Friday, October 22, 2010

மனைவிக்கு நண்பர்...

கென்யா வந்தபிறகு படிப்பும் எழுத்தும் குறைஞ்சு போச்சு. எழுத்து ரொம்ப நாளா குறைஞ்சு போச்சுதான், இதுனால பெரிய இழப்பு யாருக்கும் இல்லே தான் என்றாலும் படிப்பு குறைஞ்சது வருத்தம்.  குடும்பத்துடன் தொலைதூரம் போய் வேலை பார்ப்பதில் உள்ள சங்கடங்களில் இதுவும் ஒன்று, மனைவிக்கு கொடுக்க வேண்டிய நேரத்தில் படிக்க முடியாது, கொடுத்தது போக மேலும் படிக்கவென்று ஒதுக்க நேரமே இருக்காது.  இன்னொரு பிரச்சினை  வீடு அவளுக்கு பிடித்த மாதிரி வீடு இன்னும் அமையவில்லை.  என்ன வீடு கொடுக்குறாங்க உன் கம்பனியில், ஹாலிலேயே டைனிங் ரூம் அதுவும் வாசல்ல நுழைஞ்சதும், சாப்பிடும்போது வந்தா எல்லாம் பரப்பி கிடக்கும், நல்லாவா இருக்கும்.  ஆனா என்ன பண்றது கென்யால எல்லா வீடும் இது போல பெருசா, சாப்பாட்டு அறை முன் ஹாலிலேயே இருக்கிறது, ஒன்னும் புரியலை. 

இப்படியாக என் பொழுதுகளில் கிடைக்கும் கொஞ்ச நேரத்தில் (மணித்துளிகளில்) படிக்க கிடைத்த வண்ணநிலவனின் "மனைவிக்கு நண்பர்" சிறுகதை, நிறைய முறை படித்திருந்தாலும் ஒவ்வொருமுறை படிக்கும்போதும் பாதிக்கிறது. 

இந்தியாவில் இருந்து கிளம்பும்போது விமானத்தில் கொண்டு போககூடிய சாமான்களின் எடை   குறிப்பிட்ட அளவு தான் இருக்க வேண்டும், எனக்கு விதிக்கப்பட்டது இருபத்தி மூணு கிலோ... இருவருக்குமாய் நாப்பத்தி ஆறு... கொஞ்சம் துணியும் சாமான்களும் எடுத்து வைத்தவுடன் நாப்பத்தி ஆறு கிலோ தாண்டி விட்டது. எடுத்து வர நினைத்த புத்தகங்கள் எதுவும் எடுத்து வர முடியவில்லை...  ஆக கையில் கொண்டு வரமுடிந்தது... ஒரு வண்ணநிலவன் (உள்ளும் புறமும் ) ஒரு வண்ணதாசன் (சமவெளி) ஒரு நாஞ்சில் நாடன் ( தெய்வங்களும் மனிதர்களும் ஓநாய்களும் ) மற்றும் ஒரு கோணங்கி (இருள்வ மௌத்திகம்).  எல்லாமே ஏற்கனவே படித்த புத்தகங்கள் தான் என்றாலும் திரும்ப திரும்ப படிக்க முடியும் அலுக்காமல்... (கோணங்கியின் எழுத்தை புரிந்து கொள்வதற்கு திரும்ப திரும்ப படிக்கணும்-ஒரு மாயக்கம்பளப்பயணம் அது) 

எல்லோரும் சொல்வது போல வண்ணநிலவனின் இந்த மனைவிக்கு நண்பர் படிக்கிற எல்லோருக்கும் தோன்றுவது, இந்த மனுஷன் எப்படிட இப்படி எழுதுறார்னு...  வண்ணதாசன் மற்றும் கலாப்ரியாவுக்கு மட்டுமல்ல எழுதுகிற எல்லோருக்கும் உண்டான ஆசை அது, வண்ணநிலவன் போல ஒரு வரியாவது எழுதிட்டா... எழுதுறத நிறுத்திடலாம்னு ஒரு ஆயுள் திருப்தி வந்துவிடும்.

ஒரு பலசரக்கு கடைக்காரன், அவன் மனைவி மற்றும் இருவருக்கும் தெரிந்த ஒரு லேவாதேவி நண்பர் ரங்கராஜு.  இவர்களை சுத்தி நடக்கும் கதை.  இன்னும் சில பாத்திரங்களாய் அந்த கடையும் ஒரு சேரா அமைந்த வீடும், பச்சை ராலே சைக்கிளும், சரோஜாவும்.   வண்ணநிலவனின் எழுத்துதிறம் தன் மனைவியை பற்றி விவரிக்கும் இடமும், மூன்று காதபாதிரங்களுக்குள்ளும் மாறி மாறி நடக்கும் சிறு சிறு சம்பாசனைகளும், அவர்களின் உடற்மொழி பற்றிய விவரிப்புகளும், ஒருவரை பற்றி மற்றவரின் எண்ணவோட்டங்களும்,  மூன்று கதாபாத்திரங்களுக்குள்ளும்   நடக்கிற போராட்டமான, குழப்பமான நிலையை இதை விட அழகாய் யாராலும்           சொல்ல  முடியாது.  

ஒரு தேர்ந்த சினிமா இயக்குனரால் இதை படமெடுக்க முடியுமா, இந்த கடையுடன் கூடிய வீடு, அதன் உள்கட்டுமான அமைப்பு,  அது அமைந்த தெரு, மூன்று கதாப்பாதிரங்களின் எண்ணவோட்டங்கள், அதை சுற்றி நடக்கும் உடற்மொழி ஆக்கங்கள், பொருத்தமான மனிதர்கள் என்று எல்லாம் பொருந்தி வரவேண்டும்.  இதற்கு திரைக்கதை எழுத முயன்று முடியாமல் முதல் பக்கத்திலேயே நிற்கிறது.   முதல் பக்கத்திலேயே முழுக்கதையையும் கொண்டு வரமுடிவது திரையில் முடியாது என்றே தோன்றுகிறது.  தாகூரின் கதைகளை, ரே முயன்றது போல மகேந்திரன் போன்ற இயக்குனர்கள் முயலவேண்டும் என்பது என் ஆசை. வண்ணநிலவனின் குறுநாவல்களையும், நாவல்களையும் ரசிப்பவர்களுக்கு ஒரு மிக அடர்த்தியான சிறுகதை அதன் வடிவம் இந்த மனைவிக்கு நண்பர் சிறுகதையில் கிடைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.   மெலிதான பிறன்மனை மிக அழகாக சொல்லப்பட்டிருக்கும் கதைகள் மிகக்குறைவு.

5 comments:

எஸ்.கே said...

சிறுகதை நன்றாக இருந்தது!

ராம்ஜி_யாஹூ said...

பகிர்ந்தமைக்கு நன்றிகள்.
அவர் கில்லாடி ஆச்சே

Philosophy Prabhakaran said...

இதுவரை படிக்கவில்லை... எப்படியாவது வாங்கிவிடுகிறேன்... முதல்முறையாக உங்கள் வலைப்பூவிற்கு வருகை தருகிறேன்... சிறப்பாக இருக்கிறது... இனி பின்தொடர்கிறேன்...

காமராஜ் said...

நல்ல அறிமுகம்.
படிக்கத்தூண்டும் எழுத்து.
ராகவன் சௌக்யமா.

வெயிலான் said...

கென்யாவா? நல்லது. நேரமிருக்கும் போது முடிந்தால் தொடர்பு கொள்ளுங்கள்.