.

மாதவராஜ் said...

நல்லா வந்திருக்கு ராகவன். கலங்கவும், கரையவும் செய்யுது விட்ட்டீர்கள். மிக அற்புதமான வெளிப்பாடு!


எழுத்து, சொல்லும் பாங்கில் மிகக் கச்சிதமாக பொருந்தி இருக்கிறீர்கள். இந்த இடம் உங்களுக்கானது எனத் தோன்றுகிறது.

உங்கள் குடைக்குள் இன்னும் ஓராயிரம் கதைகள் இருக்கின்றன என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. ஒவ்வொன்றாக எடுத்துக் ஆட்டுங்கள்.

காலம் காத்திருக்கிறது.

பா.ராஜாராம் said...

ஐயோ!..

கலக்கி இருக்கீங்க ராகவன்... வாழ்த்துகள்! நிறைய வாசிக்க விட்டுப் போயிருக்கு. சவுதி போய் எல்லாம் வாசிக்கணும். பகிர நிறைய இருக்கு ராகவன். பேசுவோம்..

sakthi said...

அப்படியே மனசுல நிக்குதுங்க இந்தக்கதை தொடருங்க.....

vijayan said...

உள்ளடக்கமும் சரி அதன் வெளிப்பாடும் சரி அற்புதம்.வண்ணநிலவன் கதை ரேஞ்சுக்கு உயர்ந்து நிற்கிறது.வாழ்த்துக்கள்.

ராகவன் said...

அன்பு பாரா,
அன்பு சக்தி,
அன்பு விஜயன்,

உங்கள் அணைவரின் அன்புக்கும் வாழ்த்துக்கும் நன்றி... வண்ணதாசனே பார்த்து வியக்கும் ஒரு மகாகலைஞன் வண்ணநிலவன், அவருடன் என் ஒன்னுமில்லாத எழுத்தை ஒப்பிட்ட விஜயனின் அன்புக்கு நன்றி... ஆனால் நான் இப்போதான் எழுதவே ஆரம்பிச்சுருக்கேன்... அவங்கள்லாம் மிகப்பெரியவர்கள் என்று சொன்னாலும்... இது போன்ற ஒப்பிடுதல்கள், உள்ளுக்குள்ளெ ஒரு கிளர்ச்சியை கொடுக்கத்தான் செய்கிறது... எல்லோருக்கும் என் அன்பும் நன்றியும்

அன்புடன்
ராகவன்

Ravichandran Somu said...

அருமை... வாழ்த்துகள்!

ராகவன் said...

அன்பு நண்பர்கள் எல்லோருக்கும்,

மாதவராஜின் என் கதைபற்றிய சிறிய குறிப்பை கவனித்து அதை படித்து, அதை பற்றி மாதவராஜிற்கும் ஒரு வரி குறுஞ்செய்தி அனுப்பி... எனக்கும் ஒரு கடிதம் அனுப்பிய வண்ணதாசன் அவர்களுக்கு எப்படிச் சொல்வது என்னுடைய அன்பையும், நன்றிகளையும்
வண்ணதாசன், வண்ணநிலவன், கலாப்ரியா, தமிழ்செல்வன் இவர்களைப்பார்த்து தான் வளர்ந்தேன்னு சொல்ல மாட்டேன்... வளர்ந்த பிறகு தான் அவர்களைப் பார்த்தேன்...படித்தேன்...நாலு கல்லுபோட்டு எக்கி நின்னு பார்க்கிறது மாதிரி முடியாதில்லையா. அதற்கப்புறம் படிக்க ஆரம்பிச்சு தான் கத்துக்க ஆரம்பிச்சேன். மாதவராஜ், காமராஜ், பாரா இவங்கள்ளா தான் எனக்கு மூனு கல்லு அடுப்பு... ஏத்தி வச்சு திகுதிகுன்னு எரியறது எல்லாம் இவங்க ஆதரவிலயும், ஆதுரத்திலயும் தான்...
உங்க எல்லோருடைய அன்பும் எனக்கு ஆச்சரியமானது... அடைக்குந்தாழ் இல்லாமல் திறக்கிறது மதகுகள்...

அன்புடன்
ராகவன்

செ.சரவணக்குமார் said...

அன்பு ராகவன்..

காமராஜ் அண்ணனை வழிமொழிகிறேன்.

வேறொன்றும் சொல்லத்தோன்றவில்லை நெகிழ்ச்சியான இத்தருணத்தில்..

தமிழ் அமுதன் said...

அருமை..! அருமை..! நானும் ஒரு நகை தொழில் செய்கிறவன் என்ற வகையில் கூடுதல் மகிழ்ச்சி..!

நகை தொழிலை பற்றி சொல்லி இருப்பது அழகாய் இருக்கிறது..!

/அந்த தாமரை பூ போட்ட இருபது காசு/
அந்த காசை நெருப்பில காயவைச்சு தட்டி நிமித்திதான் முதன் முதலில் மோதிரம் செய்ய பழகினது..;) சுத்தியலால கைல அடி வாங்கினது
எல்லாம்...;)

நேசமித்ரன் said...

ப்ரியங்கள் சிமிழ் திறந்த படி இருக்கும் சொற்களுக்குரிய ராகவன் ...

பிரபஞ்சத்தின் ஜன்னல்கள் சாத்திக் கொள்ளும் போது அகம் பேசத்துவங்குகிறது மனசின் ரகசிய அறைகளில் குட்டியிட்டிருக்கும் பூனைகளின் குழந்தைக் குரலில் இன்னும் சாம்பல் பூத்து அடிமடியில் கங்கு வைத்துள்ள உணர்வு முடிச்சுகள். சொல்ருசி அறிந்தவன் பென்சிலை சீவிய படி இருக்கிறான் கடந்து போகும் பறவைக்காகவோ அந்தியின் மந்த மாருதத்திற்கோ பூப்பெய்தும் அடிவயிற்று சுருக்’ வேண்டியிருக்கிறது அவனுக்கு .

இது உங்களுக்கான பர்ணசாலைக்காலம் ராகவன் .கவிதைகளைக் காட்டிலும் உரைநடையில் சொல் தன்னை எழுதிச் செல்கிற லாவகமும் சரளமும் வாய்த்திருப்பதாய் உணர்கிறேன் உங்கள் எழுத்துகளில் என் குற்றறிவில் .
கவிதை ஒரு தண்டட்டி தோள் தொடும் கிழவியாய் விழுதிறக்கி இருக்கும் ஆல மரத்தின் கிளையளவு அகன்ற மேகத்தை ஒரு தெர்மாமீட்டரலகு பாதரசமாக்குவது.உரைநடை .. குப்பி சோப்பு நீரில் ஆகாசம் மறைப்பது மூச்சடைத்த குமிழ்களால் . எழுதுங்கள் திருப்பதி ஆசாரியின் குடையோ பூங்கதவோ ..

வாழ்த்துகள் ராகவன் தொடர்ந்து எழுதுங்கள்.

venu's pathivukal said...

அன்பு ராகவன்

மாதவராஜ் போன்ற ஓர் அன்பு கொண்டாடி இருக்கப் போய்த் தான் இந்த திருப்பதி ஆசாரி என்னைப் போன்றோரது மனதருகேயும் வெயிலுக்கோ, மழையின் சாரலுக்கோ ஒதுங்க வந்தார். அவரை இனி எப்படி வெளியே விடுவது...
வெளியே விட்டுத் தான் ஆகவேண்டும். பையம்மாவிற்கு அவரது குடைவிரிப்பிலிருந்து இட்லி கிடைக்கட்டும்.

அந்தக் குடை அற்புதமான - உருக்கமான ஓர் உருவகம். அவரது தொழில் தருமத்தின் - வேலைத் திறனின் - வருமான சாமர்த்தியத்தின் அத்தனை நுணுக்கங்களுக்கும் பிடிபடாத அவரது அத்தனை ஏக்கங்களின் கூட்டு முடிச்சாக அவரது கக்கத்திலேயே இருக்கிறது அந்தக் குடை.

வெயிலுக்கோ, மழைக்கோ, அன்னியர் எவரது பார்வைக்கோ திறக்காத அந்த முடிச்சின் ரகசியம் அவரைப் பார்த்து ஏனென்று கேட்காத பத்தினியின் பசிக்குக் காதல் உதிர விரியும் என்பதும், அப்போதும் அதிலிருக்கும் ராஜம்மாவின் மீதான ஒரு கடைக்கண் மயக்கம் உதிர்ந்துவிடாது பத்திரமாயிருக்கும் என்பதும்.................
பார்த்துப் பார்த்துச் செய்த வேலைப்பாடுள்ள நகை மாதிரியான கதை.

பெண் பார்க்கப் போன இடத்தில் அவளது மூக்குத்தியைச் செய்த ஆசாரியின் கலைத் தேர்ச்சியின் பிரமிப்பில் திருமணத்திற்கு இசைவு தெரிவித்துவரும் இடம் கவிதை என்றால், ஆசாரியின் பசியைப் பரிச்சயத்திலிருந்தே அறிந்து தாமாகவே அழைத்து டிபன் வழங்கி கவுரவிக்கும் ஓட்டல்கார அய்யரின் காருண்யம் கண்ணீர்.

வாழ்த்துக்கள் ராகவன்.

ஒரு கோடி நன்றி மாதவ் உங்களுக்கு......

எஸ் வி வேணுகோபாலன்

Anonymous said...

Wonderful!

a said...

நல்லதொரு நிதர்சன கதை........... திருப்பதி ஆசாரி கண்முன் நிழலாடுகிறார்..........

ராகவன் said...

அன்பு நேசன்,

ரொம்ப சந்தோஷமா இருக்கு நேசன்... நாம் இருவரும் பேசும் பரஸ்பரம் இது குறித்து பரிமாறிக்கொண்டாலும்... இதை ஒரு பின்னூட்டமாயும் போடுவதால்... இன்னும் மெருகேறுகிறது... நம் நட்பும், அன்பும்... தொன்னையில் நெய் வழியும் சர்க்கரைப் பொங்கல் எனக்கு உங்கள் பின்னூட்டம்...புறங்கை வழிய நக்குவதில் கூச்சமில்லை எனக்கு.

அன்புடன்
ராகவன்

ராகவன் said...

அன்பு வேணுகோபாலன்,

செம்மலரில் வரும் உங்கள் கருத்துக்களை,ஆக்கங்களை சில சமய்ம் மாதவராஜ் மூலமாகவும், நானாகவும் படித்து இருக்கிறேன்... அதீத அன்பும் நேயமும் உள்ள மனுஷன் நீங்கள் என்பது மாதுவை தெரிந்த எல்லோருக்கும் தெரியும்... இதுபோல அன்பு கொண்டாடிகளின் பரிச்சயத்தில்... நான் அன்பு கொண்டவனாய் மாறிக் கொண்டு வருகிறேன்... விஷமெல்லாம் நீர்த்துப் போய்க் கொண்டிருக்கிறது... வேணு...

மிக அழகாக புரிந்து கொண்டதாகப்பட்டது... பவுசிக்காக விரிக்கப்படாத கைக்கு அடக்கமான குடைகளில் இருந்து மிகவும் வித்யாசமான இந்த குடை... திருப்பதி ஆசாரியின் பாதி இருக்கும், குடை ஒரு பண்டோரா பாக்ஸ்... எத்தனையோ இருக்கும் ரகசியப்பேழை என்பதை நீங்கள் புரிந்து கொண்டது எனக்கு சாபல்யம். ஒவ்வொரு இடத்திலும், நான் ரசித்த இடங்களையே நீங்களும் ரசித்தது இதன் உன்னதம். இன்னும் நிறைய எழுத ஆவல் வருகிறது வேணு... மனசுக்குள் இன்னும் மூடியற்று கிடக்கும் சீசாக்களாய் எத்தனை மனிதர்கள்... என் ஆசான் மாதவராஜிற்கும்... மாதுவின் அன்புக்காக இங்கு வந்த எல்லோருக்கும் என் அன்பும்... சில துளி நெகிழ்வு நீரும்...

ராகவன்

ராகவன் said...

அன்பு அனானி, அன்பு யோகேஷ்,

உங்கள் அன்புக்கும், கருத்துக்கும் அனேக நன்றிகளும்... அன்பும்

அன்புடன்
ராகவன்

நிலாமகள் said...

வணக்கம் நண்பரே ... மனசெங்கும் வியாபித்து விட்டது 'திருப்பதி ஆசாரியின் குடை!'

Deepa said...

ரொம்பப் பிடிச்சிருக்கு. அழவும் தோன்றுகிறது. :)

பா.ராஜாராம் said...

இரண்டாவது சுற்றிலும் வெற்றி பெற வாழ்த்துகள் ராகவன்! :-)

Unknown said...

இந்த கதையை இவ்வளவு நாள் படிக்காமல் விட்டதற்கு வறுத்த படுகிறேன் . ஒட்டு போட்டுட்டேன் அண்ணே

suneel krishnan said...

அற்புதமாக கண்களுக்கு முன் காட்சியாக விரிகிறது ,வாழ்த்துக்கள் ராகவன் சார்

rkm said...

அருமையான கதை. சின்ன வயதில் நிறைய திருப்தி ஆசாரிகளுடன் வாழ்ந்த ஞாபகங்கள் திரும்பவும் வந்தது தங்கள் எழுத்தால். அருமையான நடை, பசியின் மயக்கத்தில் காலைமுதல் பல்லில் ஒன்றும் படாத திருப்தி அவ என்னத்த திம்பா என்று நினைத்து இட்லியை குடையில் போட்டது நெஞ்சை தொட்டது.தாமரை பூ இருபது காசில் மோதிரம் செய்து போட்டவர்கள் நிறைய. மறுபடியும் நன்றி - ஒரு நல்ல கதைக்கு.

rkm said...

தாமரை பூ இருபது காசு... என் மனதில் ஒரு ரணம்....வயது 12 ... தங்கியிருந்த ஹஸ்டேலளிருந்து வீட்டுக்கு 3 கிமீ கால்நடையாய் வெறும் காலில் வெட்ட வெயிலில் பாட்டியை பார்க்கபோக, பாட்டி வீட்டிலில் இல்லை. இருதிருந்தால் பசிக்கு கஞ்சியாச்சும் கிடைச்சிருக்கும். அகோர பசி. பாக்கெட்டில் தாமரை பூ இருபது காசு.... கிராமத்தின் நடுத்தெருவில் சீனி நாயக்கரின் கடையில் சுண்டல் இருபது காசு. தாமரை பூவை இடதுகையில் அமுத்தி பிடித்து பாக்கெட்டில் கைவைத்து நாயகர்கிட்ட சுண்டல் ஆர்டர் செய்து சாபிட்டப்புரம் பசி அடங்குச்சு. நான் சாப்பிடும்போது நாயக்கர் கடைய பாத்துக்க சொல்லிட்டு மூச்சா போக போயிட்டார். நானும் சாப்பிட்டு அவர் வர்றவரைக்கும் காத்திருந்து இருபது காசை குடுத்துட்டு திரும்பவும் 3 கிமீ நடந்து ஹாஸ்டல் போனேன். அடுத்தநாள் ஸ்கூலில் நாயக்கர் மகன் என்னிடம் வந்து நேத்து சுண்டல் சாபிட்டு காசு குடுக்காம போயிட்டன்னு எங்க அப்பா சொன்னருன்னான். நெஞ்சை அடைத்து கண்ணீர் வந்தது. அபாண்டமான பலி. அடுத்த வாரம் திரும்ப நடந்து போயி நாயக்கர்கிட்ட காசுகொடுத்த விவரம் சொன்னப்போ எனக்கு வயசாயிருச்சு ஞாபக மறதி...மன்னிச்சுடு மனசில வச்சுக்காத அப்படின்னு சொன்னார். மனசு அப்போதைக்கு சமாதானம் ஆனாலும் மனசுல பட்ட காயம் மறக்க முடியல. தங்கள் கதையின் தாமரை பூ இருபது காசு பழசை கிண்டிவிட்டது... கண்ணில் ஈரம்... தங்கள் கதை வாழ்க்கையின் யதார்த்தங்களை பிரதிபலிக்கின்றது...:)

இராஜராஜேஸ்வரி said...

தாமரைப்பூவாய் மனதில் மலர்ந்து குடை விரிக்கும் போது அன்பு ஊற்று சுரந்த நிதர்ச்னக்கதை.. பாராட்டுக்கள்..

முரளிகண்ணன் said...

excellent narration. super

ராகவன் said...

அன்பு ராஜராஜேஷ்வரி மற்றும் முரளிகண்ணன்,

உங்கள் இருவரின் வாசிப்பிற்கும் கருத்திற்கும் என் அன்பும் நன்றிகளும்...

அன்புடன்
ராகவன்

Anonymous said...

nice story took me to the olden days very nice
the high light is kudai rakasiyam secret of an umperlla
keep writing more

yours kavignar Ara
Kavignarara@gmail.com