Monday, November 29, 2010

கோடையின் ஆற்றுப்படுகை...

எலே! கிடைக்கு ரெண்டு சாத்துங்கலே புளிய மிளாற எடுத்துக்குட்டு... என்று உள்ளே உக்காந்திருந்த அமராவையும், அம்மாவையும் பார்த்துச் சொன்னார் அப்பா. இருக்கிற சோலிக்கழுதய விட்டுப்போட்டு...ஊரு சுத்திக்கிட்டுத் திரியற... மடத்தாயோளி! ஒண்ணு கெடக்க ஒண்ணு ஆகியிருந்தா ஆருலே பதில் சொல்லுதது... அரைக்காசு புத்தியாவது இருக்காலே... என்ன நெஞ்சழுத்தம் இருந்தா அந்தப்பக்கம் பொயிருப்ப... அதுலயும் சோடி போட்டுக்கிட்டு... சோடி... தீப்பெட்டி ஆபீஸ்க்காரரு மகனோட... அதல்லாம் ஒரு பிள்ளையா, அவென் செம்பட்டத் தலையும் ஆளும், அதப்பாத்தாலே தெரிய வாணாம்... வீட்டுக்கு அடங்காத பிள்ளை அதுன்னு... அவென் ஒனக்கு சேக்காளியாடே... பல்லக்கடிச்சுட்டு அவென் தலை மயித்த பிடிச்சு ஆட்டுதாரு அப்பா... சின்னக்கடை வீதிலருந்து வாரேன்... மைனர் கணக்கா முக்குல நின்னுட்டு பீடி பிடிக்கான்...தறுதலப்பய...அவென், அவனோட சுத்தறான் இவன்...காலிப்பய... பன்னியோட சேர்ந்தா பீதான் திம்ப... அடங்காத பய... மேலுக்கும் கீழுக்குமாய் நின்றார் உத்தரம் தாண்டி.

வஞ்சு கொண்டே அவனை அடித்தும் கொண்டிருந்தார், மேல்மூச்சு, கீழ் மூச்சு வாங்க கையில் பிடித்திருந்த புளியங்குச்சில விடாம...சளைக்காம வாங்கிக் கொண்டிருந்தான்... ராமரு. பாதி அடி சுவத்திலயும் தரையிலயும் விழுந்தாலும் அவெங் கத்துற கத்துல எதுத்த வீடு பக்கத்து வீடுல தீப்பெட்டி ஒட்டிக்கிட்டிருக்கிற பிள்ளைகெல்லாம் வந்து நின்னு வேடிக்கை பாத்துக்கிட்டிருக்க, அது ராமருக்கு மேலும் அவமானமாகி மேலும் சத்தமாய் அழுதான்... ஒரு கையால் டவுசரை பிடித்துக் கொண்டே, மூக்கிலிருந்து ஒழுகிக்கொண்டிருந்த சளியை இடது புறங்கையால் இழுவிக் கொண்டே... பட்டாசால் போட்டிருந்த மரபீரோவுக்கும் சுவற்றுக்கும் அணைவில் ஒடுங்கினான்...இந்தளவுக்கு ஏன் அடிக்கணும் இவனை என்று அமராவுக்கு புரியவில்லை.

தடுக்கப் போனா தனக்கும் உதை விழும் என்பது நிச்சயம்... ஆனா ராமர இவ்வளவு அடிச்சதில்ல அவரு... வேற எங்கியோ இருக்க கோவத்தை இங்க காட்டுறா மாதிரி தான் இருக்கு... ஆனாலும் கேக்க பயமாய் இருக்கு... அமராவிடம் அன்பாய் தான் இருப்பார், கோவத்தில என்ன பண்ணுவார்னு யாருக்குத் தெரியும். அம்மாவுக்கு பொங்கி பொங்கி வந்தது, அடுப்பங்கரைக்கும், பட்டாசாலுக்கு வந்து வந்து பார்த்துக் கொண்டிருந்தாள், கையில் பருப்புக் கடையும் மத்தும் இருந்தது... பருப்பு மத்த கோபமாய் ஆட்டிக்கொண்டே, இந்தா போதும் இவன கொன்னு குழில தள்ளுனது... என்று அப்பாவின் கையில் இருந்த புளியமிளாற இன்னொரு கையால் ஆவேசமாய் பிடுங்கிக்கொண்டே வஞ்சாள் அம்மா... அம்மாவுக்கு... ராமரின் மேல் அத்தனை பிரியம்... ரெண்டும் பொண்ணா போயிட்டதாலே... கடைசிக் கொழுந்தா வந்த பய எல்லாத்திலயும் உசத்தி அம்மாவுக்கு.

இந்த மனுஷனுக்கு கொஞ்சமாவது ஈவு இரக்கம் இருக்கா... என் ஈரக்குலைய உருவிப்போட்டிருக்கலாம், ஒத்த ஆம்பிள புள்ளை தவமா தவமிருந்து பெத்துட்டு... போட்டு வதைக்காரு... இவ்வளவு அடி வாங்குதானே...என்ன பண்ணான் இந்த பயன்னு தெரியுமா... ஒரு மண்ணும் இல்லை... கொலைக்குத்தம் பண்ணாப்ல... ஆம்பிளப்பிள்ளை இது கூட செய்யாதா, யாருமே  செய்யாததையா செஞ்சுபுட்டான். இந்தாளு சின்ன வயசுல பண்ணாத அலும்பா, ஆடாத ஆட்டமா... இவுக ஆத்தா எம்புட்டு பட்டிருக்கும்... இவன் பண்ணதப்போயி குத்தம்ண்ட்டு என்னமோ தேவையில்லாம திங்கு திங்குன்னு குதிக்காரு... பேசாம பிள்ளைகளக் கூட்டிட்டு ஆத்தா இருக்கு, அண்ணங்காரன் இருக்கான்னு எங்கேயாவது போயி நிம்மதியா இருந்து தொலையலாம்னா, அதுக்கும் நாதியத்து தானே... இங்கேயே கெடந்து அல்லாடுறோம்... அம்மா இப்படி பேசினாலும் அப்பாவை விட்டு எங்கேயும் போகாது... என்று அமராவுக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் தெரியும்.



தீவாளி முடிஞ்சும் விடாத அடமழையா கார்த்திக பொறந்தும் பெய்ஞ்ச மழல... பத்து வருஷத்து பிற்பாடு இப்பத்தான் திருமுக்குளத்துக்கு தண்ணி வந்திருக்கு... பெரிய குளம் கம்மாயும் நெறஞ்சு போச்சு போல... அதப்பாக்க கூட்டாளிக்கள்லாம் கூப்பிட்ட உடனே பயலுக்கு ஆசை வந்து தொத்தியிருக்கான். அவென் நேரம் கூட வந்த சின்னத்தாயி பய... அதான் அந்த சின்னவன்... அவனும் கூட பொயிருக்கான்... எல்லாம் சேந்து தான் விளாடிட்டு இருந்திருக்காஹ... அந்த பயலுக்கு நீச்ச தெரியாததால்.. இவங்க டின்ல சைக்கிள் டியுப்ப கட்டி நான் கத்து தாரேன் நீ கத்து தாரேன்னு அவனுக்கு கத்து குடுக்க, கூட இருந்த யாரோ ஒரு பய உள்ள தள்ளி விட்டுட்டானாட்டமா இருக்கு... டியுப் கழண்டு போயி... பய தடவி தடவி உள்ள போயிட்டிருக்கான்... விளாட்டு மும்முரத்துல இந்த பயலுக யாரும் பாக்கல... நம்ம சோலமல நாயினா பொண்ணு பெரியவ தான் பாத்து, மயித்தப் பிடிச்சு தூக்கியாந்திருக்கா... இத இந்த மனுஷன்கிட்ட யாரோ சொல்லிட்டாக அது தான் சாமி வந்து ஆடுறாரு... என்று பக்கத்து வீட்டிலிருந்து வேடிக்க பாக்க வந்தா டெய்லர் அக்காவிடம் புலம்பிக் கொண்டிருந்தாள் அம்மா.

அப்பா ஒருவழியா தம்பிய அடிக்கிறத நிப்பாட்டி அமராவும், பவுனும் ஒக்காந்திருக்கிற முன் நடைப்பக்கம் பார்த்தார். ஏலே பவுனு இங்க வா... போய் ஒரு சொம்புல தண்ணியக் கொண்டா...இந்த பயல கத்தி கத்தி என் தொண்டத்தண்ணி தான் வத்திப்போச்சு... எவ்வளவு அடிச்சாலும் இவன் உருப்படப்போறதில்ல... எல்லாத்தியும் ஒக்காந்து புள்ளய சிங்காரிச்சு சீரழிக்க இருக்காளே ஒங்க ஆத்தா... போதும் விளங்கிடுவான்... என்று அங்கிருந்த மரத்தூணில் சாய்ந்து கொண்டு... எத்தனை கொட்டான்டி போட்ருக்கீக என்று தண்ணிச்சொம்பு கொண்டு வந்தவளிடம் கேட்டார்.... பன்னெண்டு முடிஞ்சுப் போச்சுப்பா என்றாள் பவுனும். அமராவும், பவுனும் வயதுக்கு வந்தவுடன் பள்ளிக்கூடம் போக வேணாம்னுட்டார் அப்பா. அதிலும் அமரா ஏழாவது படிக்கையில வயசுக்கு வந்தா, சின்னவ இன்னும் சீக்கிரமா... ஆறாவது படிக்கையிலேயே வயசுக்கு வந்துட்டா... தலைல தண்ணிய ஊத்தி... போதுந்தாயிகளா நீங்க பள்ளிக்கூடம் போனது என்று வீட்டிலே இருக்க வைத்து விட்டார்.

சின்னவ பவுனுக்கு படிக்காமல் போனது சந்தோஷம் தான். அமராவதிக்கு தான் படிக்க கொள்ள ஆசை... ஒரு புஸ்தகம் விட மாட்டா... ராமகிருஷ்ண அண்ணன்ட்ட சொல்லி லெனின் வாசகப்பேரவையில இருந்து எல்லாம் புஸ்தகங்களையும் கொண்டு வரச்சொல்லி படிச்சுடுவா... சின்னவ பவுனுக்கு சினிமா நடிகர், நடிகைகளைப்பத்தின கதையும், கிசுகிசுவும் மட்டும் போதும்... ரெண்டு பிள்ளகளும், வீட்ல ஒக்காந்து தீப்பெட்டி ஒட்டுறது தான்... பக்கத்து வீட்ல இருந்து வார பிள்ளகளும், வரிசையா பலகைய போட்டுக்கிட்டு... சினிமாக்கதை, ஊர்ப்பொரனின்னு பேசிட்டே ஒட்டுவது, வாரமானா போய் தீப்பெட்டி ஆபீஸில போய் மொத்தத்தையும் போட்டு காசு வாங்குறது தான் பொழுது போக்கு வருமானம், எல்லாம். அப்பாவுக்கு வருமானம் குறைவா இருக்கும்போது... அமராவும், பவுனும் தீப்பெட்டி ஒட்டிய காசில் தான் சாப்பாடும், மத்தசெலவும்... பவுனுக்குத் தான் வருத்தம்... சினிமாவுக்கு அம்மாவிடம் காசு வாங்குவது அந்த வாரம் கெட்டுப்போகும்... மேத்தீனிக்கு காசு இருக்காது... அமராவுக்கு அதைப்பற்றிய வருத்தம் ஏதுமில்லை.

வாரத்துக்கொருமுறை கணபதி டாக்கீஸ் அல்லது ஜெயகிருஷ்ணால போடற ஏதோ ஒரு படத்தைப் பார்க்க போயிடுவா... அம்மாவுக்கு தெரியாமல் அடைக்கும் பெட்டிக்கணக்காய் தனியாய் பிரித்து விடுவாள், அதுதான் அவளுக்கு மேத்தீனியும், சிலசமயம் அவளோட சேக்காளி பங்காரம்மாவுக்கு சினிமா டிக்கெட்டுக்கும். அமராவதிக்கு சினிமா போக விருப்பமில்லை என்பதால்... புஸ்தகமும், சாந்தி அக்காவுடன் பேசிக்கொண்டு இருந்தால் மட்டுமே போதும் எப்போதும்... சாந்தி அக்காவுக்கு முப்பத்திரண்டு வயசாச்சு... இன்னும் கல்யாணம் ஆகலை... எல்லாக்கதையும் பேசும் சினிமா பத்தி, அரசியல் பத்தி, நாவல் பத்தின்னு... அக்காவுக்கு ராமகிருஷ்ணன் அண்ணன்னா ரொம்ப பிடிக்கும்... எப்பப் பார்த்தாலும், அண்ணனப்பத்தி தான் கேக்கும்... அண்ணன் குடுக்கிற புஸ்தகமெல்லாம் படிச்சு... அதப்பத்தி நிறைய பேசும்... சாந்தி அக்கா படிச்சு முடிச்ச புஸ்தகத்திற்க்குன்னு ஒரு அடையாளம் இருக்கும்... ஏதாவது ஒரு பக்கத்தில் பென்சிலில் சின்ன சின்ன இலைமாதிரி போட்டு... பூவரைந்திருக்கும்... ராமகிருஷ்ணன் அண்ணனுக்கு அது பிடிக்காது... சத்தம் போடும்...வாசகப்பேரவையில வைவதாய்ச் சொல்லும், அக்காவிடம் சொன்னா... எங்கிட்ட சொல்லச்சொல்லு அமரா... எங்கிட்ட பேச பயம் என்று லேசாக்கண்ணடிக்கும் அக்கா, அது பார்க்க நல்லாயிருக்கும்.

அப்பா, அமரா என்று கூப்பிட யோசனை அறுபட்டு என்னப்பா என்றவளை, மகராசி கொஞ்சம் தலைய பிடிச்சு விடு தாயீ!... மண்டையடி தாங்க முடியலை... என்று தலையப்பிடித்துக் கொண்டு உட்கார்ந்தார்... அமராவுக்கு அப்பாவ பாக்கவும் கஷ்டமா இருந்துச்சு... தம்பி இப்ப அழுது ஓய்ஞ்சு அடுப்பங்கரையிலேயே ஒக்காந்து பருப்பு சாதம் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். தொட்டுக்க அப்பா வாங்கி வந்த வெங்காய பக்கோடாவும் இருந்தது... அப்பாவுக்கு தங்கவேலை பார்க்க சுத்தமாத் தெரியாது, தாத்தாகிட்ட குண்டிய அமுக்கிகிட்டு ஒழுங்கா இருந்திருந்தா வேலை கத்திட்டிருக்கலாம்... அதவிட்டுட்டு வயசுல எல்லாம் ஊர்ல அடிக்கிற வெயிலெல்லாம் இந்தாளு மேல காய ஊரச்சுத்திட்டு, இப்ப நம்ம பொழப்பே ஒக்குட மாட்டாமக் கிடக்கு என்று அம்மா புலம்புவாள். ஏதோ என் புள்ளக இருக்கங்கண்டி இந்த மனுஷன் கொண்டு வந்து கொடுக்குறது பத்தாமப் போனாக்கூட அவளுக காசுல மிச்சம் வச்சு பொங்கி போடறதாலே அய்யா பொழப்பு மணத்து போயி கிடக்கு... என்பாள் அம்மா.

அப்பாவிற்கு ஒரே மாதிரி எல்லா நேரத்திலும் காசு வருவதில்லை. நகை வேலை தெரியாததால பழைய தங்கத்த வாங்கி அத மூசு போட்டு... கடையிலேயே அல்லது பட்டறையிலேயே கைமாத்தி விடுற வேலை பாக்காரு... புரோக்கர் மாதிரி... எப்பப் பார்த்தாலும், நல்லா வெள்ள வேஷ்டி கட்டிக்கிட்டு கழுத்துல ஒரு கர்சீப் போட்டுக்கிட்டு... ஒரு மஞ்சப்பையில் சுத்தின மாதிரி ஒரு சின்ன நோட் இதுல தான் எல்லா வரவு செலவையும் கணக்கு வச்சுப்பாரு... இன்னைக்கு அப்பாவுக்கு பணம் தரவேண்டிய கிராக்கி யாராவது கொடுக்காம போயிருக்கலாம் அல்லது எந்த கிராக்கியுமே கிடைக்காம போயிருக்கலாம் என்று தோன்றியது அமராவுக்கு. இந்த மாதிரி கோபம் வரும்போதெல்லாம் அப்பா இப்படி தான் சம்பந்தமில்லாம கோபப்படுறது, அமராவைத் தவிர... என்னவென்று அப்பாவிடம் கேட்கவும் பயம், தலையை லேசாத் தடவி விட்டுக்கொண்டிருந்தாள்... அம்மா தேங்காய் எண்ணெய லேசா சூடுபண்ணி அதுல ரெண்டு சூடத்தை போட்டு கொண்டு வந்தா... இந்தாடீ உங்கப்பனுக்கு இதப்போட்டு தேயீ என்று அடுப்பங்கரைக்குள் போயிவிட்டாள். தலைய அமுக்கும் அமராவின் கைகளை பிடித்த போது அப்பாவுக்கு அழுகை வந்தது, தேம்பி தேம்பி அழத் தொடங்கினார், ராமரு அங்கே இருந்து அப்பாவிடம்... நான் இனிமே எங்கேயும் போகமாட்டேன்பா... என்று சொல்லிக்கொண்டிருந்தான்.

18 comments:

இளங்கோ said...

கதையை ரசித்தேன்.
படிப்பதற்கு உங்களின் பதிவு நிறம் (பழைய Template) கஷ்டமாக இருக்க, உங்களிடம் சொல்லலாம் என்று நினைத்து திரும்ப தளத்துக்கு வர வெண்மை நிறத்தில் அருமை. நன்றி.

மணிஜி said...

நல்லாயிருக்கு ராகவன்....(பரவாயில்லை)

க ரா said...

நல்லா இருக்கு ராகவன்.. திருப்பதியில் ஆசாரியில் இருந்து ஒவ்வொன்னும் செமயா இருக்கு ராகவன்.. மெய்மறந்து ரசிச்சுகிட்டு இருக்கேன் ...

க ரா said...

புது டெம்ப்ளெட்டும் அந்த பேனரும் ரொம்ப நல்லாருக்குங்க :)

rajasundararajan said...

மொழிநடையும் சூழ்நிலை அவதானிப்புகளும் நல்லாத்தேன் இருக்கு, ஆனா கதையில ஒரு பிரச்சனை வேணாமோ? அல்லது ஒரு ஐடியா?

'தன் ஏலாமையை, தெளிவில்லாத எதிர்காலத்தின் மீது கோபமாய் இறக்குதல்' அல்லது 'தன்னைப்போல் மகனும் உருப்படாமற் போய்விடுவானோ என்று அஞ்சி ஆத்திரப் படுதல்' என்று ஓர் ஐடியா புதைந்து இருப்பதாக நான் புரிந்துகொண்டேன்.

ராகவன் said...

அன்பு இளங்கோ,

உங்கள் அன்புக்கும் கருத்துக்கும் நன்றிகளும்... இதே கருத்தை... வெயிலானும் சொன்னார்... நான் கென்யாவில் இருந்து இது போல டெம்ப்ளேட் டிசைன் செய்வது கடினமாய் இருக்கு... மாற்ற நினைத்தாலே தொங்கி விடுகிறது... என்று சொன்னேன்... வெயிலான் தான் செய்து தருவதாக சொன்னார்... நானும் சந்தோஷமாய் தலையாட்டினேன்... அவருக்கு என்னுடைய அன்பும் நன்றிகளும்!

அன்புடன்
ராகவன்

ராகவன் said...

அன்பு மணி,

கல்யாணசாப்பாட்டில் உப்பில்லன்ற மாதிரி சொல்றீங்களே மணி! இன்னும் உரைக்கிறா மாதிரி... இன்னும் என் மரமண்டைக்கு ஏறுற மாதிரி... இது எழுதி முடிக்கும் போது ஒரு ரிப்போர்டிங் வடிவத்தில் தான் இருக்குது என்று புரிந்தது... நானா இருந்தான்...என்ன இதுன்னு படிச்சுட்டு துப்பியிருப்பேன்... நேற்று காமராஜிடம் பேசும்போதே இது பற்றி குறிப்பிட்டேன்... திருப்பதி ஆசாரி மாதிரி எல்லாமே அமையாது என்பது தெரியும்... இப்ப தான எழுதுறேன்... போக போக இன்னும் கத்துக்கறேன்... இத்தனை நாள் நீங்கபோட்ட நல்லாயிருக்கு ராகவன் ... பின்னாடியும் இந்த மாதிரி அடைப்புக்குறிக்குள் பரவாயில்ல அல்லது தேறாது போன்ற மறைபொருள் இருப்பதாய்க் கொள்கிறேன்...

அன்புக்கு அன்பும், நன்றிகளும்
ராகவன்

ராகவன் said...

அன்பு இராமசாமி கண்ணன்,

சந்தோஷம்... உங்களுக்கு கீழேயும் மேலேயும் பாருங்கள்... இந்த கதையைப் பற்றிய விமர்சனப்பார்வை... ஒன்னுமே இல்லாம இவ்வளவு எழுதறது உன்னால தாண்டா முடியும்னு... என் நண்பன் சொன்னான்... ஆனாலும் உங்கள் அன்புக்கு என் நன்றிகளும் கண்ணன். வெயிலானுக்குத் தான் என் அன்பு... இந்த வார்ப்புருவுக்கு.... நான் செய்திருந்தால்... மறுபடியும் ஒரு ரெடிமேட் டெம்ப்ளேட் தான் யோசித்திருப்பேன்... வெயிலானுக்கு மறுபடியும் என் அன்பும், நன்றிகளும்

அன்புடன்
ராகவன்

ராகவன் said...

அன்பு அண்ணனுக்கு,

தெரியும்னே எனக்கு... இத ஏன்டா போடனும்னு கூட தோனுச்சு... சரி... பார்க்கலாம்... நம்மளோட அனுமானம் என்னைக்கு சரியா இருந்துச்சுன்னு தோனியதால... இத பார்வைக்கு கொண்டு வந்தேன்... தன்னுடைய ஏலாமையைத் தான் இது போல இறக்குகிறார் என்பது தான் நான் சொல்ல வந்ததும்... ஆனா சரியா சொல்லல... கொஞ்சம் நறுக்குன்னு இல்ல. அதான அண்ணே... உங்கள் கருத்தை எடுத்துக் கொள்கிறேன் அண்ணே! திரும்பவும் முயற்சிக்கிறேன்.

அன்புடன்
ராகவன்

'பரிவை' சே.குமார் said...

கதையை ரசித்தேன்.
நல்லாயிருக்கு ராகவன்.

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

ராகவன் ரொம்ப நல்லா வந்திருக்கு இந்த ஆற்றுப்படுகை.இதை வழக்கமான ஒரு கதை சொல்லல் பாணியிலிருந்து விலகி இந்தப்பாத்திரங்களின் நாட்குறிப்பிலிருந்து நழுவி விழுந்த ஒரு பக்கமாய்த் தெரிகிறது-ஒரு flatட்டான கதை சொல்லும் உத்தியாய்.80களில் வாழ்ந்த மனித ஓட்டம் கதையில் ஊடுபாவியிருக்கிறது.த்ருப்தி ராகவன்.

க.பாலாசி said...

எவ்வளவு உயிரோட்டம் இந்த கதையில.. ரொம்ப அழகான படைப்புங்க.. ஒரு அப்பனோட மனசை கடைசியில காட்டினது இன்னும் மனதைத்தொடுகிறது. இந்த பேச்சு வழக்கும் லாவகமா மனதில் பதிகிறது.

Mahi_Granny said...

அருமையான தலைப்புகளுடன் ஆன இடுகைகள். இடுகைகளின் தலைப்புகள்( சம்பவங்களும் கூட ) எளிதில் மறக்க கூடாமல் நினைவில் இருந்து கொண்டே இருக்கிறது.

ராகவன் said...

அன்பு நண்பர்கள்,
சே.குமார், சுந்தர்ஜி, பாலாசி.க. மஹி கிரானி...

உங்கள் எல்லோருக்கும் என் அன்பும், நன்றிகளும்... சிறுகதையில் ஒரு தீவிரமான விஷயம் அல்லது ஒரு முடிச்சு அல்லது ஒருவிதமான அழுத்தம் வேண்டாமா.. என்ற சிலரின் கருத்து நான் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று... சுந்தர்ஜி சொன்னது போல ஒரு நாட்குறிப்பிலிருந்து உதிர்ந்த இறகுகள் போன்ற விஷயங்கள் சொல்ல ஆரம்பிக்கும்போது... அதன் போக்கை அதுவே தீர்மானித்துக் கொள்கிறது... எந்தவித முன் யோசனையுமின்றி...எழுத வேண்டும் என்ற ஒரே கிரியாஉக்கியுடன் எழுத ஆரம்பித்தேன்... கோடையின் ஆற்றுப்படுகை... இதை சரிவர சொல்லவில்லை என்பது என் அனுமானமும் கூட... சில இடத்தில் எழுத்து நொண்டியடிப்பது தெரிகிறது... ஆனாலும் அதையும் மீறி இது உங்களை கவர்ந்ததில் எனக்கு மஹாசந்தோஷம்... பாலாசியின் கருத்தும், மஹி.கிரானியின் கருத்தும் இதே தொனியில் இருந்ததாகவே படுகிறது...

இதன் அரைகுறைத்தனம் பற்றிய கூரிய பிரக்ஞையில் நான் வேறு சில நண்பர்களிடம் சொல்லி, அதைப்பற்றி அவர்களின் உண்மையான கருத்தை கேட்டிருந்தேன்... அவர்கள் கருத்து சொல்லாமல் இருப்பது... என்னை காயப்படுத்தக்கூடாது என்ற காரணத்தால் கூட இருக்கலாம்... உங்கள் எல்லோருடைய அன்புக்கும், வாழ்த்துக்கும் அநேக நன்றிகள்!

அன்புடன்
ராகவன்

☼ வெயிலான் said...

எல்லாமுமே/எல்லாமே கதை என்ற பிம்பத்தை முன்நிறுத்திப் பார்ப்பதில் தான் குழம்பிக் கொள்கிறோம்.

இது அதனியல்பு மாறாது அப்படியப்படியே இருக்க்ட்டும்.

THOPPITHOPPI said...

ராகவன் ஜி இயல்பா எழுதுறிங்க............
வாழ்த்துக்கள்.

sakthi said...

Awesome story!!!!!!!!

காமராஜ் said...

ராகவன் இன்னும் வேலை தீர்ந்த பாடில்லை.
இங்கே ஆரம்பித்து இங்கேதான் முடிக்கவேண்டும் என்கிற திட்டமில்லாமல் கதை தன் போக்கிலே போகிறது.இரண்டாவது மூன்றாவது பாத்திரங்களின் வழியே நடக்கிற சஞ்சாரம் அப்படி பெரிதாய் கதையை விட்டு நழுவவில்லை.சொன்னது போல வண்ணநிலவனின் மழைநாள் சாயல் இருக்கிறது.இருக்கனும்.நல்லாருக்கு ராகவன்.